Advertisement
12
இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள்.
நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான் வாழ்க்கையை இனிமையாக மாற்றும்.
– புத்தர்
இரண்டு நாட்களாகியும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தபடி இருந்தான் பிரசாத்., அவனது நம்பிக்கை எல்லாம் நிச்சயமாக அவள் சென்னையில் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓங்கி இருந்தது.,
ஒரு வேளை அலுவலகம் செல்லாமல் தோழிகளோடு அவள் எப்போதும் தங்கியிருந்த வீட்டில் இருந்து இருந்தால்., மற்றவர்களுக்கு தெரியாது அல்லவா., சென்னை சென்றால் என்ன.? என்ற யோசனையோடு நாட்களை கழித்தான்.
ஆள் வைத்து விசாரிப்பது அவனுக்கு பெரியதாக தோன்றாவிட்டாலும்., இது என் மனைவி சார்ந்த விஷயம் என்னைத் தவிர வேறு யாரையும் இதில் தலையிட விடமாட்டேன்., என்று நினைத்தவன் இங்கு தன் வேலைகளை எல்லாம் சரியாக பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.,
ஏனெனில் முதன்முதலாக தேர்தலில் ஜெயித்து இருப்பதோடு., தன் பெயர் எந்த விதத்திலும் கெட்டுப் போகக் கூடாது., என்பதற்காக இதற்கிடையில் வீட்டிற்கு வந்தவர்கள் பிரசாத்தின் மனைவியை பற்றி விசாரித்தனர்.,
அவனும் அவள் வேலை விஷயமாக மீண்டும் சென்னை சென்றிருக்கிறாள் என்றும்., தான் இங்கு உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு சென்னைக்கு சென்று விடுவேன் என்றும் சொல்லி வைத்திருந்தான்.,
அதையே தயாளன் நித்தியானந்தம் கடைபிடிக்க., கலா பொதுவாக இப்போது வீட்டில் வாயை திறப்பதை சுத்தமாக நிறுத்தி இருந்தாள்., முக்கியமாக சொர்ணத்திடம் பேசுவதை தவிர்த்து விட்டாள்., குடும்பதினருக்கு புரிந்தாலும்., சொர்ணம் மட்டும்., அவர் தான் நினைத்ததை சாதித்து விட்டதில் சந்தோஷமாகவே இருந்தார்.
இந்த நிலையில் ஒரு வாரம் கடந்திருக்க., முதல் சட்டமன்ற கூட்டத் தொடருக்காக கிளம்பினான் பிரசாத்.
கிளம்பும் போது தந்தையிடம் தான் “கூட்டத்தொடர் முடிந்த பிறகும் வருவதற்கு பத்து நாள் ஆகும்., கூட்டத்தொடர் முடிந்தாலும் உடனே வருவதற்கு இல்லை., சில வேலைகள் இருக்கிறது முடித்து விட்டுதான் வருவேன்“.,என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அவரும் “சரி பார்த்துக் கொள்“., என்று சொல்லும் போது
நித்யானந்தன் “உன்னோட அபிஷியல் ஒர்க் எல்லாம் முடிச்சுட்டு., கொஞ்சம் உன்னோட சொந்த வேலையை பாரு“., என்று சொன்னான்.
” நிச்சயமா அதுக்காக தான் கூட பத்து நாள் இருந்து வருவேன்“., என்று சொன்னான்.
கலாவும் “கொஞ்சம் நல்லாவே ஆள் வைச்சினாலும் பாருங்க., என்று சொன்னாள்.
கலாவிடம் “இல்ல அண்ணி., இது என் ஒய்ப் சார்ந்த விஷயம் நான் தான் பார்க்கணும்., அடுத்தவங்க ட்ட சொல்றதை நான் விரும்பல., நான் பார்த்துக்கறேன்“., என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
சொர்ணத்திடம் பேசக்கூட இல்லை., அதே நேரம் தயாளன் தான் “அங்க போய் வெளியே எங்கேயும் தங்காதடா., பானு மாப்பிள்ளை போன் பண்ணியிருந்தார்., அங்கு வந்து தங்க சொன்னார்“., என்று சொன்னார்.
திரும்பி அவரை பார்த்தவன்., அத்தான் ட்ட வரமாட்டேன்னு சொல்லிருங்க. “இருந்து இருந்து அவ வீட்டிலயா., இந்த ஜென்மத்துல அது மட்டும் நடக்காது., எப்போ என் வாழ்க்கைக்கு எதிராக அவ செய்ய ஆரம்பிச்சாலோ., அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்.., இனிமேல் அவ வீட்டு வாசப்படி கூட மிதிக்க மாட்டேன்.,
நாள பின்ன அவளுக்கு குழந்தைங்க வந்தா., அவளுக்கான கூடப்பிறந்தவன் கடமையை எல்லாம் செய்வாரு., நான் செய்யனும் ன்னு அவசியம் இல்ல.,
எனக்கு கூட பிறந்த அக்காவே கிடையாது., நான் அவளுக்கு தம்பியும் கிடையாது., நான் அப்போதே முடிவு பண்ணிட்டேன்“., என்று வேகமாக சொன்னான் பிரசாத்.
அதைக்கேட்ட சொர்ணமும் “என்னடா பேச்சு பேசுற., அவ உன் கூட பிறந்தவ, கொஞ்சமாவது அக்கறை இருக்கா., கல்யாணம் ஆகி ஐஞ்சு வருஷத்துல குழந்தையில்லாப கோயில் கோயிலாக ஏறி இறங்கி., டாக்டர் டாக்டரா பாத்துட்டு அழையுறா., நீயும் இப்ப சாபம் மாதிரி., எனக்கும் அவளுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை., ன்னு சொல்றியே“., என்று கேட்டார்.
“அவ புத்திக்கு குழந்தை வந்துச்சுன்னா அதிசயம்“., என்றான் கோபத்தோடு.
தயாளனோ “தம்பி அப்படி எல்லாம் பேசாதே“., என்று சொன்னார்.
“ஏம்பா சொல்ல மாட்டீங்க., உங்க ஒயிஃப் அ யாராவது பேசி விரட்டி இருந்தா., உங்களுக்கு அந்த வலியும் வேதனையும் தெரிஞ்சிருக்கும்., இப்போ பாதிக்கப்பட்டது நான் மட்டும் தானே., என் ஒய்ஃப் அ தானே விரட்டி இருக்காங்க.,
எனக்கு தெரிஞ்சு இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க உங்க வொய்பையும்., பொண்ணையும் ஒரு வார்த்தை சொல்லலை., என்னோட வலி உங்களுக்கு தெரியுமா., உங்களுக்கு அதெல்லாம் தெரியாது இல்ல.,
கல்யாணம் ஆகி அவளுக்கு அஞ்சு வருஷம் ஆகுது., இப்ப வரைக்கும் குழந்தை இல்ல., அவ குழந்தைக்காக டாக்டர்ட்ட., கோயிலுக்கு போனதை விட., என் பொண்டாட்டிய விரட்டுவதற்காக அம்மா வீட்டுக்கு இந்த ஒரு மாசத்துல நடந்த நடை அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன்.,
எவ்வளவு அழகா காலையில இங்க வந்து பிரச்சினையை பேசி கெளப்பி விட்டுட்டு., அம்மா கல்யாணத்துக்கு கிளம்பும் போது அவளும் கிளம்பி சென்னை வந்து இறங்கியிருக்கா. அந்த அளவுக்கு தைரியம் இருக்கு பா.,
நாளைக்கு வேற என்னவெல்லம் செய்ய மாட்டா ன்னு., என்ன நிச்சயம்., எனக்கு அப்படி ஒரு உறவே தேவை இல்லை., நான் புடிச்சி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்., பிடிக்காமல் கல்யாணம் பண்ணலையே., உங்க கட்டாயத்தினால் கல்யாணம் பண்ணிக்கலை., எனக்கு புடிக்கலனா புடிக்கலைன்னு சொல்லி இருப்பேன்., எனக்கு அவளை ரொம்ப ரொம்ப பிடிக்க போய் தான்., நான் அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.,
வெறுமனே ஜாதகங்களை ஒரு விஷயத்தை வச்சு நீங்க சொன்னதுக்காக நான் அவளை கல்யாணம் பண்ணல., சென்னையில் அவள பாக்குறதுக்கு முன்னாடி., அவளை பத்தி நான் விசாரித்து தெரிஞ்சிக்கிட்டேன்., அவளை பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு., ரொம்ப சாஃப்ட் நேச்சர். துருதுருன்னு இருப்பா., யார்ட்டையும் ரொம்ப வாய் அடிச்சு கூட அவளை யாரும் பார்த்ததில்லை., வீட்டிலேயே ஓரே பொண்ணா., அதனால அவளுக்கு அதிகமான பேசுவது பிடிக்காது., அது மட்டும் இல்லாம ரொம்ப விட்டுக்கொடுத்து போக கூடிய டைப்., இது போல சில விஷயங்கள் என்னை ரொம்ப ஈர்த்தது., இந்த குடும்பத்துக்கு பொறுந்தி போவா ன்னு நான் நினைச்சேன்., அங்கு தான் நான் தப்பு பண்ணிட்டேன்.,
இந்த குடும்பத்துக்கு அவ அமைதியான மருமகளா எல்லாருக்கும் விட்டுக்கொடுத்து போக மருமகளா இருப்பான்னு., குடும்பத்துக்காக யோசிச்ச நான்., அவளுக்காக யோசிக்க மறந்துட்டேன்., நம்பி அவளை கூட்டிட்டு வந்தேன்., அந்த நம்பிக்கையில் எந்த விதத்திலும் அவ தப்பு நடக்க வைக்கலை., அவ கடைசி வரைக்கும் அப்படித்தான் இருந்தா., இங்கே இருந்த இத்தனை நாள்ல அவளை பார்த்து அம்மா என்னென்ன வார்த்தை விட்டு இருக்காங்கன்னு., எனக்கு அண்ணி மூலமாதான் விஷயங்கள் நிறைய தெரியும்., அல்லது இவங்க பேசறது ஜாடை மாடையா வெளியே கேள்விப்பட்டு அது மூலமா நான் தெரிஞ்சுகிட்டது தான் நிறைய..,
ஆனால் ஒருநாள் கூட அவ வாயிலிருந்து உங்க அம்மா இப்படி சொன்னாங்க., உங்க அக்கா அப்படி சொன்னாங்க னு சொல்லி., ஒரு நாள்கூட அவ சொன்னது கிடையாது., எப்படிப்பா இவங்க இப்படி இரக்கமே இல்லாம ஒரு பொண்ண நீ வெளியே போகலைனா., நான் சூசைட் பண்ணிடுவேன் ன்னு மிரட்ட முடிஞ்சது. அவங்க பேரண்ட்ஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்.,
குடும்ப வன்முறை சட்டத்தின் உள்ள தூக்கி வைச்சா குடும்பத்தோட எல்லாரும் போக வேண்டியது தான்., நீங்க எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி., ஒரு பொண்ணு காணாம போயிட்டா., உங்க மேல கேஸ் பைல் பண்ணி உள்ள தள்ள முடியும்., எம்பி பதவி காலி., என்னுடைய எம்எல்ஏ பதவி காலி., இதெல்லாம் யோசிக்கவே மாட்டாங்க இல்லப்பா“., என்று சொன்னவன்.
“தயவுசெய்து நான் பழைய பிரசாத் ஆ இருப்பேன் ன்னு எதிர்பார்க்காதீங்க., நான் இப்படித்தான் இருப்பேன்., எனக்கு என்னோட ஹேமா என் கண்ணு முன்னாடி வர்ற வரைக்கும்., என்னால யாரையும் மன்னிக்க கூட முடியாது., கனவுல கூட மன்னிக்க மாட்டேன்., மறக்கவும் மாட்டேன்., என்று சொன்னான்.
சொர்ணமோ., சும்மா இருக்காமல் ” “ஒரு மாசத்துல அவள பற்றி உனக்கு என்ன தெரியும்“.,என்றார்.
“உங்கள இந்த இருபத்தொன்பது வருஷத்தில் புரிஞ்சதைவிட அதிகமாக புரிஞ்சிக்கிட்டேன்., சுயநலமற்ற அன்பு அம்மாட்டதான் கிடைக்கும்ன்னு சொல்லுவாங்க… ஆனால் அது என்னோட விஷயத்தில் பொய்யாகிருச்சி., உண்மையான அன்பை புரிஞ்சிக்க., ஒரு மாதம் வேண்டாம் ஒரு நாள் போதும்“., என்றவன்
தன் சென்னை பயணத்தை தொடங்கினான்.
அங்கே சென்றவன் அவன் நண்பன் மூலமாக ஒரு அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டான்.
ஏனென்றால் மாதத்தில் பாதி நாள் இங்கு தான் வர வேண்டியது இருக்கும், என்பதால் அந்த அப்பார்ட்மெண்டில் தங்கிக் கொண்டு தனது அரசியல் சார்ந்த சட்டமன்ற வேலைகளையும்., அங்குள்ள மற்ற வேலைகளையும் கவனிக்க தொடங்கியிருந்தான்., அதே நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அவளின் அலுவலகத்திற்கு சென்று இறங்கினான்.
அங்கு அவள் தோழிகள் இருவரையும் பார்க்க வேண்டும் என்று சொல்லி அவர்களை கேண்டீன் வரவைத்து பேசினான்.
தோழிகள் இருவரும் “இல்லவே இல்லை., அவள் இங்கு வரவே இல்லை“., என்று தெளிவான முகத்துடன் கூறினர்.
இருவரிடமும் பதட்டம் இருந்தாலும்., இருவரும் “இல்லை., அவள் இங்கு வரவில்லை., ஆனால் எங்களிடம் கடைசியாக பேசியது“., என்று சொல்லி அவன் பதவி ஏற்பதற்கு முதல் நாள் பேசியதை மட்டுமே கூறினார்கள்.
அவனும் “இல்ல நான் வந்து அவளோட கால் லிஸ்ட் எடுத்துட்டேன்., அவ உங்க கிட்ட பேசி இருக்கா“., என்று சொன்னான்.
“ஆமா எங்ககிட்ட கடைசியா பேசினதுக்கப்புறம் பேச டிரை பண்ணி இருக்கா., உங்களுடைய பதவி ஏற்பு நாள் அன்னைக்கு., எங்களுக்கு ட்ரை பண்ணி இருக்கா.., நாங்க அன்னைக்கு ஆபிஸ் மீட்டிங்ல இருந்ததால்., போன் அட்டென்ட் பண்ண முடியல., அதனால பேசல“., என்று சொன்னாள்.
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையோடு., “சரி அவளைப் பற்றி என்ன தகவல் கிடைத்தாலும்., எனக்கு இந்த நம்பருக்கு தெரியப்படுத்துங்கள்“., என்று அவனுடைய அலைபேசி எண்ணையும் சென்னையில் தங்கியிருக்கும் வீட்டு அட்ரஸ் ம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.,
அவன் சென்ற உடன் ரதியும் குழலியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
“நமக்குத் தெரிந்த உண்மையை சொல்லிவிடலாம்“., என்றாள் ரதி.
குழலி தான் “வாய மூடிட்டு இரு ரதி., புரியாம பேசாத“., என்று சொன்னாள்.
“சரி விடு., இனிமேல் ஒண்ணுமே சொல்ல முடியாது., இனிமேல் சொன்னா இவர் எங்கே போய் தேடுவாரு., எதையும் சொல்லாத., அவ நம்மள பிரிஞ்ச கஷ்டம் நம்முடைய இருக்கட்டும் விடு“., என்று சொல்லிவிட்டு அமைதி ஆகினர்.
Advertisement