தேவகியும் விஷ்ணுவும் ஆதியுடன் இயல்பாக பழக மோகனோ ஆதியை தொட்டுக் கூட பார்க்க வில்லை. அதை மற்றவர் கவனிக்க கூட இல்லை.
ஆதி அந்த வீட்டில் இயல்பாக பொருந்த இரவு உணவு கொடுத்து அவனை தன்னுடைய அறையில் தூங்க வைத்து விட்டு சாப்பிட வந்தாள் ஜானகி.
மூவரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று எண்ணி மனதுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவள் வந்ததும் “என்ன ஜானு இதெல்லாம்? நீ பண்ணுறது உனக்கே சரின்னு தோணுதா?”, என்று தேவகி கேட்க நடந்த அத்தனையையும் சொன்னாள்.
“எங்களுக்கு புரியலை பாப்பா. நீ ஏன் இப்படி எல்லாம் பண்ணுற? இது எங்க போய் முடியப் போகுதோன்னு எனக்கு பயமா இருக்கு”, என்றான் விஷ்ணு.
“குட்டிமா, ரெண்டு நாள்ல அந்த பையனை அவங்க வீட்ல விட்டுரு டா”, என்று மோகன் சொல்ல “கண்டிப்பா பா”, என்று சொன்னாள் ஜானகி. அதற்கு அடுத்து அவர் ஒன்றுமே சொல்ல வில்லை. வேறு யாரும் எதுவும் சொல்ல வில்லை. மோகன் சொன்ன பிறகு மற்றவர்கள் அவளை சங்கடப் படுத்துவார்களா என்ன? ஆனாலும் அவளுக்குள் குற்ற குறுகுறுப்பு.
உண்டு விட்டு அறைக்குள் வந்து படுத்தாள் ஜானகி. மனம் மட்டும் கலங்கித் தவித்தது. “நான் ஏன் இப்படி எல்லாம் பண்ணுறேன்? நான் பண்ணுறது கொஞ்சம் கூட சரி கிடையாது?”, என்று எண்ணியவள் அருகில் படுத்திருந்த ஆதியைப் பார்த்தாள். ஏனோ அவனைப் பார்த்ததும் சந்தோஷமும் துக்கமும் ஒன்றாக வர அவனை லேசாக அணைத்த படி படுத்தாள்.
அவள் தொட்டதும் அவன் இயல்பாக அவளை நெருங்கி அவள் நெஞ்சில் முகம் புதைத்து அவள் வயிற்றில் கை போட்டு படுத்துக் கொள்ள சிறு புன்னகை உதயமானது அவளுக்கு. பிள்ளை பெறாமலே தாயான உணர்வு.
அதுவும் ஆதியின் செய்கை ரகுவையும் அவனுடன் இருந்த நெருக்கமான தருணங்களையும் நினைவு படுத்த தவித்துப் போனாள். அதுவும் இன்றைய அவன் செய்கை வெகு நாட்களுக்கு பிறகு இன்று அவளை உலுக்கியது.
“அவன் ஏன் அப்படி செஞ்சான்? தெரிஞ்சு செஞ்சானா இல்லை தெரியாமலேயா? அதுவும் எவ்வளவு சாதாரணமா என் மேல சாஞ்சிட்டு இருந்தான். நான் விலகின பிறகு அவன் கண்ணுல இருந்த உணர்வுக்கு பேர் என்ன? அவன் தொடுகைல ஏன் எனக்கும் ஒரு மாதிரி இருந்தது. நான் தப்பு பண்ணுறேன். இதுல இருந்து எப்படி வெளிய வர?”, என்று பல கேள்விகள் உள்ளுக்குள் எழ திணறிப் போனாள்.
அதுவும் “என் புருஷன் கிட்ட இப்படி மயங்கி கிடக்குறியே? உனக்கு வெக்கமா இல்லை?”, என்று அவளுக்கு எதிராக வந்து நின்று கீர்த்தி கேட்பது போல தோன்றி வைக்க உடல் எல்லாம் உதறியது. கண்களில் அருவி கொட்டியது. நிச்சயம் இந்த பிறவியில் எனக்கு நிம்மதியே இருக்க போறது இல்லை என்று அவள் மனம் வேதனை கொள்ள தூக்கத்தை தொலைத்தாள்.
அடுத்த நாள் காலை எப்போதும் போல விடிய ஜானகிக்கு ஆதியை கவனிப்பதே சரியாக இருந்தது. அவனும் அவளுடன் நன்கு ஒட்டிக் கொண்டான். அவனைக் குளிக்க வைத்துக் கொண்டிருக்கும் போது ரகு நிர்மலாவின் எண்ணில் இருந்து அவளுக்கு அழைக்க ஜானகி அதை எடுக்க வில்லை.
ஆதியை குளிக்க வைத்தவள் அவனுக்கு வேறு உடை அணிவித்து விட்டு போனைப் பார்க்க அதில் மிஸ்டு கால் கிடக்க திருப்பி அந்த எண்ணுக்கு அழைத்தாள். அப்போது தான் ரீசார்ஜ் முடிந்தது தெரிந்தது.
அப்பாவையாவது அண்ணனையாவது போடச் சொல்லணும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அழைப்பு வர அதை எடுத்து காதில் வைத்து “ஹலோ யாரு?”, என்று கேட்டாள்.
“ஜானு”, என்ற உருகிய ரகுவின் குரல் கேட்க கைபேசியை இறுகப் பற்றியவள் தன்னை சமாளித்துக் கொண்டு “ஆன்… சொல்லு ரகு”, என்றாள்.
“ஆதி ஓகே தானே? சமத்தா இருந்துகிட்டானா? இல்லை உங்களை கஷ்டப் படுத்திட்டானா?”, என்று உண்மையிலே ஒரு தகப்பனாக அவன் குரல் தவிப்பாக வந்தது.
“எங்க கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டான் ரகு. ஒண்ணும் பிரச்சனை இல்லை. கூட்டிட்டு வரவா. பாக்கணும் போல இருக்கா?”
“சாயங்காலம் கூட்டிட்டு வரியா? பாக்கணும் போல இருக்கு”, என்று சொல்ல “சரி கூட்டிட்டு வரேன். ஆமா இது யார் நம்பர்?”, என்று கேட்டாள்.
“இது அம்மா நம்பர் ஜானு. அப்பவே உனக்கு கால் பண்ணினேன். நீ எடுக்கலை”
“ஆதியை குளிக்க வச்சிட்டு இருந்தேன். திருப்பி பண்ணினேன். கால் போகலை. ரீசார்ஜ் முடிஞ்சிட்டு போல? போடணும். சரி நீ ஓகே வா? வலி குறைஞ்சிருக்கா?”
“ம்ம்”, என்றவன் அமைதியாக இருக்க “என்ன ஆச்சு ரகு? வலி குறையலையா?”, என்று அக்கறையாக கேட்டாள்.
“மிர்ச்சி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா டி பிளீஸ்? நைட் முழுக்க என்னால தூங்கவே முடியலை டி. உன் வாசம்.. ப்ச் பிளீஸ் கல்யாணம் பண்ணிக்கலாமா?”, என்று கேட்க அதிர்ந்து போனாள்.
அவன் கேட்டதில் உள்ளம் ஒரு நொடி ஜெர்க் ஆனாலும் “காலைலே உன் விளையாட்டை ஆரம்பிச்சிட்டியா? உன் பொண்டாட்டிக்கு முதல்ல போன் போட்டு பேசு”, என்றாள். தன்னை வெறுபேற்றுகிறான் என்று எண்ணியே அவள் அவ்வாறு பேசினாள்.
“பொண்டாட்டியா? அப்படி எல்லாம் யாரும் இல்லை. நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ தான் என் பொண்டாட்டி. வா கல்யாணம் பண்ணிக்கலாம்”
“என்ன உளறல் இது ரகு? கீர்த்தனா எங்க?”
“அவ இல்லை. அவ்வளவு தான். வேற எதுவும் சொல்ல மாட்டேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ”
“ரகு பி சீரியஸ்”
“நானும் சீரியஸா தான் டி பேசுறேன். நீ, நான், ஆதி, என்னோட அம்மா மட்டும் தான் என் வாழ்க்கைல. வா கல்யாணம் பண்ணிக்கலாம். பிளீஸ் நீ இல்லாம இருக்க முடியலை. அதுவும் நேத்துக்கு அப்புறம்…..”, என்று சொன்னவன் அந்த நினைவில் அமைதியாக இருக்க அவன் சொல்ல வந்த விஷயம் புரிந்து உதடு கடித்து அந்த உணர்வை கண் முன் கொண்டு வந்தாள்.
“எனக்கு நீ வேணும். உன்னால நான் செத்துக்கிட்டு இருக்கேன். நல்ல முடிவா எடு ஜானு”, என்று சொல்லி அவன் போனை வைக்க விதிர்த்து போய் அமர்ந்தாள். அடுத்த நொடி அவளது போனுக்கு அவன் ரீசார்ஜ் பண்ணி இருந்தான். அவனது அந்த உரிமையும் அவளை அசைத்தது.
“இவன் ஏன் இப்படி பண்ணுறான்? என்ன எல்லாம் பேசுறான்? தெரிஞ்சு பேசுறானா இல்லை விளையாடுறானா? கீர்த்திக்கு என்ன ஆச்சு?”, என்று குழம்பியவள் “ஆதி கண்ணா”, என்று அழைத்தாள். நிர்மலாவிடம் கேட்க எண்ணினாலும் இது வரை ரகுவைத் தெரியாதது போல இருந்து விட்டு இப்போது ரகுவையும் கீர்த்தியையும் தெரிந்தது போல எப்படிக் காட்டவாம்? நிர்மலா அவளை தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கிறதே என்று தயங்கினாள்.
“மிஸ்”, என்ற படி அருகில் வந்த ஆதியைத் தூக்கி மடியில் வைத்தவள் “செல்லக் குட்டி உங்க அம்மா எங்க டா?”, என்று கேட்டாள்.
“அம்மா இல்லை”
“இல்லைன்னா… அம்மா ஊருக்கு போயிருக்காங்களா?”
“தெரியாது மிஸ்”
“என்ன டா பதில் இது?”, என்று நொந்து போனவள் “உன் அம்மாவைப் பாத்துருக்கியா டா?”, என்று கேட்டாள்.
இல்லை என்று அவள் தலையசைக்க விதிர்த்துப் போனாள். “இல்லையா? அப்படின்னா கீர்த்திக்கு என்ன ஆச்சு?”, என்று மனம் பதற அவனைத் தூக்கி கொண்டு வெளியே வந்து உணவு ஊட்டினாள். ஆனால் மனம் மட்டும் பாரமாக இருந்தது. உண்மையிலே நிர்மலாவும் ரகுவும் ஆதியிடம் அம்மாவைப் பற்றி பேசியதே கிடையாது. அதனால் தான் அவன் அவ்வாறு பதில் சொன்னான்.
“ஒரு வேளை கீர்த்தி இந்த உலகத்துலே இல்லையோ? அதனால தான் ரகு மறுபடி என்னை தேடி வரானா? இப்ப நான் என்ன செய்யனும்? கடவுள் எனக்கு கொடுத்த ரெண்டாவது வாய்ப்பா இது?”, என்று குழம்பியவள் அன்று மாலை ரகுவிடம் தெளிவாக பேச வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.
கீர்த்தி உயிரோடு இல்லை என்றால் ரகுவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் எழ அதைக் கண்டு அவளே திடுக்கிட்டாள். நிச்சயம் அவளால் ரகுவைத் தவிர இன்னொருவனைத் திருமணம் செய்ய முடியாது. அப்படி இருக்க அவனை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? அவன் மனதிலும் தன் மீது காதல் இருக்க இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது என்று முடிவு எடுத்தாள். அது சரியா தப்பா என்ற போராட்டமும் அவளுக்குள் இருந்தது.