அத்தியாயம் – 9

நீலவேணிக்கு மகனின் முகத்தினில் இருக்கும் சிரிப்பே, அப்படியொரு வியப்பையும் மகிழ்வையும் கொடுத்தது. அச்சுதனுக்கு பதிலாக, நகை கடைக்கு செல்ல, தாமோதரனும் சுரேந்திரனும் அச்சுதனோடு பேசியதை அவரிடம் தெரிவிக்க, மனதே இல்லை நீலவேணிக்கு.

இன்னும் என்னதான் என் மகனுக்கு காலம் வைத்திருக்கிறது என்று கடையில் நொந்து போய் தான் அமர்ந்திருந்தார். என்னவோ மனது அங்கே ஒன்றவில்லை. மகனது எதிர்காலம் எண்ணி மிகவும் வேதனையாய் இருந்தது.

வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்.

யாரை எண்ணி வருந்திக்கொண்டு வந்தாரோ, அவனோ கார் வந்து நிற்கும் சத்தம் கூட கேளாது, அலைபேசியில் தீவிரமாய் பேசிக்கொண்டு இருக்க, அதுவும் அகமும் புறமும் மலர்ந்து, முகம் பார்க்கவே அத்தனை விகசிப்பில் இருக்க, அச்சுதனை இப்படி காண காண அந்த தாயிக்கு பெற்ற வயிர் குளிரத்தானே செய்யும்.

எப்போதும் இறுகிய முகத்துடனும், எதையோ யோசிக்கும் பாவனையிலுமே இருப்பவன் யாரோடு இப்படி பேசி சிரித்துக் கொண்டு இருக்கிறான் என்று எண்ணினாலும், இன்னும் கொஞ்ச நேரம் அவனை இப்படி கண்டுகொள்ளலாம் என்று, கார் விட்டிறங்காமல் அப்படியே உள்ளிருந்தே மகனைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

அச்சுதனோ மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டே வைக்க, அலைபேசியை அணைத்துவிட்டு நிமிர்கையில் தான் அம்மா வந்திருப்பதே கவனித்து “ம்மா…” என்றபடி காரின் அருகே செல்ல, நீலவேணியோ மகனது முகத்தை ஆசையாய் பார்த்து வைத்தார்.

“ம்மா.. என்னம்மா என்னாச்சு?” என்றவன் காரின் கதவை திறக்க,

“ஒண்ணுமில்லடா.. நீ தனியா இருப்பியே போர் அடிக்குமேன்னு வந்துட்டேன்…” என்றபடி அவரும் இறங்க,

“போர் தான் அடிச்சது.. ரொம்ப நாள் கழிச்சு மாத்திரை போட்டாலும் நல்லாவே தூங்கிட்டேன்… இப்போ சும்மா அப்படியே உலாத்திட்டு இருந்தேன். நீங்க வரலைன்னாலும் நானே கிளம்பி இருப்பேன்.. அதுக்குள்ள அர்ச்சனா கால் பண்ணிட்டா…” என்றிட,

‘அர்ச்சனாவா?!’ என்று எண்ணியவர்

வேறு எதுவும் கேட்காமல் “அப்படியா என்னவாம்…?“ என்று கேட்க,

“நான் என்னோட ப்ளான் அனுப்புறேன்னு சொல்லிருந்தேன் ம்மா..” என்றவன் “ஷ் உங்கட்ட காட்ட மறந்துட்டேன்…” என்றபடி அவனது அலைபேசியில், அவனது மற்றும் அவள் நேற்று கட்டிய கட்டிட வரைபடங்களை காட்ட,

“எல்லாமே நல்லாத்தான் இருக்கு அச்சுதா…” என்றார்.

“ம்ம்.. இப்படி வேணும்னு சொன்னேன்.. இடம் காட்டவும், பத்தே நிமிஷம் தான் ம்மா.. இது ஒகேவான்னு ரெடி பண்ணி காட்டினா.. நல்லா திறமை எல்லாம் இருக்கு..” என,

“நல்ல பொண்ணு தான்.. அவளோடதான் பேசிட்டு இருந்தியா?!” என்றார் மகனை லேசாய் உற்று நோக்கி.

“எஸ் ம்மா..” என்றவன் அலைபேசியை பார்த்தபடியே “இந்த அனிதா அங்க போய் அவளோட சரியான வம்பு போல..” என்றவன் அர்ச்சனா பேசியதை சொல்ல,

“ஓ!” என்றுமட்டும் சொன்னவருக்கு மனது நொடியில் என்னென்னவோ கணக்கு போடத் தொடங்கிவிட்டது.

‘ஆண்டவா ஒரு நல்ல வழியை காட்டுப்பா…’ என்று வேண்டிக்கொள்ள, அச்சுதனோ அம்மாவிடம் மற்ற விசயங்களையும் பேசியபடி கடைக்கு கிளம்பிச் சென்றிட, நீலவேணிக்கு  சென்னையில் இருந்து அழைப்பு வந்தது. அதாவது அச்சுதனுக்கு மன நலத்திற்காக வைத்தியம் பார்த்த மருத்துவமனையில் இருந்து.

இன்னமுமே அவன் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால், நான்கு மாதத்திற்கு ஒருமுறை அவன் அங்கே செக்கப் செல்லவேண்டும்.  அதை நினைவூட்டவே அங்கிருந்து அழைக்க, நேரம் கேட்டுக்கொண்டவருக்கு மீண்டும் மனதில் பாரம் கூடிக்கொண்டது.   

‘யார் பெண் கொடுப்பார்கள்?’ என்று கேட்டிருக்கிறான்.

‘இன்னும் அவமானம் வேறு படவேண்டுமா?’ என்றும் கேட்டிருக்கிறான்.

அப்படியானால் அவன் மனதிலும் எதிர்காலம் குறித்த வேதனைகள் இருக்கத்தானே செய்யும். என் மகனுக்கு என்ன குறை?

அனைத்துமே இருந்தும், அவனுக்கென்று ஒருத்தி இல்லையெனில், வாழ்வு முழுமையாகுமா என்ன?!

இப்படியே மனதினில் என்னென்னவோ யோசித்தபடி அமர்ந்துவிட, அடுத்து  பாமினி அங்கே வந்து சேர்ந்தார். தாமோதரன், அச்சுதன் பேசியதை எல்லாம் மனைவியிடமும் சொல்லியிருப்பார் போல. நீலவேணி வந்தது தெரியவும், அதுவும் அச்சுதன் கிளம்பிவிட்டான் என்று தெரியவும் தான் இங்கே வந்தார்.

“என்னக்கா இப்படி உக்காந்து இருக்கீங்க?” என்று கேட்டபடி வர,

“வா பாமி…” என்றவர் “ஹாஸ்பிட்டல்ல இருந்து போன், நாளன்னைக்கு அப்பாயின்மென்ட்..” என்று சொல்ல,

“எப்பவும் போறதுதானே க்கா.. இப்போ அச்சுதன் நல்லாதானே இருக்கான். இன்னும் ஏன் போகணும். அங்க போயிட்டு வந்துட்டு இருக்குறதே ஒரு பேச்சா தான் இருக்கு..” என்றும் சொல்ல,

“ஹ்ம்ம் என்ன சொல்றதும்மா.. இன்னும் ஸ்ட்ரெஸ் லெவல் குறையல அப்படின்னு டாக்டர் சொல்றார். மாத்திரை கண்டிப்பா எடுத்துத்தான் ஆகனும்னு சொல்றார். எல்லாமே சரியாத்தான் இருக்கு. ஆனா எதுவும் நல்லா இல்லையே…” என்று விரக்தியில் பேச,

“அச்சுதனுக்கு தனுஜா விஷயம் தான் க்கா மன அழுத்தமே…” என்றார் பாமினி.

“நம்ம என்னதான் செய்ய முடியும்?! அதை பத்தி யோசிக்காதன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்..” என்றவர் “இதோ நேத்து கூட…” என்று பேச,

“இப்படியே இருந்தா எப்படிக்கா? நம்மதான் ஏதாவது ஏற்பாடு செய்யணும். இதோ அடுத்து பிரசாந்த் இருக்கான். இருபத்தி எழு ஆச்சு.. இப்போ இருந்து பார்க்க ஆரம்பிக்கணும் தானே..” என்று பேச, நீலவேணிக்கு புரிந்துபோனது பாமினி ஏன் வந்திருக்கிறார் என்று.

என்னதான் அச்சுதன் மீது அனைவருக்கும் அன்பிருந்தாலும், அவரவர் பிள்ளைகள் மீதும், அவர்கள் எதிர்காலம் மீதும் எண்ணம் இருக்காதா என்ன?!

“நல்லது தானே பாமினி.. பார்க்க ஆரம்பிக்க வேண்டியது தானே…” என,

“அச்சுதன் இருக்கானே க்கா.. பிரகாஷ் லவ் மேரேஜ். அதுனால எந்த கேள்வியும் வரல.. பிரசாந்துக்கு பொண்ணு தேடனும். ஆயிரம் கேள்விகள் வரும்…” என்று அவரும் வருத்தமாய் தான் சொன்னார்.

நீலவேணிக்கு அவர் சொல்லும் நிதர்சனம் புரிய “எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை பாமி…“ என்றிட,

“நானும் யோசிச்சேன் க்கா.. எனக்கொரு யோசனை இருக்கு. இன்னும் அவர்கிட்ட கூட பேசிக்கலை..”  என்று தயக்கமாய் இழுக்க,

“என்ன விஷயம் பாமி…” என்றார் நீலவேணியும்.

“அது.. அர்ச்சனா இருக்கால்ல..” என்று சொல்லி நிறுத்த,

“ஆமா..” என்றார் இவரும் பொதுவாய்.

“அர்ச்சனாவை பிரசாந்துக்கு பேசலாமான்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்..” என்றிட, நீலவேணிக்கு பகீரென்றது.

“என்ன சொல்ற பாமினி?!” என்று கொஞ்சம் அதிர்ச்சியாகவே கேட்டார் நீலவேணி.

“ஆமாக்கா.. அனிதா வந்ததுல இருந்து நல்லாத்தான் இருக்கா. அர்ச்சனாவும் பார்க்க பழக நல்லாவே இருக்கா.. ஒரே வீட்ல இருந்து கொண்டு வந்துட்டா, அக்காவும் தங்கச்சியும் ஒத்துமையா தானே இருப்பாங்க.. குடும்பத்துக்குள்ளயும் பிரச்சனை  இருக்காது. சம்பந்தி வீட்லயும் நம்மள பத்தி தெரியும் தானே..” என்று சொல்ல, அவரவருக்கு அவரவர் நியாயம்.

பாமினி சொல்லும் காரணங்கள் எல்லாம் சரிதான்.

நீலவேணியே, அர்ச்சனாவை அச்சுதனுக்கு பேசலாம் என்று கேட்டாலும், அதற்கு அச்சுதன் சம்மதிக்க மாட்டான். இங்கேயானால், சம்பந்திகள் பேசினால் எல்லாம் ஒத்துவரும். அர்ச்சனாவை எண்ணி  மனதினில் ஒரு சிறு நம்பிக்கை இருந்தது.

இப்போது அதுவும் காணாது போய்விட, நீலவேணிக்கு மனதும் உடலும் மிகவும் சோர்ந்து போய்விட்டது.

அர்ச்சனாவோ அடுத்து வந்த இரு தினங்களும் தீயாய் வேலை செய்தாள். அப்பாவுடன் அலுவலகம் செல்பவள், அச்சுதன் சொன்ன நகை மாளிகைக்கான வேலைகளில் இறங்கிவிடுவாள்.

‘டிசைன் டீம் இருக்கே அர்ச்சு.. நீயா ஏன் தலையை உடைச்சுக்கிற…’ என்று கார்மேகம் கூட கேட்க,

“இல்ல டாடி.. இது நானே டிசைன் பண்றேன்…” என்று முடித்துவிட்டாள்.

ஆனாலும் ஒருசில சந்தேகங்கள் இருந்தால், மற்றவரிடம் கேட்கவும் கலந்தாலோசிக்கவும் அவள் தவறவில்லை.

அச்சுதன் கூட எண்ணிவிட்டான், என்ன இரண்டு நாட்களாய் இவளிடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை என்று. அவனிடம் ப்ளான் வாங்கியவள் தான் அடுத்து பேசவே இல்லையே.

வேலையே முடித்தே ஆகிட வேண்டும் என்று வீட்டிற்கு வந்தாலும் கூட இரவு எத்தனை நேரமானாலும் மடி கணினியோடு அமர்ந்திருக்க, ரோஜாவோ கார்மேகத்தை முறைத்தார்.

அனிதா புகுந்த வீடு சென்றுவிட, அர்ச்சனாவிற்கு இந்த இரண்டு நாட்களும் சிவராத்திரி தான். அது என்னவோ அச்சுதனுக்காக செய்வது என்ற எண்ணமே அவளை தூண்டியது.

அவனிடம் இருந்து வரும் மெச்சுத்தல் பார்வையும், பாராட்டும் தனக்கே சொந்தமாகிட வேண்டும் என்று மிகவும் பிரயத்தனாப்பட்டே அவள் சொன்னது சொன்னது போல ஐந்து நகை மாளிகைகளை வடிவமைக்க, கார்மேகம் கூட மகளது உழைப்பு கண்டு வியந்து தான் போனார்.

“எங்கம்மா எப்படி டிசைன்னு காட்டு…” என்று ஆர்வம் தாளாமல் மூன்றாவது நாள் கேட்டுவிட,

“நோ டாடி…” என்றவள் “முதல்ல அச்சத்த.. அச்சுதன் பார்க்கட்டும்… அவர் ஓகே சொல்லட்டும்…” என்று அவனுக்குத்தான் அழைத்தாள்.

காலை எழு மணி என்பதால், அச்சுதன் வழக்கமான யோகா, தியானம் எல்லாம் முடித்து அமர்ந்திருக்க, அர்ச்சனாவிடம் இருந்து அழைப்பு வரவும் ‘இந்த நேரத்துல கால் பண்றா…’ என்று யோசனையோடு அழைப்பை ஏற்றவன் “குட் மார்னிங்…” என்றிட,

“குட் மார்னிங் அச்சத்தான்…” என்றதுமே, தன்னைப்போல் அவனது இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

அச்சுதனுக்கு எதிரே அமர்ந்து தான் நீலவேணி, செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்க, யாரோ என்று எண்ணியவர், ஸ்விட்ச் போட்டது போல மகன் முகத்தில் புன்னகை தோன்றுவதைப் பார்த்து, கண்களையும் காதுகளையும் கூர்மையாக்க, அச்சுதனோ “நீ அச்சத்தான்னு சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?” என்று கேலியாய் கேட்க,

“அது எப்படி வேணா இருக்கட்டும்.. எனக்கு வேற ஆப்சன் இல்லை.. அப்படித்தான் கூப்பிடுவேன்..” என்றவள் “டிசைன்ஸ் அனுப்பிருக்கேன் பாருங்க…” என்றிட,

“ஓ! அப்போ இந்த ரெண்டு நாளா இதே வேலையா தான் இருந்தியா நீ?” என்றான்.

“பின்ன.. தீயா வேலை செஞ்சிருக்கேன்.. பார்த்து ஏதாவது ஒன்னை அப்ரூவ் பண்ணுங்க.. இன்னும் டாடிக்கிட்ட கூட காட்டல.. உங்களுக்குத்தான் பர்ஸ்ட் அனுப்பிருக்கேன்..” என்றதுமே, அச்சுதன் மேலும் சத்தமாய் புன்னகைத்தான்.

நீலவேணிக்கு ஆர்வம் தாங்கவில்லை. அப்படி என்ன பேசி இவள், என் மகனை இப்படி நகைக்க வைக்கிறாள் என்று. படித்துக்கொண்டு இருந்த செய்தித்தாளை மடித்து வைத்தவர், மகன் பேசினில் வெளிப்படையாகவே கவனம் செலுத்த,

அவனோ அம்மா பார்ப்பது கண்டு “அர்ச்சனா…” என்று இதழ் அசைத்தவன் “நீ கம்பனி ரூல்ஸ் மீறிட்ட அர்ச்சனா…” என்றான் குற்றம் சாட்டும் குரலில்.

“எ.. என்ன? என்ன மீறிட்டேன்…” என்று அர்ச்சனா கேட்க,

“பின்ன உன்னோட பாஸ் உங்கப்பா.. அவர்கிட்ட காட்டி டிசைன்ஸ் ஓகே பண்ணிட்டு தான் நீ கஸ்டமருக்கு காட்டனும்.. நீ பண்றது தப்பு.. எதுவுமே ப்ராப்பரா செய்யணும்…” என்று சொல்ல,

“ஷ்..!” என்று வேண்டுமென்றே சொன்னவள் “சரி நீங்க இனிமே அப்பாவோடவே பேசிக்கோங்க…” என்று வைத்துவிட்டாள்.

பின்னே எத்தனை ஆர்வமாய் அவனுக்கு அனுப்பினால், அவனோ அவளுக்கு பாடம் எடுக்கத் தொடங்க, எரிச்சலாகி போனது. பட்டென்று பேசி வைத்துவிட, அச்சுதனோ, அவள் வேண்டுமென்றே சொல்லி வைத்திருக்கிறாள் என்று எண்ணி, திரும்ப அழைப்பாளோ என்று அலைபேசியை பார்க்க, பத்து நிமிடம் போனது தான் மிச்சம்.

நீலவேணியும், மகன் அலைபேசியை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து அமர்ந்திருக்க, பத்து நிமிடம் போகவும் “பார்த்தீங்களா ம்மா.. எப்படி பண்றா அப்படின்னு…” என்று அம்மாவிடம் குறை சொல்ல,

“நீங்க என்ன பேசிக்கிட்டீங்கன்னே தெரியாது.. இதுல நீ சொல்றதுக்கு நான் ஆமாவேற சொல்லனுமா?” என்று அவரும் கேட்க, அச்சுதன் அவள் சொன்னதை சொல்லி,

“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்…” என்றான்.

“அனிதா சொன்னா, அர்ச்சனா ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிட்டு இருக்கான்னு.. ரெண்டு நாளா தூங்கவே இல்லையாம். அதுனால முடிக்கவும் உனக்கு காட்டணும்னு அனுப்பி இருப்பா.. நீ இப்படி சொல்லவும் கோவம் வந்திருக்கும்…” என்று சொல்ல,

“என்ன இருந்தாலும் முதல்ல மாமாக்கிட்ட தானே ம்மா காட்டி ஓகே வாங்கி இருக்கணும்…” என்று அவன் சொன்னதையே திரும்பச் சொல்ல,

“அது என்னவோ போடா…” என்றவர், பாமினி சொன்னதை எண்ணிப் பார்த்துவிட்டு எழுந்துவிட்டார்.

வீண் கற்பனைகள் வேண்டாம் என்று நினைத்துக்கொள்ள, “அடுத்த சண்டே ஹாஸ்பிட்டல் அப்பாயின்மென்ட் இருக்கு. திரும்பவும் சொல்றேன்.. அதுக்கு ஏத்ததுபோல வேலை எல்லாம் ப்ளான் பண்ணிக்கோ…” என்று மகனை அர்ச்சனாவில் இருந்து, மற்ற சிந்தனை பக்கம் திசை திருப்பியவர் எழுந்துவிட,

அச்சுதனோ “ம்ம் ஓகே மா..” என்றவன் அர்ச்சனாவிற்கு அழைக்க, அழைப்பை ஏற்றதோ கார்மேகம்.

“சொல்லுங்க தம்பி.. டிசைன்ஸ் பார்த்துட்டீங்களா? எப்படி பண்ணிருக்கா..?” என்று கேட்க,

“மாமா…” என்றான் தயக்கமாய்.

“போனை என்கிட்டே குடுத்துட்டு போயிட்டா.. நீங்க கூப்பிட்டா எடுத்து பேசிக்கனுமாம். சொல்லிட்டும் போயிட்டா…” என்று கார்மேகம் சிரித்துக்கொண்டே சொல்ல,

‘அறிவாளி அர்ச்சனா…’ என்று அவளை கிண்டலாய் மெச்சிக்கொண்டான்.

“ஹலோ.. தம்பி.. லைன்ல இருக்கீங்களா?” என்று கேட்க,

“ஆ..! மாமா.. நான் இன்னும் பார்க்கல. கம்பனிக்கே வர்றேன்.. மத்த பார்மாலிட்டீஸ் பேசணும் இல்லியா?” என்று அவருக்கு மரியாதை கொடுக்கும் நிமித்தமாய் பேச,

“அதுக்கென்னப்பா.. நமக்குள்ள என்ன வந்தது…” என்றவர் “சரி வாங்க…” என்றுவிட்டு வைத்துவிட்டார்.

அர்ச்சனாவோ அப்பாவிடம் வந்து “என்னவாம் டாடி…” என்று கேட்க,

“இன்னும் பார்கலையாம்.. கம்பனிக்கு வர்றேன் சொல்லிருக்கார். நீ என்ன பண்ற, சீக்கிரமே கிளம்பிடு.. எஸ்டிமேசன் கால்குலேட் பண்ணனும்.. பட்ஜெட் டீம் கூட டிஸ்கஸ் பண்ணிக்கோ. இன்டீரியர்ஸ் எல்லாம் தனி.. பில்டிங் அமௌன்ட் தனி…” என்று மகளுக்கு தொழில் கற்றுக்கொடுக்க, முகத்தை உம்மென்றே தான் வைத்திருந்தாள் அர்ச்சனா.

அச்சுதன் வரும் வரைக்கும் கூட அர்ச்சனா அப்படித்தான் இருந்தாள்.

எத்தனை ஆசையாய் அனுப்பினால், பார்க்கவில்லையாம்..

‘போடா அச்சுதா…’ என்று அவனை கடிந்தும் கொண்டாள்.

ஆனாலும் என்ன கடிந்தாலும் மானது அவனை மட்டுமே எண்ணிக்கொண்டு இருந்தது.

அச்சுதன் அலுவலகம் வந்து, அவளைப் பார்த்து புன்னகைக்க, முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவனோ ‘என்னடா இது…’ என்று பார்த்து வைக்க, அவளது இந்த சின்ன கோபம், அவனுக்கோ பவஸ்ரீ, அர்ஜூன் எல்லாம் இவனிடம் செல்லமாய் கோபம் கொள்வது போலிருக்க,

“இப்போ என்ன கோபம் உனக்கு?” என்றான் வந்த சிரிப்பை அடக்கி.

“ஒரு கோபமும் இல்லை. அப்பாவை பார்க்கத்தானே வந்தீங்க.. போங்க..” என்று அவர் கேபின் பார்த்து கை காட்ட,

“நான் அப்படி சொல்லவே இல்லையே..” என்று அவன் தோள்களை குலுக்க,

“பின்ன?!” என்றாள் உதட்டை சுளித்து.

“டிசைன்ஸ் ஒவ்வொன்னும் பக்கா.. எனக்கு நிஜமா என்ன சொல்றதுன்னே தெரியலை அர்ச்சனா.. அஞ்சு டிசைனும் எனக்கே வேணும் போல இருக்கு.. சீரியசா எனக்கு இதுதான் வேணும்னு ஒன்னு மட்டும் செலக்ட் பண்ண முடியலை.. நீ எத்தனை மெனக்கெட்டு இருக்கன்னு, உன் கண்ணு சுத்தி லேசா எட்டிப்பாக்குற டார்க் சர்கில்ஸ் பார்த்தாலே தெரியுது..” என்று பேசி முடிக்க,

‘அப்பா.. இவன் பேச்சுல என்னவோ இருக்கு…’ என்று எண்ணிக்கொண்டாள் அர்ச்சனா.

ஆனாலும் அவனது ‘அஞ்சு டிசைனும் எனக்கே வேணும் போல இருக்கு…’ என்ற வார்த்தைகளை,

‘நீ எனக்கே வேணும் போல இருக்கு…’ என்று சொல்வது போல் அவளுக்கு இருக்க, அதிலும் அவளது கண்களை சுற்றி லேசாய் எட்டிப்பார்த்த கருவளையம் அவனது கருத்தில் பதிந்து, அவன் பேசியது இன்னமும் அவளை அகமலர வைத்தது.