Advertisement
அடுத்த நாள் கலையில் சரியாக 6.30 மணிக்கு பூங்குழலி அரண்மைனை கோட்டையினுள் இருந்த துர்க்கை அம்மன் கோவிலுக்கு வர, அவளுக்காக மாறவர்மசிம்மன் காத்துக் கொண்டிருந்தான்.
“இனிய காலை வணக்கம்.. இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்” என்று புத்துணர்ச்சியுடன் அவள் கூற,
புடவையில் அழகு தேவதையாக வந்திருந்தவளை ரசித்தபடி, “இனிய காலை வணக்கம்.. இன்றைய நாள் மிக இனிமையான நாள் தான் தேவி.. உனக்கும் அவ்வாறே அமையட்டும்” என்றான்.
கண்களை உருட்டி அவனை மிரட்டியவள், “சாமி தரிசனத்திற்கு வந்திருக்கிறோம்” என்றாள்.
“ஹ்ம்ம்.. சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு தேவி தரிசனத்தை வைத்துக் கொள்கிறேன்” என்றான்.
இருவரும் ஒன்றாக கோவிலுனுள் சென்றனர். அந்த துர்க்கை அம்மன் கோவில் சிறியதாக இருந்தாலும் மிக நேர்த்தியாக இருந்தது. புன்னகை ததும்பிய துர்க்கை அம்மனின் அழகு முகத்தை காண கண்கள் இரண்டு போதாது. துர்க்கையை தரிசனம் செய்ததும் மனதில் தானே அமைதி தோன்றும்.
இருவரும் துர்க்கை அம்மன் முன் நின்று மனதார வேண்டினர். இருவரும் மற்றவரின் நலனையே வேண்டினர்.
பூசாரி தீபாராதனை செய்து இருவரின் முன்பும் நீட்டினார். இருவரும் தொட்டு கும்பிட்டதும், குங்குமம் கொடுத்தவர் பூங்குழலி கையில் அம்மன் கழுத்தில் இருந்து எடுத்த மல்லி சரத்தைக் கொடுத்தார்.
பூசாரி பிரசாத பாத்திரத்தை எடுக்க சென்ற இடைவேளையில் “தேவி” என்று அழைத்த மாறவர்மசிம்மன், அவள் திரும்பியதும் அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.
அதை எதிர்பார்க்காதவள் உடல் சிலிர்க்க நிற்க, அவனுக்குமே அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்த நொடியில் உடல் சிலிர்த்தது.
பூசாரி வந்து சக்கரை பொங்கல் பிரசாதத்தை கொடுக்கவும், இருவரும் அமைதியாக வாங்கினர்.
பின் மாறவர்மசிம்மன் பூசாரியிடம், “மகளை கல்லூரிக்கு முதல் நாள் அழைத்து செல்ல வேண்டும் என்று சொன்னீர்களே! நீங்கள் கிளம்புங்கள்.. நாங்கள் மெதுவாகத் தான் கிளம்புவோம்.. கோவில் நடையை சாற்றி சாவியை தீரனிடம் கொடுத்து விடுகிறேன்.. நீங்கள் தீரனிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.
“மிக்க நன்றி ராஜா” என்று கூறியவர் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார்.
அவன் பூசாரியுடன் பேசிய போது தலையில் மல்லி சரத்தை சூடி இருந்தவள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமைதியாக அவனது கரத்தை பற்றிக் கொண்டாள்.
அவன், “முதல் முறை வந்திருக்கிறாய்.. கோவில் எப்படி இருக்கிறது தேவி?” என்று கேட்டான்.
“ரொம்ப அருமையா இருக்குது..” என்றவள் அம்மனை பார்த்தபடி, “துர்க்கை அம்மனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்குது.. மனதிற்கு அப்படி ஒரு அமைதி கிடைக்குது” என்றாள்.
அவனும் அம்மனை பார்த்தபடி, “எனக்கும் அப்படித் தான் தோன்றும்.. என் அன்னை தினமும் காலையில் துர்க்கையை தரிசித்தப் பிறகு தான் காலை உணவையே எடுத்துக் கொள்வாராம்” என்றான்.
“இனி நாமும் அதையே செய்யலாம்”
“சரி” என்றவன், “உன் ஆராய்ச்சியை தொடங்கு தேவி.. நீ முதல் முறையாக வந்திருப்பதால் சற்று தாமதம் ஆவதை யாரும் பெரிதாக கருத மாட்டார்கள் ஆனால் அதிக நேரம் எடுத்துக் கொண்டால் வீண் சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது..” என்றான்.
“சரி” என்றவள் மீண்டும் ஒருமுறை துர்க்கையை சேவித்துவிட்டு தனது ஆராய்ச்சியை ஆரம்பித்தாள். அவனும் மீண்டும் ஒரு முறை ஆராயத் தொடங்கினான்.
அரை மணி நேரம் ஆராய்ந்தவள் உதட்டை பிதுக்கியபடி, “நீங்கள் கூறியது போல் இங்கே எதுவும் இருப்பதாக தெரியவில்லை” என்றாள்.
இருவரின் மனதினுள் ‘என்ன டா இது!’ என்று தோன்ற, இருவருமே கிளம்பும் முன் ‘தாயே இதற்கு ஒரு வழி காட்டு’ என்று வேண்டிவிட்டு கிளம்பிச் சென்றனர்.