ரகுவைப் பற்றி எண்ணிக் கொண்டு தான் ஜானகியும் இருந்தாள். அவன் அழைப்பு வந்ததும் “அதான் ரொம்ப அசிங்கப் படுத்திட்டானே? இப்ப எதுக்கு கூப்பிடுறான்? மேலும் மேலும் காயப் படுத்தவா? இப்ப இவன் போனை எடுக்கவா வேண்டாமா?”, என்று பெரிய போராட்டம் மனதுக்குள் எழுந்தது.
பின் மனது கேட்காமல் அது கட் ஆகும் முன் அவன் போனை எடுத்தவள் “சொல்லு ரகு”, என்றாள்.
“ஜானு, நான் ஒரு விஷயம் கேட்பேன். ஆதி மேல பிராமிசா நீ உண்மையைச் சொல்லணும்”
“என்ன பில்டப் எல்லாம் பெருசா இருக்கு? கேளு ரகு? நான் பெருசா பொய் எல்லாம் சொல்றது இல்லை”
“டு யு லவ் மீ?”, என்று எதிர் பார்ப்புடன் கேட்டான். அதைக் கேட்டு அவளுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. வாயைத் திறந்து அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடிய வில்லை. தன் காதல் அவனுக்கு தெரிந்தது இந்த நிமிடம் அவளுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது. அவள் பதில் சொல்ல முடியாமல் திகைத்து அமர்ந்திருக்க அவள் பதில் சொல்ல தயங்கிய நொடி அவன் இதயத் துடிப்பு பலமாக எகிறியது.
“ஏய் அறிவு கெட்டவளே சொல்லு டி? என்னை லவ் பண்ணி தொலைச்சியா நீ? தயவு செஞ்சு உண்மையைச் சொல்லு டி. இப்ப லவ் பண்ணுறியா? இல்லை காலேஜ் படிக்கும் போதே என்னை லவ் பண்ணுனியா? சொல்லு ஜானு. சொல்லித் தொலை டி. எனக்கு இங்க பி.பி ரைஸ் ஆகுது. வாயை மூடிக் என்னைக் கொல்லாத. நீ என்னை லவ் பண்ணுனியா டி?”
“ரகு….”
“ரகு தான். தயவு செஞ்சு சொல்லு ஜானு”
“அது வந்து….”
“நேர்ல வந்தேன் அடிச்சு கொன்னுறுவேன் டி. மனுசன பாடு படுத்தாத. உண்மையைச் சொல்லு. என் காதலுக்கு உயிர் இருந்ததா உன் கிட்ட? சொல்லு என்னை விரும்புனியா ஜானு? பிளீஸ் சொல்லு மிர்ச்சி”
“ரகு… உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்?”, என்று அவள் பதில் கேள்வி கேட்க “அப்படின்னா நான் கேட்டது உண்மை தானா?”, என்று கேட்டவன் அதிர்ச்சி தாங்க முடியாமல் நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.
“ம்ம்”, என்று அவள் முணுமுணுக்க “சனியனே, எப்ப வந்து ம்ம் கொட்டுற? எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சு? சே, என் கண்ணுல மாட்டுன உன்னைக் கொன்னுறுவேன். அந்த அளவுக்கு வெறியா இருக்கு. முழுப் பூசணிக்காயை சோத்துல மறைச்சிருக்குற? நீயெல்லாம் நல்லா இருப்பியா டி?”, என்று அவன் திட்டிக் கொண்டே செல்ல அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“நான் என்ன நல்லவா இருக்கேன்? நீ எனக்கு எப்ப இல்லையோ? அப்ப இருந்து அழுதுட்டு தான் இருக்கேன்”, என்று அவள் அழுத படி காதலைச் சொல்ல “கடவுளே? மனுசியா நீ? ஒரு உண்மையை மறைச்சு எத்தனை பேர் வாழ்க்கையை நீ சிக்கல் ஆக்கிருக்க? சிக்கல் கூட ஆக்கலை. நீ பிளான் பண்ணி தான் எல்லாம் பண்ணிருக்க? சி நீயெல்லாம் பொம்பளையா? இதுக்கு உன் அப்பனும் கூட்டு சே”, என்று பொரிந்து தள்ளினான்.
“ஏய் இதுல எதுக்கு டா என் அப்பாவை இழுக்குற? அவர ஏன் திட்டுற?”, என்று கடுப்புடன் கேட்டாள்.
“எனக்கு இருக்குற வெறிக்கு உன்னையும் உன் அப்பனையும் கொன்னுறனும் போல இருக்கு. பிளான் பண்ணி என் குடியைக் கெடுத்துட்டீங்களே பாவிகளா”
“ஏய் என்ன ரொம்ப பேசுற? உன்னை லவ் பண்ணி என் வாழ்க்கை தான் போச்சு. உன்னை நினைச்சிட்டு நான் யாரையும் கல்யாணம் பண்ண முடியாம கன்னியா வீட்டுக்கு பாரமா என் அண்ணனுக்கு தடைகல்லா உக்காந்துட்டு இருக்கேன். உனக்கு என்ன? நீ நல்ல பொண்டாட்டி பிள்ளையோட திவ்வியமா தானே இருக்க?’’, என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.
“ஆமா நான் நல்லா இருக்கேன், நீ கண்ட. சரி உன் அப்பா கொஞ்ச நாட்கள் முன்னாடி எங்க இருந்தார்?”
“அது… அது….”
“என்ன எங்க அப்பா ஜெயில்ல இருந்தார்ன்னு சொல்ல வாய் வரலையா ஜானகி”
“ரகு… உனக்கு எப்படி?”
“பிராடு குடும்பம்?”
“ஏய் நாங்க ஒண்ணும் யாரையும் ஏமாத்தலை. சும்மா என் குடும்பத்தையும் என் அப்பாவையும் சொன்ன மரியாதை கெட்டுரும்”
“ஆமா உன் மரியாதை தான் எனக்கு இப்ப தேவை பாரு? எனக்கு அதிர்ச்சியா இருக்கு ஜானு? நீயா இப்படின்னு? நீ கோபப் பட்டாலும் திமிரா நடந்துக்கிட்டாலும் ஈவு இரக்கம் உள்ள தேவதைன்னு நினைச்சேன் டி. ஆனா நீ விஷம். உடம்பு முழுக்க விஷம். காதலுக்கும் உண்மையா இல்லை. நட்புக்கும் உண்மையா இல்லை. உன்னைப் போய் காதலிச்சேன்னு நினைக்கும் போது என்னையே அழிச்சிக்கலாம்னு இருக்கு”
“நான் என்ன செஞ்சேன்?”
“சி பேசாத. இனி நான் உன் குரலைக் கூட கேக்க விரும்பலை. வை போனை”, என்று சொல்லி அவன் கட் செய்ய அதிர்ந்து போனாள் ஜானகி.
“காதலை மறைச்சது குத்தமா? அதுக்கு எதுக்கு இப்படி திட்டுறான்? அப்பா ஜெயிலுக்கு போனது இவனுக்கு எப்படி தெரிஞ்சது? ஆனா அப்பா ஜெயிலுக்கு போக காரணம் நானாக இருந்தாலும் அந்த பிரச்சனையில் போய் விழுந்தது ரகுவுக்காக தானே? இவன் எல்லாம் பண்ணிட்டு கடைசில எங்களைத் திட்டுறான்”, என்று குழப்பாக இருந்தது. அவன் திட்டியதில் அவன் இனி தனக்கு இல்லை என்பதில் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். பின் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். ஆனால் ரகுவால் அது முடிய வில்லை.
ஜானுவா இப்படி? ஜானுவா இப்படி என்று மருகிப் போனான் ரகு. அவனால் அதில் இருந்து வெளியே வர முடிய வில்லை. ஜானு தன்னை விரும்பி இருக்கிறாள். அதே போல கீர்த்தி சுனிலை விரும்பி இருக்கிறாள். ஆனால் கீர்த்தி ரகுவைத் தான் விரும்புகிறாள் என்று எண்ணி அப்பாவும் மகளும் பிளான் செய்திருக்கிறார்கள். இதில் ரகுவுடைய அப்பா திருமண பேச்சு எடுத்ததால் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அதான் சுனிலைக் கொன்று கீர்த்தியை பழி வாங்கி இருக்கிறார்கள். இப்போது கீர்த்தியையும் கொல்லத் துடிக்கிறார்கள். இதுக்கு தான் டீச்சர் வேசமா என்று அவனே யோசித்து அவளைப் பற்றி தவறாக எண்ணிக் கொண்டான். ஆனால் உண்மை தெரிந்தால்? மோகன் ஜெயிலுக்கு போனது மகளுக்காக என்றாலும் அதற்கு முழு முதல் காரணம் ரகு என்று தெரிந்தால் என்ன சொல்வானோ?
பெண் என்றால் தாய், சாமி, தேவதை, தோழி என பல பரிமாணம் எடுப்பாள். பெண்களை வணங்கும் இதே நாட்டில் பெண் உருவில் நடமாடும் சில பேய்களும் இருக்கிறது என்று அவன் அறிந்தால்….
ரகு ஜானுவிடம் பேசி ஒரு வாரம் ஆகி இருந்தது. எப்போதும் போல ஆதி பள்ளிக்கு வந்து கொண்டிருந்தான். ஜானகி பள்ளி வேலையில் இருந்து நின்று விட்டாள். அது வீட்டினருக்கு சந்தோஷம் தான்.
ரகுவும் நவீனும் சேர்ந்து அவளை அவர்கள் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலைக்கு சேர்க்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஜானகி வீட்டில் சாதாரணமாக உலாத்திக் கொண்டிருந்தாலும் அவள் மனது பெரிதாக காயப் பட்டிருந்தது. அதை தவிர வேறு எந்த விஷயமும் நடக்க வில்லை.
அவளை ரகுவின் நினைவில் இருந்து வெளி வர வைக்க குடும்பத்தினரும் நவீனும் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். மோகன் வேறு வேலை விஷயமாக சூரத் சென்றிருக்க ஜானு எப்போதும் போல வெளியே சிரித்து உள்ளுக்குள் மறுகி நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.
சூரத் செல்கிறேன் என்று சொன்ன மோகன் சென்றது பேங்க்ளூருக்கு தான். யாருக்கும் அது தெரியாது. ஏற்கனவே கீர்த்தியின் விவரம் தெரியும் என்பதால் அங்கே சென்று விட்டார். இரண்டு நாட்கள் கீர்த்தியை தீவிரமாக கண்காணித்தார். முதலில் அந்த கீர்த்தி எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று தான் எண்ணினார். ஆனால் மகள் ரகு நினைப்பிலே இருக்க அதுவும் ரகுவும் கீர்த்தியும் பிரிந்திருக்கும் நிலையில் ஏன் தன் மகளை ரகுவுடன் வாழ வைக்க கூடாது என்று தான் தோன்றியது அவருக்கு.
அதனால் அவளைக் கொல்ல வேண்டும் என்ற முடிவில் தான் வந்திருந்தார். தன்னுடைய மகள் வாழ்வை இழந்து காதலை இழந்து நடைப்பிணம் போல வாழ்ந்து கொண்டிருக்க கீர்த்தியோ ஷாப்பிங் சினிமா என்று வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டார். ரகுவை எண்ணி ஐயோ பாவம் என்று தான் தோன்றியது மோகனுக்கு.