அத்தியாயம் 8

காதலர்களின் கண்ணீர் துளி 

சொல்லும் காதலின் ஆழத்தை!!!

கண்ணீருடன் போகும் ஜானகியை இமைக்காமல் பார்த்தான் ரகு. “சாரி ஜானு, நான் உன்னை இப்படி எல்லாம் பேசுவேன்னு நானே எதிர் பார்க்கலை டி. நீ நல்லா இருக்கணும். ஆதிக்காக தானே நீ என்னைக் கல்யாணம் பண்ண நினைச்ச? நீ ஆதியை நினைச்சு கவலைப் படாதே. அவனை மாதிரி உனக்கும் ஒரு குழந்தை வரும். அப்ப ஆதியைக் கூட மறந்துருவ. நாய் என்ன தான் உருண்டு பிரண்டாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும்னு சொல்லுவாங்க. அது மாதிரி தான் நீ எனக்கு எப்பவுமே கிடைக்க மாட்ட. நீ ஒருத்தி தான் என் உலகம்னு மொத்த காதலையும் உன் மேல வச்சிருந்தப்பவே நீ எனக்கு கிடைக்கலை. இன்னைக்கு ஓர் பிள்ளைக்கு அப்பாவா இருக்கும் போதா நீ எனக்கு கிடைப்ப? இந்த பிறவி நான் எடுத்ததே தப்பு டி”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

கலங்கிய மனதுடன் நான்கடி எடுத்து வைத்தவள் கண்களில் கண்ணீர் திரண்டு வந்தது. ஒரு முறை அவனுடைய காதலை இழந்து அவனை இழந்து அவள் தவித்த தவிப்பு நினைவில் வந்தது. மீண்டும் அதே வலியை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உனக்கு திருமணம் ஆகாது என்று நக்கலாக சொல்பவனிடம் “நான் கல்யாணம் பண்ணி காட்டுறேன் டா”, என்று பொய்யாக கூட அவளால் சவால் விட முடியாது.

அவன் என்ன தான் அவளை அவமான படுத்தினாலும் அவனை மறந்து வேறொரு வாழ்க்கை அவளுக்கு ஏது? அதனால் தயக்கத்தை உதறி மீண்டும் அவனை நோக்கி அடி எடுத்து வைத்தாள். அவள் வருகையை உணர்ந்தவன் மன உணர்வுகளை அடக்கி முகத்தை சாதாரணமாக அவளை முறைத்த படி வைத்துக் கொண்டான்.

அவன் அருகே வந்தவள் “ரகு”, என்று அழைத்தாள்.

“சொல்லு ஜானகி”, என்று முழுப் பெயரைச் சொல்லி பேச்சிலே அவளை தள்ளி நிறுத்தினான். அது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் “பிளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ரகு? உன் வீட்ல ஒரு ஓரத்துல நான் இருந்துக்குறேன் டா. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”, என்று வெட்கத்தை விட்டு கெஞ்சியே விட்டாள். அவளுடைய கெஞ்சல் அவன் உள்ளத்தை உருக்கியது. அவனுக்கு அவள் கேட்பது வரமல்லவா? ஆனால் அந்த வரத்தை எட்டி உதைக்கும் நிலையில் அல்லவா அவன் இருக்கிறான்.

அவளுக்கோ அவனிடம் கெஞ்சுவது அவமானமாக இருந்தது. ஆனால் அவளுக்கு அவன் வேண்டுமே? ஆனால் அவள் அதையாவது தெளிவாக சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு “பிளீஸ் ரகு, ஒரு தடவை கன்சிடர் பண்ணு. நான் ஆதி குட்டிக்கு அம்மாவா மட்டும் இருக்கேன் டா”, என்றாள்.

அவள் காதலைச் சொல்லியிருந்தால் கூட அவன் வேறு ஏதாவது செய்திருப்பான். அதை விட்டுவிட்டு ஆதிக்கு அம்மாவாக வருவேன் என்று சொன்னதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவனும் அவள் ஆதிக்காக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாள் என்று சற்று முன்பு கூட எண்ணினான் தான். ஆனால் அதை அவள் வாயால் கேட்கவும் அவனுக்கு உண்மையிலே இப்போது அவள் மேல் அவ்வளவு கோபமாக வந்தது.

“ஹேய் லூசா நீ? அவனுக்கு ஏற்கனவே தான் அம்மா இருக்குறாளே? நீ எதுக்கு?”, என்று அடுத்த குண்டை தூக்கிப் போட்டான்.

“என்னது?”, என்று அவள் அதிர “எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி? அவ அம்மா கீர்த்தி தான் இருக்காளே? அப்புறம் எதுக்கு இன்னொரு அம்மா அவனுக்கு?”, என்று கேட்டான்.

“வாட்?”, என்று அவள் அதிர “என்ன வாத்து கோழின்னு?”, என்று சொல்லி முறைத்தான்.

“ஆதி அம்மா இல்லைன்னு சொன்னானே? நீயும் அப்படி தானே ரகு சொன்ன?”

“ஓ உடனே என் பொண்டாட்டி செத்துட்டான்னு எனக்கு வாழ்க்கை கொடுக்க நினைச்சியா?”

“அப்படின்னா கீர்த்தி உயிரோட தான் இருக்காளா?”

“ஆமா, அவ ஊருக்கு போயிருக்கா. அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை. அதான் சொன்னேனே? ரெண்டாவது குழந்தைக்கு கன்ஸீவா ஆகிருக்கா. அதான் அங்க இருக்கா. ஆதி அம்மா வீட்ல இல்லைன்னு சொல்லிருப்பான். நீ உடனே என்னை கல்யாணம் பண்ண நினைச்சியா? இது மட்டும் அவளுக்கு தெரியணும். உண்டு இல்லைன்னு ஆக்கிருவா. அவளைப் பத்தி என்னை விட உனக்கு தான் நிறைய தெரியுமே?”, என்று சொன்னவன் அவளையே பார்த்தான். அவள் முகத்தில் கலவையான உணர்வுகள் எழுந்தன. அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி அவளுக்கு.

“இல்லையே, ஆதி அம்மாவைப் பாத்ததே இல்லைன்னு சொன்னானே?”, என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கேட்பது போலக் கேட்டாள்.

“லூசு, சின்ன பிள்ளை பேச்சை பெருசா எடுப்பியா? இப்ப அவ போட்டோவை அவன் கிட்ட காட்டு. தெளிவா மம்மின்னு சொல்லுவான். அம்மான்னு அவன் இது வரை யாரையும் சொன்னது இல்லை. அதான் அப்படிச் சொல்லிருக்கான்”, என்று பொய்ச் சொன்னான் ரகு.

“நீயும் இனி உன் லைப்ல அவ இல்லைன்னு தானே சொன்ன ரகு?”

“அதுக்கு தான் மன்னிப்பு கேட்டேனே? சும்மா நீ என்ன பண்ணுறேன்னு பாக்குறதுக்கு சொன்னேன். ஆனா பரவால்ல. அதை நம்பி என்னை கல்யாணம் பண்ண யோசிச்சி உங்க அப்பாவை வேற வரச் சொல்லிருக்க? ஏன் உனக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா? ஆளை விடு மா. எனக்கு பொண்டாட்டி இருக்கு. ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எல்லாம் இல்லை. அதுக்கு என் பொண்டாட்டி சம்மதிக்கவும் மாட்டா. வேணும்னா உன்னை என்னோட செட்டப்பா வச்சிக்கிடட்டுமா?”

“சீ”, என்று அருவருப்பாக கத்தினாள் ஜானகி. அவள் கண்கள் கண்ணீர் சிந்தியது. அவள் கண்ணீர் அவனுக்கும் வேதனையை தான் தந்தது.

ஜானகிக்கு தன்னை நினைத்தே அவ்வளவு கேவலமாக இருந்தது. அதுவும் கடைசியாக அவன் அப்படிக் கேட்டது அவளை உச்சந்தலையில் சுத்தியல் வைத்து அடித்தது போல ஒரு உணர்வைக் கொடுத்தது. தன்னுடைய நிலை தெளிவாக புரிந்தது. விஷ்ணு அவளை எதற்காக எச்சரித்தானோ அது இப்போது தெளிவாக புரிந்தது.

கொஞ்சம் தெளிந்து விட்டாள். இப்போது கீர்த்தி உயிருடன் இருப்பது சந்தோசத்தையும் கொடுத்தது. அதே நேரம் அவள் இருக்கும் போதே ரகுவிடம் திருமணத்துக்கு கெஞ்சியது அவமானமாகவும் இருந்தது. தான் இப்படிக் கேட்டது மட்டும் கீர்த்திக்கு தெரிந்தால் தன்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பாள் என்று எண்ணி ஒரு மாதிரி அசிங்கமாக இருந்தது.

மண்ணுக்குள்ளே புதைந்து விட மாட்டோமா என்று எண்ணினாள். அவள் மன உணர்வுகளை பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவள் காதல் அவனுக்கு புரியவே இல்லை.

கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்த ஜானகி ரகுவை நிமிர்ந்து பார்த்து “சாரி ரகு, நான் தான் சின்னப் பையன் பேச்சைக் கேட்டு தப்பா நினைச்சிட்டேன். அது மட்டுமில்லாம நீ ஏமாத்தினதையும் புரிஞ்சிக்கலை. என்னை மன்னிச்சிரு”, என்றாள்.

அவள் பேச்சு மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் “என்ன நினைச்சியோ போ? நான் என்ன பொண்டாட்டியை பறிகொடுத்தவன் மாதிரியா தாடி வளத்துட்டு இருக்கேன்?”, என்றான் நக்கலாக.

“சாரி, ஆனா தப்பு உன் பக்கமும் இருக்கு ரகு”

“நான் என்ன பண்ணினேன்?”

“நீ ஏன் கல்யாணம் பத்தி பேசின முட்டாள்?”, என்று எரிந்து விழுந்தாள்.

“நான் பேசினதும் உடனே இது தான் சாக்குன்னு வந்து ஒட்டிக்கலாம்னு பாத்தியாக்கும்? அது சும்மா உன்னை சீண்டுறதுக்கு சொன்னது. என்னை வேண்டாம்னு சொன்னவ பின்னாடி அலையுறதுக்கு நான் என்ன லூசா? நான் அப்படி அலைஞ்சேன்னு வை, என் பொண்டாட்டி என்னை கொன்னுருவா”

“கீர்த்தி நல்லா இருக்காளா ரகு?”

“திவ்வியமா இருக்கா? அவ கிட்ட பேசுறியா?”

“இல்லை வேண்டாம்”, என்று அவசரமாக சொன்னாள். மனதில் இருக்கும் குற்ற உணர்வு கீர்த்தியிடம் பேச விட வில்லை.

“ஓகே உன் விருப்பம். ஆனா நான் அவ கிட்ட சொல்லிட்டேன் உன்னைப் பாத்ததை. எப்படி இருக்கேன்னு கேட்டா. நல்லா இருக்கா ஆள் மாறிட்டான்னு சொன்னேன். அப்புறம் அவளும் வேற ஒண்ணும் கேக்கலை. ஏன்னு தெரியலை. அவளும் உன் கிட்ட பேச பிரியப் படலை. நீயும் வேண்டாம்னு சொல்ற? ஆனா ஒரு காலத்துல அவ்வளவு பிரண்ட்ஸா இருந்தீங்க?”, என்று குழப்பமாக கேட்டான்.