“நீ பண்ணினதுக்கு கோபம் வராம என்ன செய்யும்? அப்பா கிட்ட என்ன சொன்ன ரகு?”
“ஆமா நானே அதைச் சொல்லணும்னு நினைச்சேன். திடீர்னு எதுக்கு உங்க அப்பா வந்து கல்யாணம் பத்தி பேசினாங்க. செம காமெடி போ? எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சு. அவர் என்ன லூசா? நான் போய் உன்னைக் கல்யாணம் பண்ணனுமா? இது தான் இந்த வருசத்தோட சிறந்த காமெடி”, என்று சொன்னவன் சிரிக்க “ஸ்டாப் இட் ரகு”, என்று கத்தினாள்.
அவனும் அடுத்து எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டான். “எது காமெடி ஆன்? எது காமெடி? என் அப்பா லூசா? நீ தான் டா லூசு. மெண்டல். அரை மெண்டல். நானா உன் கிட்ட வந்து கல்யாணம் பத்தி பேசினேன்? நீ தானே வந்து பேசின? இப்ப உனக்கு காமெடியா இருக்கா? நான் ஒண்ணும் உனக்காக உன்னைக் கல்யாணம் பண்ண நினைக்கலை. ஆதி குட்டிக்காக தான் கல்யாணம் பண்ண நினைச்சேன்”, என்று சொன்னதும் அவன் மனம் வலித்தது.
“அதானே இவளாவது என்னை விரும்புறதாவது? நான் கூட நினைச்சேன்? என்ன டா சொன்னதும் சரின்னு சொல்லிட்டான்னு”, என்று எண்ணமிட்டவன் “ஏன் ஒரு பொண்ணு இல்லாம என் மகனை என்னால வளக்க முடியாதா? அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும்?”, என்று கேட்டான்.
“இந்த அறிவு உனக்கு தான் இருந்துருக்கணும்? ஏன் என் கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்ட?”
“அது சும்மா ஒரு பன்க்கு”, என்று சொல்ல அடுத்த நொடி அவள் கரம் அவன் கன்னத்தில் இடியாக இறங்கியது. அதிர்ந்து நின்றான் ரகு. அவள் அடிப்பாள் என்று அவன் நினைக்க வில்லை. ஆனால் அவனுக்கு கோபம் எல்லாம் வரவில்லை. அப்படியாவது அவள் கரம் தன் மீது படுகிறதே என்ற ஆனந்தம் தான்.
“எது சும்மா? கல்யாணம் அப்படிங்குறது உனக்கு சும்மாவா? எல்லாம் பேசிட்டு அசால்ட்டா சும்மான்னு சொல்ற?”, என்று அவன் சட்டையைப் பிடித்துக் கேட்க “மிர்ச்சி, பிளீஸ் யாராவது பாத்தா மானம் போயிரும். சட்டையை விடு”, என்றதும் விட்டுவிட்டாள். அவள் கண்கள் கலங்கிப் போனது.
“ஏன் டா இப்படி பண்ணின? நான் உண்டு என் வேலை உண்டுன்னு தானே இருந்தேன்? நீயா தானே கல்யாணம் பத்தி பேசின? அதுக்கப்புறம் எனக்குள்ள எவ்வளவு எதிர்பார்ப்புகள்… ப்ச் எனக்கு அவமானமா இருக்கு டா”, என்று அவள் தளர்ந்து போய்க் சொல்ல அவன் இதயத்தில் ரத்தக் கண்ணீர் வடிந்தது.
“கடவுள் என்னை பெருசா பழி வாங்குறான் டி. அதான் நிம்மதி இல்லாம ஓடிட்டு இருக்கேன்”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “ஹலோ என்ன ஓவர் பீலிங்கா பேசுற? கல்யாணம் பண்ணிக்கலாம்னு சும்மா சொன்னது அவ்வளவு பெரிய தப்பா? நான் ஒண்ணும் அவமானப் படுத்தலை. சும்மா உன் கிட்ட விளையாண்டேன். உன் கிட்ட காதலைச் சொன்னப்ப நீ பேசினது தான் எனக்கு அவமானமா இருந்துச்சு”, என்று கோபமாக சொல்வது போல சொன்னான்.
“நான் எங்க டா அவமானப் படுத்தினேன்? நீ லவ் பண்ணுறேன்னு சொன்ன? நான் பிடிக்கலைன்னு சொன்னேன். இது அவமானமா?”
“காதலை மறுக்குறது தப்பு இல்லை. ஆனா உனக்கு நான் லவ் சொன்ன அன்னைக்கு தான் நான் லவ் பண்ணினது தெரியுமா? அதுக்கு முன்னாடியே தெரியாதா?”, என்று கூர்மையாக கேட்டான்.
தடுமாற்றத்துடன் அவனைப் பார்த்தாள். அவளுக்கு தான் தெரியுமே ஆதி முதல் அந்தம் வரை அவனது காதல் நான் தான் என்று.
“சொல்லு டி, என்ன கமுக்கமா இருக்குற? நான் உன் கிட்ட காலேஜ் கடைசி நாள் என்னோட காதலை சொன்னேன் தான். ஆனா அதுக்கு முன்னாடி என் காதல் உனக்கு தெரியாதா?”, என்று கேட்டவன் அவளையே கூர்மையாக பார்க்க “எனக்கு என்ன தெரியும்? நீ பிரண்டா நினைச்சு தான் பழகுறேன்னு நினைச்சேன்”, என்று பொய் சொன்னாள்.
“என் ஜானகி பொய் எல்லாம் சொல்றாளே. ரொம்ப பெருமையா இருக்கு. எப்படி எப்படி உனக்கு அதுக்கு முன்னாடி தெரியாது அப்படி தானே?”
“ம்ம்”
“அப்ப நான் உன் கிட்ட நெருங்கிப் பழகினது எல்லாத்தையும் நீ நட்புன்னு நினைச்ச அப்படி தானே?”
“ம்ம்”
“தியேட்டர்ல, லிப்ட்ல, அதுக்கும் மேல ஐ.வில நமக்குள்ள இருந்த நெருக்கம் எல்லாம் நட்பு ரீதியா வந்தது அப்படி தானே?”, என்று கேட்க அவளால் ம்ம் கொட்டக் கூட முடியலை.
“என்ன டி அமைதியா இருக்க? பதில் சொல்லு”
“நானா ஒண்ணும் உன் கிட்ட வரலை”
“ஓஹோ, நானா வந்து உன்னை தொட்டேன், நீ அக்சப்ட் பண்ணிக்கிட்ட அப்படி தானே?”, என்று சொல்ல அவளுக்கு முகத்தை எங்கே கொண்டு வைக்க என்று தெரிய வில்லை.
“என் காதல் உனக்கு தெரியாம தான் நீ என்னோட தொடுகையை அக்சப்ட் பண்ணுனியா ஜானு? இல்லை உனக்கு தெரியும். என்னோட கண்கள், என்னோட செய்கை எல்லாமே என்னோட காதலை உனக்கு உணர்த்திருக்கும். ஆனா தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்துகிட்டு என் காதலை கூட இருந்தே பாத்துக்கிட்டு அதை உன் கிட்ட சொல்றப்ப நீ என்னைப் பாத்து நக்கலா பதில் சொல்லலை? அது அவமானம் இல்லையா எனக்கு? அது மட்டுமில்லாம நான் அழகா இல்லைன்னு, பணக்காரனா இல்லைன்னு பேசலை? அது அவமானம் இல்லையா? என் காதலை உயிரோட கொன்னு என்னை நடைபிணமா ஆக்கி…. அந்த நேரத்துல என் வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு தெரியாம நின்னப்ப எங்க அப்பா கீர்த்தியை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி…. உன்னை மறக்க முடியாம அவளை ஏத்துக்க முடியாம நான் செத்தது உனக்கு தெரியுமா டி?”, என்று அவன் அவ்வளவு உருக்கமாக கேட்க அவளோ அசால்ட்டாக “அதுக்கப்புறம் அவளை பொண்டாட்டியா ஏத்துக்கிட்ட தானே? அவ கூட வாழாமலா இருந்த?”, என்று கேட்டாள்.
அதைக் கேட்டு அவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது. இவள் ஒரு நாளும் தன்னை புரிந்து கொள்ளப் போவதில்லை என்று எண்ணியவன் “பின்ன கண்ணுக்கு முன்னாடி அழகா ஒரு பொண்டாட்டியை வச்சிட்டு எத்தனை நாள் விரதம் இருக்க முடியும்? காலம் முழுக்க உன்னையே நினைச்சிட்டு அவ கூட வாழாம இருப்பேன்னு நினைச்சியா? நான் சாதாரண மனுஷன் மா. உன்னை மறந்துட்டு வாழ்க்கையை ரசிச்சு ருசிச்சு அவ கூட திவ்வியமா வாழ்ந்தேன். எப்படின்னு விளக்கமா சொல்லவா?”, என்று கேட்டு கடுப்பேற்றினான்.
“வேண்டாம், வேண்டாம். அதைப் பத்தி பேச வேண்டாம். சரி நீ ஏன் இப்படி என் கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாம்னு நாடகம் ஆடின? நான் உன் காதலை மறுத்ததுக்கு என்னைப் பழி வாங்கினியா ரகு இப்ப?”
“ஆமா, இப்ப என்னங்குற? என்னோட வலி அளவுக்கு ஒண்ணும் நான் உனக்கு திருப்பி கொடுக்கலை. சும்மா விளையாண்டேன் அவ்வளவு தான். ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் புரியலை. நான் உன் கிட்ட கல்யாணம் பண்ணலாம்னு கேட்டது தப்பாவே இருக்கட்டும். அதுக்கு வேணும்னா சாரி கேட்டுக்குறேன். ஆனா நான் உன்னைக் கல்யாணம் பண்ணுவேன்னு நீ எப்படி நினைச்ச? எனக்கு ஆச்சர்யமா இருக்கு”, என்று நிறுத்தி நிதானமாக கேட்டான்.
“ரகு”
“வாயை மூடு. என் பேரைச் சொல்லக் கூட உனக்கு எல்லாம் அருகதை கிடையாது. உலகத்துல கல்யாணம் பண்ண பொண்ணா கிடைக்காது? நான் ரெண்டாவது கல்யாணம் பண்ண முடிவு எடுத்தாலும் போயும் போயும் உன்னைப் போய் பண்ணுவேணா? என் காதலை தூக்கி எறிஞ்சு என் மனசை கொன்ன பிசாசு நீ. உன்னால உன்னால…. நான் என் வாழ்க்கைல இழந்தது என்ன எல்லாம்னு தெரியுமா டி? உன் மேல உள்ள வெறுப்பு எனக்குள்ள அப்படியே இருக்கு. நான் எல்லாத்தையும் மறந்துட்டு உன் கூட சும்மா பிரண்டா தான் பேச நினைச்சேன். வேற எந்த உறவும் எனக்கும் உனக்கும் நடுவுல இல்லை. இனி நமக்குள்ள நட்பு கூட கிடையாது”, என்று சொல்ல அவள் கண்கள் கலங்கியது.
“நீ பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு ரகு”
“அதான் சொல்லிட்டேனே, நான் அனுபவிச்ச அளவுக்கு ஒண்ணும் நீ வலி அனுபவிக்கலை. அதனால சீன் போடாம கிளம்பு”
“நம்ம கல்யாணம்…”
“அந்த பேச்சே வேண்டாம். நான் உன் கிட்ட கல்யாணம் பத்தி பேசினது தப்பு தான். அது உன்னைப் பழி வாங்கத் தான் சொன்னேன். சாரி. நீ கிளம்பலாம்“, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான். அவன் பேச்சைக் கேட்டு அவளுக்கு மனம் கனத்துப் போனது.
“அவ்வளவு தானா ரகு?”, என்று அவள் தளர்ந்து போய்க் கேட்க “அவ்வளவு தான். வேற என்ன எதிர் பாக்குற? ஆமா கேக்கணும்னு நினைச்சேன். உனக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலை? எப்படி ஆகும்? என்னோட சாபம் எல்லாம் சும்மா விடுமா? அதான் இப்படி தனி மரமா இருக்குற? அந்த நவீனும் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டானா? இனி உன்னை எல்லாம் எவன் கட்டிக்குவான்? யாராவது வச்சிக்கிட்டா தான் உண்டு…”, என்று சொல்ல விக்கித்துப் போனாள். அவன் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்கவா இத்தனை நாட்கள் காதலை சுமந்து கொண்டிருந்தாள்.
“ரகு….”, என்று அவள் கத்த “கத்தாத. கிளம்பு இங்க இருந்து. காத்து வரட்டும். உன்னைப் பாத்தாலே எனக்கு பழைய விஷயங்கள் தான் நினைவு வருது. முதல்ல இந்த ஆதி ஸ்கூலை மாத்தணும்”, என்று அவன் எரிச்சலுடன் சொல்ல அவமானத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் ஜானகி. இனி அவனிடம் பேச என்ன இருக்கிறதாம்?