Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 31

கன்யா காலைநேர வகுப்புகளை பார்வையிட்டு, மேலும் சிறிது நேரத்தை மாணவர்களுடன் செலவிட்டு என்று வெகுநேரம் கழித்தே தன் அறைக்கு அருகில் வந்தாள். நேற்று மாலை அனைவரும் கிளம்பியவுடன் அனுவிற்கு அழைத்து பேசியவள் இன்று பார்லர் செல்வதாக கூறி அவளையும் உடன் அழைக்க, முதலில் தயங்கியவள் கன்யா லேசாக வற்புறுத்தவும் ஒப்புக் கொண்டாள்.

அதன் பொருட்டே இன்று அவளை பள்ளிக்கு வர சொல்லி இருக்க, கன்யாவை அழைத்து செல்லத்தான் அவளும் வந்தது.ஆனால் அவளே எதிர்பாராதது ஸ்ரீதரின் இருப்பு. அதுவும் கன்யாவின் பள்ளியில் அவனை நினைத்து கூட பார்க்கவில்லை அவள்.

கன்யா அனு அறைக்குள் நுழைவதை தூரத்தில் இருந்து லேசாக பார்த்து விட்டு தான் வகுப்புகளுக்கு கிளம்பி இருந்தாள். ஆனால் இப்போது வரை இருவரும் வெளியில் வரவில்லை எனவும், சிறிது யோசனையுடன் தன் அறைக்கு சென்றாள் அவள்.

அவள் லேசாக கதவை தட்டிவிட்டு ஒரு நிமிடம் கழித்தே கதவை திறக்க, மேசையில் சாய்ந்து நின்றிருந்தாள் அனு. அவள் முகம் பார்க்க அழுது சிவந்து இருந்தாலும், இத்தனை நாள் அவள் தொலைத்திருந்த புன்னகை அவள் இதழ்களில் மீண்டிருந்தது. அவள் முகத்தை திருப்தியாக பார்த்துக் கொண்டவள், சற்றே திரும்பி ஸ்ரீதரை பார்க்க அவளின் ஆராய்ச்சியில் நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.

அவன் சிரிப்பை கண்டவள் அவனை முறைக்க, அவள் முறைப்படி கண்டுகொள்ளாமல் அவளை பார்த்து அவன் சிரிக்க, அனு கன்யாவின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டாள். அவள் இதழ்கள் “தேங்க்ஸ் அண்ணி…. தேங்க்ஸ்..” என்று கூறிக் கொண்டிருக்க

கன்யா சிரிப்புடன் “எதுக்கு இந்த தேங்க்ஸ் அனு… உன்னை பார்லருக்கு கூப்பிட்டதுக்கா..???” என்று விஷமத்துடன் கேட்க, அனு தானும் சிரித்தவள் மறுப்பாக தலையசைத்துவிட்டு

“இவரை எனக்கு திரும்ப கொடுத்ததுக்கு…நிச்சயமா அண்ணி..ரொம்ப தேங்க்ஸ்” என்றவள் அவள் கன்னத்தில் முத்தமிட, ஸ்ரீதர் கடுப்பாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான். கன்யா அவன் பாவனையை கண்டு சிரித்தவள் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

ஹாலில் அமர்ந்து கொண்டிருந்த வேதா ஒன்றாக வரும் பெண்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டார். குடும்பத்தில் பெண்களின் ஒற்றுமை எத்தனை முக்கியமானது என்பதை அறியாதவரா அவர். அந்த வகையில் கன்யாவும், அனுவும் இப்படி இருப்பது அவருக்கு மகிழ்ச்சியே. எதிர்காலத்தில் ஸ்ரீதர் ஏதாவது மலையேறினாலும் கூட தன் மருமகள் கன்யாவின் பக்கம் இருப்பாள் என்று நிம்மதியாக நினைத்துக் கொண்டது அவரின் மனம்.

அன்றைய தினம் மாலை வேளை வரை அனு அவர்களுடனே இருக்க, வேதாவை மிகவும் பிடித்து போனது அவளுக்கு. அன்று மாலை கன்யாவுடன் பார்லருக்கு சென்று விட்டு அப்படியே வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் அனு. அதன் பின் நடந்தவை அனைத்தும் ராக்கெட் வேகம் தான்.

ஸ்ரீதரின் பிடிவாதத்தால் அடுத்த நாளே ஆதி நாராயணன் ஷ்யாமிடம் பேசி, அவனை அழைத்துக் கொண்டு அனுவின் தந்தையை நேரில் சந்தித்து அவரிடம் திருமணம் குறித்து பேசி முடித்துக் கொண்டார் ஆதி நாராயணன். அனுவுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் படிப்பு இருக்க, அவள் படிப்பு முடிந்தவுடன் தான் திருமணம் என்று பேசி முடித்தனர் இருவீட்டு பெரியவர்களும்.

மகம் முகத்தில் மீண்டும் பழைய துடிப்பு மீண்டு விட்டிருக்க, அதைவிட வேறென்ன வேண்டும் அவள் பெற்றவர்களுக்கு. அவர்களும் மகிழ்ச்சியாகவே சம்மதித்து இருந்தனர். மகளின் முகத்தை அவ்வபோது பார்த்துக் கொள்ளும் தேவிக்கும் நிம்மதியாகவே இருந்தது மகளின் மாற்றம். ஸ்ரீதரை குறித்தும் மிகுந்த திருப்தி தான் அவர்களுக்கு.

ஷ்யாம் குடும்பத்திலும் அனுவை குறித்து இருந்த சிறு கவலையும் மறைந்துவிட, இரு குடும்பமும் மகழ்ச்சியாகவே திருமண வேலைகளை தொடங்கி இருந்தனர். திருமணத்தை பெரிய அளவில் நடத்த இரு குடும்பமும் திட்டமிட்டு இருக்க, திருமண வேலைகள் மொத்தமும் கோகுல், ஸ்ரீதரின் பொறுப்பு தான்.

வேறு யாரையும் சேர்த்துக் கொள்ளவே இல்லை அவர்கள். ஸ்ரீதர் மருத்துவரின் ஆலோசனைப்படி இப்போது நடக்க ஆரம்பித்திருக்க, கன்யாவின் திருமண வேலைகள் மொத்தத்தையும் கையில் எடுத்துக் கொண்டிருந்தான். கோகுலிடம் வாயடிப்பது அவனுக்கு இதமாக இருக்க, இந்த கல்யாண வேலைகளுக்கு நடுவே அவனுடன் நெருக்கமாகி இருந்தான் ஸ்ரீதர்.

ஷ்யாம் ஏதாவது செய்கிறேனென்று கேட்டதற்கு கூட கோகுல் மறுத்து விட்டவன் தன் தம்பியின் திருமண வேலைகளை முழுவதுமாக அவன் ஒருவனே செய்து முடித்திருந்தான். ஆதி நாராயணன் மாநில அமைச்சர் என்றால் இவர்களின் தொழில் தொடர்பு டெல்லி வரை இருக்க மத்திய அமைச்சர்கள் இருவர் வருவதாக இருந்தது திருமணத்திற்கு.

பாலகிருஷ்ணனும், ஆதி நாராயணனும் சிறியவர்களுக்கு அவ்வபோது ஆலோசனைகள் வழங்குவதோடு சரி. வேலைகள் சரியாக நடந்து கொண்டிருந்ததால் இருவருக்குமே நிம்மதி தான். வேதாவும், பத்மினியும் உறவுகளை அழைக்கும் பொறுப்பையும் வீட்டில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்ள, இந்த இடைவெளியில் இன்னும் மகிழ்வை கூட்டும் விதமாக ஒரு நள்ளிரவு வேளையில் அழகான பெண் மகவை பெற்று எடுத்திருந்தாள் வசுமதி.

அதில் மகிழ்ச்சியின் அளவு இரட்டிப்பாக அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் கூட மனைவியை தாங்கி கொண்டான் கோகுல். அவன் திருமண வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, அவனின் மகள் முழுவதும் ஷ்யாமின் கையில் தான். அவனும் மகிழ்ச்சியாகவே அந்த தேவதையை கைகளில் அள்ளிக் கொள்வான்.

கன்யாவுக்கு வீட்டிற்கு வர வேத அனுமதி கொடுக்காததால் மருத்துவமனையில் வந்து இரண்டுமுறை பார்த்து சென்றதோடு சரி. ஆனால் அவளுக்கும் அத்தனை பிடிக்கும் அந்த குட்டி தேவதையை. இப்போதெல்லாம் காதலர்களின் பிரத்யேக பேச்சு வார்த்தைகளில் கூட ஷ்யாம் அதிகம் பேசுவது அவளை பற்றி தான் என்பதால் அவளும் அந்த தேவதைக்கு ரசிகையாகி விட்டிருந்தாள்.

அனைத்து வேலைகளையும் அவர்களே பார்த்துக் கொண்ட குடும்பத்தினர் ஷ்யாம் – கன்யாவை ஒரு வேலையும் செய்ய விடவில்லை என்பதால் பெரும்பாலான நேரங்கள் இருவரும் வீட்டில் தான் இருப்பது. இந்த இரண்டு மாதங்களில் அவர்களின் நெருக்கம் இன்னும் அதிகமாகி இருக்க, நடுவில் இரண்டு மூன்று முறை அவளை அழைத்துக் கொண்டு ECR வீட்டிற்கு சென்று வந்திருந்தான் ஷ்யாம்.

அத்தனை பெரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த கல்யாண நாளும் நெருங்கிவிட அடையாளமே வேண்டாம் என்று விலக நினைத்தவள் மந்திரியின் மகளாகவே அவரின் காரில் வந்து இறங்கினாள். தன் தாயின் படத்தை வணங்கிவிட்டு அவள் வாசலுக்கு வர, அங்கு மாரிக்கு பதிலாக ஸ்ரீதர் தானே நின்றிருந்தான். அவன் வாங்கி இருந்த புது காரின் கதவை அவளுக்காக திறந்து விட்டவன் கையை நீட்டி அவளை அழைக்க, கண்கள் பனிக்க தம்பியின் கைகளை பிடித்துக் கொண்டவள் காரில் ஏறி கிளம்ப

ஆதி நாராயணனும் அவரின் பாதுகாப்பு வாகனத்தை தவிர்த்துவிட்டு மகள், மகனுடன் அவர்களின் காரிலேயே வந்து இறங்கி இருந்தார். மண்டப வாசலில் கேரளாவின் செண்டு மேளம் அத்தனை ஆரவாரமாக முழங்கி கொண்டிருக்க, ஸ்ரீதர் கன்யாவின் கார்கதவை திறந்துவிட கன்யா இளஞ்சிவப்பு வண்ண காஞ்சி பட்டில் அப்சரஸாக இறங்கி நடக்க, அவளுக்கு ஓரடி பின்னே அமைச்சரும் அவர் மகனும் அவளுக்கு காவலர்கள் போல் நடந்துவர, அந்த மண்டபத்தில் இருந்த அத்தனை பேரின் கவனமும் அங்கேதான்.

வேதா கண்கள் நிறைய அவர்களை பார்த்துக் கொண்டிருந்தவர் மகளை அணைத்து கொண்டு அவள் உச்சியில் முத்தமிட, கவிதையாக இருந்தது அந்த நிகழ்வு. இவள் மண்டபத்திற்குள் நுழைந்த அடுத்த பத்து நிமிடங்களில் ஷ்யாம் தன் குடும்பத்துடன் அந்த மண்டபத்திற்கு வந்து சேர, அவனுக்கு ராஜ மரியாதை தான். ஸ்ரீதர் அவனை முன்னின்று வரவேற்று அழைத்து வந்தவன் மேடையிலும் கூட அவன் அருகிலேயே நின்றிருந்தான்.

அங்கு திருமண வரவேற்பு தொடங்கி விட, ஷ்யாம் முழுவதுமே ஒரு மயக்க நிலையில் தான் இருந்தான். கன்யா சாதாரணமாக அவன் முன் நின்றாலே அவளை விட்டு பார்வையை திருப்ப முடியாது அவனால். அப்படி இருக்க இன்று முழு அலங்காரத்தில் அதுவும் விடிந்தால் திருமணம் என்ற நிலையில் இப்படி அருகருகில் இருவரும் நின்று கொண்டிருக்க, அவனை மொத்தமாக பித்தனாக்கி கொண்டிருந்தாள் பெண்.

கன்யாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அத்தனை நிறைவை கொடுத்தது ஷ்யாமுக்கு. எனக்கு யாரின் உறவும் தேவையில்லை, அவர்களின் அடையாளமும் தேவையில்லை என்று தனக்குள் தன்னையே ஒடுக்கி கொண்டு ஒளிந்திருந்தவள் இன்று அத்தனை உறவுகளும் புடைசூழ, ஆர்பாட்டமின்றி, ஆரவாரமின்றி அமைதியாக நிறைந்து கொண்டிருந்தாள்.

அவளின் நிறைவு அவளின் முகத்தில் தெரிய, எப்போதும் பெரிதான விழாக்களில் கூட நேருக்கு நேராக யார் முகத்தையும் பார்க்காமல் தவிர்த்து விலகி அமர்ந்து விடுபவள் இன்று அத்தனை பேரையும் நேர்பார்வையாக எதிர் கொண்டு நின்றிருந்தாள். ஷ்யாமின் நெருக்கம் வேறு புதிதாக ஒரு அவஸ்தையை கொடுக்க உணர்வுகளின் கலவையாக அவன் கைபிடித்து நின்றிருந்தாள் அவள்.

வரவேற்பு முடியவே இரவு பதினோரு மணிக்கு மேல் ஆக, கோகுல் இருவரையும் நேரத்திற்கு சாப்பிட வைத்திருந்ததால் கொஞ்சம் தெளிவாக இருந்தனர் இருவரும். அந்த நேரத்திற்கு மேல் கூட்டம் குறையவும் இருவரையும் அறைக்கு அனுப்பிவிட, சோர்ந்து போயிருந்தனர் இருவரும்.

கன்யா அசதியில் நன்றாக உறங்கி இருக்க, அதற்குள் எழுப்பி விட்டுவிட்டார் வேதவதி. அவளுக்கான அலங்காரங்களை அழகு நிலைய பெண்கள் கவனித்து கொள்ள அனுவும், வசுவும் அவளுடன் நின்றிருந்தனர். அதிகாலை முகூர்த்தமாக இருக்க, விடிவதற்கு முன்பாகவே அவளின் அலங்காரம் முடிந்திருந்தது.

திருமண நாள்… ஆயிரம் கனவுகளுடன் விடிய வேண்டிய திருமண நாள் அவளுக்கு ஷ்யாம் ஒருவனை மட்டுமே கொண்டு விடிந்தது. இந்த திருமணத்தை பொறுத்தவரை அவளுக்கு எந்த கனவுகளும் இல்லை. ஷ்யாம் என்ற ஒருவன் மட்டுமே மனம் முழுவதும். எதுவாக இருந்தாலும் இனி வாழும் வாழ்வு அவனுடன் தான் என்பதே மனதில் ஓடிக் கொண்டிருக்க, அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் நிரம்பவே இருந்தது அவளிடம்.

அந்த இனிமையான மனநிலையிலேயே ஆதிநாராயணன்-வேதாவிடம் ஆசி வாங்கி கொண்டவள் அனு மற்றும் வசுவுடன் மேடையை நோக்கி நடக்க, அங்கே ஏற்கனவே அமர்ந்து மந்திரங்களை உச்சரித்து கொண்டிருந்தவனோ மந்திரங்களை நிறுத்திவிட்டு இவளை கண்ணெடுக்காமல் பார்க்க, அவளின் பார்வையும் முழுதாக அவனிடம் தான்.

அவன் பார்வையில் வெட்கம் வந்தாலும் அவன் கண்களையே பார்த்துக் கொண்டு நடந்தவளுக்கு அத்தனை பிடித்தது அவனை. ஐயர் டென்ஷனாகி ஷ்யாமை அவர் புறம் திருப்ப, கன்யா புன்னகையுடன் தலையை குனிந்து கொண்டாள். அவன் அருகில் வந்து அமர்ந்தவள் அவனை திரும்பி பார்க்காமல் ஐயர் கூறிய மந்திரங்களை அத்தனை ஈடுபாட்டுடன் கூறிக் கொண்டிருக்க, ஷ்யாம் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு தானும் பங்கெடுத்து கொண்டான்.

குறித்த முகூர்த்த நேரத்தில் ஐயர் தாலியை ஷ்யாமிடம் கொடுக்க, மனம் முழுவதும் கன்யா மட்டும்தான் அந்த நொடி. அவளை பார்த்து கண்களை சிமிட்டி சிரித்தவன் அழகாக புன்னகைத்துக் கொண்டே தாலியை அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட, கன்யாவின் மனம் அவள் அன்னையை பிரார்த்தித்து கொண்டது.

தாலி கட்டி முடிந்ததும் அதனை தொடர்ந்த சடங்குகள் வரிசையாக தொடங்க அவர்கள் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பவே மதியம் ஆகிவிட்டது. ஷ்யாமின் கவனத்தில் கன்யாவின் சோர்வு மட்டுமே நிற்க, வீட்டிற்குள் நுழைந்து விளக்கேற்றி முடித்தவுடனே அவளை ஓய்வெடுக்க அனுப்புமாறு தன் அன்னையிடம் கூறி விட்டான் அவன்.

மணமக்களுக்கு பால், பழம் கொடுத்து முடியவும், வசு கன்யாவை ஷ்யாமின் அறையில் அழைத்து சென்று விட்டவள் ஓய்வெடுக்குமாறு கூறிக் கொண்டிருக்க, அவள் மகளின் அழுகுரல் கேட்கவும் அவசரமாக வெளியேறினாள். அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அனு அறைக்கு வர, அவளின் அதிகப்படியான அலங்காரங்களை களைய அவளுக்கு உதவி கொண்டிருந்தாள்.

ஒருவழியாக அந்த பட்டு புடவையை மாற்றிவிட்டு குளித்து வேறு உடைக்கு மாறியவள் கட்டிலில் படுத்து அனுவுடன் பேசிக் கொண்டிருக்க, அப்படியே உறங்கி விட்டாள். அவளின் சோர்வு அவளுக்கு அப்படி ஒரு உறக்கத்தை கொடுத்தது. அவள் உறங்கி விடவும் அனு கீழே வந்து தன் அண்ணனிடம் “அண்ணி தூங்கிட்டாங்க அண்ணா” என்று கூறியவள் மொபைலிலிருந்து ஸ்ரீதருக்கு அழைத்து “அண்ணி தூங்கிட்டாங்க ஸ்ரீ..இப்போ அழல… நல்ல இருக்காங்க’ என்று கூறி வைத்தாள்.

பின்னே மண்டபத்திலிருந்து கிளம்பும்போது வேதாவை கட்டிக் கொண்டு அழுதிருந்தாளே தமக்கை. தம்பியாண்டவன் தன்னவளிடம் அவளை கவனித்து கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்திருக்க, அதன் பொருட்டே இந்த தகவல் பரிமாறல்.
கோகுல் ஷியாமையும் சிறிது நேரம் உறங்க சொல்ல, அவனிடம் தலையசைத்து விட்டு தன் அறைக்குள் நுழைந்தான் ஷ்யாம். கன்யா கட்டிலின் ஓரத்தில் படுத்து அவன் போர்வையால் முழுவதும் அவளை மூடிக் கொண்டு தூங்கி கொண்டிருக்க, அவளிடமிருந்து கண் எடுக்கவே முடியவில்லை அவனால்.

புது இடம் என்ற உணர்வே இல்லாமல் அவள் அமைதியாக உறங்கி கொண்டிருக்க, அவனின் மனம் தான் தாளமிட்டு கொண்டிருந்தது. அமைதியாக வந்து அவள் அருகில் படுத்துக் கொண்டவன் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே படுத்திருக்க, அப்படியே உறங்கி போயிருந்தான் அவன்.

மாலை தொடங்கும் நேரத்தில்தான் லேசாக உறக்கம் களைய, கன்யா விழித்து பார்க்கும்போது அவள் அருகில் நல்ல உறக்கத்தில் இருந்தான் ஷ்யாம். அவனை பார்த்து புன்னகைத்து கொண்டவள் எழுந்து குளித்துவிட்டு புடவையை மாற்றிக் கொண்டு கீழே இறங்க, பத்மினி கிட்சனில் நின்று கொண்டிருக்க, தேவகி ஹாலில் அமர்ந்து இருந்தார்.

கன்யாவை பார்த்த தேவகி புன்னகைத்துவிட்டு “சாமி ரூம்ல விளக்கேத்திட்டு வா ஸ்ரீ ” என்று கூற, விளக்கை ஏற்றிவிட்டு கண்மூடி நின்றவள் நெற்றியில் விபூதியை தீட்டி கொண்டு வெளியே வந்தவள் சமயலறைக்குள் நுழைய, பத்மினி அவளுக்கு காஃபியை கொடுத்தவர் ஷ்யாமுக்கும் அவளிடமே கொடுத்து அனுப்பினார்.

அவள் மீண்டும் அறைக்கு செல்லும் போதும் அவன் உறங்கி கொண்டே இருக்க அவனை நெருங்கியவள் “ஷ்யாம்… ஷ்யாம் ” என்று லேசாக அவனை அசைத்து எழுப்ப, அவனோ அவளையும் இழுத்து தனக்குள் அடக்கி கொண்டு மீண்டும் உறங்க, கன்யாவிற்கு தான் அனைத்துமே ஸ்தம்பித்தது ஒரு நொடி. அவன் என்ன செய்கிறான் என்று உணரும் முன்பே முழுதாக அவன் அணைப்பில் அவன் கைக்குள் அடக்கி இருந்தான் அவளை.

ஷ்யாமுடனான முதல் நெருக்கம் என்று சொல்வதற்கில்லை.ஆனால் இப்படி தனி அறையில் அவன் கைக்குள் அடங்கி இருப்பது அவளுக்கு அவஸ்தையாக இருக்க நெளிந்தவள் அவன் அசையாமல் இருக்கவும், அவன் கையில் லேசாக ஒரு அடி வைத்தாள் அவள்.

அவன் கண்டுகொள்ளாமல் இருக்க அவன் கையில் லேசாக கிள்ளி வைத்தவள் அப்போதும் அவன் அசையாமல் இருக்கவும் நறுக்கென்று கிள்ளி விட்டாள். அவன் கத்திகொண்டே எழுந்து அவளை முறைக்க, அவள் முகத்தை பார்த்தவனின் பார்வை மாறிப்போனது.

ஒரு ஆரஞ்சு வண்ண டிசைனர் புடவையில் அவன் கட்டிய தாலியின் புதுப்பொலிவோடு, நெற்றியில் ஒழுங்கில்லாமல் தீட்டி இருந்த விபூதி கீற்றோடு, மஞ்சள் மணத்துடன் அருகில் அவள் இருக்க, தலையை உலுக்கி கொண்டான் அவன்.

அவளை நெருங்கியவன் “ஹேய்.. குட்டிப்பொண்ணு.. நேத்துல இருந்து என்னை சோதிச்சிட்டு இருக்க நீ… இப்படி என் முன்னாடி வந்து நின்னா பர்ஸ்ட் நைட் பர்ஸ்ட் பகலா மாறிடும்டி…”

என்று அவன் அவளை அளந்து கொண்டே கூற, அவன் கைகளை தடுத்தவள் “நான் என்ன பண்ணேன்.. நீங்க தானே என்னை..” என்று சொல்லிவிட்டு வாயை மூடிக் கொள்ள

“ம்ம்ம்.. சொல்லு.. என்ன பண்ணேன் நான்.. உன்னை யாரு இப்படி அழகா என்முன்னாடி வந்து நிற்க சொன்னது.. அதுவும் இந்த காஸ்ட்யூம்ல..” என்று அவள் இடையை அழுத்திய அவன் கரங்களை பிடித்துக் கொண்டவள்

“கீழே எல்லாரும் இருக்காங்க… உங்களுக்கு காஃபி கொடுக்க வந்தா என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க.. விடுங்க..” என்று அவன் கைகளை விலக்க முற்பட

“ஸ்னாக்ஸ் இல்லாம எப்படி காஃபி சாப்பிட முடியும்…” என்று விஷமத்துடன் அவன் கேட்க

“அச்சோ அத்தை காஃபி மட்டும்தான் கொடுத்தாங்க.. இருங்க நான் வாங்கிட்டு வரேன்..” என்று எழுந்தவளை மீண்டும் இழுத்தவன், “நானே எடுத்துக்கறேன்..” என்று அவள் இதழ்களை நெருங்க, அப்போதுதான் அவன் சொன்ன அர்த்தம் விளங்கியது அவளுக்கு…

அவள் சுதாரிக்கும் முன்பு அவள் இதழ்களை தனதாக்கி கொண்டவன் தன் இளைப்பாறலை தொடங்கி இருந்தான் அங்கே…

Advertisement