அத்தியாயம் – 7

அச்சுதனுக்கு மேற்கொண்டு பேசி நேரம் கடத்த விருப்பமில்லை. வேகமாய் தனுஜாவின் இல்லம் நோக்கி செல்ல, அர்ச்சனாவிற்கு தான் என்னமாதிரி உணர்கிறோம் என்றே விளங்கவில்லை.

எது எப்படியானாலும் சரி, அவனை இப்படியொரு நிலையில் தனியில் அனுப்ப மனதில்லை.

எத்தனை வேகத்தினில் வந்தானோ, தனுஜாவின் வீடு வந்திட, காரினை நிறுத்திவிட்டு, இருவரும் வீட்டினுள் செல்ல, அச்சுதன் வரவிற்காகவே காத்திருந்தது போல, வீட்டின் வேலையாள் வந்து

“நீங்க வந்தா சின்னம்மா ரூமுக்கு வரச் சொன்னாங்க சார்…” என்று தகவல் சொல்ல, அச்சுதனும் தனுஜாவின் அறை நோக்கிப் போக, அர்ச்சனாவிற்கு தாயக்கமாய் இருந்தது.

உடன் செல்வதா, இல்லை காத்திருப்பதா என்று..நான்கு எட்டுக்கள் முன்னே எடுத்து வைத்தவன், பின் அவளைத் திரும்பிப் பார்க்க,

“நா.. நானும் வந்து பார்க்கட்டுமா?” என்றாள் தயங்கி.

அச்சுதன் ஒன்றும் சொல்லாமல் நடக்க, அதையே சம்மதமாய் ஏற்றவள் அவனுக்கு பின்னே அந்த அறைக்குள் செல்ல, அது தனியொருவரின் அறையா இல்லை மருத்துவமனையின் அறையா என்பது சந்தேகம் தான். சகல மருத்துவ வசதிகளும் அங்கே இருக்க,

“அச்சுதா…” என்று மகேந்திரன் வேகமாய் வந்து அவனின் கரம் பற்றியவர், யோசனையாய் அர்ச்சனாவைக் காண,

“அனிதாவோட தங்கை அர்ச்சனா…” என்று அறிமுகம் செய்தவன் “என்னாச்சு அங்கிள்…” எனும்போதே,

சந்திரா முகத்தைத் துடைத்துக்கொண்டு இவர்களிடம் வந்தவர், இருவரையும் பார்த்து சம்பிரதாயமாய் தலையசைத்து “இப்போதான் ஒரு ஒருமணி நேரமா பல்ஸ் கம்மியா இருக்கு.. டாக்டர் வந்து பார்த்துட்டு போயிட்டார்…” என்றிட,

“ஒருமணி நேரமாவா?!” என்று அதிர்ந்தவன் “பின்ன எதுக்கு எனக்கு உடனே கூப்பிடலை…” என்றான்.

“ம்ம்ச் என்னன்னு சொல்றது…” என்ற சந்திரா “ஆண்டவன் இன்னும் ஏன் என் பொண்ணை இப்படி கஷ்டப் படுத்துறானோ தெரியலை…”   என்று வறண்டு போன குரலில் சொல்ல, அர்ச்சனாவிற்கு தர்மசங்கடமாய் இருந்தது.

இந்த சூழலில் தான் அதிகப்படியோ என்று தோன்ற, அச்சுதனோ மெதுவாய் நகர்ந்து தனுஜா அருகினில் சென்று நிற்க, அர்ச்சனாவின் பார்வையும் தனுஜாவின் மீது படிந்தது.

அழகிய பொம்மை போல் படுத்திருந்தாள்.

இது எத்தனை கொடுமை. தான் இருக்கின்றோமா இல்லையா என்றே தெரியாமல் ஒரு ஜீவன் வாழ்வது. ஆழ பெருமூச்சினை எடுத்து விட்ட அச்சுதன், மெதுவாய் தனுஜாவின் கேசம் தடவ, அர்ச்சனா அதனை எல்லாம் ஒரு பார்வையாளராய் தான் கண்டிருந்தாள்.

“வேற எதுவும் சொல்லலையா?!” என்று அச்சுதன் உள்ளே போன குரலில் கேட்க,

“எப்போன்னாலும் எதுவும் ஆகலாம். கவனமா பார்த்துட்டு இருங்கன்னு சொன்னார்…” என்றிட,  அச்சுதன் முகத்தினில் வேதனையின் சாயல்.

பெற்றவர்களுக்கும் தான் இந்த நிலை எப்படி இருக்கும்.

செல்ல பெண்ணின் வாழ்விற்கு நல்ல வரன் அமைத்துக் கொடுக்கவேண்டும்  என்று அவர்கள் ஏற்பாடு செய்ய, அந்த ஏற்பாடே அவளுக்கு இப்படியொரு வினையை கொடுக்கும் என்று அவர்கள் எண்ணினார்களா என்ன?!

மகள் கண்விழிக்க மாட்டாள் என்கின்ற நிதர்சனத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டனர். நம்பிக்கை விட்டுப்போனது என்று சொல்ல முடியாது. எந்தவித உடல்நலக் கோளாறும் இல்லாமல், மகள் கண்விழித்தால் போதும் என்ற ஆசை இருக்கவே செய்தது. ஆனாலும் கண் முன்னே இருக்கும் சூழலில்,   இந்த அளவில் ஆண்டவன் அவளை அழைத்துக் கொண்டால் போதும் என்றுதான் எண்ணினர்.

மகேந்திரனோ, அச்சுதனின் முகம் பார்த்தவர் “ஹாலுக்கு போலாம்..” என்று சொல்ல, அச்சுதன் தலையசைத்து முன்னே நடக்க, அர்ச்சனாவும் அவனுடன் நடக்க, மகேந்திரனும் சந்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்.

“திடீர்னு ஏன் பல்ஸ் குறைஞ்சது அங்கிள்…” என்று அச்சுதன் கேட்க,

“என்னன்னு சொல்றது.. காரணம் தெரிஞ்சா சொல்லிடலாம்…” என்றவர்,       “எல்லாம் என் தப்புதான் அச்சுதா…” என்றார் மனம் வேதனை தாளாமல்.

“நீங்க என்ன அங்கிள் பண்ணீங்க…” என்றவன் ஒரு கசந்த புன்னகையை வெளியிட்டு “எல்லாம் நடக்கனும்னு இருக்கு.. நடந்திடுச்சு…” என,

“இல்லப்பா.. இல்ல…” என்று எதையோ பேச வந்தவர், பின் அர்ச்சனாவை ஒரு பார்வை பார்த்து தயங்கி நிற்க, சரியாய் அதே நேரம் நீலவேணியும் வந்துவிட்டார்.

 “வா.. வாங்க…” என்று மகேந்திரனும், சந்திராவும்   வரவேற்க,

“என்னாச்சு?“ என்றவர் முகத்திலும் கவலை இருக்கவே செய்தது.

நீலவேணியிடமும் விபரங்கள் பகிரப்பட, அவரும் ஒருமுறை தனுஜாவை பார்த்துவிட்டு வந்தவர், அர்ச்சனாவைப் பார்த்து “நீ இவனோட வந்தது ரொம்ப நல்லது அர்ச்சனா…” என்று அவள் கரம் பற்றி பேச, எல்லாவற்றையும் தனுஜாவின் பெற்றோர்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.

அர்ச்சனாவோ எதுவும் சொல்லாமல் இருக்க “ம்மா நீங்க கிளம்புறப்போ, அர்ச்சனாவை கூட்டிட்டு போங்க. அவளோட கார் நம்ம கடைல இருக்கு..“ என்று அச்சுதன் பேச,

“நீ?!” என்றார் யோசனையாய்.

“டாக்டர் எப்போன்னாலும் எதுவேணா ஆகலாம்னு சொல்லிருக்காங்கலாம். சோ..” என்று அவன் பேச்சை முடிக்காமல் இழுக்க, நீலவேணிக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.

மகேந்திரனோ “பரவாயில்லப்பா.. நீ அம்மாவோட போயிட்டு வா..” என்றிட,

“இருக்கட்டும் அங்கிள்.. ரெண்டு பேரா நீங்களும் என்ன செய்வீங்க…” என்றிட

“நர்ஸ் இருக்காங்க தானே.. நாங்களும் தான் வேற என்ன செய்ய முடியும்…” என்று மகேந்திரன் பேச, அர்ச்சனா அவரின் பேச்சினை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு தான் இருந்தாள்.

என்னவோ சொல்ல வந்தார். ஆனால் அதனை பாதியில் விழுங்கிவிட்டார் என்று நன்கு புரிந்தது. ஒருவேளை அச்சுதனிடம் தனியே பேச எண்ணுகிறார்களோ என்று எண்ணியவள், இதற்குமேல் தான் இங்கிருப்பது அதிகப்படி என்று புரிய, நீலவேணியிடம்

“நீங்களும் இருக்கிறதுன்னா இருந்துட்டு வாங்கத்தை.. நான் போயிப்பேன்…” என்றிட,

“இல்லம்மா.. கடை பார்க்க ஆள் வேணும் இல்லையா.. நானும் வர்றேன். எதுன்னாலும் போன் பண்ணு அச்சுதா.. மாத்திரை மறக்காம போடு..” என்றவர், மற்றவர்களிடமும் சொல்லிக்கொண்டு, அர்ச்சனாவையும் அழைத்துக்கொண்டு காரில் ஏறப் போக,

“அ.. அத்தை.. கார் நான் டிரைவ் பண்றேன்..” என்றாள் தயக்கமாய்.

நீலவேணி தெளிவான மனநிலையில் இல்லை என்பது அவளுக்குப் புரிந்து கேட்க “ம்ம்…” என்று கார் சாவியை கொடுத்தார்.

“டென்சனா இருக்கீங்க.. தண்ணி குடிங்க…” என்றவள், காரினில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க,

“தேங்க்ஸ் ம்மா…” என்றுசொல்லி பருகியவர் “அச்சுதன் மாத்திரை எதுவும்…” எனும்போதே, அவன் என்ன நிற பவுச்சில் இருந்து, எத்தனை மாத்திரைகள் எடுத்துப் போட்டான் என்ற விபரம் சொல்ல, நீலவேணி அவளை லேசான வியப்போடு பார்க்க, அர்ச்சனாவோ சாலையில் கவனமாய் இருந்தாள்.

“ஏன் அத்தை சரியாதானே மாத்திரை போட்டிருக்கார்…” என்று அவள் கேட்க,

“ம்ம் சரிதான்.. ஆனா டோஸ் கம்மியா போட்டிருக்கான்..” என, அச்சுதன் சொன்ன விபரங்களை சொன்னவள், அவரைப் பார்த்து லேசாய் புன்னகை செய்ய,

“ஓ! இதெல்லாம் அச்சுதனே சொன்னானா?!” என்றார் நம்பமாட்டாமல்.

“ம்ம்.. எஸ்…” என்றவள் ‘ஏன்?!’ என்பது போல் முகத்தை வைக்க,

“பொதுவா, அவனோட ட்ரீட்மென்ட் விஷயம் எல்லாம் யாரோடவும் பேசமாட்டான். அவனுக்கு அது பிடிக்கவும் பிடிக்காது…” என,

“அதுவா…” என்று இழுத்தவள் “நான் அவர் டேப்லட் போடுறதை பார்த்துட்டே இருந்தேன்…” என்றிட, அவள் சொன்ன பாவனையில் நீலவேணிக்குமே முகத்தில் சின்னதாய் இளநகை பூத்து,

“என்னவோ போ.. ஆனா என் மகன் மனசு ஒருநிலை இல்லாம இப்படி தவிக்கிறான்…” என்றிட,

“அவருக்கு தனுஜாவை பற்றின மன அழுத்தம் தான் நிறைய இருக்கு…” என்றாள்.

“ம்ம்…” என்று நீலவேணியும் ஆமோதிப்பாய் தலையை ஆட்ட,

“தனுஜா அப்பா என்னவோ பேச வந்தார்.. நீங்களும் சரியா வந்துட்டீங்க. நானும் இருந்தேன். சோ ஸ்டாப் பண்ணிட்டார்…” என்று தான் யூகித்ததை அவள் சொல்லியேவிட்டாள்.

எது எப்படியான ஒன்றாய் இருந்தாலும், அவளுக்கு அச்சுதனுக்கு இனியும் எந்தவொரு பாதிப்பும், பிரச்சனைகளும் வந்திடக் கூடாது. நீலவேணிக்குத் தெரியாமல் ஏதேனும் இருக்கிறதா என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. அதனால் தனக்கு தோன்றியதை அவரிடம் சொல்ல,

“என்ன அர்ச்சனா சொல்ற?” என்றார் அதிர்ந்து.

“என்னோட கணிப்பு சரியா தப்பா தெரியலை.. ஆனா நடந்தது இதுதான். உங்க மகன் இதை கவனிச்சாரா தெரியலை…” என்றிட, ஆனால் அவன் கவனித்திருக்கிறான் என்பது அர்ச்சனா அறியவில்லை.

இவர்கள் கிளம்பவுமே அச்சுதன், மகேந்திரனிடம் “ என்னவோ சொல்ல வந்தீங்களே அங்கிள்…” என்றிட,

“அது.. அதுவா…” என்று தாயன்கினார் மகேந்திரன்.

“இன்னும் என்னதாங்க தயக்கம் உங்களுக்கு? இப்போவாது வாய் திறந்து நடந்ததை பேசுங்களேன். உங்க மனசும் லேசாகும் இல்லையா.. நம்ம பொண்ணு தான் இப்படி இருந்தும் இல்லாம இருக்கா.. அச்சுதனாவது வாழ்க்கைல அடுத்த நிலைக்கு போகணும் இல்லையா…” என்று சந்திரா பேச,

இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இன்று இவர்கள் இப்படி பேசுவது அச்சுதனுக்கு வித்தியாசமாய் இருந்தது.

நெற்றி சுறுக்கி, தன் நெற்றித் தழும்பை நீவியவன் “என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்…” என்றான்.

“இல்லப்பா.. ஆரம்பத்துல உங்க கல்யாண பேச்சை எடுத்ததே நான் தான். உங்க அப்பாக்கு ஜோசியம் ஜாதகம் எல்லாம் நம்பிக்கை இல்லை. மனசு ஒத்துப் போனா போதும்னு சொல்லிட்டார். ஆனா சந்திரா தான் ஜாதகம் பார்க்கணும் சொல்லி, உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பார்த்தா.. ஜோசியர் அப்போவே சொன்னார், இந்த கல்யாணம் இப்போ வேண்டாம். பொண்ணோட கிரக நிலைகள் சரியில்லை. எட்டு மாசம் போகட்டும்னு சொன்னார்.

இதை எல்லாம் கேட்டு, சந்திராவும் தனுஜாவும் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னாங்க. நான் தான் சம்பந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு அதெல்லாம் ஒண்ணுமில்லை, இந்த காலத்துல ஜாதகம் அது இதுன்னு பேசிட்டுன்னு இவங்களை வாய் மூட வச்சுட்டேன்.

தனுஜா அன்னிக்கு வீட்ல இருந்து கிளம்புறப்போ கூட எனக்கென்னவோ பயமா இருக்குப்பான்னு சொன்னா. அதையே நினைக்கக் கூடாதுன்னு சொல்லி எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கை கொடுத்துத்தான் அனுப்பினேன். ஆனா அவ பயந்தே மாதிரியே ஆகிடுச்சு. நான் கொஞ்சம் நிதானப் படுத்தி இருக்கணும்..

உங்கப்பாக்கிட்ட பேசி, அட்லீஸ் லேட்டா கல்யாண தேதி குறிச்சு இருக்கணும். இப்படி எல்லார் நிம்மதியையும் நான் கெடுத்துட்டேன்.. என் பொண்ணும் இப்படி படுத்துட்டா.. உன்னோட வாழ்க்கையும் இப்படி நிக்குது..” என,

சந்திராவோ “உங்க கல்யாணம் நிச்சயம் பண்ணதுமே, தனுஜாக்கு ஹெல்த் கொஞ்சம் சரியில்லாம ஆச்சு.. இங்க வீட்லயும் சகுனங்கள் சரியில்லாம நடந்தது. எல்லாம் எடுத்து சொல்லி இவர்கிட்ட நானும் அவளும் கூட பேசினோம். இவர் அதெல்லாம் கண்டுக்கவே இல்லை. அதெல்லாம் அப்போ பெருசா தெரியலை. இப்போ யோசிச்சா, கொஞ்சம் வெய்ட் பண்ணிருக்கலாம்னு தோணுது. தனுஜா  சொல்லிட்டே இருந்தா பயமா இருக்கு பயமா இருக்குன்னு.. அவளோட பயமே நிஜமா மாறிடுச்சு..” என்றிட,  

“என்னாலதான் எல்லாம்.. என்னை மன்னிச்சுடு அச்சுதா..” என்று அவனின் கரம் பற்றி மகேந்திரன் பேச,

அவனுக்குத்தான் என்ன சொல்ல முடியும்?!

இந்த நிலையில் கடிந்து பேச முடியுமா என்ன?!

‘இப்படி செய்து விட்டீர்களே…’ என்று சண்டையிட முடியுமா என்ன?!            

இதை இப்போது சொல்லி என்ன பிரயோஜனம்?!

இதில் யாருக்கு என்ன இருக்கிறது..

பதிலேதும் சொல்லாமல் அவர்களை பார்த்தவன், ஒன்றும் பேசாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொள்ள, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அவர்கள் சொன்ன ஜாதக பலன்கள் விஷயம் எல்லாம் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் மனதில் ஒரு சுணக்கம் எனில் சற்று நிதானித்து இருக்கலாம். இரு குடும்பமும் பேசி ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம். இத்தனை நடந்த பிறகு, இவர்களை குற்றம் சொல்லி என்னாகப் போகிறது என்று எண்ணியவனுக்கு தலை பயங்கரமாய் வலிப்பது போல இருந்தது.

தலையை அழுந்த பற்றிக்கொண்டவன், அப்படியே அமர்ந்துகொள்ள “அச்சுதா.. என்ன செய்யுதுப்பா…” என்றார் மகேந்திரன்.

“நத்திங் அங்கிள்.. நீங்க போய் தனுஜாவை பாருங்க…” என்றான் கசந்த குரலில்.

சந்திராவோ “நான் சொல்றேன்னு தப்பா நினைக்கவேணாம் தம்பி.. தனுஜா நிலை எப்படின்னு நம்ம யாருக்கும் தெரியாது. ஆனா நீங்க உங்க வாழ்கையை வீணாக்காதீங்க. உங்க அம்மாவை நினைங்க. எத்தனை கஷ்டங்களை தாங்கி நின்னாங்க தெரியுமா.. அவங்களுக்காக கொஞ்சம் யோசிங்க..” என, அச்சுதன் அதற்கும் பதில் சொல்லவில்லை.

“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு மனசு விட்டுப் பேசினா தானே தெரியும்…” என்று சந்திரா பேச,

“நான் எதுவும் நினைக்கல ஆன்ட்டி…” என்று முடித்துக்கொண்டான்.

இதற்குமேல் அவனிடம் இருந்து வார்த்தைகள் வராது என்பதை புரிந்துகொண்டவர், ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு நடையிட, அர்ச்சனாவிற்கும் நீலவேணிக்கும் இடையில் ஒரு நல்ல நட்பு உருவாகி இருந்தது.

சிலரைப் பார்த்ததுமே பிடிக்கும் இல்லையா.

இருவருக்குமே அப்படித்தான் இருந்தது.

அர்ச்சனாவிற்கு அச்சுதனின் அம்மா என்பதினாலேயே, அவரை கூடுதலாய் பிடிக்க, அவருக்கோ அர்ச்சனாவிடம் மனதில் இருப்பதை எல்லாம் இலகுவாய் பேச முடியும் போல தோன்ற, இருவருக்கும் பேச்சு வார்த்தைகள் நீண்டன.

அன்றைய இரவில் கூட, அர்ச்சனா நீலவேணிக்கு அழைத்துப் பேசினாள். நேரடியாய் அச்சுதன் வந்தானா என்று கேளாமல் “த.. தனுஜா.. அவங்களுக்கு இப்போ எப்படி இருக்கு? எதுவும் அ… அச்சுதன்.. அவர் பேசினாரா?” என்று கேட்க,

“ம்ம்.. இப்போதான் வந்தான் ம்மா.. பல்ஸ் ரேட் இப்போ நார்மலா இருக்காம். காலையில இருந்து ரொம்ப டென்சன் ஆகிட்டான் போல.. தலை வலி தாங்க முடியலைன்னு சொன்னான்.. இப்போதான் டோசெஜ் எல்லாம் கம்மியாகிட்டு வந்தது…” என்று வருந்தி பேச,

“எல்லாம் சரியாகிடும்… நீங்களும் தூங்குங்க…“ என்றுவிட்டு வைத்தவளுக்கு உறக்கம் போனது.

மாத்திரையின் உபயத்தினால் அச்சுதன் நல்ல உறக்கத்தில் இருக்க, அர்ச்சனாவோ அவனை எண்ணி எண்ணியே உறங்காமல் இருந்தாள். அனிதாவோ கணவனோடு அலைபேசியில் பேசிவிட்டு வந்தவள், அர்ச்சனா உறங்காமல் நடந்துகொண்டு இருப்பதைப் பார்த்து என்னவென்று கேட்க, நடந்தவைகளை ஓரளவு அவள் சொல்ல,

“நீ ஏன் இவ்வளோ யோசிக்கிற?” என்றாள் அனிதா..

“இல்ல.. அங்க நேர்ல போயிட்டு வந்தேனா…” என்று இழுக்க,

“இங்க பார் அர்ச்சனா.. அச்சுதன் மாமா பிடிவாதம் உனக்கு தெரியாது.. எது எப்படின்னாலும் அவர் நினைச்சதை செஞ்சே தீருவார். நீ இவ்வளோ வொர்ரி பண்ணிக்கிறதுக்கு எல்லாம் தேவையே இல்லை.. அவங்கவங்க வாழ்க்கை குடும்பம்னு யோசிக்கணும்.. அவர் நியாய தர்மம் பேசிட்டே இருந்தா இப்படித்தான்..” என்றவள் படுத்துவிட, அர்ச்சனாவிற்கோ மனது அப்படியே சுணங்கிப் போனது.