“அப்படின்னா கீர்த்தி? கீர்த்தி உண்மையிலே செத்துப் போய்ட்டாளா?”

     “அவ ஏன் சாகணும்? அவ உயிரோட தான் இருக்கா”

     “ரகு பிளீஸ் என்னை பைத்தியம் ஆக்காத. நானே நிம்மதி இல்லாம இருக்கேன். மேலும் மேலும் காயப் படுத்தாத பிளீஸ்”

     “ஏய் லூசு, நான் உண்மையா தான் டி சொல்றேன். என் வாழ்க்கைல இருந்து கீர்த்தி போய் மூணு வருஷம் ஆகுது. அவளுக்கும் எனக்கும் டைவர்ஸ் ஆகி மூணு வருஷம் ஆகுது. இப்ப நான் சிங்கிள் தான். வா கல்யாணம் பண்ணிக்கலாம்”

     “வாட்? டைவர்சா?”

     “உண்மை தான் டி”

     “பொய்”

     “டைவர்ஸ் காப்பி உனக்கு அனுப்பி வைக்கிறேன். அப்புறம் நம்புவியா?”

     “ஏன் டைவர்ஸ் பண்ணின? என்ன ஆச்சு? நீ சொல்றது உண்மையா பொய்யா?”

     “உண்மையா தான் சொல்றேன்”

     “ஏன் ரகு இப்படி பண்ணின? கீர்த்தி பாவம்”

     “அவ சம்மதத்தோட தான் டைவர்ஸ் ஆனது. அவ நல்லா தான் இருக்கா. ஆனா வேற எதுவும் கேக்காத. பழைய விஷயங்களை எல்லாம் விடு. இந்த மூணு வருஷமா உன் மேல இருக்குற காதலை மட்டும் தான் சுமந்துகிட்டு இருக்கேன். இது என் அம்மா மேல சத்தியம். இதுக்கு மேல நீ முடிவு பண்ணு”, என்று சொல்ல திகைத்துப் போனாள்.

     “ரகு…”

     “நீயும் என்னை லவ் பண்ணின தானே டி? அப்புறம் ஏன் யோசிக்கிற? உன் மனசுல நான் இருக்கேனா?”

     “உன்னை தவிர வேற யாருமே இல்லை ரகு”

     “அப்புறம் என்ன டி?”

     “கீர்த்தி என்னை தப்பா நினைச்சா?”

     “அவ என் வாழ்க்கைல முடிஞ்சு போன அத்தியாயம். வாழப் போறது நீயும் நானும் தான். வேற யாரைப் பத்தியும் யோசிக்காம உன் முடிவைச் சொல்லு”

     “இப்பவும் நீ என் கிட்ட விளையாடுறியோன்னு தோணுது ரகு. சரின்னு சொன்னப் பிறகு என்னை கேலி பண்ணி சிரிப்பியோன்னு பயமா இருக்கு. இன்னொரு விஷயம் பிரண்டுக்கு துரோகம் பண்ணுறோமோனு தோணுது. ஆனா நீ வேணும்னு ஆசையாவும் இருக்கு”, என்று மனதில் இருப்பதை அப்படிச் சொல்லி விட அவள் பேச்சில் சிலிர்த்தது அவனுக்கு.

     அவள் தந்தையை அடக்க தான் அவன் திருமண முடிவை எடுத்தான். ஆனாலும் அவளது பேச்சு அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த காதலை தட்டி எழுப்பியது. ஒரு நாளாவது அவள் தன்னிடம் காதலாக உரையாட மாட்டாளா என்று அவன் ஏங்கிய நாட்கள் பல. இன்று தன்னாலே அது நடந்தது.

     அவள் மீது, அவள் தந்தை மீது இருந்த கோபத்தை மீறி அவனுக்குள் இருந்த காதல் பீறீட்டுக் கிளம்ப “நம்ம வாழ்க்கைல என்னைக்கும் கீர்த்தி தடையா இருக்க மாட்டா. இனிமே நான் சாகுற வரைக்கும் நீ தான் என்னோட பொண்டாட்டியா இருப்ப. இதுக்கு நான் உத்திரவாதம் தரேன். உனக்கு இனி எந்த ஏமாற்றமும் வராது. எத்தனை தடைகள் வந்தாலும் காதல் சாகாதுன்னு சொல்றது நம்ம விசயத்துல உண்மையா ஆகிருச்சு. ஐ லவ் யு ஜானு. பிளீஸ் இனி உன்னை என்னால இழக்க முடியாது”, என்று உண்மையாகவே சொன்னான்.

     “எனக்கு பயமா இருக்கு ரகு. நான் சரின்னு சொன்ன அப்புறம். நீ என்னை நக்கல் பண்ணி சிரிக்க மாட்ட தானே?”, என்று பயத்துடன் கேட்டாள்.

     அவள் மன உணர்வுகள் புரிய “நீ எதுவுமே செய்ய வேண்டாம். உங்க வீட்ல எங்க வீட்ல நான் எல்லாம் பேசுறேன். நீ என் தாலியை வாங்க மட்டும் தயாரா இரு”, என்று சொல்ல நடக்கும் போது பாக்கலாம் என்று எண்ணி “ம்ம்”, என்றாள். இந்த முறை எதிர் பார்த்து ஏமாற அவள் தயாராக இல்லை.

     அவனும் போனை வைத்து விட்டு அவனுடைய டைவர்ஸ் காப்பியை அவளுக்கு அனுப்பி வைத்தான். அதைப் பார்த்தவளுக்கு எழுந்தது என்ன உணர்வு என்று தெரிய வில்லை. துக்கமா, தவிப்பா, சந்தோஷமா, நிம்மதியா, துரோகம் செய்கிறோமோ என்ற பயமா என்று புரியாத பல உணர்வுகள் அவளுக்குள் எழுந்தது.

     செய்வது சரியா தவறா என்ற குழப்பம் வந்து நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டாள். வேண்டும் என்றால் அவனே தன்னைத் தேடி வரட்டும் என்று முடிவு எடுத்த பிறகு கொஞ்சம் இயல்பானாள். ஆனாலும் கீர்த்தியை ஏன் டைவர்ஸ் பண்ணினான்? அதுக்கு என் மேலே உள்ள காதல் காரணமா இருக்குமோ என்று குற்ற உணர்ச்சியில் தவித்தாள். ஆதியைப் பற்றி உண்மை தெரிஞ்சு அவளை நம்பாமல் அவளைக் கை விட்டுட்டானா என்று குழம்பினாள். அந்த உண்மைக் காரணத்தை சொல்லி அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று அவள் நல்மனது சொன்னது.

     அதனால் மீண்டும் அவனை அழைத்து “நான் கீர்த்தி கிட்ட பேசட்டுமா ரகு? நீ திருப்பியும் அவ கூட சேந்து வாழுறது தான் சரியா இருக்கும். எதனால நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிங்க. அதுவும் ஆதி….”, என்று அவள் சொல்லும் போதே அவள் பேச்சில் எரிச்சல் அடைந்தவன் “நானும் கீர்த்தியும் சேர்ந்து வாழணும்னு நினைச்சிருந்தா இந்த மூணு வருசத்துல நடந்திருக்கும். எங்க உறவு முடிஞ்சு போன ஒண்ணு. அதை ஒட்ட வைக்க நினைக்காத. காலம் முழுக்க தனியா இருப்பேனே தவிர? உன்னைத் தவிர வேற யாரும் அந்த இடத்துக்கு இனி வர முடியாது”, என்றான்.

     “இல்லை ரகு… நான் பேசி…. உனக்கும் ஆதி பத்தி சொல்லணும்”, என்று அவள் சொல்ல வர அதை அவன் கேட்க தயாராக இல்லை.

     “ஓ உன் பிரண்டு வாழ்க்கைக்காக யோசிக்கிறியா? இல்லை கல்யாணம் முடிஞ்சு பையன் இருக்குறவனை எப்படி ரெண்டாவதா கல்யாணம் பண்ணன்னு யோசிக்கிறியா?”, என்று குதர்க்கமாக கேட்டான் அவன். அவனுக்கு உண்மையிலே அவள் வேண்டும். அவளுடைய தந்தையை அடக்குவதற்காக மட்டும் அல்ல. அவனுடைய காதலை அடையவும் அவள் வேண்டும். அதனால் அவள் மறுப்பு அவனுக்கு எரிச்சலையே கொடுத்தது.

     “ரகு”

     “என்ன ரகு? உன் மனசுல என்ன இருக்கோ அதை தைரியமா இப்பவே சொல்லிடு ஜானு. காதலுக்காக என்னை சகிச்சிக்கிட்டு வாழணும்னு அவசியம் இல்லை. நான் கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவன் தான். அதை மாத்த முடியாது. வேற எதுவும் நான் இப்ப பேசுறதா இல்லை. என் பழைய வாழ்க்கையை ஏத்துக்கிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா சொல்லு. இல்லைன்னா நாம தனித் தனியா நம்ம வாழ்க்கையை பாத்துக்கலாம்”

     “எனக்கு அப்படி எல்லாம் தோணலை ரகு”

     “எப்படி எல்லாம்”

     “நீ கேட்டது மாதிரி”

     “நான் என்ன கேட்டேன்?”

     “ப்ச்… என்ன கிண்டலா? உனக்கு புரியலையா?”

     “எனக்கு புரியுது. ஆனா நீ என்ன புரிஞ்சு வச்சிக்கிறேன்னு தான் தெரியலை. அதான் கேக்குறேன்”

     “எனக்கு நீ கீர்த்தியைக் கல்யாணம் பண்ணினதோ அவ கூட சேந்து வாழ்ந்து ஒரு குழந்தைக்கு அப்பா ஆனதோ பெருசா தெரியலை ரகு. எனக்கு நீ கிடைச்சதே பெரிய பொக்கிசம்னு தான் தோணுது”

     “உண்மையாவா சொல்ற? நான் இன்னொருத்தி கூட வாழ்ந்தது உனக்கு பிரச்சனை இல்லையா?”

     “அது முடிஞ்சு போனது தானே? அதை நான் நினைக்க கூடாதுன்னு நினைக்கிறேன். உன் பழைய வாழ்க்கை எனக்குள்ள சங்கடத்தையோ வலியையோ கொடுக்கலை. ஆனா….”

     “ஆனா என்ன?”

     “இல்லை, நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு நீ எதுவும் பேசக் கூடாது”

     “என்ன பேசக் கூடாது?”

     “உன் பழைய வாழ்க்கையைப் பத்தி”, என்று சொல்ல அவனுக்கு சிரிப்பு வந்தது.

     “பழைய வாழ்க்கைன்னா… எங்க கல்யாணம் எப்படி முடிஞ்சது? எங்க ஹனிமூன் போனோம்? பர்ஸ்ட் நைட் எப்படி நடந்தது? இதையெல்லாம் சொல்லக் கூடாதுன்னு சொல்லுறியா?”, என்றான் நக்கலாக.

     “ஆமா ரகு, அது எல்லாம் உண்மையா நடந்தவை தான். ஆனா அதை உன் வாயால கேட்டா எனக்கு ரொம்ப வலிக்கும். நானும் சில விஷயங்களை இனி பேசவே மாட்டேன்”

     “அந்த அளவுக்கு என்னை லவ் பண்ணுனியா டி? எப்படி டி? எப்ப இருந்து?”

     “அது…”

     “அதை கல்யாணத்துக்கு அப்புறம் கேக்குறேன். இப்ப உனக்கு நம்ம கல்யாணத்துல சம்மதம் தானே?”

     “சம்மதம் தான். ஆனால் நமக்குள்ள கீர்த்தி வந்துருவாளோன்னு பயமா இருக்கு டா ரகு. அவ கிட்ட பேசி தெளிவாகிட்டா கொஞ்சம் சரியா இருக்கும். மனசுக்குள்ள அவளுக்கு துரோகம் பண்ணுறோமோன்னு தோணுது. நாளைக்கு வந்து என் புருஷனை என் கிட்ட இருந்து பிரிச்சிட்டன்னு கேப்பாளோன்னு பயமா இருக்கு. அவ கிட்ட பேசட்டா?”

     “என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ஜானு? நாலு வருசத்துக்கு முன்னாடி நீ என்னை, என் காதலை புரிஞ்சிக்கலை. இப்பவாது என் பேச்சைக் கேளு டி. என் மேல நம்பிக்கை இருந்தா இனி நீ கீர்த்தி பத்தி எதுவும் பேசக் கூடாது, யோசிக்க கூடாது. இனி அவ நம்ம வாழ்க்கைல இல்லை. நீ நான் ஆதி இது மட்டும் தான் நம்ம குடும்பம். உனக்கு புரியுதா?”

     “புரியுது”

     “சந்தோஷம். சரி நீ வேலையைப் பாரு. நான் எல்லாம் பாத்துக்குறேன்”, என்று அவன் சொல்ல சரி என்று சொல்லி போனை வைத்தாள்.

காதல் தொடரும்….