“சார் எதுக்கு கீர்த்தி மேல இவ்வளவு வன்மம்? அவ பாவம். இனி ஒரு தடவை நீங்க அவளை பேசுனீங்கன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன். உங்க பொண்ணு என் பையனுக்காக தான் என்னைக் கட்டிக்க நினைச்சா. என் பையனை நான் வளத்துக்குறேன். நீங்க கிளம்பலாம்”, என்றவனை அட பைத்தியமே என்பது போல பார்த்தவர் “உங்க மகனுக்காக தான் என் மக உங்களை கல்யாணம் பண்ண நினைச்சான்னு சொல்றீங்களா தம்பி?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டார்.
“ஆமா இதுல என்ன சந்தேகம்?”
“உங்க நினைப்பு அப்படியே இருக்கட்டும். நான் அதை மாத்த விரும்பலை. உங்க மகனும் உங்க கிட்டயே இருக்கட்டும். ஏன்னா இன்னும் கொஞ்ச நாள்ல அந்த கீர்த்தி உயிரோட இருக்க மாட்டா. அவளைக் கொன்னுட்டு தான் எனக்கு அடுத்த வேலை. அவ செத்துட்டான்னு ஒரு ரெண்டு நாள் நிம்மதியா இருந்தேன். ஆனா அவ என்னைக்கு சாகுறாளோ அன்னைக்கு தான் எனக்கு உண்மையிலே நிம்மதி. அவ சாகணும். அதுக்கப்புறம் நீங்களும் என் பொண்ணும் சந்தோஷமா வாழணும்”
“என்னது? காமெடி பண்ணுறீங்களா? கொலை கிலைன்னு”
“ஏற்கனவே கொலை செஞ்சிட்டு நாலு வருஷம் ஜெயில்ல இருந்தவனுக்கு அடுத்த கொலை செய்யுறது பெரிய விஷயமா?”, என்று அவர் நக்கலாக கேட்க அவன் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தான்.
“நீங்க ஜெயில்ல இருந்தீங்களா?”, என்று அவன் அதிர்வுடன் கேட்க “ஜெயில்ல தான் இருந்தேன். வேணும்னா இனியும் போவேன். அப்புறம் நான் யாரைக் கொன்னேன்னு தெரியுமா தம்பி?”, என்று நக்கலாக கேட்டார்.
அவர் சொன்ன செய்திகளிலே தலை சுற்றிப் போய் இருந்தவன் “யா… யாரை?”, என்று நடுங்கிப் போய்க் கேட்க “அந்த கீர்த்தியோட காதலனை…. புரியலையா? ஆதியோட அப்பாவைக் கொன்னதே நான் தான்”, என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.
“என்னது சுனிலைக் கொன்னது நீங்களா?”, என்று கேட்டவனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.
“நானே தான்”, என்று அவர் சாதாரணமாக சொல்ல “யோவ் மனுசனாயா நீ? வாழ வேண்டிய ஒரு சின்ன பையனை துடிக்க துடிக்க அடிச்சுக் கொன்னு கீர்த்தியோட வாழ்க்கையை நாசமாக்கி அது தெரியாம என்னை இதுல இழுத்து விட்டு என் வாழ்க்கையையும் சேத்து நாசமாக்கி ஒரு சின்ன குழந்தைக்கு அப்பா இல்லாம பண்ணிட்டியே? நீயும் ரெண்டு பிள்ளை பெத்தவன் தானே?”, என்று மரியாதையைக் கை விட்டு கத்தினான்.
அதுவும் அவரின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க வேண்டும் போல தான் இருந்தது. ஆனால் அவரின் வயதும் ஜானுவின் அப்பா என்ற பதவியும் அவனை தடுத்து நிறுத்தியது.
“அப்பா அப்படிங்குற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா அந்த சுனிலுக்கும் அந்த கீர்த்திக்கும்? எனக்கு தெரியும்யா அப்பா அப்படிங்குற வார்த்தையோட அர்த்தம். என் செல்லம் என் தேவதை என் மக எனக்கு அதை உணர்த்திருக்கா. ஆனா அந்த கீர்த்தியும் சுனிலும்… சி அவங்க பேரைச் சொல்லவே எனக்கு அருவருப்பா இருக்கு”, என்று அவர் வெறுப்புடன் சொல்ல அவன் பார்வையில் அவர் கீழிறங்கிப் போனார். அவர் மேல் அவனுக்கு இருந்த மரியாதையே போய் விட்டது.
“எனக்கு இப்ப உன்னைப் பாக்க தான் அருவருப்பா இருக்கு. ஜானுவோட அப்பான்னு தான் உன்னை சும்மா விடுறேன். நீ என்ன சொன்ன? கீர்த்தியை கொல்லுவியா? நீ எப்படி கீர்த்தியை கொல்லுறேன்னு நானும் பாக்குறேன். இனி உன் முகத்தைக் கூட நான் பாக்க விரும்பலை. போ இங்க இருந்து”, என்று எரிச்சலுடன் கத்தினான்.
“தம்பி அவங்களைப் பத்தி உங்களுக்கு தெரியாது. அதுவும் அந்த கீர்த்தி விஷம்”
“பேசாம போயிரு சொல்லிட்டேன். போயும் போயும் உன் மகளையா லவ் பண்ணினேன்னு இருக்கு. போ இங்க இருந்து”, என்று அவன் மீண்டும் கத்த அவனைத் தீர்க்கமாக பார்த்தவர் வேதனையான சிரிப்பை உதிர்த்து விட்டு கிளம்பி விட்டார். அவர் சென்றதும் தலையை பிடித்த படி அங்கேயே அமர்ந்து விட்டான் ரகு.
அவனுக்கு அவர் பேசியதை எல்லாம் கேட்டு தலை சுற்றியது போல இருந்தது. அவர் மேல் அவ்வளவு வெறுப்பும் கோபமும் வந்தாலும் ஆதி தன் மகன் இல்லை என்ற உண்மை அவருக்கு எப்படி தெரியும் என்று குழம்பினான். அவனுக்கும் கீர்த்திக்கும் மட்டும் தெரிந்த ரகசியம். அவனது தாய்க்கு கூட இந்த விஷயம் தெரியாது. இந்த விஷயம் தெரிந்த மற்றொரு ஆள் சுனில். அவன் இப்போது உயிரோடு இல்லை. அப்படி இருக்க இவ்வளவு பெரிய விஷயம் இவருக்கு எப்படி தெரியும்?
அது மட்டுமில்லாமல் சுனிலை அவர் தான் கொன்றதாக சொன்னது அவனுக்கு திகைப்பு தான். அவனுக்கு தெரிந்த வரையில் சுனில் குடும்பத்தினர் கொடுத்த கம்ப்லைண்ட் படி அவனைக் கொன்னவனை அரஸ்ட் செய்து ஜெயிலில் அடைத்து விட்டார்கள் என்று மட்டுமே தெரியும். சுனில் குடும்பத்தினருக்கு கீர்த்தியைப் பற்றி தெரியாது என்பதால் ரகுவும் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான்.
அது மட்டுமில்லாமல் அப்போது கீர்த்தி பற்றி அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை பற்றி தன்னுடைய குடும்பத்தைப் பற்றி என பல கவலை அவனுக்கு இருந்தது. அவனது தந்தை வேறு இறந்ததால் அவனால் வேறு எதுவும் யோசிக்க முடியவில்லை. அதனால் தான் அதை கண்டு கொள்ளாமல் விட்டான். ஆனாலும் சுனிலை கொன்னவனுக்கு தண்டனை கிடைத்தது தெரிந்து சந்தோஷம் தான் பட்டான். ஆனால் அது மோகன் என்று எதிர் பார்க்கவே இல்லை.
கடைசியில் அவன் அடைந்த அனைத்து துயருக்கும் காரணம் அவன் உயிராக விரும்பிய ஜானுவின் அப்பாவாக இருக்கும் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லை.
அந்த சுனில் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் கீர்த்தி அவனுடன் சந்தோஷமாக வாழ்ந்திருப்பாள். இவனுக்கும் ஆதியை வளர்க்கும் பொறுப்பு வந்திருக்காது. அந்த கீர்த்தி அவன் வாழ்க்கையில் வந்ததே ஒரு விபத்து என்றால் அதற்கு பிறகும் அவன் பட்ட இன்னல்கள் பல.
எப்படி இவரால் இவ்வளவு பெரிய வேலையை செய்ய முடிந்தது. வாழ வேண்டிய ஒரு சின்னப் பையனைக் கொல்லும் அளவுக்கு இவரால் எப்படி போக முடிந்தது. முதலில் ஏன் அப்படிச் செய்தார்? கீர்த்தி பற்றிய உண்மை தங்களின் வாழ்க்கை பற்றி எல்லாம் இவருக்கு எப்படி தெரியும்? கொலை செஞ்சவனுக்கு இந்த விஷயம் எல்லாம் கலெக்ட் பண்ணுறது கஷ்டமா என்ன? ஆனா இவர் ஏன் செஞ்சார்? அவரோட பொண்ணுக்காகவா? அப்படின்னா இதுக்கெல்லாம் காரணம் ஜானுவா? என்று எண்ணியவன் புருவம் நெரித்து அனைத்தையும் தெளிவாக யோசிக்க ஆரம்பித்தான்.
“சொல்லுவாளே எங்க எப்பா எனக்காக என்ன வேணும்னாலும் செய்வார். உயிரையே வேணும்னாலும் கொடுப்பார்ன்னு. ஆனா ஒரு உயிரையே எடுத்துருக்கார். ஒரு குடும்பத்தையே சிதைச்சிருக்கார். மகளுக்காக ஏன் அப்படிச் செய்யனும்? இத்தனைக்கும் கீர்த்தியும் ஜானுவும் அவ்வளவு குளோஸ் வேற? அப்படின்னா இதுக்கு இடைல நான் இருக்குறதுனாலயா? ஆனா ஏன்? என்னை தான் ஜானுவுக்கு பிடிக்காதே? வெயிட் வெயிட் இவர் என்ன சொன்னார்?”, என்று தீவிரமாக அவர் பேசியதை யோசித்தான்.
“உங்க மகனுக்காக தான் என் மக உங்களை கல்யாணம் பண்ண நினைச்சான்னு சொல்றீங்களா தம்பி?”, என்று அவர் ஆழ்ந்த குரலில் கேட்டது நினைவில் வந்தது ரகுவுக்கு.
“அவர் சொல்லிட்டு ஒரு மாதிரி பாத்தார். அப்படின்னா வேற ஏதோ காரணம் இருக்கு. முதல்ல இவர் சொல்ற விஷயம் ஜானுவுக்கு தெரியுமா? இல்லை தெரியாது. தெரிஞ்சிருந்தா அவ என் கிட்ட அவ்வளவு கேள்வி கேட்டுருக்க மாட்டா. இல்லைன்னா அவளும் அவளோட அப்பாவும் கூட்டா? ஆனா ஏன் அப்பாவும் பொண்ணும் என்னை டார்கெட் பண்ணுறாங்க?”, என்று எண்ணியவன் ஜானுவைப் பற்றி யோசித்தான்.
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ரகு?”, என்று கேட்ட ஜானுவின் முகம் நினைவில் வந்தது. அப்போது புரியாத அவள் முகத்தில் இருந்த காதல் இப்போது அவனுக்கு புரிந்தது. புரிந்த உண்மையில் விதிர்த்து போனான் என்று தான் சொல்ல வேண்டும்.
“அடப்பாவி, நீ என்னை லவ் பண்ணுனியா டி? உன் மனசுல நான் இருந்தேனா டி?”, என்று வாய் விட்டே அதிர்ச்சியாக கேட்டான். இப்போது அவளது பேச்சு அவள் பார்வை எல்லாம் அவனுக்கு அது தான் உண்மை என்று கட்டியம் கூறியது.
இதை அறிந்து கொள்ளாவிடில் அவனால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது என்பது புரிந்தது. உடனே அவளை அழைத்து விட்டான்.