Advertisement

அத்தியாயம் இருபத்தி ஐந்து :
புதிதாக இருக்கும் அவளின் உடையை அவளின் பேச்சை கிரகிக்க முற்பட்டான் கண்ணன். மனைவி கணவனாய் தன்னை தேடுகிறாளோ என்று சரியான பார்வையில் யோசிக்க ஆரம்பித்தான். 
அதற்குள் உணவுண்ண சென்றவர்கள் வந்து விட, இவன் எழுந்து எல்லோரோடும் நின்று கொண்டான்.
இவர்கள் முறையும் உடனே வந்து விட்டது.
இன்னும் அவனுக்குத் தெரியாது. அந்த தோப்பு சுந்தரியின் பேரிலும் அவனின் பேரிலும் சேர்த்து வாங்கப்பட இருப்பது.
இது சுந்தரியின் ஏற்பாடே, மாமனாரிடம் தனியாய் பேசியிருந்தாள். கண்ணனிடம் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லியிருந்தாள். “சொன்னால் வேண்டாம் என்று சொல்லுவார், அதனால் பத்திரம் பதியும் போது சொல்லிக் கொள்ளலாம்” என்று.
அவளுக்கு மனதிற்கு தெரியும் கண்ணன் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பான், மறுப்பான், சண்டை பிடிப்பான் என்று.
எல்லாவற்றிற்கும் தயாராய் இருந்தாள். இதோ அதன் பதட்டம் சிறிதும் இன்றி கணவன் தன்னை சரியாய் கவனிக்காததற்கு மனம் சுணங்கிக் கொண்டிருந்தது.
அவர்கள் முறை வர இவர்கள் பக்கம் சாட்சிக்கு இருவர் வேண்டுமாய் இருக்க, “நான் ஒருத்தன் சித்தப்பா ஒருத்தர்” என்று இவன் சொல்ல,
“தம்பி சுந்தரி பேர்லயும், உன் பேர்லயும் சேர்த்து தான் பதியறோம். அதனால நீ சாட்சி போட முடியாது” என்று சொன்னது தான் போதும்,
“என்ன?” என்று அவனையும் மீறி குரல் மிக சத்தமாய் வெளி வந்து விட்டது.
சுற்றி இருந்த எல்லோரும் பார்த்தனர்.
பின்பு குரலை சற்று குறைத்தவன், ஆனாலும் சீறினான். “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? யார் முடிவு இது? யாரை கேட்டு செய்யறீங்க?” என்று அடிக் குரலில் சீறினான்.
நிலம் கொடுக்க வந்தவர்கள் என்னவோ என்று பார்த்தனர்.
சந்திரன் தர்ம சங்கடமாய்  சுந்தரியை பார்த்தார்.
“என்னோட முடிவு இது” என்றாள் தெளிவாய்.
“எனக்கு பிடிக்கலை, எனக்கு தேவையில்லை” என்றான் கடினமான குரலில்.
“நாம அப்புறம் பேசிக்கலாம். உங்களுக்கு தேவையில்லைன்னா நீங்க எனக்கு அப்புறம் கூட மாத்திக் குடுக்கலாம். இன்னும் ரெண்டு நாள்ல அவங்க அமெரிக்கா போறாங்க, அதனால இப்போ பத்திரம் பதிஞ்சிடுவோம்” என்றாள் இலகுவாக
“இல்லை, நம்ம ரெண்டு பேர் பேர்ல இருக்கட்டும், நீங்க ஒத்துக்கணும்” இப்படி எதுவும் சொல்லவில்லை சுந்தரி சொல்லவில்லை. அதுவே ஆத்திரத்தை கிளப்பியது.   
“நான் வேண்டாம்னு சொல்லுவேன்னு தெரிஞ்சே இந்த வேலையை நீ செஞ்சிருக்க, அப்போ என்னோட உணர்வுகளுக்கு ஒரு மதிப்புமில்லை. என்கிட்டே முன்னமே சொல்லணும்னு தோணலை” என்று அதீத கோபத்தில் சீறினான்.
அவனால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
எப்போதும் எல்லோர் முன்னும் காட்சி பொருளாக விரும்பாதவன் இன்று எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.
அதையும் விட சுந்தரியின் அலட்டாத முகம் அவனை கொதி நிலைக்கு கொண்டு சென்றது. “என்னால முடியாது, எனக்கு வேண்டாம்” என்று அவன் கிளம்ப எத்தனிக்க,
“நாம தான் பேசிக்கலாம்னு சொல்றேனே” என்று இலகுவான குரலில் சொல்ல, நிச்சயம் அது ஒரு திமிரான பாவனையே. நான் சொல்வது தான் என்ற பாவனை. “எப்போதுமே இவள் இப்படி தான். இவள் விஷயமென்றால் பரவாயில்லை, என் விஷயத்தை முடிவு செய்ய இவள் யார்? முடியாது, எனக்கு வேண்டாம்” என்ற கண்ணனின் எண்ணம் திண்ணம் பெற்றது.   
அதற்குள் அவர்களுக்கு அழைப்பு வர, “நீங்க போங்க, நாங்க பின்னாலேயே வர்றோம்” என்று விற்பவர்களை பார்த்து சொன்னவள், அவர்கள் உள்ளே நகரத் துவங்கியதும் “வாங்க ப்ளீஸ்” என்று அவனின் கைபிடித்து அழைக்க,
அவளின் கையை அடுத்த நொடி உதறினான்.
அவ்வளவு தான் சுந்தரிக்கு மனம் ஏகமாய் சுணங்கி போனது.
“அப்போ நான் வேற, நீங்க வேற, நீங்க எப்போன்னாலும் என்னை விட்டுட்டு போய்டுவீங்க. அது தான் வேண்டாம்னு சொல்றீங்க, அப்படி தானே!”  
“நீ போ! போன்னு, சொன்னாலும் சூடு சொரணை இல்லாம உன் வீட்ல உட்கார்ந்து இருக்கேன் தானே, அதான் இந்த பேச்சு பேசற நீ!”
“அப்போ போகமாட்டீங்கன்னா உங்க பேர்ல இருந்தா என்ன? என் பேர்ல இருந்தா என்ன? நம்ம ரெண்டு பேர் பேர்லயும் தானே இருக்க போகுது!”  
“எல்லோரும் காத்திருக்காங்க நாம அப்புறமா சண்டை போடலாம்” என்றாள் வெகுவாக தணிந்து.
அது சற்று வேலை செய்தது, எல்லோரும் என்னவோ என்று நினைப்பர், ஊருக்குள் நிமிடத்தில் விஷயத்தை பரப்பி விடுவர் என்று உணர்ந்தவன்,  “இப்போதைக்கு கையெழுத்தை போடுவோம், பின்பு நிச்சயம் இவளின் பேரில் முழுவதுமாய் மாற்றி விட வேண்டும்” என்ற எண்ணத்தோடே சென்றான்.
“கோடி ரூவா சொத்து, உன் பொஞ்சாதி சுளுவா உனக்கு தூக்கி கொடுக்குது. எதுக்கு தம்பி வேணாங்கற? என் பொஞ்சாதி எல்லாம் பத்து ரூவா குடுக்க ஆயிரங் கேள்வி கேட்பா? நீ மச்சக்காரன் டோய்!” என்று வேறு ஒருவன் சொல்ல,
“நான் கேட்டேனா? நான் கேட்டேனா?” என்று அவன் முகத்தை பெயர்த்தெடுக்க ஆத்திரம் கிளம்பிய போதும், “என்னவோ போண்ணே, சொன்னா கேட்க மாட்டேங்கறா, எம் மேல அம்புட்டு பிரியம்” என்று சொல்லி சிரித்து வைத்தான். பின்னே சுந்தரியை விட்டுக் கொடுக்கவும் முடியாது, ஊர் வாய்க்கு அவல் ஆகவும் முடியாது.
“ஷப்பா ஒன்றும் பிரச்சனையில்லை போல” என்று விற்பவர்கள் முகதில் அப்போது தான் சிரிப்பே வந்தது.
“இதுக்கா இப்படி, விடுங்க ப்ரோ, அவங்க உங்க பேர்லயும் இருக்கணும் நினைக்கறதும் நீங்க அவங்க பேர்ல மட்டும் இருக்கட்டும் நினைக்கறதும் இட் ஷோஸ் யுவர் லவ் டுவர்ட்ஸ் ஈச் அதர்” என்றான் நிலம் கொடுப்பவன்.
“இது லவ் இல்லையா பாசம் யா பாசம். ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பாசத்துல வழுக்கி விழறோம்” என்று மனதிற்குள் கண்ணன் கௌண்டர் கொடுத்துக் கொண்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தரிக்கு அவனின் கொதி நிலை புரிந்தது. கண்ணன் இதை இதோடு விட்டு விட்டால் பரவாயில்லை என்று தோன்றியது.  
ஆனால் கண்ணன் விடவில்லை. விடுவதாயுமில்லை. இதோ பத்து நாள் ஆகிற்று, சுந்தரியிடம் எதற்கும் பேசுவதில்லை. “உன் பேரில் மாற்றிக் கொள் முழுவதுமாய், அப்போது தான் உன்னிடம் பேசுவேன்” என்று சொல்ல,
சுந்தரி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை!
சுந்தரி நினைத்தது இதுதான், வேலை விட்டு, குடும்பம் விட்டு, தனக்காக இப்போது தங்களிடம் வந்திருக்கிறான், இன்னும் எதுவும் சரி வரவில்லை, அவளாய் சென்று பணம் கொடுப்பது அவளுக்கு பிடித்தமில்லை, அது இருவருக்குள்ளும் சரி வராது என்று தெரியும். நீ செலவிற்கு வைத்துக் கொள் என்றா கொடுப்பாள். அவன் என்ன வேலையாளா?
அவன் தான் எல்லா கணக்கு வழக்கும் பார்க்கிறான், ஆனால் ஒற்றை நாணயம் அதில் எடுத்து செலவு செய்வது கிடையாது.  
அதனால் தான் இந்த ஏற்பாடு! முழுவதும் அவன் பேரில் தான் வாங்க நினைத்தாள். கோபத்தில் அவளை விட்டு மீண்டும் சென்று விட்டால், அந்த பயத்தில் தான் இருவர் பேரிலும் வாங்கினாள். அதில் வருவதை அவன் அப்படியே எடுத்துக் கொள்ளட்டும் என்று.
ஏன் இந்த நிலத்தில் வருவதை கண்ணன் எடுத்தாலும், சுந்தரி ஒன்றும் சொல்லப் போவதில்லை! பணம் அவளுக்கு ஒரு விஷயமல்ல! சுந்தரிக்கு கண்ணனை விட பணம் முக்கியம்மல்ல!   
ஆனால் கண்ணன் எடுக்க மாட்டான். இவளும் முட்டிக் கொண்டாள். அதன் பொருட்டே கண்ணன் சுதந்திரமாய் பணத்தை கையாள அப்படி நினைத்தாள்.   
எப்படியாவது வாழ்க்கையை சரியாக்கி கொள்ள நினைத்தாள், ஆனால் அது மீண்டும் சிக்கல் தான் ஆகியது!
கண்ணனின் கோபம் அவன் பேரில் வாங்கியதை விட, அவனுக்கு பிடிக்காது, ஒத்துக் கொள்ள மாட்டான் என்று தெரிந்தும் ஸ்திரமாய் வாங்கியது தான்!
“இவள் வீட்டிற்கு வந்து விட்டால், நான் என்ன இவளின் அடிமையா? இவள் சொன்னால் செய்ய வேண்டுமா? எனக்கு இது வேண்டாம்! இவள் நிலத்தை முழுவதுமாக இவள் பெயரில் மாற்றினால் தான் மேற்கொண்டு இவளோடு பேச்சு!
“சொத்துக்காக என் அப்பா இவளை எனக்கு திருமணம் செய்து வைத்திருக்கலாம். ஆனால் நான் சொத்துக்காக செய்யவில்லை, அதற்காக போகவுமில்லை, இப்போது திரும்ப வரவுமில்லை”
“என் உணர்வுகளுக்கு ஒரு மதிப்புமில்லையா” – பத்து நாட்களாகியும் இன்னுமே அவன் மனம் அடங்கவே இல்லை – அடங்க மறுத்தது.
“என்ன இவள் விலை கொடுத்து என்னை வாங்குகிறாளா?, என்ன திமிர்?”  
சுந்தரியும் அவனிடம் பல முறை பேச முயற்சி செய்ய, கண்ணன் இடம் கொடுக்கவே இல்லை. பேசி புரியவைக்கலாம் என்றால் “நீ செஞ்சது சரியா தப்பா பேச்சேயில்லை, எனக்கு வேண்டாம். நீ அதை மாத்தினா மட்டும் தான் நான் உன்கிட்ட பேசுவேன்” என்று விட்டான் முடிவாக.
ஒரு புது கண்ணனை தான் பார்த்தாள். சுந்தரியையும் விட அதிகமாக பிடிவாதம் காண்பித்தான்.  

Advertisement