அவள் செல்ல முறைப்புடன், “உங்களுக்கு ஒரு சாக்கு” என்றாள்.
“உனக்காக தானே இளவட்டக்கல்லை தூக்கினேன்!”
“நான் தூக்க சொல்லலையே!”
“இளவட்டக்கல்லை தூக்கியதிற்கு பரிசு கிடையாதா?” என்று முகத்தை பாவம் போல் வைத்து அவன் கூற,
அவள், “இப்படி முகத்தை வைத்து ஏமாத்தாதீங்க” என்றாள்.
“நான் உன்னை ஏமாற்றுகிறேனா!” என்று அவன் ஒரு மாதிரி குரலில் வினவ,
அவள் பதற்றத்துடன், “நான் விளையாட்டா தானே சொன்னேன்” என்றாள்.
“விளையாட்டுக்குக் கூட சில வார்த்தைகளைச் சொல்லக் கூடாது.. ஒரு சொல்..” என்று பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சு அவளது இதழ் முத்தத்தில் மறைந்து போனது.
மென்மையாக முத்தமிட்டு அவள் முகத்தை விலக்கிக் கொள்ள,
அவனோ, “என்ன பண்ண?” என்று கேட்டான் கிண்டலான பார்வையுடன்.
அவனது கையை விலக்க முயற்சித்தபடி, “ஏன் உங்களுக்கு தெரியாதா?” என்றாள்.
அவளை இன்னும் இறுக்கமாக அணைத்தபடி, “நான் நினைத்தாலொழிய உன்னால் என்னைவிட்டுப் போக முடியாது” என்றான்.
அவள் சிறு கலக்கத்துடன், “இன்னைக்கு ஏன் விட்டு போறது, விலகுறதுனே பேசிட்டு இருக்கிறீங்க?” என்று கேட்டாள்.
“இது ஒருவழி பாதை என்று உனக்கு வலியுறுத்துகிறேன்” என்றவன், “சரி வா கடைசி அறைக்கு போய் பார்க்கலாம்” என்றபடி முன்னால் நடக்க, அவளும் அவனுடன் நடந்தாள்.
அந்த அறை முழுவதும் ஆயுதங்கள் இருந்தன.
வெவ்வேறு வகையான வாள்கள் இருந்தன. ஒரு பக்கம் மட்டும் கூர்மையாக இருக்கும் நெடு வாள், இருப்பக்கமும் கூர்மையாக இருக்கும் நேர் வாள், இருப்பக்க கூர்மையுடன் வளைந்து வளைந்து இருக்கும் நெடுங்கொண்ட வாள், உருமி(சுருள் வாள்) என்று வகை வகையாக இருந்தது.
கத்தியும் பிச்சுவா கத்தி, கட்டாரி, வில்லுக்கத்தி, மட்டுவு என்று பல வகையில் இருந்தது.
வளரி, ஈட்டி, கேடயம், வரையாடு கொம்பு, கோடரி என்று நிறைய ஆயுதங்கள் இருந்தன.
இவற்றுள் அவளை முதலில் கவர்ந்தது வளரி தான். வளரி என்பது ஒருபுறம் கனமாகவும் மற்றொரு புறம் லேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினால் பிறை வடிவாகச் செய்த எறிகருவி. அதை வீசினால், இலக்கைத் தாக்கிவிட்டு எய்தவர் கைக்கே வந்து சேர்ந்துவிடும்.
அதை பார்த்தவள், “வளரி மரத்தில் கூட செய்வாங்களா?” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம்.. மரத்தால் செய்த வளரி மயக்கத்தை மட்டும் தரும் ஆனால் இரும்பு வளரி உயிரையே எடுத்துவிடும்”
“இதை யூஸ் பண்ண சொல்லித் தரீங்களா?”
“ஹ்ம்ம்.. என்னுடன் பேசும் பொழுதில் நீ ஆங்கில வார்த்தைகளை முற்றிலும் துறந்த பிறகு”
“இது போங்கு” என்று அவள் சிணுங்க, அவனோ அதை ரசித்துச் சிரித்தான்.
அதன் பிறகு, “சில ஈட்டி வித்யாசமா இருக்குதே!” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம்.. முனையில் பட்டையான கத்தி மாதரி இருக்கிறது போர் வீரர்கள் பயன் படுத்தியது.. மற்றது அரண்மனை காவலாளிகள் பயன்படுத்தியது”
“அந்த காலத்தில் எதிரிகளும் ஈட்டிகளுடன் தான் இருந்தனர்.. இப்போ அப்படியா!”
“ஹ்ம்ம்.. சரி தான்”
அதன் பிறகு வாள் வகைகளை விளக்கி கூறினான்.
அவள், “ரணசிம்ம ராஜாவோட வாள் இருக்குதா?” என்று கேட்டாள்.
மீண்டும் அவளை கூர்மையாக பார்த்தவன், அவள் இயல்பாக கேட்டது போல் தோன்றவும், “அந்த வாள் இங்கே இல்லை” என்றான்.
அவள் சிறு அதிர்ச்சியுடன், “என்ன இவ்ளோ சாதரணமா சொல்றீங்க?” என்று கேட்டாள்.
“ஏன்?”
“இந்த அரண்மனையோட வரலாறே அவர் கிட்ட இருந்து தான் தொடங்குது.. பல வெற்றிகளை குவித்த வாள்.. அப்போ அது எவ்வளவு பெரிய பொக்கிஷமா பாதுகாக்க வேண்டிய வாள்!”
“அந்த வாளை பற்றி உனக்கு வேறு எதுவும் தெரியுமா?”
“அந்த வாளுக்கு தனி சரித்திர கதை இருக்குதா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“அந்த வாளின் உரை நவரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்டதாக தந்தை கூறி கேட்டிருக்கிறேன்”
சுருங்கிய முகத்துடன், “இவ்ளோ தானா! நான் கூட அவர் வீரத்தை பற்றி, வெற்றி பெற்ற கதையை பற்றி சொல்லுவீங்கனு நினைத்தேன்” என்றாள்.
அவளது முகத்தை இன்னும் உன்னிப்பாக கவனித்தவன் அதில் பொய்மை இல்லை என்றதும் ஒருபுறம் நிம்மதியாகவும் ஒருபுறம் சற்றே குழப்பமாகவும் உணர்ந்தான்.
அவன், “அவர் பயன்படுத்திய வில் அம்பு இருக்கிறது” என்றதும் அவள் ஆர்வத்துடன், “எங்கே!” என்று கேட்டபடி தேடினாள்.
அவன் அருகே இருந்த ஒரு பெட்டியை திறக்க, அதனுள் இரண்டு வில்களும் சில அம்புகளும் இருந்தது. அவற்றை கரத்தினால் மெதுவாக வருடியவள் உடல் சிலிர்க்க நின்றாள்.
“தேவி” என்று அவன் அழைக்கவும், அவனை பார்த்தவள், “இதில் நறுமுகை தேவியோடது எது?” என்று கேட்டாள்.
“இது” என்றபடி ஒன்றை சுட்டிக் காட்டினான்.
“உங்களுக்கு வில் அம்பு விட தெரியுமா?”
“தெரியும்.. ஆனால் இங்கே முடியாது.. ஒரு நாள் ரோஜாவன தோட்டத்தில் சொல்லி தருகிறேன்”
“அங்கேயா!”
“ஏன்?”
“அம்பு சத்தத்தில் மான், மயில் எல்லாம் பயந்துடாதா?”
மென்னகையுடன் அவளை நோக்கியவன், “அதுவும் சரி தான்.. அங்கே என்றால் இடையூறு இருக்காது என்று நினைத்தேன்.. சரி பொது தோட்டத்தில் செயல் படுத்த முடிகிறதா என்று பார்க்கிறேன்” என்றான்.
பெட்டியை மூடியவன், “கிளம்பலாமா?” என்று கேட்க,
சரியாக அதே நேரத்தில் அவள் ஒரு நேர் வாளைக் காட்டி, “இதை நான் தூக்கிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டிருந்தாள்.
அவன் சரி என்பது போல் தலை அசைக்கவும் அவள் அதை தூங்க முயற்சிக்க, அவளால் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது.
அவன் புன்னகையுடன் அவள் பின்னால் வந்து நின்றபடி தனது வலது கரம் கொண்டு அவளது வலது கரத்தை பிடித்து நேர் வாளின் பிடிமானத்தின் மேல் பகுதியில் வைத்தான். பிறகு இடது கரத்தினால் அவளது இடது கரத்தை பிடித்து வாளின் பிடிமானத்தின் கீழ் பகுதியை பிடித்தான். அதன் பின் பதினைந்து கிலோ எடை கொண்ட அந்த வாளை வெகு சுலபமாக தூக்கி சுழற்றி காட்டினான்.
அடுத்து அதை வைத்துவிட்டு இருவரின் வலது கரத்தினை மட்டும் பயன்படுத்தி நெடு வாள் ஒன்றை எடுத்து அதி வேகமாக சுழற்றி காட்டினான்.
அவன் வாளை கீழே வைத்துவிட்டு அவளை பார்க்க, அவளோ பிரம்மிப்புடன் உடல் சிலிர்க்க நின்றுக் கொண்டிருந்தாள்.
அவன் அவளது கன்னத்தை தட்டவும் இயல்பிற்கு திரும்பியவள், “அப்படியே உடம்பெல்லாம் புல்லரிக்குது.. ஏதோ போரில் நின்னு வாளை சுத்திய மாதிரி இருக்குது” என்றாள்.
அவன் புன்னகையுடன், “இந்த அறைக்கு வந்தாலே எனக்கு அந்த உணர்வு வந்துவிடும்” என்றான்.
அவன், “சரி கிளம்புவோம்” என்றதும் இருவரும் கிளம்பி அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். கதவை திறந்துவிட்ட காவலாளி வேகமாக வந்து வணங்கி நின்றான்.
பிறகு கதவை அடைத்து, திறவுகோலை மாறவர்மசிம்மனிடம் இருந்து பெற்று, கதவை பூட்டிவிட்டு திறவுகோலை திரும்பக் கொடுத்தான்.
அதன் பின் அவள் தேவிபுரம் செல்ல, அவன் கொலுவிருக்கை சென்றான்.
கொலுவிருக்கை சென்றதும் தீரனை அழைத்தவன், அவன் வந்ததும், “மீனாட்சி படிக்க நிதி உதவி செய்தவர் யார் என்று விசாரிக்க கூறினேனே! என்னாச்சு?” என்று கேட்டான்.
தீரன், “அவரைப் பற்றிய தகவல் இன்னும் கிடைக்கவில்லை ராஜா” என்றான்.
“இந்த வேலையை யாரிடம் ஒப்படைத்தாய்?”
“ராஜீவ்” (அவன் ஒரு சிறந்த துப்பறிவாளன்)
“அது எப்படி சிறு துப்பு கூட கிடைக்காமல் போகும்?”
“ஆசிரம உரிமையாளரிடம் எப்படி முயற்சித்தும் முடியவில்லை.. வேலை செய்பவர்களுக்கு இதைப் பற்றி தெரியவில்லை.. பியூன் கூட வளைந்து கொடுக்க மாட்டிக்கிறான்” என்றவன் சிறு தயக்கத்துடன் பார்க்கவும்,
அவன், “என்ன தீரா?” என்று கேட்டான்.
“ராணி மேல் சந்தேகம் தீரவில்லையா?” என்று சிறு தயக்கமும் கவலையுமாக கேட்டான்.
“சந்தேகம் என்று இல்லை.. அவளை பற்றி முழுதாக அறிய விரும்புகிறேன்” என்று அவளை விட்டுக் கொடுக்கமால் கூறியவன், “ஏதாவது வழியில் கண்டுபிடித்து சொல்” என்றும் கூறினான்.
அதில் இருந்தே மீனாட்சி மீது அவனுக்கு சிறு சந்தேகம் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்ட தீரன், “சரி ராஜா” என்றான்.
‘பொக்கிஷம் பற்றி சந்ராமா சொன்னதை வைத்து சாதாரணமாக தான் கேட்டாளா இல்லை அவள் வந்த நோக்கம் அதுவாக இருக்குமா?
ரணசிம்ம ராஜாவின் வாள் பற்றி தெரிந்து கேட்டாளா இல்லை அவர் மீது கொண்ட அபிமானத்தில் எழுந்த ஆர்வத்தில் மட்டும் கேட்டாளா?’ என்று யோசித்தான்.
பின், ‘பொக்கிஷம் பற்றி தந்தையை தவிர்த்து எனக்கும் விக்ரமிற்கு மட்டும் தானே தெரியும்! அதுவும் அவனுக்கு விவரம் எதுவும் தெரியாதே’ என்று யோசித்தவன்,
‘பொக்கிஷம் இருக்கும் இடத்தைப் பற்றி அறிய விக்ரம் இவளை அனுப்பி இருப்பானா?’ என்ற கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தான்.
‘மகாராணியை தனியாக கவனிக்க ஆள் வேண்டும் என்று கூறியது அவன் தான்..’
‘அவன் ஆள் என்றால் இருவரும் போடும் சண்டை போலியானதா? இல்லை நிஜம் தானா?’
‘அவள் இங்கே வந்த பிறகு, அவள் மேல் ஆர்வம் வந்து, அவள் என்னை விரும்பவும் கோபம் கொண்டானா?’ என்று பலவாறு யோசித்தவனின் மனம் அவளது நேசம் உண்மை என்றே நம்பியது.
சிறிது நேரம் யோசித்தவன், ‘இல்லை அவளை விக்ரம் அனுப்பி இருக்க மாட்டான்.. இந்த உளவாளி வேலை அவனுக்கு வராது’ என்று கூறிக் கொண்டான்.
‘ஒருவேளை பொக்கிஷத்தை பற்றி விக்கரம் ராஜமாதாவிடமோ அவனது தாய் மாமனிடமோ கூறி இருந்தால்’ என்று யோசித்தவன்,
‘இல்லை அதற்கும் வாய்ப்பு இல்லை.. இதைப் பற்றி அவன் வேறு யாருடனும் பேசி இருக்க வாய்ப்பே இல்லை’ என்ற முடிவிற்கு வந்தான்.
மீனாட்சி பற்றி சரியான முடிவிற்கு வர முடியாமல், ‘ஒருவேளை அவள் சாதரணமாகத் தான் கேட்டாளோ?’ என்று ஆரம்ப புள்ளிக்கே வந்து நின்றான்.
இறுதியாக, ‘ஒன்று அவளுக்கு நிதி உதவி செய்தவர் யார் என்று தெரிய வேண்டும் இல்லை இன்று போல் அவள் அறியாமல் அவளிடம் இருந்து விஷயத்தை வாங்க வேண்டும்’ என்ற முடிவிற்கு வந்தான்.