Advertisement

கன்யாவை திருப்தியாக பார்த்தவர், அனுவின் கழுவி துடைத்த முகத்தையும் குறித்துக் கொண்டார். ஆனால் வெளியில் காத்திருப்பவர்கள் நினைவு வர, எதுவும் பேசிக் கொள்ளாமல் கன்யாவை அழைத்துக் கொண்டு அவர் வெளியே வர, வசுவும்,அனுவும் அவர் பின்னால் வந்தனர்.

பத்மினி கன்யாவை ஷ்யாமின் அருகில் அமர்த்தி, அவர் கொண்டு வந்திருந்த வைர அட்டிகையை தன் மருமகளுக்கு தன் கையால் அணிவித்து இருவருக்கும் நலங்கிட, அவரை தொடர்ந்து வேதா, தேவி, வசு, அனு அனைவரும் வரிசையாக நலங்கு வைத்து முடிக்க, ஷ்யாமும், கன்யாவும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கி கொண்டு அமர, ஸ்ரீதர் இருவரிடமும் ஆளுக்கு ஒரு மோதிரத்தை கொடுக்க

இரண்டு இதயங்கள் ஒன்றாக கோர்க்கப்பட்டு அதன் இடைவெளியில் ஷ்யாம், கன்யா என்று மிகச்சிறிய எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருக்க, அந்த இதயங்களை சுற்றி குட்டி குட்டி வைரங்கள் அதன் மதிப்பை கூட்டிக் கொண்டு இருந்தது. ஷ்யாம் புன்னகையுடன் கன்யாவை பார்க்க, உரிமையான அவன் பார்வையில் கன்யாவுக்கு தான் வெட்கமாக போனது.

தயங்கி கொண்டே அவள் கைகளை நீட்ட, அவள் கையை மொத்தமாக பிடித்தவன் ஒரு அழுத்தம் கொடுக்க, அவள் நிமிர்ந்து பார்க்கவும் அவள் கண்களை பார்த்துக் கொண்டு தான் அந்த மோதிரத்தை அவள் கைகளில் அணிவித்தான்.

அடுத்து கன்யாவின் முறை.. ஷ்யாம் அவளுக்கு சிரமம் கொடுக்காமல் தானாகவே கையை அவள் முன்னால் நீட்டிவிட, கோகுல் “டேய் உனக்குதான் போடா போறாங்க டா… அலையாத” என்று அவன் காதில் கிசுகிசுக்க, ம்ஹூம் காதிலேயே வாங்கவில்லை அவன்.

கையை நீட்டிக் கொண்டே நிற்க, அப்படி ஒரு வெட்கம் கன்யாவுக்கு. இதழ்களில் உறைந்த புன்னகையுடன் அவன் கையை பற்றிக் கொண்டவள் அந்த மோதிரத்தை அவன் கைகளில் போட்டுவிட்டு, அவனை சற்றே நிமிர்ந்து பார்க்க, மோதிரம் அணிவித்த அவள் கையை பற்றிக் கொண்டவன் அதன் பிறகு அவள் கைகளை விடவே இல்லை.

அவளும் யாரும் அறியாமல் கையை விடுவிக்க முயற்சிக்க, அத்தனை வலுவாக இருந்தது பிடி. ஆனால் எனக்கு எதுவுமே தெரியாது என்பதை போன்ற முகத்துடன் கோகுல், ஸ்ரீதருடன் பேசிக் கொண்டு அமர்ந்து இருந்தான் அவன். உடன் அத்தனை பேர் இருக்க கன்யாவுக்கு தான் சங்கடமாக இருந்தது அவன் செய்கைகள்.
லேசாக அவன் புறம் குனிந்தவள் “கையை விடுங்களேன்” என்று கூற, அவளை திரும்பி பார்த்தவன் “என்ன இப்போ… கையை தான பிடிச்சிருக்கேன்” என்று கேட்க

“கூச்சமா இருக்கு ஷ்யாம்…”

“என்கிட்டே என்ன கூச்சம் உனக்கு… மோதிரம் போட சொன்னா கை அப்படி நடுங்குது.. என்ன பண்ணிடுவேன் உன்னை..” என்று சிரிப்புடன் கேட்க

“நிச்சயமா எதுவோ பண்றிங்க தான்… கனவு மாதிரி இருக்கு..”

“வா ECR போகலாம்.. கனவு இல்லன்னு நிரூபிக்கிறேன்..” என்று அவன் கண்சிமிட்ட, முகம் சிவந்தவளாக “உங்களை” என்று அவனை முறைக்க

“என்னை… என்ன செய்ய போற” என்று கேட்க

“நான் என்ன செய்ய… எங்கே விடறீங்க நீங்க….”

“ஓகே உன் கையை விடறேன்… என்னோட ஒரு பத்து நிமிஷம் தோட்டத்துக்கு வா…உங்கிட்ட தனியா பேசணும் நான்..”

“இப்போ பேசிட்டு தான இருக்கீங்க… அப்புறம் என்ன தனியா… அதெல்லாம் முடியாது விடுங்க..” என்று சிணுங்கியவள் கையை விடுவிக்க பார்க்க, அவள் மேலிருந்து வந்த சந்தனமும், மல்லிகையும் கலந்த வாசம் மயக்கி கொண்டிருந்தது அவனை.

அவன் மயக்கத்தை பயன்படுத்திக் கொண்டவள் கையை விலக்கி கொண்டு, சுற்றிலும் பார்க்க, அவர்களை தவிர யாருமே இல்லை அந்த ஹாலில். டைனிங் ஹாலில் பேச்சுக் குரல் கேட்க “போச்சு… போச்சு…” என்றவள் தலையில் கைவைத்து கொள்ள, ஷ்யாம் கண்டு கொள்ளாமல் அவள் கையை பிடித்து அழைத்து சென்று அவளை தன் அன்னையின் அருகில் அமர்த்திவிட்டு தான் ஸ்ரீதரின் அருகில் அமர்ந்து கொள்ள

“என்ன மாம்ஸ்.. முடிஞ்சிதா..” என்று ஸ்ரீதர் நக்கலாக கேட்க

“எங்கே… சுத்தி சுத்தி பார்த்திட்டு இருக்கா… எங்கே பேசுறது.. சுத்தி கரடிங்க வேற..” என்று அவன் சலித்து கொள்ள, ஸ்ரீதர் சிரித்துவிட்டான்.

“அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க மாம்ஸ்.. இங்க ஒருத்தி கண்ணாலேயே கத்தி வீசிட்டு இருக்கா… ரொம்ப பண்றா மாம்ஸ்” என்று அலுத்து கொள்ள,

“அவ உன்னை இதுவரைக்கும் விட்டு வச்சிருக்கறதே பெரிய விஷயம்… மரியாதையா அவகிட்ட பேசி சரிபண்ற வழியை பாரு..”
என்று ஷ்யாம் கூறிவிட, தலையசைத்துக் கொண்டு அமைதியானான் ஸ்ரீதர்.

அனைவரும் உண்டு முடித்து அந்த ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, ஸ்ரீதரின் பார்வை கன்யாவுடன் அமர்ந்திருந்த அனுவின் மீதே இருந்தது. அவன் பார்வை உணர்ந்தவளுக்கு ஊசி குத்தும் உணர்வு தான். இத்தனை பேர் சுற்றி இருக்க என்ன பார்வை வேண்டி கிடக்கு..?? அறிவு கெட்டவன்,..” என்று மனதில் அர்ச்சனை செய்து கொண்டே அவள் அமர்ந்து இருக்க, கண்டு கொள்ளவே இல்லை ஸ்ரீதர்.

எப்படியாவது இன்று அவளிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்து அவன் காத்திருக்க, அந்த வாய்ப்பை அனு அவனுக்கு வழங்காமல் சுற்றிக் கொண்டிருந்தாள். கன்யா எதற்காகவோ ஸ்ரீதரின் அறைக்குள் நுழைய ஸ்ரீதர் அவளை பின்தொடர்ந்து உள்ளே சென்றான்.

கன்யா “என்ன ” என்பதுபோல் பார்க்கவும், “ப்ளீஸ் ஸ்ரீ… நான் அனுகிட்ட பேசணும்…” என்று கூற

அவனை நக்கலாக பார்த்தவள் “போய் பேசு… அங்க தானே இருக்கா… என்கிட்டே ஏன் கேட்கிற… “

“ஸ்ரீ ப்ளீஸ்.. அவ கண்டுக்கவே இல்ல… உனக்கு தெரியும்.. ஹெல்ப் பண்ணு..” என்று பாவமாக கேட்க

“நான் யார் உனக்கு?? அதான் யாருமே இல்லையே… நான் ஏன் உனக்கு ஹெல்ப் பண்ணனும்?? ” என்று கேட்க

அவளை முறைத்தான் ஸ்ரீதர். அவன் முறைக்க தொடங்கவும், அவனை கண்டு கொள்ளாமல் கன்யா வெளியேற ” ஸ்ரீமா ப்ளீஸ்” என்று கெஞ்சலாக தம்பியாண்டவன் கேட்க

கன்யா அசையாமல் நின்று அவனை திரும்பி பார்த்தாள். ” அன்னிக்கு அப்படி பேசினது தப்புதான் ஸ்ரீ.. நீ என்னோட அக்கா… அதனால நீ எனக்கு ஹெல்ப் பண்ணிதான் ஆகணும்.” என்று அவன் அதையும் அழுத்தமாகவே கூற

“இப்போ கொஞ்சம் பரவால்ல… ஆனா அவ உன்கிட்ட பேச தயாராவே இல்ல… நிச்சயமா ஒத்துக்க மாட்டா.” என்றாள் கன்யா.

“ஸ்ரீ அவ என்கிட்டே பேசினாலே இதெல்லாம் சரி ஆகிடும்.. ப்ளீஸ்.. அவ முகத்தை பார்க்கவே முடியல.. அவளை சரி பண்ண வேண்டாமா.. ” என்று கேட்க

“நீ உன் திருவாயை மூடிட்டு இருந்து இருந்தாலே அவ சரியா தான் இருந்திருப்பா.. அதை மறந்திடாத..” என்றவள் அவன் முகம் வாடவும் “பெரியவங்க எல்லாரும் இருக்காங்க.. இன்னிக்கு வேண்டாம். நாளைக்கு நானே அவளை மீட் பண்ண வைக்கிறேன்.. இன்னிக்கு ஒருநாள் பொறுத்துக்கோ…. ” என்று கூறிவிட

அவளை பார்த்து புன்னகைத்தவன் “தேங்க்ஸ் ஸ்ரீமா..” என்று கூற, அவள் புருவம் உயர்த்தி பார்க்கவும் ” அக்கா… அக்கா.. தேங்க்ஸ் அக்கா” என்று அழுத்தி கூறினான் அவன். அவன் அழுத்தத்தில் கன்யாவுக்கு ஸ்ரீரிப்பு வந்துவிட, ஸ்ரீதரும் இணைந்து கொண்டான் அவள் சிரிப்பில்.

நாளை இந்த சிரிப்பு கண்ணில் இருக்குமோ?? இல்லை அவன் காதலியால் கானல் ஆகுமோ ???

Advertisement