அத்தியாயம் – 17

அச்சுதனுக்கு அந்த நாள் விடிந்ததே பிடிக்கவில்லை எனலாம். கண் விழித்ததுமே, அவனது மனம் முந்தைய நாட்களின் சிந்தையில் புகுந்துகொள்ள, நேரம் போனது தெரியாமல் படுத்திருக்க, அங்கே அர்ச்சனாவிற்கோ அனிதாவின் அர்ச்சனைகள் நடந்துகொண்டு இருந்தது.  

“நீ சொல்றது எல்லாமே சரி அர்ச்சு. உன்னை மீறி நடந்ததாவே இருக்கட்டும். ஆனா பிராக்டிகலா யோசி டி. ஹி இஸ் நாட் மெண்டலி ஸ்டேபில்…” என்று அனிதா பேச,

“அப்படியா?!” என்றாள் அர்ச்சனா கண்களை சுறுக்கி.

“ம்மா பாரும்மா..” என்று அனிதா ரோஜாவை பேச்சில் இழுக்க,

கார்மேகம் அத்தனை நேரம் அமைதியாய் மகள்களின் பேச்சினை கேட்டுக்கொண்டு இருந்தவர் “அர்ச்சு..” என்று அவளை பார்க்க, 

“எஸ் டாடி..” என்றாள் அவளும்.

“நேத்தே பேசிருக்கணும். பட் நீ ரொம்ப டிஸ்டர்பா இருந்த..” என்றவர் “உன்னோட மனசுல என்ன இருக்குடா?” என்று மகளிடம் நேரடியாகவே கேட்க,

“டாடி…” என்று அவரைப் பார்த்தவள், பின் அவளுள் எழுந்த குழப்பங்களும், அச்சுதன் மீதான நினைவுகளும், அவளது அபிப்ராயங்களையும் சொல்ல,

“ம்ம். இதெல்லாமே இயற்கையா நடக்கிறது தான். ஆனா, அச்சுதனோட எண்ணங்கள் வேற இல்லையா அர்ச்சு…” என்றார் ரோஜா.

“ம்மா.. இருக்கட்டுமே. நான் அவர்கிட்ட என்னை நீங்க காதலிக்கணும், கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லவே இல்லையேம்மா. என்னோட லவ் ட்ரூ.. கண்டிப்பா அவரும் நானும் தான்னு இருந்தா, அது தானாவே நடக்கும்.. இப்போதைக்கு நம்ம, நம்ம வேலையை பார்த்தா போதும்..” என்றாள் அர்ச்சனா தெளிவாகவே.

“அப்படி நாங்க சும்மா இருக்க முடியாதே டா.. ஏற்கனவே சம்பந்தம் பண்ண குடும்பம் வேற..” என்றார் கார்மேகம்.

“ப்ளீஸ் டாடி.. எனக்காக யாருமே அவர்கிட்ட பேசவேணாம். இப்போதான் அவருக்கு மருந்து எல்லாம் கம்மி பண்ணிருக்காங்க. சொல்லப்போனா அவர் நல்லாவே இருக்கார். இல்லைன்னா இந்தமாதிரி எல்லாம் பிஸ்னஸ் பண்ண முடியாது. அண்ட் அக்கா நீ சொன்னியே ஹி இஸ் நாட் மெண்டலி ஸ்டேபில்னு, ஹி இஸ் நாட் லைக் தட். அவர் நம்ம எல்லாரையும் விட ரொம்பவே ஸ்டேபில்…” என,

அனிதாவோ “எல்லாம் சரிதான் டி.. இதெல்லாம் இப்போ நீ சொல்ற. அதாவது அச்சுதன் மாமாக்கு எதுவுமே தெரியக் கூடாதுன்னு நினைச்சு தானே இருந்த. இப்போ தெரிஞ்சதுனால, நீ இத்தனை தெளிவா பேசுற. ஆனா எல்லாத்தையும் மனசுல போட்டு வச்சுக்கிட்டு, நீ என்ன பண்ணலாம்னு இருந்த?” என்று கேட்க,

“அ.. அது.. அதுவா…” என்று இழுத்தவள், மூவரையும் பார்க்க,

“சொல்லு டி.. அப்போ என்னவோ ஒரு ப்ளான் மனசுல வச்சுட்டு தானே, யாருக்கும் எதுவும் தெரியக்கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்த..” என்று அனிதா கேட்க,

“அது.. இந்த ப்ராஜக்ட் முடிச்சிட்டு மறுபடியும் யுஎஸ் போயிடலாம்னு…” என்று இழுக்க,

“பார்த்தீங்களாங்க பொண்ணுங்க பொண்ணுங்கன்னு நீங்களும் நானும் தான் கிடந்து தவிக்கிறோம்…” என்று கடிந்தார் ரோஜா.

“ம்மா.. அப்போ இருந்த டென்சன்ல அப்படி யோசிச்சு வச்சிருந்தேன்..” என்ற அர்ச்சனா அவரை கட்டிக்கொள்ள,

“எந்த வீட்ல பிள்ளைங்களுக்கு இவ்வளோ ப்ரீடம் குடுக்கிறாங்க.. இதோ இவ லவ்னு வந்து நின்னா, உங்கப்பா மறுபேச்சே பேசாம யாரு என்னன்னு பார்த்து கல்யாணம் பண்ணி குடுத்தார். இப்போ நீ, நேத்து அங்க அத்தனை களேபரம் பண்ண. உன்னை ஒருவார்த்தை சொல்லிருப்போமா. அப்பவும் கூட பார்த்துக்கலாம் வா அப்படின்னு உனக்கு தான் தைரியம் சொன்னோம்.

எந்த குடும்பத்துல அர்ச்சு இதெல்லாம் அலோவ் பண்றாங்க. நானும் அப்பாவும் உங்க ரெண்டு பேர் கிட்டயும் அப்படியா நடந்துக்கிறோம். ஆனா நீ, காதல்னு வரவும் ஓடி ஒழியத் தானே நினைச்சிருக்க…” என்ற ரோஜாவிற்கு நிஜமாய் மனது வருத்தமாய் போனது.

“ம்மா நானெல்லாம் உங்கட்ட சொல்லிட்டேன் தானே…” என்று அனிதா பேச,

“ஆமா லவ் பண்ணிட்டு வந்து சொன்ன. அதுவும் அவங்க வீட்ல பிரகாஷ் பேச யோசிக்கிறார்ன்னதும் வந்து நின்ன. இதோ இவளோடது லவ்வா என்னன்னே தெரியலை. அச்சுதன் கிட்டயும் பேச முடியாது. இவளும் பேசவேண்டாம்னு சொல்றா. இதெல்லாம் செட்டாகாது, இதெல்லாம் வேண்டாம் அப்படின்னு சொன்னாலும் இவ கேட்பாளா?

அதுவும் யாரோன்னா கூட பரவாயில்லை. என்னவோ பண்ணலாம். உன் வீட்டுக்காரரோட அண்ணனா போச்சு. யாருக்கு சொல்றது?” என்று ரோஜா புலம்பவே தொடங்கிவிட,

கார்மேகமோ “டேய் அர்ச்சு, உனக்கு சொல்லவேண்டியது இல்லை. ஆனா இன்னுமே கூட யோசி. இதுதான் அப்படின்னு நானும் முடிவா சொல்ல மாட்டேன். நீ சொல்றது போல அதுவா நடக்கும்னு சொல்றது எல்லாம் பேச்சுக்கு நல்லாருக்கும். வாழ்க்கைக்கு ஒத்துவருமா தெரியாது. உன்னை அச்சுதனை மறந்துடுன்னு எல்லாம் நாங்க சொல்லப் போறது இல்லை. ஆனா யோசி. யோசிச்சு முடிவு பண்ணு.. அப்பா அம்மா எப்பவும் உன்னோட இருப்போம்…” என்றுவிட்டு கிளம்பிட,

“தேங்க்ஸ் டாடி…” என்று அவர் தோளில் சாய்ந்துகொண்டவள்,

“நான் நேரா சைட்டுக்கு போயிடுறேன்…” என்று பேச,

‘என்ன பொண்ணு இவ…’ என்பதுபோல் பார்த்து வைத்தனர் ரோஜாவும், அனிதாவும்.

அங்கே நீலவேணியோ அச்சுதனிடம் இதனைப் பற்றி பேசாமல் “என்ன அச்சுதா.. இன்னும் கிளம்பலையா நீ?” என்று கேட்க,

“ம்ம்ச் போகணும்…” என்றான் கடுப்பாய்.

“கிளம்பாம உக்காந்துட்டே இருந்தா என்ன அர்த்தம்? என்ன யோசிக்கிற நீ?” என்று பேச,

“ம்மா ஒன்னும் யோசிக்கல. என்னவோ ஒருமாதிரி இருந்தது…” என்று சொல்லும்போதே, அவனுக்கு நீலவேணி ப்ரெஷர் பரிசோதனை செய்ய

“ம்மா…” என்று பல்லைக் கடித்தான்.

“என்னடா? எப்படிருக்குன்னு பார்த்தேன். டோசேஜ் வேற இப்போ கம்மி பண்ணிருக்காங்க..” என்று சொல்ல,

“நா.. நல்லாத்தான் இருக்கேன் ம்மா…” என்று பல்லைக் கடித்தான்.

“நீ நல்லா இருக்கணும்னு தானே இத்தனையும்…” என்று சொல்லியவர் “என்ன அதிசயம் ப்ரெஷர் எல்லாம் நார்மலா இருக்கு..” என்று முனுமுனுத்துச் செல்ல,

“ஏன் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க? இல்ல நீங்க எல்லாம் என்கிட்டே என்ன எதிர்பாக்குறீங்க?” என்று பேச,

“யப்பா சாமி, நான் ஒண்ணுமே சொல்லலை. சாப்பிட்டு கிளம்பு…” என்றார் அவரும் கடுப்பாய் பேசுவது போல.

“பின்ன ப்ரெஷர் நார்மலா இருக்குன்னு பேசுறீங்க? ஏன் எனக்கு நார்மலா இருக்கக் கூடாதா? நேத்து அப்படிதான் அவளும் அப்படி பேசிட்டு போறா…” என்று ஆரம்பித்துவிட்டான்.

‘பேசு டா.. பேசு.. பேசு டா மகனே பேசு…’ என்பதுபோல் நீலவேணி மௌனமாய் அவனைப் பார்த்து நிற்க,

“என்னம்மா எல்லாம் ப்லே பண்றீங்களா?” என்றான் அச்சுதன்.

“அப்படி நீயா நினைச்சுக்கிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது அச்சுதா…” என்றவர் அவர் வேலையை கவனிக்க சென்றுவிட்டார்.

அச்சுதனுக்கோ அவனது கோபங்களை யாரிடம் காட்டுவது என்று தெரியவில்லை. அர்ச்சனாவின் பேச்சுக்கள் அவனை ஒருவிதத்தில் பாதித்து இருந்தது.

‘நான் உங்கக்கிட்ட ப்ரொபோஸ் பண்ணலையே…’  என்று அவள் சொன்ன பாவனை, கண்களை இறுக மூடித் திறந்தவன் ‘என்ன தைரியம் இவளுக்கு.. சொந்தக்கார பொண்ணாச்சே அப்படின்னு நினைச்சா, எல்லார் முன்னாடியும் எப்படி பேசிட்டு  போறா…?’ என்று கடுகடுதவன், அதே கடுப்புடனே தான் கிளம்பி நகை கடைக்கும் சென்றான்.

அடுத்து வந்த நாட்களும் இப்படியே செல்ல, அச்சுதன் மறந்தும் கூட, அங்கே புதிய கட்டிடம் பக்கம் செல்லவே இல்லை. என்னவோ அவனுக்கு அங்கே அர்ச்சனா இருக்கும் போது செல்ல மனம் வரவில்லை.

‘அவ ஈசியா சொல்லிட்டு போயிட்டா…’ என்று அதற்கும் கடுப்பானவன், போகவே இல்லை.

ஒரு வாரம் ஆனது. ஆச்சுதன் வரவில்லை என்றதுமே அர்ச்சனா  மனதினில் முடிவு செய்தவளாய் “டாடி.. இந்த ப்ராஜக்ட் வேணும்னா வேற யாரையும் வச்சு பண்ணிக்கலாமா கேளுங்க.. நான் இருக்கிறதுனால அவர் வந்து பார்க்க கூட யோசிக்கிறார் போல…” என்று பேச,

“இது உன்னோட முதல் ப்ராஜக்ட் டா..” என்றார் கார்மேகம்.

“நிஜம் தான். ஆனா இதுல நான் ரொம்ப இன்வால்வ் ஆனதே அச்சத்தான்காக தான்…” என்ற மகளின் பளீர் பதிலில், கார்மேகம் வேறு வழியில்லாமல் அச்சுதனுக்கு அழைத்து “தம்பி ப்ரீயா இருக்கீங்களா?” என்று பேச ,

“என்ன விஷயம் மாமா?” என்றான் என்னவோ என்று எண்ணி.

“இல்ல.. இந்த ஒருவாரமா நீங்க சைட் பக்கமே வரல போல.. அதான் அர்ச்சனா வேற யாரையும் வச்சு கூட ப்ராஜக்ட் முடிங்கப்பா அப்படின்னு சொல்றா..” என்று சொல்ல,

“கட்டிடமே அர்ச்சனா டிசைன் பண்ணது தானே மாமா…” என்றான் இறுகிய குரலில்.

“அ.. ஆமா.. ஆனா..” என்று அவர் இழுக்க,

“இங்க கொஞ்சம் வேலை ஜாஸ்தி மாமா.. அதான் வரல..” என்றவன் பேச்சினை முடித்துவிட்டான்.

“பில்டிங் டிசைனே நீ பண்ணது தானே. அப்போ நான் வரலைன்னா, டிசைன் கூட வேற ஆள் வச்சு மாத்திக்கலாமா அப்படின்னு கேட்காம கேட்கிறாப்ல..” என்று மகளிடம் சொல்ல,

“ஓ!” என்றவள் “அப்போ நான் இது பண்றதுல பிரச்னை இல்லைன்னா ஓகே..” என்று தோள்களை குலுக்கிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

கார்மேகத்திற்கு தான் ஒருமாதிரி இருந்தது. வளர்ந்த பிள்ளைகளுக்கு எடுத்துத்தான் சொல்ல முடியும். அடித்துத் திருத்தவா முடியும்?

காலம் பதில் சொல்லும் என்று பெற்றவராய் அமைதியாகவும் இருக்க முடியவில்லை.

ஆனால் என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

அச்சுதன் எப்படி தனுஜா விசயத்தில் அவனது மனசாட்சி படி அவனின் பிடிவாதத்தில் நிற்கிறானோ. அதுபோலவே தான் அர்ச்சனாவும், அச்சுதன் விசயத்தில் அவள் மனதுபடி இருந்தாள்.

அனிதாவிற்கு, தங்கைக்கு இன்னும் நல்ல மாப்பிள்ளை அமைந்தால் சரியாய் இருக்கும் என்ற எண்ணம் இருந்தாலும், அவளது விருப்பம் இதுவெனில் என்ன செய்ய முடியும் என்று இருந்தவள், அர்ச்சனா மீண்டும் யூஎஸ் போகும் எண்ணத்தில் இருந்ததை கவலையுடன் கணவனிடம் சொல்ல, அந்த பேச்சு அவர்கள் வீட்டினில் பரவியது.

தாமோதரனிடம் இதை பாமினி சொல்ல “சம்பந்தி இதை நேரடியா பேசிட்டார்னு வை, என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம இருக்கேன்…” என்றவர்,

“ஒருதடவை அச்சுதன் கிட்ட பேசி பார்க்கலாம்…” என்றவர் உடன் சுரேந்திரன் மற்றும் பிபிக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டார்.

மறுநாள் மாத கடைசி நாள். எப்போதும் மாத கடைசி நாளில் தான், அந்த ஒருமாத முழுவதற்குமான கணக்கு வழக்குகள் பார்த்து வரும் லாபத்தினை பிரித்து, செலவு கணக்கு எல்லாம் நேர் செய்வர்.

அதுபோலவே மறுநாள் விடிந்ததுமே, அவரவர் வேலைகளை முடித்துவிட்டு அச்சுதன் வீடிற்கு வர, அவனும் தயாராகவே இருக்க, ஆடிட்டர் வந்திருந்தவர், அவரது வேலையை முடித்து, என்னென்ன விபரங்கள் என்று சொல்லிட, இந்த முறை சுரேந்திரனுக்கு செலவுகள் அதிகம் வந்திருந்தது. பவஸ்ரீக்கு விசேசம் வைத்திருந்ததில் அவர்பக்கம் நிறையவே செலவுகள் இருந்தது. அதுபோல, அவரின் கடை பங்குகளில் லாபமும் இந்தமுறை கம்மி தான்.  

இதற்குமேல் நீங்கள் பேசிக்கொள்ளுங்கள் என்று ஆடிட்டர் கிளம்பி இருக்க, தாமோதரனோ “என்ன செய்யலாம் அச்சுதா…“ என்று அவனைக் கேட்க,

“சித்தப்பா நீங்க ரெண்டுபேருமே என்னை விட பெரியவங்க.. அனுபவசாளிங்களும் கூட. உங்களுக்கு எது செஞ்சா சரின்னு படுதோ அதை செய்ங்க…” என,

சுரேந்திரனோ “அப்படியில்லை அச்சுதா, உங்கப்பா இருக்கும்போது இதுபோல சூழ்நிலை வந்தா, யார் பக்கம் செலவுகள் நிறைய வருதோ, மத்த ரெண்டு பேரும் சேர்ந்து என்ன சொல்றாங்களோ அதை கேட்டுக்கணும். எப்பவுமே அப்படித்தான்.. அதுனால இப்போ நீயும் அண்ணனும் என்ன சொல்றீங்களோ அது எனக்கு ஓகே..” என்றிட,

தாமோதரனும் “ஆமா அச்சுதா..” என,

“ம்ம்ம்…” என்று யோசித்தவன் “பவஸ்ரீ நம்ம எல்லார் வீட்டுக்கும் சேர்த்து ஒரு பொண்ணு.. அவளோட விசேச செலவு நம்ம மூணு வீடும் சேர்ந்து பண்ணினா தான் நல்லதுன்னு எனக்கு படுத்து சித்தப்பா.. செலவை பொது கணக்குல எழுதிட்டு, லாபத்தை வழக்கம் போல மூணா பங்குபோட்டுக்கலாம்…” என்றிட,

சித்தப்பாக்கள் இருவருக்குமே, அண்ணன் மகனின் இந்த பேச்சு, தங்களின் பெரிய அண்ணனை எண்ண வைத்தது.

தாமோதரன் “நானும் இதை தான் நினைச்சேன் அச்சுதா. ஆனா நீயும் இப்போ தனியா கடை கட்டிட்டு இருக்க.. அதுதான் யோசிச்சேன்..” என,

“அது வேற இது வேற சித்தப்பா.. பவஸ்ரீ குடும்பத்துக்கே ஒரே பொண்ணு. நாளைக்கு அவளுக்கு எதுன்னாலும் நம்ம எல்லாம் சேர்ந்து தான் செய்யணும். இத்தனை அண்ணன்கள் இருக்கோம். விட்டுக் கொடுக்க முடியுமா?” என,

சுரேந்திரனோ “தேங்க்ஸ்டா அச்சுதா…” என்று அவன் கரம் பற்றிக்கொள்ள,

“அட என்ன சித்தப்பா நீங்க?” என்றான் ஆதுரமாய்.

“இல்ல… கணக்கு எல்லாம் தோராயமா பார்த்து நானுமே டென்சன் ஆகிட்டேன்..” என்று சொல்ல,

“என்ன சுரேந்திரா நீ? அப்படி நாங்க விட்டிடுவோமா?” என்றார் தாமோதரனும்.

பேச்சுக்கள் இப்படி சில நேரம் நீண்டுவிட்டு, பின் தாமோதரன் பொதுவாய் “நீ அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க அச்சுதா?” என்று கேட்க, அவனுக்கு புரிந்துபோனது அவர் எதை குறித்து பேசுகிறார் என்று.  

“ஆனாலும் ஒன்றும் தெரியாதவன் போல, சைட் போகணும் சித்தப்பா, அங்க போகவேயில்லை. போயி பார்க்கணும்…” என்று சொல்ல,

“அட அதுயில்ல…” என்றார் சுரேந்திரன்.

“வேறென்ன சித்தப்பா?” என்று கேட்க,

“அதான்.. அன்னிக்கே அர்ச்சனா பொண்ணு…” என்று பேச,

“சித்தப்பா.. இதுபத்தி நம்ம பேச வேண்டாமே. எனக்கு தெரியும் உங்களுக்கு தரமசங்கடமா இருக்கும்னு. ஆனா ஒருவேளை அனிதாவோட அப்பா, இதைபத்தி உங்கக்கிட்ட பேசினா, நீங்க யோசிக்கவே வேண்டாம் என்னை சொல்லிடுங்க. இல்லையா என்கிட்ட பேச சொல்லிடுங்க. நான் பார்த்துக்கிறேன்.. எப்பவுமே என்னோட முடிவுல மாற்றம் இல்லை சித்தப்பா..” என்று தெளிவாக பேச, தாமோதரனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் வீட்டு பெண்கள் சும்மா இருப்பார்களா?!

நீலவேணி, பாமினி, சுமிதா மூவரும் அன்றைய தின மாலையே அர்ச்சனாவின் வீடு வந்திருந்தனர் அவளை பார்க்கவென்று.

ரோஜா மட்டுமே வீட்டினில் இருக்க, வந்தவர்களை வரவேற்றார், மூவரையும் கேள்வியாகவே பார்த்து வைத்தார். இதுவரைக்கும் மூன்று பெண்களும் சேர்ந்து இப்படி எல்லாம் வந்தது இல்லை. அதுவும் அனிதா வராமல் இவர்கள் வந்திருப்பது பல கேள்விகளை கொடுக்க,

அதனை யூகித்த நீலவேணி “அன்னிக்கே வந்து அர்ச்சனாக்கிட்ட பேசிருக்கணும். ஆனா இப்போவும் கூட அவளுக்கு என்ன பதில் ஆறுதல் தரும்னு தெரியலை. அதுனால சும்மாவாவது பார்த்துட்டு போலாம்னு வந்தோம்…” என,

“அ.. அர்ச்சு.. வர்ற நேரம் தான்…“ என்றார் இன்னும் யோசனை போகாது.

“அட.. அண்ணி நீங்க வேற எதுவும் நினைக்கவேண்டாம். அனிதா சொன்னா, அர்ச்சு திரும்ப யூஎஸ் போற முடிவுல இருந்தான்னு. அதை கேட்டதும் எங்களுக்கு ஒருமாதிரி இருந்தது. அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்…” என்றிட, அர்ச்சனாவும் கூட வந்துவிட்டாள்.

மூவரையும் ஒன்றாய் பார்த்தவள் “வாங்க அத்தைஸ்…” என்று புன்னகையுடனே வரவேற்க, ரோஜா தான் மகளை அயர்வாய் பார்த்திருந்தார்.

“நீ இப்படி வெயில்ல போய் நின்னு வேலை செய்யனுமா என்ன?” என்று நீலவேணி கேட்க,

“பின்ன எங்கப்பாவோட கம்பனி எனக்கு ஈசியா கிடைச்சிடுமா என்ன?” என்றாள் சிரிப்பு மாறாமல்.

“ம்ம் அச்சுதன் சொன்னான், நீ பிரிலியன்ட் அப்படின்னு. உன் பேச்சுலையே அது தெரியுது…” என்ற பாமினி

“ஆனா உனக்கு ஆறுதலா என்ன பதில் சொல்றதுன்னு தான் எங்களுக்குத் தெரியலை அர்ச்சனா…” என்று பேச,

“ம்ம் என்ன பண்றது அத்தை.. சூழல் அப்படி.. ப்ரீயா விடுங்க…” என்றாள்.

அவளும் தான் என்ன செய்வாள்? என்ன செய்ய முடியும்?

சுமிதாவோ “ஏன் அர்ச்சனா, அச்சுதன் கிட்ட நீ நேரடியா எதுவும் பேசி பார்க்கலாம் தானே..” என்று கேட்க,

“நீங்க எல்லாரும் பேசியே கேட்காதவர் நான் பேசியா கேட்க போறார். இப்போ சுத்தம் பேசுறதே இல்லை..” என்ற நேரம், சரியாய் அச்சுதனிடம் இருந்து அர்ச்சனாவிற்கு அழைப்பு வந்தது.