உண்மையிலே கீர்த்தியிடம் அவன் ஜானகியைப் பார்த்ததைப் பற்றிச் சொன்னான். அப்படியா என்று கேட்ட கீர்த்தி வேறு எதுவும் சொல்ல வில்லை. அவளிடம் பேச வேண்டும் என்றும் பிரியப் படவில்லை. அது அவனுக்கே குழப்பம் தான்.

அதைக் கேட்டு ஜானகியும் அதை பெரிதாக எடுக்க வில்லை. “அதை விடு ரகு. எனக்கு ஒரு உதவி செய்வியா? ஒரே ஒரு உதவி தான்”, என்று கேட்டாள் ஜானகி.

“சொல்லு மிர்ச்சி”

“இல்லை, என்னை ஜானுன்னே கூப்பிடு. அது வேண்டாம்”

“சரி ஜானு சொல்லு. என்ன பண்ணனும்?”

“நானும் அப்பாவும் உன் கிட்ட கல்யாணம் பத்தி பேசினது கீர்த்திக்கு தெரிய வேண்டாம். தயவு செஞ்சு அவ கிட்ட சொல்லிறாத”, என்று சொல்லும் போதே அவள் முகம் அவமானத்தில் குன்றிப் போனது.

“ஏன் சொல்லக் கூடாது? நான் அவ கிட்ட இதைப் பத்தி சொல்லி சொல்லி சிரிக்கணும்னு நினைச்சேன்”

“என் பொழப்பு உனக்கு சிரிப்பா தான் டா இருக்கும். தயவு செஞ்சு சொல்லாத. அவ்வளவு தான்”

“ஓகே சொல்லலை. அதே மாதிரி நீ அவளை எப்பவாது பாத்தா நீயும் நான் உன் கிட்ட விளையாட்டுக்கு கல்யாணம் பத்தி பேசினதைச் சொல்லாத. தெரிஞ்சா என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவா. அவளுக்கு என் மேல அவ்வளவு பாசம்”

அதற்கு மேல் அவன் பேச்சைக் கேட்க முடியாமல் “சரி நான் கிளம்புறேன்”, என்று சொன்னவள் அவனையே கண்களால் படம் பிடித்தாள். ஒரு முறை அவள் கண்கள் அவனை தலை முதல் கால் வரை அளவிட்டது. பின் அவன் முகம் பார்த்து “ஆதி ஸ்கூலை மாத்த வேண்டாம். நான் இனி அங்க வேலைக்கு போக மாட்டேன். உன் கண்ணு முன்னாடி வரவும் மாட்டேன்”, என்று சொல்லி விட்டு திரும்பி நடந்து விட்டாள். போகும் அவளையே இமைக்காமல் பார்த்தான் ரகு. அவன் முகம் வேதனையை சுமந்திருந்தது. அதை அவள் கவனிக்க வில்லை.

இது வரை தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளாமல் அவமானப் படுத்தி விட்டாள் என்ற கோபம் தான் ரகுவுக்கு அவள் மேல் உண்டு. ஆனால் அவன் பட்ட கஷ்டங்கள் வேதனைகள் அனைத்துக்கும் காரணகர்த்தாவே ஜானகி தான் என்று தெரிந்தால் அவன் கோபம் எப்படி அதிகரிக்கும் என்பதை சூழ்நிலை தான் சொல்ல வேண்டும்.

வீட்டுக்கு வந்த மகளின் முகம் அளவு கடந்த வேதனையை சுமந்திருந்தாலும் அதில் சிறிது தெளிவு இருப்பதையும் கண்டார் மோகன்.

“என்ன பாப்பா ஆச்சு?”, என்று அவர் கேட்க தேவகி மற்றும் விஷ்ணு இருவரும் அங்கு தான் இருந்தார்கள்.

“அசிங்கமா போச்சு பா”

“என்ன நடந்தது? அந்த தம்பி உன் கிட்ட என்ன சொல்லுச்சு?”, என்று ஆராய்ச்சியாக கேட்டார்.

“அவன் எனக்கு பெரிய பல்ப்பா கொடுத்துட்டான் பா”

“என்ன மா சொல்ற?”

“கீர்த்தி இன்னும் உயிரோட தான் பா இருக்கா. அவன் சும்மா என் கிட்ட விளையாடிருக்கான். நான் தான் அவசரப் பட்டுட்டேன்”, என்று ஜானகி சொல்ல விஷ்ணு மற்றும் தேவகி இருவரும் அதிர்ச்சியாக என்ன என்று கேட்க மோகன் எதுவும் கேட்க வில்லை. ஆனால் அவர் கண்கள் பழி வாங்கும் வெறியுடன் பளபளத்தது.

“ஆமா பா ஆதி அம்மா இல்லைன்னு சொன்னதும் நான் தான் அவ இறந்துட்டான்னு நினைச்சேன். ஆனா அவ இருக்கா. இப்ப ரெண்டாவது குழந்தைக்கு மாசமா இருக்கா போல? ஊருக்கு போயிருக்காளாம். இது தெரியாம நான் ஏதேதோ பேசி… எனக்கு அசிங்கமா போச்சு. இன்னொருத்தி புருஷன் கிட்ட அப்படிக் கேட்டது அருவருப்பா இருக்கு பா. பெரிய தப்பு பண்ணிட்டேன். சாரி சொல்லிட்டு வந்துட்டேன்”

“அப்படின்னா வேற மாப்பிள்ளை பாக்கலாமா?”, என்று கேட்டான் விஷ்ணு.

“கொஞ்ச நாள் ஆகட்டும் அண்ணா. பிளீஸ்”, என்று சொல்ல அவனும் வேறு எதுவும் சொல்ல வில்லை.

“சரி எல்லாரும் சாப்பிட வாங்க”, என்று அழைத்தாள் தேவகி. “நீங்க சாப்பிடுங்க. எனக்கு ஒரு முக்கியமான ஆளைப் பாக்கணும்”, என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் மோகன். அவர் நேராக சென்றது மீண்டும் ரகுவைப் பார்க்க தான். அப்போது தான் நிர்மலா கொடுத்த மதிய உணவை திறந்தான் ரகு. ஆனால் உண்ணத் தான் மனதில்லை.

ஜானகியின் கண்ணீரும் வேதனை சுமந்த முகமே அவனுக்கு நினைவில் வந்தது. அதுவே அவனை உண்ண விடாமல் ஆக்க உணவை மூடி வைத்து விட்டு அமர்ந்து விட்டான்.

அப்போது மோகன் வந்திருப்பதாக தகவல் சொல்ல “மறுபடியும் இவருக்கு என்ன?”, என்று புருவம் உயர்த்தினாலும் “ஜானுவுக்கு என்ன ஆச்சு? ஏதாவது பண்ணிக்கிட்டாளோ?”, என்று பதறிய படி வெளியே சென்றான்.

“வாங்க சார், மறுபடியும் என்ன? ஜானகி எப்படி இருக்கா? அவளுக்கு ஒண்ணும் இல்லையே?”, என்று கேட்க அவன் பதட்டத்தை வியப்பாக பார்த்தார்.

“அவ நல்லா தான் இருக்கா”, என்று அவர் சொல்ல நிம்மதியாக மூச்சு விட்ட ரகு “அப்புறம் ஏன் என்னைப் பாக்க வந்தீங்க? நான் நீங்க சொன்ன மாதிரி தானே ஜானு கிட்ட பேசினேன். அப்புறம் என்ன?”, என்று கேட்டான்.

“கீர்த்தி உயிரோட தான் இருக்காளா?”, என்று கூர்மையாக கேட்டார் மோகன்.

“ஆமா சார், பேங்க்லூர்ல இருக்குற **** கம்பெனில வேலை பாக்குறா”

“அப்புறம் ஏன் என் பொண்ணு கிட்ட கல்யாணம் பத்தி பேசுனீங்க?”

“அது…. அது வந்து… கீர்த்தி இப்ப என் கூட இல்லை. பிரிஞ்சிட்டோம். அதான் ஜானகி கிட்ட கல்யாணம் பத்தி பேசினேன். ஆசைப் பட்டது தப்பு தான். இனி இப்படி நடக்காது சார். நீங்க கவலைப்படாம ஜானகிக்கு வேற நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணி வைங்க”, என்று சொல்ல அவர் கண்கள் சந்தோசத்தில் பளபளத்தது.

அவரை அவன் குழப்பமாக பார்க்க “என்னது நீங்க கீர்த்தியை பிரிஞ்சிட்டீங்களா? ஏன் பிரிஞ்சீங்க? அப்படின்னா அந்த கீர்த்தியைப் பத்தின எல்லா உண்மையும் உங்களுக்கு தெரிஞ்சிருச்சு அப்படி தானே? அதனால் தானே அவளை தள்ளி வச்சிருக்கீங்க? சொல்லுங்க தம்பி. அவளுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? நீங்க அவ குழந்தையை அவ கிட்ட கொடுத்துட்டு வந்துறீங்களா? அடுத்த முகூர்த்தத்திலே நான் உங்களுக்கும் ஜானுவுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்”, என்று கண்கள் பளபளக்க சொன்னவரை திகைத்து போய் பார்த்தான் ரகு.

“சார், என்னல்லாமோ சொல்றீங்க? ஆதியை வேற விடச் சொல்றீங்க. அவன் என் மகன்”, என்று அதிர்வாக சொல்ல “இல்லை அவன் உங்க மகனா இருக்க முடியாது. அது அந்த கீர்த்தி பிள்ளை”, என்று சொல்ல அதிர்ந்து போனான்.

அவன் அதிர்ச்சியைக் கவனிக்காமல் “அவ இனி உயிரோட இருக்க கூடாது. அந்த கீர்த்தி இந்த உலகத்துல இருக்க கூடாது. உயிர் வாழ அவளுக்கு தகுதியே இல்லை. நான் அவளைக் கொல்லாம விட மாட்டேன்”, என்று முடித்தார்.

“இவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?”, என்ற எண்ணம் வந்தாலும் “சார், உங்க பொண்ணு என்னை கல்யாணம் பண்ணணும்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக நீங்க கீர்த்தியை தப்பா பேசுறது நியாயம் இல்லை”, என்று கண்டிப்புடன் சொன்னான்.

“என்ன தாலி கட்டின பாசமா? ஆனா தாலி கட்டிட்டா மட்டும் கணவன் மனைவி உறவு ஆகிடாது மிஸ்டர் ரகு. வேற எவனோட குழந்தைக்கோ உங்களை அப்பாவா ஆக்கி வச்சிருக்குற கேவலமான பொண்ணைப் பத்தி தான் பேசுறேன்”, என்று உண்மையை உடைத்தார்.

“சார்… இது…. இது.. உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டான்.

“ஏன் தெரியாது? உங்களுக்கு தெரியாதது எல்லாம் எனக்கு தெரியும். அதை விடுங்க. நீங்க முடிவு சொல்லுங்க. அந்த குழந்தையை அவ கிட்ட கொடுத்துட்டு என் பொண்ணை ஏத்துக்கோங்க. அந்த கீர்த்தியோட குழந்தையா இருந்தாலும் சரி. அவ மூச்சுக் காத்தா இருந்தாலும் சரி. எதுவும் என் மக மேல படக் கூடாது”

“நீங்க சொன்னதுல சில உண்மைகள் இருந்தாலும் நீங்க வேற என்னல்லாமோ பேசுறீங்க? கீர்த்தி பாவம். அவளைப் பத்தி தப்பா பேசுறதை என்னால ஏத்துக்க முடியாது. அதே மாதிரி நேத்து தான் உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சொன்னீங்க? இப்ப இப்படிச் சொல்றீங்க? உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”

“என்ன பைத்தியமான்னு கேக்க வரியா பா?”

“இப்படி பேசினா அப்படி தான் கேக்க முடியும்? உங்க பொண்ணை நான் கட்டிக்கணும்னு கீர்த்தியை எப்படி நீங்க தப்பா பேசலாம்? அதுக்கு யாரு உங்களுக்கு ரைட்ஸ் கொடுத்தது. இதுல அவளைக் கொல்லுவேன்னு சொல்றீங்க? நீங்க ஆசைப் பட்ட மாதிரி நான் உங்க பொண்ணைப் பாக்க மாட்டேன். நீங்க இங்க இருந்து போகலாம்”

“நான் போயிட்டா உண்மை மறைஞ்சிறாது ரகு”

“புதைக்கப் பட்ட உண்மை புதைஞ்சது தான். நீங்க போஸ்ட்மார்ட்டம் பண்ண வேண்டாம் சார்”

“ஆனா எனக்கு ஒரு கடமை இருக்கே ரகு. அந்த உண்மையை தோண்டி எடுக்குறது மட்டும் இல்லை. அந்த கீர்த்தியை கொன்னு குழிக்குள் தள்ளுறது”, என்று அவர் வெறியுடன் சொல்ல அதிர்ந்து போனான்.