Advertisement

அத்தியாயம் -22(2)

“ஏதாவது பேசுடா” ஸ்ரீ ஷாமின் தோளை குலுக்க, “விஜய் அம்மா அப்படி படுத்து கிடக்கவும் எல்லாத்துக்கும் இவன் கல்யாணம்தான் காரணம்னு பட்டுச்சு. இவன் அப்படித்தானே இருந்தான், எல்லாத்தையும் விட அவனுக்கு பாவனாதானே முக்கியம்? கண்டிப்பா அவன் வீட்ல ஏத்துக்க மாட்டாங்க, இவன் வீட்டை விட்டு வெளிய வரணும். எல்லாரும் கஷ்ட படறதுக்கு பதிலா இவங்க பிரிஞ்சிட்டா கொஞ்ச நாள்ல அவங்க வேற லைஃப் அமைச்சுக்குவாங்கனு தோணிச்சு. விஜய் அப்பாவும் பிரிச்சிட்டா போதும் மத்ததை அவர் பார்த்துக்கிறேன்னு சொன்னார். நானும் செஞ்சேன், சத்தியமா விஜய்க்கு கெடுதல் நினைச்சு செய்யல, அவன் நல்லதுக்காகதான் அவன் குடும்பத்தை அவன் பிரிஞ்சிட கூடாதுன்னுதான்…” ஷாம் பேசிக் கொண்டிருக்க, “வாய மூட சொல்லுடா அவனை!” கத்தினான் விஜய்.

“என் மூணு வருஷ வாழ்க்கைய திருப்பி தருவானா அவன்? என் பொண்ணு வயித்துல இருந்ததிலேர்ந்து எவ்வளவோ மிஸ் பண்ணிட்டேன். எல்லா மொமெண்ட்ஸும் எனக்கு வேணும், அவன் கிரிமினல் மைண்ட் வச்சு ரீவைண்ட் பண்ண சொல்லு நடந்ததை எல்லாம். முடியாதுல்ல? அப்ப என் கண்ணுல படாம போய்ட சொல்லு” என்றான் விஜய்.

கண்களை மூடி தலையை பின்னால் சாய்த்து ஆழ்ந்த மூச்சு விட்ட ஷாம் சில நொடிகள் சென்று எழுந்து கொண்டான். அதீத அன்பு, அக்கறை என்ற பெயரில் அதிகப் பிரசங்கித் தனம் செய்து விட்டது புரிகிறது. யார் நினைத்தாலும் முடிந்ததை மாற்ற இயலாதே. அதுவும் ஆழினி பற்றி தெரியவும் ஆடிப் போயிருந்தவனுக்கு இன்று விஜய்யின் கோவமும் அடியும் ஒருவித ஆசுவாசம். இன்னும் கூட வாங்க தயாராக இருந்தான்.

ஆனால் நண்பர்களின் இனிமை கெட விரும்பாதவன், “நான் வர்றேன்” என பொதுவாக சொல்லி விட்டு நடக்க ஸ்ரீ சென்று அவனை பிடித்துக்கொண்டாள்.

அவன் செய்தது தவறுதான், அதனால்தான் இன்னும் திருமணம் செய்யாமல் குற்ற உணர்வில் குடிக்க வேறு செய்கிறான். நமது தோழன், இன்னும் கூட சண்டையிடு, திட்டு, கொஞ்ச நாள் பொறுத்து அவனிடம் பேசு. ஆனால் அப்படி ஒரேயடியாக அவனை ஒதுக்கி விட முடியாது என ஷீபாவும் பிரணவ்வும் விஜய்யை சமாதானம் செய்தனர்.

விஜய் யார் பேச்சுக்கும் சமாதானம் ஆகாமல் ஆனால் அதற்கு மேல் கோவம் காட்டாமல் அமைதியாக இருக்க ஷாமிடம் கெஞ்சி அவனை அங்கேயே நிறுத்தி வைத்தனர்.

ஷாமும் விஜய்யும் பேசிக் கொள்ளவில்லை, மற்றபடி மற்றவர்களின் முயற்சியால் நல்ல விதமாக நேரம் நகர்ந்தது. மதியம் விஷால் வந்து விட்டான். அவனும் விஜய்க்கு ஆறுதல் சொல்லி ஷாமை கொஞ்சம் திட்டி இயல்பானான்.

 மதிய நேரம் ஓய்வெடுத்து மாலை நேரம் ஷாமை தவிர மற்றவர்கள் மீண்டும் கூடி விட்டனர். குழந்தைகளோடு நேரம் கல கலப்பாக நகர்ந்தது. ஷாம் வர விஜய் கோவமாக பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.

ஷாம் விடாமல் விஜய்யிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க, “பெங்களூருகாரர் மதம் கொண்ட யானை, சுவிஸ் ரிட்டர்ன் சினம் கொண்ட சிங்கம். திரும்ப ஒரு அடிதடி சரக்க்ஸ் சாகசம் ஆரம்பிக்கிற முன்னாடி என் புருஷன் அப்பாவி ஆட்டை கொண்டாந்து விடுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல” என்றாள் ரதி.

“அதுக்கு அவசியமே இல்லாம அந்த வெள்ளாடு தானா ஆஜராகிடுச்சு பாரு” என ஷீபா சொல்ல, “கருத்து சொல்ற நாட்டாமைங்களையும் புடிச்சு அங்க விடுங்க. என் புருஷன் ஒத்த ஆளா என்ன செய்வார்? என்ன ஆடுன்னு சொல்லவும் மட்டன் பிரியாணி போட பிளானா?” என ரதி கேட்க மற்ற மூன்று பெண்களும் சிரித்து விட்டனர்.

விஜய் ஷாமிடம் பேச தயாராக இல்லை எனவும் நேராக ஆழினியிடம் வந்தான் ஷாம். குட்டி நாற்காலி ஒன்றில் அவள் அமர்ந்திருக்க அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் குழந்தையின் பாதத்தை பிடித்து முகத்தோடு அழுத்திக் கொள்ள, “அட அட! முடி இருக்கிற கட்டப்பா பொண்ணு பாகுபலிகிட்ட மன்னிப்பு கேட்குறார் ப்பா!” அதற்கும் கிண்டல் செய்தாள் ரதி.

ஆழினி ஒன்றும் புரியாமல் பார்க்க அழுது விட போகிறாள் என நினைத்த பாவனா மகளை தூக்கிக் கொள்ள, எழுந்து நின்ற ஷாம் பாவனா முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தான். அவளிடம் மன்னிப்பு கேட்க கூட அவனுக்கு நாக்கு எழவில்லை. அவளுக்கும் அவனிடம் எதுவும் பேசவோ கேட்கவோ விருப்பமில்லாமல் அங்கிருந்து தள்ளி வந்து விட்டாள்.

இரவு உணவுக்கு பின் விஜய் அவன் குடும்பத்தோடு வீட்டுக்கு புறப்பட்டு விட்டான். பிரணவ் ஷீபா இருவரும் அவர்கள் குடும்பத்தோடு காலையில் கோவை செல்வதாக இருந்தனர். ஷாம் எப்போது கிளம்புகிறேன் என எதுவும் சொல்லவில்லை, ஸ்ரீ வீட்டில்தான் இருந்தான்.

விஜய் வீடு வரவும் அவனிடம் பார்சல் ஒன்றை தந்த கங்கா, “என்னடா அது?” எனக் கேட்டார்.

“சும்மா வேலை சம்பந்தமா” என சொல்லி விட்டான்.

பகலில் உறங்கியிருந்ததால் இன்னும் ஆழினி விழித்துக் கொண்டிருக்க, “கொடு அவளை, சாயந்தரம் வந்ததுமே உன் அப்பா தேடினார்” என சொல்லி பேத்தியை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்று விட்டார் கங்கா.

விஜய்யும் பாவனாவும் அறைக்கு வந்து தங்களை சுத்தப் படுத்திக் கொண்டு வேறு இலகு ஆடைக்கு மாறிய பின் மகளை தூக்க அம்மாவின் அறைக்கு சென்றான் விஜய்.

 தாத்தா கதை சொல்லிக் கொண்டிருக்க ஆர்வமாக கேட்டுக் கொண்டு அவர் பக்கத்தில் படுத்திருந்தாள் ஆழினி. இடையிடையில் ஏன் எப்படி என்ற கேள்விகளும் அச்சச்சோ அப்புறம் என்ற அழகு மழலை மொழிகளுமாக தாத்தாவை ரசிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.

விஜய் அம்மாவை பார்க்க, “அவ தேடினா கூப்பிடுறேன், விடு இருக்கட்டும்” என்றார்.

அப்போதும் விஜய் அங்கேயே நிற்க, “மூணு புள்ளைங்க பெத்து வளர்த்தவங்கடா நாங்க, போ” என அதட்ட தனது அறைக்கு திரும்பி விட்டான்.

ஆழினி அங்கேயே இருப்பது குறித்து பாவனாவும் கவலையாக பார்க்க, “இங்கதானே இருக்கா. அழுதா சொல்லப் போறாங்க” என சமாதானமாக சொன்னான் விஜய்.

பாவனா அமைதியாக படுத்துக் கொள்ள பார்சலை பிரித்தவன், “இந்த இயர் மஃப்ஸ் வாங்கினேன் சவுண்ட் கேட்டா முழிக்குறா ஆழின்னு. அவ என்னனா தாத்தாகிட்ட ஸ்டோரி கேட்டுகிட்டு இருக்கா” என சொல்லி அதை பத்திரமாக கப்போர்டில் வைத்தான்.

ஸ்ரீ வீட்டில் நடந்தது பற்றி பாவனா கேட்க, “புத்தி பிசகி எனக்கு நல்லா செஞ்சு விட்டுட்டான் இடியட், என்ன இருந்தாலும் எங்க க்ரூப் அவன் இல்லாம இருக்காது. அந்த சண்டை போடலைனு வை அவன் இருக்க இடத்துல நிக்க கூட முடியாது என்னால. இன்னும் கோவம் இருக்கு பாவனா. எனக்குதான் தெரியும் நான் என்ன இழந்தேன்னு. ஆனா இனிமே சண்டை போட மாட்டேன்” என்றான்.

“ம்ம்… அதே மாதிரி என்னை அவர் கூட பேச சொல்லி கம்பெல் பண்ணக்கூடாது. என்னால எப்பவும் முடியாது” என்றாள் பாவனா.

சரி என்றவன் லேப்டாப் எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான். வந்திருந்த மெயில்ஸ் பார்த்து விட்டு இன்னும் ஒரு மாத காலத்தில் சில விடுபட்ட வேலைகளை இங்கிருந்தே முடித்து விட்டு பணியிலிருந்து விடுபடலாம் என அவனது நிறுவனத்திலிருந்து வந்த செய்திக்கு பதில் அனுப்பி விட்டு உறங்க வந்தான்.

பாவனா இன்னும் மகள் தன்னுடன் இல்லையே என அதையே சிந்தித்துக் கொண்டிருக்க அவளருகில் படுத்து அவளை முதுகுப் பக்கத்திலிருந்து அணைத்தவன், “இப்போ என்னை பார்க்க திரும்பி படு” என கிசு கிசுத்தான்.

அவன் பக்கமாக படுத்தவள் முகம் சோகமாக இருக்க, “அடுத்து என்ன டி?” கடுப்பாக கேட்டான்.

“ஆழி கூட இல்லாம என்னவோ போல இருக்குங்க”

“சரியா போச்சு! குழந்தையவே நினைக்காத, குழந்தை உருவாகுற பிரஸஸ்க்கான நேரம் இது” அவள் கன்னம் கிள்ளி சொன்னான்.

“ரெண்டு வருஷம் குழந்தை வேணாம்னு சொன்னீங்க?” விஜய்யின் மீசையை இழுத்து விட்டுக் கொண்டே கேட்டாள்.

“ஆசை மோகம் அதுக்கெல்லாம் தொண்ணூறு நாள் கணக்கில்ல எனக்கு உன்கிட்ட. சொன்னது சொன்னதுதான், ரெண்டு வருஷம் நமக்கு இடையில ஆழி போதும். அதுக்கப்புறம்தான் ஆழிக்கு சிப்லிங்ஸ். அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல, அதெல்லாம் நான் பிளான் பண்ணிக்கிறேன், இப்போ நீ சமாதானம் பண்ணு என்னை” என்றான்.

குழந்தையே பிறந்தாகி விட்டது, ஆனாலும் இதுதான் முதல் முறை போல அவளுக்குள் அத்தனை வெட்கம். குறும்பும் பிடிவாதமுமாக விஜய் பார்த்திருக்க புரண்டு படுத்தவள் கட்டிலின் மறு பக்கம் வழியே எழுந்து நின்றாள்.

“மூணு வருஷம் கழிச்சு அப்பவும் எதுவும் இல்லாம காயப்போட்டு இன்னிக்கு நடக்கும்னு பார்த்தா இதென்ன பாவனா சேட்டை!” செல்லமாக கடிந்து கொண்டே அவளை பிடிக்க அவனும் இறங்க இன்னும் தள்ளி சென்றாள்.

இருவருக்கும் இடையில் நல்ல இடைவெளி, அவளின் பிம்பம் சுவரில் நிழலாக தெரிய அவளை விடுத்து சுவரை நெருங்கியவன் அவள் நிழலில் விரல் கொண்டு வருட பார்த்திருந்த பாவனாவின் உடல் கூசி சிலிர்த்தது.

 அவளது நிழலில் அவன் செய்த சேட்டைகளை காண காண ஒரு கட்டத்தில் காணவே முடியாமல் வெட்கி முகம் மூடிக் கொண்டாள். தன் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு அவளை தொட்டு விடாமல் நெருங்கி நின்றான்.

முகத்தை மூடியிருந்த தன் கைகளில் மோதும் சூடான மூச்சு காற்று கொண்டே அவன் தன் முன் நிற்கிறான் என்பதை புரிந்து கொண்டவளின் மூச்சுக்களின் எண்ணிக்கை கூடிப் போனது.

அவனது கன்னம் அவளது கொஞ்சமாக தெரிந்த கன்னத்தில் உரச காது மடலில் உதடுகள் உரச, “இப்படி நிழலோடயும் கனவுலேயும் குடும்பம் நடத்தவா நமக்கு இந்த தனிமை? நீ வெட்க படாம இருக்கத்தான் நைட் இருட்டா இருக்கு. ஹ்ம்ம்… சமாதானம் செய்ய மாட்டியா?” என விஜய் தாபமாக கேட்க தன் முகத்திலிருந்து கைகள் விலக்கினாள் பாவனா.

அவன் வெற்று தோள்களில் கை வைத்து அவனை இன்னும் நெருங்கியவள், நேசமாக அவன் தோளில் ஒரு முத்தமிட்டு “இன்னிக்கு நீங்களே சமாதானம் ஆகிக்கோங்க, அடுத்த முறை நான்…” சொல்லாமல் நிறுத்தி அவன் கழுத்து வளைவில் அழுந்த முத்தம் வைத்து அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அன்றைய காதல் உறவை முத்தத்தில் தொடங்கினான் விஜய். திரைகள் விலக்கி வருடல்களால் முன்னேறி அவள் சிணுங்கல்களில் கரைய ஆரம்பித்தான். குளிர்ந்த இரவில் உடலெங்கும் வெது வெதுப்பாக பரவிய உணர்வுகளில் மனம் மயங்க மதி மயங்க ரகசியங்கள் பகிர ஆரம்பித்தனர்.

வெட்கம் தொலைந்த பின் ஆசைகள் அடுக்கடுக்காக நிறைவேற அலையலையாக பரவச உணர்வுகள். ஆழ்ந்து அனுபவித்து காதல் செய்தவர்களிடம் திடீரென வேகம். இதழ் முத்தத்தில் தொடங்கியதை நெற்றி முத்தத்தில் நிறைவு செய்தான் விஜயசாகரன்.

இன்னும் கொஞ்சம் வேண்டுமென்ற சிறு ஆசை இருந்தாலும் இருவர் விழிகளிலும் நிறைவான பார்வையே.

சிறிது நேர கணவன் மனைவி அன்னியோன்ய அந்தரங்க உரையாடலுக்கு பின் பேச்சை முடிக்கும் விதமாக முத்தம் ஒன்றால் பேசினாள் பாவனா.

ஒற்றை முத்தம் அடுத்த அனுபவத்துக்கு தொடக்க உரை எழுத இரவை மிச்சம் வைக்காமல் கொள்ளை கொள்ள ஆரம்பித்தனர் காதல் இணைகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement