அத்தியாயம் – 20

அர்ச்சனாவும் அச்சுதனும் தான் ஒரே காரில் சென்றுகொண்டு இருந்தனர். பிரகாஷ் அனிதா பிரச்சனையை பேசக் கிளம்ப, அது கடைசியில் இவர்கள் பக்கம் வந்து நிற்கும் என்று இருவரும் நினைக்கவில்லை.

அனிதா சொன்ன விஷயங்கள் சில. ஆனால் பிரகாஷ் சொன்னதும் சில. அதில் அர்ச்சனா காதலும் சேர்த்து வர,

“இதெல்லாம் நீங்க பெருசா எடுக்க தேவையே இல்லை…” என்ற வாதத்தில் நின்றான் அச்சுதன்.

இதுதான் சந்தர்பம் என்று பிபி சகோதரர்கள் இருவரும் அவனிடம் பேச, அச்சுதன் இதற்கெல்லாம் மசிவானா என்ன?!

“பிரகாஷ், என்னோட ஹெல்த் கண்டிசன் எப்போன்னாலும் மாறலாம். அர்ச்சனாக்கு காலப்போக்குல கண்டிப்பா மனசு மாறிடும். இட் டேக் சம் டைம் அவ்வளோதான். இதெல்லாம் நீ தான் அனிதாக்கு எடுத்து சொல்லணும். அண்ட் உன்னோட வாழ்க்கை வேற. என்னோடது வேற…“ என்று பேச்சினை முடித்தவனுக்கு அர்ச்சனா மீது தான் கோபம் கோபமாய் வந்தது.

‘படித்தவள் தானே…’ என்று எண்ணியவன் ‘அறிவுகெட்ட அர்ச்சனா…’ என்று அவளை அர்ச்சித்துக் கொள்ள,

அக்காவும் தங்கையும் பேசி முடித்து, தோட்டத்தில் வேலை செய்பவரிடம் இளநீர் வெட்டித் தரச் சொல்லி குடித்துவிட்டு வர, அர்ஜூனும் பவஸ்ரீயும் கூட இவர்களை தேடி வந்துவிட்டனர்.

“என்ன அண்ணிகளா, தனியா வந்து தண்ணி அடிக்கிறீங்களா?” என்று அர்ஜூன் கிண்டல் பேச,

“ஆமா அர்ஜூன் சைட் டிஷ் உங்க அண்ணனுங்க செய்றாங்க. ரெடியான்னு பாரேன்…” என்று அர்ச்சனா பதில் சொல்ல,

“அண்ணி.. சும்மா சொல்லக் கூடாது நீங்க தான் இவனுங்க வாய்க்கு சரியான ஆளு..” என்றாள் பவஸ்ரீ.

அனிதாவோ “என்ன டி இப்படியெல்லாம் பேசுற…” என்று கிசுகிசுக்க,

“அக்கா எதையுமே கேசுவலா பாரு. நீ ஒரு டிப்ரஷன் உலகத்துலேயே சுத்திட்டு இருக்கன்னு நினைக்கிறேன். அதெல்லாம் விட்டு பழைய அனிதாவா திரும்ப வா…” என்று உடன்பிறந்தவளை ஊக்கியவள், இளையவர்களோடு பேசியபடி முன்னே நடக்க, திருமணத்திற்கு பிறகு அனிதா முதல்முறையாய் தங்களின் வாழ்வு குறித்து நல்ல விதமாய் யோசிக்கத் தொடங்கினாள்.

பிரகாஷும் கூட வெளியே பேசினாலும், மனதினுள் தான் எங்கே தவறுகிறோம் என்று சிந்திக்கத் தொடங்க, அடுத்து அனைவரும் ஒன்று கூடவும் சாப்பாட்டு நேரம் என்பது கலகலப்பாகவே சென்றது.

அர்ச்சனாவிற்கு இது முற்றிலும் புதிய உற்சாகம் கொடுக்க, அனைவர் பேசுவதற்குமே சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருந்தாள். அனிதாவும் கூட சிறிது நேரத்தில் அர்ச்சனா போல சலசலக்க, அச்சுதன் அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

ஆனால் அவனுக்குத்தான் முழுமனதாய் இவர்களின் கொண்டாத்ததில் பங்குகொள்ள முடியவில்லை.

எங்கே தான் இயல்பாய் இருப்பது போல் காட்டிக்கொள்வது கூட, ஒருவகையில் அர்ச்சனாவை ஊக்கப்படுத்துகிறதோ என்று யோசிக்க, அவளோ அவளது மனத்தில் என்ன நினைக்கிறாள் என்பதனை கணிக்கவே வாய்ப்பு கொடுக்கவில்லை.

அச்சுதன் ஏதோ சிந்தனையில் இருக்கிறான் என்பது புரிந்துகொண்டவள் “என்ன பிரகாஷ் மாமா, பிரியாணி நீங்களா செஞ்சீங்க?” என்று கேட்க,

“ஆமா அர்ச்சு. ஏன்…?” என்றான்.

“பீசெல்லாம் வேகவே இல்லை…” என்றிட,

“நான் அப்போவே சொன்னேன் வேகலைன்னு. இதோ அச்சண்ணா தான் வெந்துடுச்சுன்னு சொன்னார்..”     என்று பிரசாந்த் சொல்ல,

“அதுசரி அப்போ அப்படித்தான் இருக்கும்…” என்று அர்ச்சனா வேண்டும் என்றே முனுமுனுக்க, அவள் தன்னை பேச்சில் இழுக்கவே இப்படி செய்கிறாள் என்று புரிந்தவன்,

“அர்ச்சனா கிளம்பும் போது சைட் போயிட்டு போவியா இல்ல எப்படி?” என்று கேட்க, அர்ச்சனா கண்டுகொண்டாள் அவன் என்னவோ பேச நினைக்கிறான் என்று.

“ம்ம் போயிட்டு தான் போகணும்…” என்றிட,

“அப்போ, நானும் வர்றேன்…” என்றவன் இதோ அர்ச்சனாவின் காரில் தான் அவளுடன் பயணிக்க, இருவருக்கும் பேச்சுக்கள் தான் இல்லை.

கார் எடுத்தும் கூட கால்மணி நேரம் ஆகியது, அச்சுதனோ அசையாமல் இருக்க, அர்ச்சனா எத்தனை நேரத்திற்கு மௌனமாகவே காரினை செலுத்துவாள்.

“என்ன விஷயம் அச்சத்தான்?!” என்று கேட்க,

“நீதான் சொல்லணும் அனிதா என்ன சொன்னா?” என்று கேட்க,

“அவளுக்கு என்ன…” என்றவள் அவள் சொன்னதை சொல்ல,

“ம்ம் பிரகாஷும் இதையே வேற மாதிரி சொன்னான்…” என்றவன் “ஆனா உன்னாலயும் அனிதா கொஞ்சமில்ல நிறையவே டென்சன் ஆகுறா அது அவங்களோட பெர்சனல் லைப்ப பாதிக்குது…”  என்று சொல்ல,

“என்னாலயா?” என்றவள் காரினை ஒரு ஓரமாக நிறுத்தியே விட்டாள்.

“இல்லையா பின்ன.. நீ யோசிக்காம ஒருவிசயம் சொல்லிட்ட. அனிதா பிரகாஷ் கிட்ட இதை என்கிட்டே பேசு பேசுன்னு சொல்லிருப்பா போல..” என,

“ஹ்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சு விட்டவள் “யோசிக்காம எல்லாம் சொல்லல.. நிறைய யோசிச்சுத்தான் சொல்லவே கூடாது. சொல்லப்போனா இங்கே இருக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணேன். ஆனா எல்லாம் சேர்ந்து பண்ண வேலைக்கு சொல்லியே ஆகவேண்டிய சூழல்…” என தாழ்ந்த குரலில், பார்வையை வேறெங்கோ வைத்து சொல்ல,

“மண்ணாங்கட்டி சூழல்…” என்றார் அச்சுதன் அடக்கப்பட்ட கோபத்தோடு.

“ஷ்..! ரொம்ப டென்சன் எல்லாம் ஆகாதீங்க அத்தான். இது என்னோட கார். டேப்ளட்ஸ் கூட இங்க இல்லை…” என்றவள் “அனி பத்தி எனக்கு நல்லாவே தெரியும். கண்டிப்பா இதை பிரகாஷ் மாமாக்கிட்ட பேசிருப்பா. ஆனா இதையே அவங்க ரெண்டு பேருக்குள்ள கொண்டு வந்து பிரச்சனை ஆக்கிக்க எல்லாம் மாட்ட. பிரகாஷ் மாமா இதுதான் சந்தர்ப்பம்னு உங்கக்கிட்ட பேசி பார்த்திருக்கார் அவ்வளோ தான்…” என்று இலகுவாய் தோளை குலுக்க,

“என்ன சொன்னாலும், நீ ஏன் இப்படி இருக்க அர்ச்சனா?!” என்றான் ஆற்றாமையாய்.

“எப்படி இருக்கேன்? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், நான் யாரையும் டிஸ்டர்ப் பண்றேனா?” என்று கேட்க,

“இல்லையா பின்ன, நீ இத்தனை பிடிவாதமா இருக்கிறது உன்னோட பேரன்ட்ஸ கண்டிப்பா டிஸ்டர்ப் பண்ணும்.. உன்னோட சிஸ்டர டிஸ்டர்ப் பண்ணும்..” என்று வேகமாய் அவன் பேசிக்கொண்டே இருக்க,

“உங்களுக்கு டிஸ்டர்பா இல்லைதானே?” என்றாள் அவளும் அதைவிட வேகமாய்.

அவளது கேள்வியில், பேச்சினை நிறுத்தியவன் அவளை உறுத்துப் பார்க்க “சொல்லுங்க அச்சத்தான். நான் உங்களை எந்த வகைல டிஸ்டர்ப் பண்றேன்..?” கேட்டு வைக்க,

“இங்க பாரு தேவையில்லாம பேசாத…” என்றான் கண்களை இறுக மூடித் திறந்து.

“பேசாம.. நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன். என் மனசுக்குள்ள என்ன இருந்தா உங்க எல்லாருக்கும் என்ன? அண்ட் என்னோட பேரன்ட்ஸ், சிஸ்டர் கிட்ட என்ன பேசணும்னு எனக்குத் தெரியும். என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தெரிஞ்சவங்க அவங்க…” என்று பேச,

“ம்ம்ச்…” என்று டேஷ் போர்ட் மீது ஒரு குத்து விட்டவன்,

“உனக்கு பேசி புரிய வைக்கலாம்னு நினைச்சேன் பாரு…” என்று காரை விட்டு இறங்கப் போக,

“ரிமோட் லாக் பண்ணிருக்கேன்…” என்றாள் வேகமாய்.

“ஓ காட்..!” என்று பல்லைக் கடித்தவன் “டோர் ஓபன் பண்ணு…” என்று சீற,

“ஏன் இத்தனை நேரம் இல்லாதது இப்போ உங்களுக்கு என்ன? இன்னும் அஞ்சு நிமிஷம் தானே சைட் வந்திடும்…” என்று அவள் காரை கிளப்ப,

“உனக்கெல்லாம் அறிவே இல்ல…” என்று அவன் வைய,

“உங்களை பார்த்ததுல இருந்து தான் அதெல்லாம் காணோம் அச்சத்தான்…” என்றவள், நிதானமாகவே “நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துட்டு இருக்கேன். வாலண்டியரா வந்து வண்டியில நீங்க தான் ஏறினீங்க…” என, அச்சுதன் வாயே திறக்கவில்லை.

பேசினால் தானே இவளிடம் என்று வாய்க்கு பூட்டு போட்டுக்கொண்டு விட, அர்ச்சனாவோ ‘ஒரு சிறு துளி அளவேனும் கூட இவன் மனதை நான் தொடவில்லையா..’ என்று வருத்தமாய் இருந்தது.

அவளும் பேச்சினை நிறுத்திவிட, அடுத்த ஐந்து நிமிடமும் அப்படியொரு மௌன கனத்தை கொடுக்க, சைட் வந்ததுமே இருவரும் விட்டால் போதும் என்பதுபோலத்தான் கார் விட்டிறங்க, காரில் இருந்து இறங்கியதுமே அச்சுதன் அவனது டிரைவருக்கு அழைத்து வரச் சொல்லிட, அர்ச்சனா அப்போதும் எதுவும் பேசினால் இல்லை.

அடுத்து வந்த நாட்கள் கூட இப்படித்தான் கழிந்தது. நாட்கள் என்ன வாரங்கள் என்றுகூட சொல்லலாம்.

 இதற்கிடையில் அச்சுதன் ஒருமுறை சென்று தனுஜாவை பார்த்துவிட்டு வர, அப்போது தனுஜாவின் பெற்றோர்களும் கூட “இன்னும் எத்தனை நாளைக்கு அச்சுதான் இப்படியே இருக்க முடியும்?” என்று கேட்க,

“ஏன் என்னாச்சு?” என்று கேட்டான்.

“இல்லைப்பா.. தனுஜா நல்லா இருந்திருந்தா அது வேற.. இப்போ உன்னோட வாழ்கையை நீ வீணடிக்கிற…” என்று தனுவின் சொல்ல,

“என்ன செய்யனும்னு எனக்குத் தெரியும் அங்கிள்…” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

தினமும் கட்டிட வேலைகளை பார்க்கச் செல்கிறான் தான். ஆனால் அர்ச்சனாவோடு பேசுவதில்லை. ஏதேனும் கேள்விகள் இருந்தால், எஞ்சினியரிடம் பேசிக்கொள்வான். அவ்வளவே.

அர்ச்சனாவும் எல்லாம் கண்டுதான் இருந்தாள்.

‘என்னோடு பேசு..’ என்றோ

‘என்னிடம் பேசித்தான் ஆகிடவேண்டும்…’ என்றோ எல்லாம் அவள் கேட்கப் போவதில்லை.

அவள் மனதினில் தான் ஆயிரம் கதைகள் அவனுடன் பேசுகிறாளே. தினமும் அவன் வந்து போவதே அவளுக்கு போதுமானதாய் இருக்க, வாரங்களும் கூட மாதம் கடக்கச் செய்ய,  அச்சுதன் காரணமேயின்றி முதல் முறையாய் வாழ்வில் ஒரு வெறுமையை உணரத் தொடங்கினான்.

தினமும் செல்கிறான் ஆனால் தான் பேசவில்லை என்றதுமே அவளும் பேச்சை நிறுத்தியது அவனுக்கு என்னவோபோல் இருந்தது.

‘என்னவொரு திமிர் இவளுக்கு. பேசலைன்னா பேசமாட்டாளா? அப்போ, நானா தான் இத்தனை நாளா இடம் குடுத்துட்டேன்…’ என்றவன்

‘பேசலைன்னா போறா. எனக்கென்ன…’ என்றும் சொல்லிக்கொள்ள, என்னவோ அவனுக்கு அர்ச்சனாவின் இந்த பேசா விஷயம் ஒருவித எரிச்சலை கொடுத்தது.

“பிடிவாதம்.. விளையாடிப் பாக்குறா…” என்று அதையே தான் சிந்தித்துக்கொண்டு இருக்க, கட்டிட வேலைகளோ மளமளவென்று நடந்துகொண்டு இருந்தது.   

கட்டிடத்தின் வளர்ச்சியை விட, அர்ச்சனாவின் மனதினில் அச்சுதனுக்கான காதலின் வளர்ச்சியும் அதிகமாகவே இருக்க, அர்ச்சனாவோ மனதளவில் தொய்ந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

‘என்னோட காதல் எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கட்டும்…’ என்ற முடிவிற்கு வந்துவிட,

யாருமே எதிர்பாராத விதமாய் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாய், அனிதாவும் பிரகாஷும் நல்ல செய்தி சொல்ல, இரு குடும்பங்களுமே மற்ற சங்கடங்கள் மறந்து சந்தோசமாய் உணர,

“ரொம்ப ரொம்ப சந்தோசம் அக்கா…” என்று அனிதாவை இறுக காட்டிக்கொண்டாள் அர்ச்சனா.

“ம்மா வீட்ல செக் பண்ணோம்.. கன்பார்ம் தான்…” என்று காலையிலேயே ரோஜாவிற்கு அழைத்து அனிதா சொல்லிவிட, அவ்வளவு தான் மூவருக்குமே இங்கே இருப்புக்கொள்ளவில்லை.

பிரகாஷிற்கு தந்தையாகப் போகும் இந்த உணர்வு, சொல்ல முடியா ஒரு சந்தோசத்தைக் கொடுக்க, வீட்டில் அனைவரின் முகத்திலும் புன்னகை தான்.

கர்மேகமும், ரோஜாவும் மகளை அணைத்துக்கொள்ள “அண்ணி இன்னிக்கே டாக்டர் கிட்ட போயிட்டு வந்துடலாம் தானே…” என்று கேட்டார் பாமினி.

“அதுக்கென்ன அண்ணி.. போயிட்டு வந்துடலாம்…” என,

“இன்னிக்குன்னு பார்த்து வீட்ல ஒரு ஸ்வீட் கூட இல்லை.. கேசரியாவது பண்ணலாம்னா கையும் ஓடல, காலும் ஓடல…” என்று பரபரத்த பாமினி “பிரசாந்த் ஸ்வீட் வாங்கிட்டு வருவான்.. நீயே எல்லாருக்கும் குடு அர்ச்சனா.. நாங்க ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துடுறோம்..” என்று சொல்ல,

“ம்ம்…” என்று புன்னகைத்தவள், பிரசாந்த் கொண்டு வரவும், அனைவருக்கும் அக்கா மற்றும் மாமா சார்பாக இனிப்பை கொடுக்க, நீலவேணியும் அச்சுதனும் அப்போது தான் அங்கே வந்து கொண்டு இருக்க,

“அட அர்ச்சு.. எப்போ வந்தீங்க? நல்லா இருக்கியா ம்மா?” என்றார் நீலவேணி.

“நல்லாருக்கேன் அத்தை…” என்றவள் அவருக்கு இனிப்பை நீட்ட,

“அக்கா சார்பா நீ குடுக்கிறியா?” என்றவர் “ரொம்ப சந்தோசமா இருக்கு..” என்றவர் உள்ளே செல்ல,

அச்சுதனோ அவள் நீட்டிய இனிப்பினை எடுப்பதா வேண்டாமா என்று யோசிக்கும் நேரம் “அண்ணா…” என்று பிரகாஷ் வரவும்,

“வாழ்த்துக்கள் டா.. ரொம்ப சந்தோசமா இருக்கு.. அடுத்த தலைமுறை நம்ம குடும்பத்துக்கு வரப் போகுது…” என்று அவனுடன் சந்தோசமாகவே பேசிக்கொண்டுச் செல்ல, அர்ச்சனாவிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

தன் கையில் இருந்து கொடுக்கும் இனிப்பு கூட அவனுக்கு கசக்கிறதா என்று நினைக்கையில், மளுக்கென்று அவள் கண்களில் இருந்து நீர் கசிந்திட,

‘நோ நோ அர்ச்சு.. எல்லாரும் ஹேப்பியா இருக்காங்க.. இந்த நேரத்துல நீ இப்படி நின்னா எல்லாமே ஸ்பாயில் ஆகிடும்…’ என்று அவளுக்கு அவளே தேறுதல் சொல்லி, வீட்டினுள் செல்ல,

ரோஜாவோ “நான் அக்காவோட ஹாஸ்பிட்டல் போயிட்டு வர்றேன் அர்ச்சு.. நீ அப்பாவோட கம்பனி போயிடுறியா?” என்று கேட்க,

“இல்லம்மா நான் இப்போவே சைட்டுக்கு போறேன்…” என்றவள் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

என்னவோ அவளுக்கு அங்கே நிற்கவே முடியவில்லை. அனிதாவின் விஷயம் ரொம்பவும் சந்தோசமே. ஆனால் அச்சுதன் செய்த செயலை அவளால் தாங்க இயலவில்லை. அப்படியென்ன செய்துவிட்டேன் நான்.

குடும்பத்தில் ஒரு நல்ல செய்தி. அதற்கு இனிப்பு கொடுத்தால் கூட எடுக்காமல் செல்பவன் மீது தானே இந்த மனது காதல் வைத்து தவிக்கிறது என்று அவள் நொந்துகொள்ள, அத்தனை பேர் இருந்தும் அர்ச்சனா உடனே கிளம்பியதை அச்சுதன் கவனிக்காமல் இல்லை.      

‘இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு மூஞ்சிய தூக்கிட்டு போறா…’ என்று முனுமுனுத்தவனுக்கு அவளது பிடிவாதம் கண்டு இன்னும் பிடிவாதம் கூடவே செய்தது.

‘பாக்கலாம் நீயா நானா அப்படின்னு..’ என்று அவனுக்கு அவனே சூளுரைத்துக் கொண்டான்.