அத்தியாயம் – 28

அச்சுதன் குழப்பிக்கொள்ளவில்லை. யாரையும் குழப்பவும் இல்லை. அவன் கடந்து வந்த பாதையும், அது கொடுத்த வலிக்க வலிக்க கொடுத்த அனுபவங்களும் அவனை நிதானமாய் செல் என்றது.

அவன் விடலைப் பையன் அல்ல. சின்னதாய் மனதில் ஒரு தடுமாற்றம் வந்ததுமே ‘காதல் வந்துடுச்சு.. ஆசையில் ஓடிவந்தேன்…’ என்று பாட்டு பாடி குதித்து கொண்டாடிட.

அர்ச்சனாவின் அன்றைய பேச்சும், அவளின் கண்ணீரும் அவன் மனம் தொட்டது நிஜம். அவளது சிந்தனைகளில் அவன் உழன்றது நிஜம்.

ஆனால் இதை ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு அவன் எந்தவொரு முடிவிற்கும் வர விரும்பவில்லை. காரணம் அர்ச்சனாவின் வாழ்வும் இதில் உண்டுதானே. இரு குடும்பங்களின் நிம்மதியும் சந்தோசமும் இதில் உண்டு தானே.

அதையெல்லாம் மனதினில் வைத்தே அவன் நிதானித்தான்.

நெஞ்சில் தோன்றிய சிறு சலனம், காதலாய் மாறும் காலம் எப்போது வரும் என்றும் சொல்ல முடியாது. ஆனால் எக்காரணம் கொண்டும் அர்ச்சனாவின் மனதிலோ, இரு குடும்பத்திலுமோ ஒரு பொய்யான நம்பிகையை அவன் உருவாக்க எண்ணவில்லை.

காலம் தாழ்த்தினாலும் கூட, நிலையான ஒரு முடிவு என்பது தான் அச்சுதன் வேண்டுவதாய் இருந்தது. அர்ச்சனா அவள் பக்கத்தில் எந்தவித குறைகளும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவளுக்கு இன்னுமின்னும் நல்ல இடத்தில் இருந்தெல்லாம் மாப்பிள்ளைகள் வருவர்.

மகள் சரி என்றால், கார்மேகம் இப்போதே அவளது கல்யாணத்தை நடத்தி இருப்பார். அவள் தன்னை விரும்பும் ஒரே காரணத்தினால் தானே அந்த மனிதரும் இத்தனை நாள் பொறுமையாய் போவது.

எல்லாவற்றையும் மனதில் வைத்து சிந்தித்தவன் தான் “ஐ நீட் சம் டைம் அர்ச்சனா…” என்று அவளுக்கு மெசேஜ் தட்ட, அர்ச்சனாவோ இருந்த மன சோர்வு மற்றும் உடல் சோர்வில் உறங்கியிருந்தாள்.

அவன் அனுப்பிய அந்த மெசேஜ் அவள் மாலையில் தான் பார்க்க “ஓகே…” என்றுமட்டுமே அவள் பதில் அனுப்ப, அர்ச்சனாவும் ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.

அச்சுதன் அவனே சொல்லிவிட்டான், மனதினில் லேசாய் ஒரு தடுமாற்றம் இருக்கிறது என்று. அது முழுமையான விருப்பமாய் மாறும்போது அவனே வந்து பேசட்டும். இல்லையா, அது அப்படியில்லை என்றாலும் அதையும் சொல்லட்டும். அதுவரையிலும் அவளாக எதுவும் அவனிடம் சாதாரணமாய் கூட பேசப் போவது இல்லை என்று.

இயல்பாய் அவனோடு பேசினால் கூட அது வீட்டினில் பேச்சு பொருளாகி, அது எதற்கு பார்ப்பவர் அனைவருக்குமே வீண் கற்பனைகளுக்கு இடம் கொடுத்துக்கொண்டு என்று எண்ணியவள், அவனே சொல்லட்டும் என்று ஒரு முடிவில் நின்றுவிட,  மறுநாளும் கூட அவள் சைட் பக்கம் செல்லவில்லை.

கார்மேகம் “பெயிண்ட் தானே பண்றாங்க அர்ச்சு.. நீ ரெஸ்ட் எடு…” என்றுவிட்டார்.

கட்டிட வேலைகள் முடிய முடிய, அச்சுதனுக்கு வேலைகள் நிறைய இழுத்துக்கொண்டன. பின்னே அத்தனை பெரிய கட்டிடத்திற்கான நகைகளை கொண்டு வந்து இறக்கிட வேண்டாமா?

அதற்கான விளம்பரங்கள் ஏற்பாடு செய்யவேண்டாமா?

அர்ஜூனுக்கும் அவனது நண்பர்கள் சிலருக்கும் ‘வீடியோ எடிட்டிங்..’ வேலைகள் கொடுத்திருந்தான்.

“இதெல்லாம் பில்டிங் ஒவ்வொரு ஸ்டேஜா ரெடியாகும் போது எடுத்தது அர்ஜூன்.. சின்ன சின்ன ரீல்ஸ்க்கு எடிட் பண்ணு. இன்ஸ்டால, பேஸ்பூக்ல இப்படி ரீல்ஸ், வீடியோஸ் எல்லாம் போட்டா, சீக்கிரம் ரீச் ஆகும்.. நம்மளே இனிசியல் ப்ரோமோசன் பண்ணலாம். அதைவிட ஆட் ஷூட் எல்லாம் எடுக்கும் போது சில ப்ளூப்பர்ஸ் எல்லாம் எடுத்து போடலாம்.. ரீச் ஆகும்..” என்று வியாபார யுக்திகளை சொல்லிக்கொண்டு இருக்க, நாட்கள் அத்தனை வேகமாய் சென்று மாதம் கடந்து இருந்தது.

அர்ச்சனா இப்போது அதிகமாய் சைட் பக்கம் செல்வது இல்லை. அவளுக்கான வேலைகள் அங்கே இப்போதில்லை. ஆனாலும் வாரம் இருமுறையேனும் சென்று பார்ப்பாள். உள் கட்டிட அலங்கார வேலைகள் நடந்துகொண்டு இருந்தது.

அச்சுதனுக்கோ அலைச்சல்கள் ஜாஸ்தியாகி இருந்தன. ஒவ்வொரு மாநிலங்களின் பிரத்தியேக பாரம்பர்ய நகைகளை இங்கே வைக்கவேண்டுமெனில் அதற்கான வேலைகள் சும்மாவா இருக்கும்.

அமர்ந்த இடத்தில் அமர்ந்துகொண்டா எல்லாம் செய்ய முடியும்.

அலையாத்தானே வேண்டும்.

நீலவேணியிடம் “நீங்க இனிமே தினமும் கிடைக்கு போயிடுங்க..” என்றுவிட்டான்.

அவனுமே வாரம் ஓரிரு முறை அதாவது திருச்சியில் இருந்தால் வந்து என்னென்னவ் வேலைகள் எப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்று பார்த்துவிட்டு செல்வான். அர்ச்சனா பற்றிய சிந்தனைகள் இருந்தாலும், இத்தனை அலைச்சல்கள், பணப் புரட்டல்கள், வரும் சிக்கல்களை சமாளிப்பது என்பதில் அவனும் பாவம் தானே.

ஒருநாள் கார்மேகம் அச்சுதனுக்கு அழைத்து “எங்க இருக்கீங்க தம்பி?” என்று கேட்க,

“ஜெயபூர்ல மாமா.. ஏன் என்ன விஷயம்?” என்று கேட்க,

“இல்ல கடை திறப்பு நாள் முடிவு பண்ணிட்டீங்களா?” என்று சொல்ல,

“ரெண்டு தேதி இருக்கு மாமா.. எல்லாம் செட் பண்ணிட்டா முடிவு பண்ணிடலாம். விளம்பரம் கூட அதுக்கு ஏத்தது போல ரெடி பண்ணியாச்சு…” என்றிட,

“ரொம்ப மெனக்கெடுறீங்க போல…” என்றார்.

“நமக்கான உழைப்பு தானே மாமா…” என்றவன் “சொல்லுங்க மாமா என்ன விஷயம்?” என,

“இல்லை.. தேதி முடிவு பண்ணிட்டா, அதுக்கு ஏத்தது போல வேலையை முடிச்சு கொடுத்துடுவோம் இல்லையா. அதுக்குதான் கேட்டேன்…” என்று சொல்ல,

“ஊருக்கு வந்துட்டு சொல்லட்டுமா?” என்றான்.

அதுபோலவே அந்த வாரக் கடைசியில், திருச்சி வந்தவன், குடும்பத்தினருடன் பேசி, என்று கடை திறப்பு என்று முடிவு செய்து, அதை கார்மேகத்திடமும் சொல்லிவிட்டான்.

இன்னும் சரியாய் ஒன்றரை மாதங்கள் இருந்தது.    

இந்த நகை மாளிகைக்கான பட்ஜெட் மிக பெரியது. அதிலும் அவன் இறக்குமதி செய்யப்போகும் நகைகளின் மதிப்பு எல்லாம் கேட்கவேண்டியதே இல்லை. பெரிய விஷயம் தான். ஆரம்பித்து விட்டான். அதை பாதியில் நிறுத்திட முடியாது இல்லையா?

சொல்லப்போனால் அச்சுதன் மாதத்தில் ஊரில் இருக்கும் நாள் என்பதே  மூன்றோ இல்லை நான்கோ நாட்கள் தான்.

இதில் எங்கே காதலைப் பற்றி யோசிப்பது.

இதற்கு நடுவில் அர்ச்சனாவின் பிறந்தநாள் வந்தது.

அனிதா கணவன் வீட்டில் பாதி நாளிலும், பிறந்த வீட்டில் பாதி நாள் என்றும் மாறி மாறி இருந்துகொள்ள, தங்கையின் பிறந்தநாள் என்று கணவனிடம் சொன்னவள் “ஏதாவது வாங்கணும்…” என்று சொல்ல,

“அச்சண்ணா டெல்லில இருந்து இன்னிக்கு நைட் கிளம்புவார்.. ஸ்பெசலா எதுவும் வாங்கச் சொல்வோமா?” என்று பிரகாஷ் கேட்க,

“சீக்கிரம் சொல்லுங்க…” என்றாள் அனிதா.

பிரகாஷோ அண்ணனுக்கு அழைத்து “அர்ச்சனா பிறந்தநாள் நாளைக்குண்ணா.. அனிதா ஏதாவது ஸ்பெசலா கிப்ட் பண்ணனும்னு சொல்றா.. நீ அங்க ஏதாவது வாங்கிட்டு வர்றியா?” என்று கேட்க,

“ஓ!” என்று நெற்றியை நீவியவன் ‘அர்ச்சனா…’ என்று உள்ளூர சொல்லிக்கொள்ள,

“அண்ணா…” என்றான் பிரகாஷ்.

“அ.. சொல்லுடா…” என,

“இல்ல உனக்கு கஷ்டமா இருந்தா வேணாம்…” என்று சொல்ல,

“கஷ்டம் என்ன.. என்ன வாங்குறதுன்னு யோசிச்சேன்.. பாக்குறேன்..” என்றவன் பேசிவிட்டு அலைபேசியை வைத்துவிட, அவளுக்கு என்ன வாங்குவது என்று அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

‘என்னடா அச்சுதா… என்ன வாங்கப் போற நீ…’ என்றவனுக்கு பல நாட்கள் இல்லை இல்லை, இரண்டு மாதங்கள் தாண்டி அன்றைய நாளில் அர்ச்சனாவின் நினைவுகள் நிறைய வர, அவளை முதன்முதலில் பார்த்ததில் இருந்து கடைசியாய் அவளிடம் பேசியது வரைக்கும் எல்லாம் எண்ணிப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

இதழில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

‘கோபமா இருப்பாளோ…’ என்று எண்ணியவனுக்கு அவளது பிடிவாதம் எண்ணி மேலும் புன்னகை விரிய,

“லவ் அப்படின்னு எல்லாம் எனக்கு சொல்லத் தெரியலை அர்ச்சனா…” என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டவன்..

“வர்றேன்.. நாளைக்கு வந்து உன்னை மீட் பண்றேன்…“ என்றும் பேசிக்கொண்டவன், டாக்ஸி புக் செய்து அவன் எங்கே செல்லவேண்டும் என்று சொல்லிச் செல்ல, அவளுக்கான பரிசுகள் வாங்கி முடிக்கும் போது அரைநாள் கடந்திருந்தது.

அவன் வந்த வேலை முடிந்திருந்தது தான். இரவு நேர ப்ளைட் என்பதால் அவனுக்கு இப்போது நேரம் போனதும் தெரியவில்லை.

அனிதா அழைத்து “மாமா கிப்ட் வாங்கிட்டீங்களா?” என்று கேட்க,

“எதோ எனக்கு தெரிஞ்சது வாங்கினேன்.. அது அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ.. நான் செலக்ட் பண்ணேன்னு எல்லாம் சொல்லாத அனிதா.. நீயே குடு.. எதுக்கும் நீ அங்க ஏதாவது பர்சேஸ் பண்ணி வச்சிரு…” என்றும் சொல்லிவிட ,

“இதுக்கு நம்ம இங்கயே ஏதாவது வாங்கிருக்கலாம்…” என்று கணவனை முறைத்தவள், பிரகாஷை வம்படியாய் அழைத்துக்கொண்டு சென்று அர்ச்சனாவிற்கு அழகாய் இரண்டு டிசைனர் சல்வார் எடுத்து வந்திருந்தாள்.

“எட்டாவது மாசம் ஆரம்பிச்சிடுச்சு… இன்னும் இப்படி எல்லாம் வெளிய சுத்தக் கூடாது அனிதா.. நீ இனி உங்க வீட்ல இரு.. பிரகாஷ் வந்து தினமும் பார்த்துட்டு வரட்டும்…” என்று பாமினி சொல்லிவிட,

“ம்மா நாளைக்கு அர்ச்சனா பர்த்டே.. அதுதான் ட்ரெஸ் எடுக்கலாம்னு போனோம்…” என்று பிரகாஷ் சொல்ல,

“சரிதான் டா.. எட்டு மாசம் ஆச்சு.. எப்போன்னாலும் கூட வலி வரும்.. பிரசவத்துல எது எப்போன்னு எல்லாம் சொல்ல முடியாது.. எட்டு, ஒன்பது மாசம் எல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும்..” என்றவர் “நாளைக்கு அர்ச்சனாவை போய் பார்த்துட்டு வரலாம்…” என்று கணவரிடம் சொல்ல,

இப்படி ஒருவர் தொட்டு ஒருவராய்  அங்கே மொத்த ஆட்களும் அர்ச்சனாவை பார்த்து, வாழ்த்துச் சொல்லவென்று கிளம்ப, அனிதாவோ “அம்மா.. எல்லாரும் அங்க வர்றாங்க…“ என்று தகவல் சொல்லிவிட்டாள்.

அர்ச்சனாவோ “ம்மா நான் தான் செலிப்ரேசன் எல்லாம் வேணாம்னு சொன்னேன் தானே…”  என்று சொல்ல,

“அவங்க எல்லாம் அவங்களா வந்தா, நான் என்ன செய்றது டி.. உன்னை வாழ்த்த வர்றாங்க…” என்றார் ரோஜா.

முல்லைக்கு ஊர் செல்லும் எண்ணம் இன்னும் இல்லை போல. ரோஜாவும் ‘வந்தது தான் வந்துட்ட, அனிதா டெலிவெரி முடியவும் போயேன்…’ என்று பேசி பேசி தங்கையை இருக்க வைத்திருக்க,

“அர்ச்சு இன்னிக்கு உனக்கான நாள். சந்தோசமா இரு…“ என்றார் அக்கா மகளிடம்.

“ம்ம்ம்…” என்றவள் குளிக்கச் செல்ல, மனதோ ‘எல்லாம் வருவாங்க ஆனா இந்த அச்சத்தான் ஒரு விஷ் கூட பண்ண மாட்டார்…’ என்று நொந்துகொள்ள தானே முடியும்.

அச்சுதனோ வீடு வந்து சேர்ந்திருந்தவன், நன்றாய் உறங்கி இருந்தான். நீலவேணியோ மெதுவாய் அவனை எழுப்ப “ம்மா.. நீங்க எல்லாம் முன்னாடி போங்க.. நான் அடுத்து வர்றேன்…” என்று சொல்லிவிட்டான்.

“எப்போ பார் இதே வேலைதான் உனக்கு.. எல்லாரோட சேர்ந்து வந்தா தான் என்ன?” என்று கடிய,

“ம்ம்ச் ம்மா டயர்டா இருக்கு ம்மா…” என்றான் கண்கள் திறவாமலே.

“என்னவோ பண்ணுடா…” என்று சலித்தவர் நகரப் பார்க்க,

“ம்மா அந்த பேக்ல ஒரு கிப்ட் பாக்ஸ் இருக்கு.. அனிதா கிட்ட கொடுத்திடுங்க…” என,

‘நீயும் உன் கிப்ட்டும்…’ என்று முணுமுணுத்த நீலவேணி அவன் சொன்னதை செய்துவிட்டார்.

ஒருவழியாய் அனைவரும் அங்கே அனிதா பிறந்தவீடு செல்ல, கார்மேகம் மகளிடம் “கேக் சொல்லிருக்கேன் டா…” என்றுவிட்டார்.

“டாடி.. நான் என்ன சின்ன குழந்தையா?” என்று அவளோ பிடிவாதம் செய்ய,

“இப்போ எதுக்கு இத்தனை அழிச்சாட்டியம் பண்ற அர்ச்சனா நீ?” என்றார் ரோஜா.

“ம்ம்ச் போங்கம்மா…” என்றவள் “அமைதியா வீட்ல ஹாயா  இருக்கலாம்னு பார்த்தேன்..” என்று சொல்லும் போதே எல்லாம் வந்துவிட, இனி எங்கே அமைதியாய் இருப்பது.

அனைவரும் அவரவர் கொண்டு வந்திருந்த பரிசு பொருட்களை கொடுக்க, இன்முகமாகவே அதனைப் பெற்றுக்கொண்டவளுக்கு அச்சுதன் வரவில்லை என்பது ஒருமாதிரி இருந்தது.

நீலவேணி அதைப் புரிந்தவர் “தூங்கிட்டு இருக்கான் ம்மா.. அடுத்து வர்றேன்னு சொன்னான்…” என்று மெதுவாக சொல்ல,

“ம்ம்…” என்று தலையை ஆட்டிக்கொண்டாள்.

அனிதா அவள் எடுத்திருந்த உடையையும், அச்சுதன் வாங்கி வந்திருந்த கிப்ட் பாக்ஸ் எடுத்து கொடுக்க “தேங்க்ஸ் க்கா…” என்று வாங்கியவளுக்கு உற்சாகமே வரவில்லை.

பிரசாந்தும், பிரகாஷ் எல்லாம் சிறிது நேரம் இருந்துவிட்டு அவரவர் தொழில் பார்க்கக் கிளம்பிவிட, அடுத்து சிறிது என்றதில் தாமோதரன் சுரேந்திரனும் கிளம்பியிருக்க, பேச்சுக்கள் எல்லாம் அனிதா பிரசவம் பற்றியே இருக்க, அர்ச்சனாவிடம் அனிதாவோ “போய் இந்த ட்ரெஸ் போட்டுட்டு வாயேன் எப்படி இருக்குன்னு பார்ப்போம்…” என்று சொல்ல,

“சரிக்கா…” என்றவள், அவள் கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்று, முதலில் புதிய உடையை அணிந்தவள், பின் அழகாய் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்த அந்த கிப்ட் பாக்ஸை பிரிக்க, அவளது கண்களோ அதிர்ச்சியில் இன்னும் அகலமாய் விரிந்தது.

உள்ளிருந்தது எல்லாம் விதவிதமான, வித்தியாசமான வடிவமைப்புகளை கொண்ட ‘ஹேர் கிளிப்ஸ்…’  இருந்தது.

  ‘ஹேர் கிளிப்…’ என்றவள், ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்க, மொத்தம் முப்பது இருந்தது.

ஒவ்வொன்றும் ஒரு ரகம்.

ஒவ்வொரு வடிவமைப்புகளையும் அதன் ‘பிராண்ட்..’ பார்க்கையிலே அதன் விலை மதிப்பு கணக்கிட முடியும்..

வேகமாய் அறை விட்டு வெளிய வந்தவள் “அக்கா… அனிதா…” என்று சத்தம் போட்டுக்கொண்டே வர, சட்டென்று நின்றுவிட்டாள்.

அச்சுதன் அங்கே வந்திருந்தான்.

அவனை இத்தனை மாதங்கள் கழித்துப் பார்க்கிறாள்.

வரமாட்டான் போல என்று எண்ணியிருக்க, அவனோ வந்திருந்தான். கர்மேகத்தோடு பேசிக்கொண்டு இருக்க, அர்ச்சனாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒருவித படபடப்பு அவளுக்கு.

அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வருவது போல இருக்க, ஆழ மூச்செடுத்து விட்டவள் “இங்க கிப்ட் நீங்க தானே வாங்குனீங்க?” என்றுவந்து அவன் முன்னே நின்று, அந்த கிப்ட் பாக்ஸை நீட்ட,

“ஹாய் அர்ச்சனா…” என்றான் அவனோ சாதாரணம் போல.

“அதெல்லாம் இருக்கட்டும்.. இது நீங்கதானே வாங்குனீங்க?” என்று திரும்பக் கேட்க,

அனிதா அங்கே வந்தவளைப் பார்த்து “என்ன அனிதா…” என்று அச்சுதன் கேட்க,

“எனக்குத் தெரியும் அச்சத்தான் இது நீங்க தான் வாங்கிருப்பீங்க அப்படின்னு…” என்றவள், அவன் முன்னே பிடிவாதம் பிடித்து நிற்க,

அவனோ மலர்ந்த புன்னகையோடு “ஹேப்பி பர்த்டே அர்ச்சனா…” என்று வாழ்த்தி கை நீட்ட, அவனை முறைத்துக்கொண்டு நின்று இருந்தாள் அர்ச்சனா.