Advertisement

பெண்ணியம் பேசாதடி 11

எச்சில் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு

காதல் யுத்தம் புரிவோமாடி?

சத்தியம் செய்கிறேன் தோல்வி எனதே.

 

தோல்வியில் வெற்றி காணும் ஜித்தன் நீர்,

இத்தனை தந்திரம் ஆகாது எழுத்தாளரே!

 

“என்ன கோவம் எழுத்தாளருக்கு? என்னையும் புரிஞ்சுக்கணும்” கட்டிலில் ஓய்வாகப் படுத்தவரை  நெருங்கி வந்து கேட்க.

“உங்கிட்ட நான் எதாவது பேசுனேனா போடி” முறுக்கிக் கொண்டார் எழுத்தாளர்.

“ப்ச்… என்ன எழுத்தாளரே பிடிவாதம் அதுவும் இந்த வயசுல” குறி பார்த்து அடித்தாள் காஞ்சனை.நேற்றைய தினத்தில் இருந்து பேசமாட்டேன் என்று அல்சாட்டியம் செய்து கொண்டு இருந்தால்,என்னதான் செய்வது அதான் பேரிளம் பெண் சீண்டிப் பார்த்தாள்.அவள் எண்ணியது போல எழுத்தாளரும் களம் இறங்கினார்.

“ஏய்! என்னடி எப்போ பாரு வயசைச் சொல்லியே பேசுற.நான் என்ன கிழவனா?”

“அதுல என்ன சந்தேகம் உங்களுக்குச் சொன்னாலும் சொல்லாட்டியும்…” என்றவளைப் பாய்ந்து சென்று பேச்சை தடை செய்தார்.

இதோ ஓர் காதல் போர்,அந்த போரிலும் நிபந்தனை உண்டாம்,எச்சில் என்னும் ஆயுதம் மட்டுமே போர்க்களத்தில் ஏந்தி போர் புரிய வேண்டுமாம்.சரிதான் காதல் போரில் சற்று ஒழுங்கீனமும் உண்டு போலும்.

மூச்சுவாங்க இதழ்களைப் பிரித்தவள் அவரை முறைத்தவாறே வெளியில் சென்று விட்டாள்.மேலும் பேசினால் இலக்கணம் எழுத ஆயத்தம் ஆகி விடுவார் எழுத்தாளர். பின்பு யார் அவரைத் தடுப்பது அங்குக் காஞ்சனை என்னும் பெண் புலி புறமுதுகிட்டு ஓடியது.

வெளியில் வந்தவள் நடுக் கூடத்தில் உள்ள சோபாவில் அமர்ந்து கண் மூடி கிறங்கிச் சற்று முன் நடந்த யுத்தத்தை எண்ணினாள்,பொல்லாத எழுத்தாளர் வெட்கம் என்னும் தோழி சடைத்துக் கொள்ள இதழில் அழகான புன்னகை.

அவளது கனவைக் கலைக்க வேண்டி அடித்தது அழைப்பு மணி யாரென்று பார்க்க,அவளுக்கு முன்னால் பார்த்த மாப்பிள்ளை. வளவனின் தொப்பை என்ற விழிப்புக்கு சொந்தக்காரர் திரு.சுரேஷ் அவர்கள்.அவரைப் பார்த்து புன்னகைத்தவள் “வாங்க” என்று அழைத்து அமருமாறு இருக்கையைக் காட்டினாள்.

அவரும் சிறு தலை அசைப்புடன் வந்து அமர்ந்தார் .என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை.இருவரும் பொறுப்பான வயதில் இருப்பதால் திருமணத்திற்கு முன்பு வரும் அசட்டுப் பேச்சுக்கள் எதுவுமில்லை,அதனால் நிலை ஒரு அளவுக்குப் பிடிபட்டது.

“கேள்விபட்டேன் உங்க கல்யாண விஷயம், அதான் பார்த்துட்டு போலன்னு வந்தேன் .எப்புடி இருக்கு உங்க கல்யாணம் வாழ்க்கை ? வாமனன் என்ன சொல்லுறார்?” குறும்புச் சிரிப்புடன் கேட்க சங்கடமாகி போனது என்னவோ காஞ்சனை தான்.

“நல்ல இருக்கேன்… என்னை மன்னிக்கணும்” அவளது சங்கடம் புரிந்து.

“அதை விடுங்க நான் நல்ல செய்தி சொல்ல வந்தேன் … நாளை  மறு நாள் பெருமாள் கோவில்ல எனக்குக் கல்யாணம்.பொண்ணு எங்க உறவு தான் விதவை. முன்னே கேட்டாங்க பொண்ணு வயசு ரொம்பு கம்மி வேண்டாம் சொல்லிட்டேன்,இப்போ வேற வழி இல்லைல அதான்” அவரது பேச்சு சற்றுச் சங்கடப்படுத்த.

“உங்க கஷ்டத்துக்கு மன்னிக்கணும், நானே என் திருமணத்தை எதிர் பார்க்கல”

“தெரியும் மூர்த்தி சார் சொன்னார்” இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டே வந்தார் வாமனன்.

“வா சுரேஷ்” என்று நண்பனை கையைக் குலுக்கி வரவேற்றவர் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் அதில் சிறுது எரிச்சலும் எட்டி பார்த்தது,அதனைச் சரியாகக் கண்டு கொண்டாள் பெண்.

“எப்படி போகுது தொழில்? வாமனன்”

“நல்ல போகுது டா” சில பல பேச்சுகளுக்கு பிறகு பின்பு அந்தத் தொப்பை தனது திருமண அழைப்பை இருவருக்கும் விடுத்து போகும் வேளையில் “வரேன் காஞ்சனை பார்த்துக்கோ” என்று வேறு சொல்லி வாமனன் ரத்தக் கொதிப்பை சற்று ஏற்றி விட்டு தான் சென்றார் மிஸ்டர்.தொப்பை.

காஞ்சனை யாரென்று அறியா வேளையில், தானே அவளுக்கு மாப்பிள்ளை பார்த்த அவலம் அவரை எரிச்சல் படுத்த,மீண்டும் அவரது கோபம் தொடர்ந்தது,அதன் விளைவு அவர் ஏறியவுடன் காரின் கதவை அடித்து மூட கதறியது காரின் கதவு.

“ஐயோ! கடவுளே மறுபடியும் மனுஷன் கோபம் ஆகிட்டார் போலையே”அலறினாள் பேரிளம் பெண்.

*******************

“ஏய்! எதுக்குடி என்னை போன் பண்ணி கூப்பிட்ட”எதிர் புறம் மௌனம்

“என்னடி பேசமாட்டேங்கற உனக்கும் எனக்கும் தான் எதுவுமில்லைனு ஆகி போச்சுல்ல அப்புறம் என்ன”

அதே மௌனம் இப்போது அவனை நேருக்கு நேர் பார்த்து முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு நின்றாள்.

“என்ன? பாவமா பார்த்தா ஆச்சா,சொல்லுடி எதுக்குக் கூப்பிட்ட”

இங்கு நடக்கும் கூத்தைப் பார்த்து சுவரை தேடியது ரமேஷின் கண்கள்.நன்றாக முட்டி கொள்ள வேண்டும் ரத்தம் வரும் அளவுக்கு அத்தனை வேகம் அவனுக்கு வளவனின் அக்கப்போரைப் பார்த்து.

“சரிடி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்” தனது கன்னத்தைக் காட்டிய வளவன் இங்க மட்டும் ஒரு முத்தம் கொடு உங்க அம்மா கிட்ட கேட்டு எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்.

அவன் சொன்னது தான் தாமதம் ரமேஷ் ஓடி வந்து அவனது முதுகில் அடித்தான்.

“ஆ……….டேய் விடுடா.. ஏன்டா அடிக்குற?”

“உன்னையெல்லாம் கொல்லாம விடுறேனு சந்தோச படு, மனுசனாட நீ அப்புடியே உன் காதலி கிட்ட பேசுற மாதிரி நாலு வயசு குழந்தை கிட்ட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்க.

அதுதான் உன்ன மதிக்க மாட்டேங்குதுல அப்புறம் ஏன்? உன் வயசுல உங்க அப்பா பின்னாடி கலர் கலர்ரா பொண்ணுக சுத்தனாக, சுத்த வச்சார்,ஆனா நீ நாலு வயசு பொண்ணு பின்னாடி சுத்தி மானத்தை வாங்குற…

என்ன குடும்ப அமைப்புடா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி,அதுலயும் உன் சித்தி ஒரு மாதிரி தான் ஆத்தாடி ஆத்தா ஒரு பொண்ணுப் போதும் உங்க தலைமுறைக்கே” தனது குமுறலை படப் படவெனக் கொட்டினான் அந்த அடிமை அய்யோ பாவம் யார் பெற்ற பிள்ளையோ.

இன்று தான் ரமேஷுக்கு ஓய்வு சற்றுப் படுக்கலாம் என்று எண்ணியவன் போனை அணைத்து வைக்க,அணைக்கும் முன்னே அழைத்துவிட்டான் வளவன்.அதுவும் மொட்டையாகத் தான் ஒரு பெண்ணைப் பார்க்க போவதாகவும் அதற்குத் துணையாகத் தன்னை வரும்படியும் சொன்னான்.

ரமேஷும் ரொம்ப முக்கியமான விடயம் போலும் என்றெண்ணி வந்தால். இங்கு  வாண்டிடம் பேரம் பேசி கொண்டுக் இருக்கிறான்.

நண்பர்கள் இருவரும் வழக்காடுவதைப் பார்த்த வாண்டு தனக்குக் காரியம் தான் முக்கியம் என்பது போல வளவனை நெருங்கி வந்து அவனது இடுப்பில் இன் செய்திருந்த சட்டை இழுத்து குனிய செய்து.

கன்னத்தில் மூக்கு உரசி குத்தும் தாடியை உரசியவாறே முத்தமிட்டது.அவளது முத்தத்திற்கு கண் மூடி ரசித்து நின்றான் வளவன்.

வளவன் காட்டிய பாவனையில் ரமேஷுக்கு ஏக கடுப்பு.வயசு பொண்ணுக்குக் கொடுக்க வேண்டியதை பச்சைப் புள்ளைகிட்ட வாங்கிட்டு  பில்டப்பு பாரு.

முத்தம் கொடுத்துவிட்டு  தனது உதடுகளைத் தேய்த்துக் கொண்ட வாண்டு “இதெல்லாம் பேட், நீ தெரிஞ்ச மாமா குட் அதான் குடுத்தேன்” அத்தனை தெளிவு. வாண்டு யாரு? காஞ்சனையின் தோழி ஆயிற்றே.

முத்தம் கொடுக்கும் போதுக் கூட விலகி நின்று கொடுக்கும் அந்தப் பிஞ்சின் பயத்தைப் பார்த்த நண்பர்களுக்குச் சில ஆண் வர்கத்தின் மீது கொலை வெறியே வந்தது.

பிறக்கும் போதே தற்காப்பு கலை கற்றுக் கொள்ள வேண்டும் போலப் பெண் குழந்தைகளுக்கு. எத்தனைக் கேடு கெட்ட சமுதாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எண்ணினாலே உடலில் ஆயிரம் பூச்சிகள் ஊறுவது போல் தான் உள்ளது அத்தனை ஒவ்வாமை.

எத்தனை அழகான சொர்க்கம் காமத்தால் நாம் இழந்திருக்கோம் தெரியுமா.பெண் குழந்தைகள் சொர்க்கம். அதுவும் அக்கா மகள்,அண்ணன் மகள்,மகள்,தங்கை அக்கா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

மாமா என்று அக்கா மகள் கட்டி கொள்ளும் பொதுக் கடவுளே ஆசிர்வதித்தது போல் உள்ளம் துள்ளும். தாய்க்குப் பின் தாய் மாமன் தானே எல்லாம்.அதே போல் அப்பா மகள் உறவு, என்ன உன்னதம் தனது தாயே மகளாக.பக்கத்து வீட்டு உறவு கூட இன்று பாலைவனமாக.

இப்பேற்பட்ட தெய்வீக உறவை சமீபகாலமாக இழந்து வருகிறோம். என்று எண்ணிய போதே இதயத்தில் குருதி வழிகிறது.பட்டம் பூச்சியாகத் தன்னை மறந்து சுற்றிக் கொண்டிருக்கும், பெண் பிள்ளைகளுக்கு நல்லவை அல்லவை சொல்லி குடுக்க வேண்டிய அவல நிலை இன்று.

அதனால் தான் வாண்டு வளவனை நெருங்காது அம்மா மற்றும் காஞ்சனை பாடம் அது அவனும் அதை அறிவான் தான். பெருமூச்சு விட்ட நண்பர்கள் வாண்டை அள்ளி கொண்டுச் சென்றனர்.

வாண்டின் அம்மா ஆயிரம் பத்திரம் சொல்லி காஞ்சனையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.இன்றும்,நாளையும் காஞ்சனையின் வசம் வாண்டு.

ரமேஷ் வளவனையும்,வாண்டையும் இறக்கி விட்டு அண்ணாந்து அந்த வீட்டை ஒரு விதமாகப் பார்த்து வைத்தான்.அங்கே வளவன் அவனை உலுக்கிக் கொண்டு இருந்தான் “டேய் என்னடா”

“இல்ல இந்த வீடு இன்னும் இரண்டு நாள் எப்படி இருக்கும் யோசிச்சேன்”

“ஏன்டா லூசு மாதிரி உலர”

“ஒரு வருசத்துக்கு முன்னாடி நல்லா தான்டா இருந்தேன் எப்போ உன்கூட வேலை பார்க்க வந்தேனோ அன்னைக்கே புடிச்சுது கிறுக்கு”

“ரொம்பத்தான் போடா”

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் போகத்தா போறேன் இன்னும் இரண்டு நாளைக்கு இந்தப் பக்கம் வர மாட்டேன். போன் எடுக்க மாட்டேன் ஒன்னு இருந்தாலே இந்த வீட்டுக்கு வர முடியாது,இப்போ இந்தக் குட்டி பிசாசு வேற வேண்டமுடா சாமி” என்று இரு கரம் கூப்பியவனைப் பார்த்து உரக்க சிரித்தான் வளவன்.

நண்பனின் சிரிப்பில் தானும் சிரித்துக் கொண்டே விடை பெற்றான் ரமேஷ்.

**********************************************

வீட்டினுள் நுழைந்தவுடன் காஞ்சனையைப் பார்த்து வளவனிடமிருந்து திமிறி இறங்கியது வாண்டு “காஞ்சு” என்னும் கூச்சலுடன் ஒரே பாய்ச்சல் காஞ்சனையின் மேல்.அவளும் நெஞ்சோடு அனைத்து உச்சி முகர்ந்து இறுக்கிக் கொண்டாள்.

அதனைப் பார்க்கும் பொது அத்தனை அழகாக இருந்தது.பெண் பிள்ளைகள் களிப்பின் விதை அல்லவா.அதை பூரணமாக உணர்ந்தவனே சிறந்த ஆண் மகன்.

இருவரும் சோபாவில் அமர்ந்து தங்களை மறந்து கதை பேச.காஞ்சனையின் பக்கத்தில் இருக்கும் வாண்டை ஒரு கையில் தூக்கி காஞ்சனையின் அந்தப் புறம் அமர வைத்தவன் வாகாக அவள் மடியில் படுத்துக் கொள்ளக் கோவம் வந்தது வாண்டுக்கு.

“காஞ்சு மாமா கீழ போடு”

“அச்சோ பாவம் பேபி போனா போகுது படுத்துக் கட்டும் ஒரு ஓரமா”

“நோ நோ” உதடு பிதுக்கி அழுது ஆடம் செய்ய

“ஏய் எங்க அம்மாடி” வளவன் சிறு பிள்ளையாய் வம்புக்கு நிற்க.

“நோ நோ என் காஞ்சு”

“எங்க அம்மா”

“என் காஞ்சு”

இவர்களது சண்டையைப் பார்த்துக் கொண்டே வந்தார் வாமனன் அவரைப் பார்த்ததும் புது வெட்கம் வர காஞ்சனையின் முந்தியில் ஒளிந்துக் கொண்டது வாண்டு.

காஞ்சனையும் அந்த வாண்டும் அடிக்கும் லூட்டியை வளவன் மூலம் அறிந்த வாமனனுக்கு அவர்களது பிணைப்பு கொடியும் மலரும் போல் இருந்தது.முல்லைக் கொடி போல் அவர்களது அன்பு மனம் வீசி அவரை நிகழ வைத்தது.

தனக்கும் இதே போல் ஓர் பெண்பிள்ளை ஆசைக்காக.அவரது எண்ணவோட்டத்தை  அறிந்தாலோ என்னமோ காஞ்சனையின் கண்கள் அவரை எச்சரிக்கைச் செய்தது.அதை கூடக் கவிதையாகப் பார்த்தார் நம் எழுத்தாளர்.

சுகந்தமான நித்திரையில் ஓர் கனவாம்.

நிலவை பிட்டு அதற்கு ஓர் பிறை வைத்து,

சிறு துளை கொண்டு சுவாசிக்க,

பூவின் இதழ் கொண்டு இதழ் செதுக்கி,

காற்றில் கை வீசி,

கொஞ்சல் மொழி பேசி,

அன்னநடையிடும் அல்லி பூ போல்,

எனக்கு ஓர் பெண் பிள்ளை வேண்டுமடி.

எழுத்தாளர் மன்றாட பேரிளம் பெண்ணின் பதில் வழமை போல் ஒரே வரியில்,

பேராசை எழுத்தாளரே!

Advertisement