Advertisement
குழல் 21
காளி கோவிலில் இருந்து அரண்மனைக்கு மகிழுந்தில் சென்றுக் கொண்டிருந்த போது பூங்குழலி, “முழு அர்த்தமும் கண்டு பிடிச்சிட்டீங்களா?” என்று கேட்டாள்.
மாறவர்மசிம்மன், “நீ என்ன கண்டு பிடித்தாய்?” என்று கேட்டான்.
“நானெல்லாம் தமிழ் அகராதியில் தேடிப் பிடித்து தான் கண்டறிய வேண்டும்.. எதற்கு வீண் சிரமம் என்று தான் தமிழ் அகராதியான உங்களிடம் கேட்கிறேன்”
“அப்படி இல்லை.. நேற்று போல் நீ வேறு அர்த்தம் கண்டறியலாமே!”
“முதலில் நீங்கள் சொல்லுங்கள்.. அதை வைத்து கண்டறிய முடியவில்லை என்றால் நான் யோசிக்கிறேன்”
“சோம்பேறி”
செல்ல முறைப்புடன், “காலவிரயம் வேண்டாமே என்று நினைத்தேன்..” என்றவள், “இப்போ சொல்ல முடியுமா முடியாதா?” என்று சிறு மிரட்டலுடன் முடித்தாள்.
அவன் மென்னகையுடன், “சரி கூறுகிறேன்” என்று கூறி இரண்டாவது புதிரின் அர்த்தத்தை கூற ஆரம்பித்தான்.
“மாயோன் என்றால் திருமால், விஷ்ணு என்று பொருள்..அட்டாணி என்றால் கோட்டை மதில்மேல் இருக்கும் மண்டபம்
ஆக ‘மாயோன் முடிவின் வழி
அட்டாணி கிட்டும்’ என்றால் ‘திருமால் உருவத்தின் பாதம் காட்டும் திசையில் சென்றால் மண்டபம் வரும்’ என்று அர்த்தம்.
அடுத்து மச்சபுள்ளி.. மச்சம் என்றால் உடம்பில் உள்ள புள்ளி அல்லது மீனை குறிக்கலாம்
ராஜவந்தம் என்பது அணிவகை. இங்கே ராஜ முத்திரை கொண்ட மோதிரம் அல்லது ராஜ முத்திரை இருக்கும் பதக்கத்தை கொண்ட கழுத்து சங்கலியாக இருக்கலாம்..
சீரியங்கு என்பது சீராக இயங்குதல்
கருவூலம் என்பது அரசரின் செல்வம் இருக்கும் இடம்.. இங்கே பொக்கிஷ அறை அல்லது பொக்கிஷம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆக ‘மச்சபுள்ளி ராஜவந்தம் சீரியங்கும்
கருவூலம் தோன்றும்’ என்றால் இரண்டு அர்த்தம் எடுத்து கொள்ளலாம்..
ஒன்று சிறப்பு மச்சம் கொண்ட ஆணோ பெண்ணோ ராஜ முத்திரை உடைய அணிவகையை குறிப்பிட்ட புள்ளியில் வைத்து சரியாக இயக்கினால் பொக்கிஷமோ, பொக்கிஷ அறையோ தோன்றும்.
இன்னொன்று மீனில் இருக்கும் புள்ளி அதாவது திருகையில் ராஜ முத்திரை உடைய அணிவகையை வைத்து சரியாக இயக்கினால் பொக்கிஷமோ, பொக்கிஷ அறையோ தோன்றும்”
“அது என்ன சிறப்பு மச்சம்?”
“பொதுவாக உடம்பில் இருக்கும் மச்சம் வட்டமாகவோ நீள்வட்டமாகவோ(Oval) தான் இருக்கும்.. வெகு அபூர்வமாக வேறு வடிவத்தில் இருக்கும்..
ரணசிம்ம ராஜாவின் நெஞ்சில் சிகப்பு நிறத்தில் நட்சத்திர வடிவில் மச்சம் உண்டு என்றும் அதனால் தான் அவர் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினார் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்”
“நட்சத்திர மச்சம் இருக்கும் ஆளுக்கு நாம எங்கே போக!” என்றவள் சட்டென்று பேச்சை நிறுத்தி அவனை பார்த்தாள்.
அவளது பார்வையை புரிந்தார் போல் அவன் ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்து, “எனக்கும் நெஞ்சில் சிகப்பு நிற நட்சத்திர மச்சம் இருக்கிறது” என்றான்.
சில நொடிகள் உறைந்த நிலையில் இருந்தவள் அவனது தொடுகையில், “ஒருவேளை ரணசிம்ம ராஜாவோட மறுபிறப்போ நீங்கள்!” என்றாள் பிரம்மிப்பு நீங்காத நிலையில்.
அவன் மென்னகையுடன், “அதிகமாக யோசிக்காதே தேவி” என்றான்.
“இல்லை.. நான் நிஜமாகத் தான் சொல்கிறேன்.. ரணசிம்ம ராஜாவை போல் உங்கள் திறமைகள் அபாரமானது.. இத்தனை ஆண்டுகள் எத்தனையோ அரசர்கள் கண்டறியாத பொக்கிஷத்தை நீங்கள் தானே சரியாக தேடுகிறீர்கள்!”
“இது தேவை இல்லாத ஆராய்ச்சி தேவி.. பொக்கிஷத்தை பற்றி ஆராய்வோம்”
“இது தேவை இல்லாத ஆராய்ச்சியா?”
“ஆம்”
“ஒருவேளை நான் நறுமுகை தேவியின் அம்சம் என்று யாரவது சொன்னால் அதை கண்டுகொள்ள மாட்டீர்களா?”
“நிச்சயம் ஆராய மாட்டேன்.. உன்னை பூங்குழலியாக மட்டும் தான் பார்ப்பேன்.. என் தேவியை நான் ஏன் வேறு ஒருவருடன் ஒப்பிட வேண்டும்? நறுமுகை தேவி மிக மிக சிறப்பு வாய்ந்தவராகவே இருக்கட்டுமே! என் தேவி தனித்துவம் கொண்டவள், அவளை யாருடனும் நான் ஒப்பிட மாட்டேன்”
அவனை பிரம்மிப்புடன் பார்த்தவள், மகிழுந்தில் அமர்ந்துக் கொண்டு அவனை அணைக்க முடியாத காரணத்தால் அவனது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு காதலுடன் நோக்கினாள்.
சுதிரை ஓரப்பார்வை பார்த்தவன் அவளை பார்த்து உதட்டசைவில் சத்தமின்றி முத்தம் கொடுக்க, அவள் நாணத்துடன் அவனது கையை பற்றியபடி அவன் தோளில் சாய்ந்தாள்.
அப்பொழுது அவர்களின் வண்டி அரண்மனை உள்ளே நுழையவும் சற்று விலகி நிமிர்ந்து அமர்ந்தாள்.