மனதில் எழும் ஆசைகளை அடக்க வழி தெரியாமல் தவித்தான் அவன். ஆசைகளை கட்டுப்படுத்தி விருப்புகளை துறந்து வாழ அவன் என்ன முனிவனா? அதனால் எண்ணங்களை அடக்காமல் அதன் போக்கில் விட்டான்.

இவளுக்கு திருமணம் ஆகும் வரை இவள் பொது சொத்து தான். தாராளமாக சைட் அடிக்கலாம் என்று அவன் மனது குரல் கொடுக்க “இங்க வலிக்குது டி, இங்க தடவி விடு”, என்று பின் மண்டையைக் காட்டினான்.

லேசாக குனிந்து அவனுடைய பின் மண்டையை தடவி விட அவன் முகம் அவள் நெஞ்சத்தில் மோதியது. அந்த மோதலில் அவனே அதிர்ந்து தான் போனான். ஆனால் கிடைத்த வாய்ப்பை விடாமல் அப்படியே இருந்தான். அவள் மேல் இருந்து வந்த வாசனையும் அவன் முகம் உணர்ந்த இடத்தின் மென்மையும் அவனை எதுவோ செய்ய அங்கேயே முகத்தைப் புரட்டினான். அதைக் கூட உணராமல் அவள் அவன் தலையை வருடி விட்டுக் கொண்டிருந்தாள்.

“என் செல்ல அழகி டி மிர்ச்சி”, என்று அவன் மனது தாறுமாறாக புலம்பியது. அவள் அருகாமையிலும் தொடுகையிலும் உடலில் இருந்த வலி கூட மாயமானது தான் விந்தையே. அவனது காயத்துக்கு வருடி விட்டுக் கொண்டிருந்தவளின் மனதில் அவன் வலி மட்டுமே இருந்தது. சிறிது நேரம் கழித்து தான் சிறு வித்தியாசம் தெரிய அவளும் தெளிந்தாள். அப்போது ரகுவின் முகம் அவள் நெஞ்சத்தில் முழுமையாக புதைந்திருந்தது.

உரிமையான கணவன் போல அவன் செய்கை இருக்க ஒரு நொடி அவன் செய்கையில் கிளர்ந்தவள் அடுத்த நொடி படக்கென்று விலகி படுக்கையை விட்டு எழுந்து நின்றாள். உடல் எல்லாம் ஒரு மாதிரி நடுங்கியது. கண்களைத் திறந்து அவனைப் பார்க்க கூட அவளால் முடிய வில்லை.

கை கால்களில் நடுக்கம் பரவ பெரு விரலை நிலத்தில் ஊன்றி தன்னை சமாளித்தவள் வெகு நேரம் கழித்து அவனைப் பார்த்தாள். அவனோ அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தடுமாற்றம் அவனுக்கு வியப்பாக இருந்தது. படிக்கும் போது அவளை பல முறை நெருங்கி இருக்கிறான். அப்போதெல்லாம் அவனை முறைப்பாள் திட்டுவாள். ஆனால் அவனை வெறுத்து ஒதுக்கியதில்லை. அதனால் தான் அவள் மனதில் தான் இருக்கிறோம் என்று எண்ணி அவளிடம் காதலைச் சொன்னான்.

இப்போது நிச்சயம் அவள் தன்னை அடிப்பாள் என்று தான் எதிர் பார்த்தான். ஆனால் அவள் திட்டக் கூட செய்ய வில்லை. அவளது இந்த தடுமாற்றம் புதிது. முன்பு அவன் தீண்டிய போது முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அவனை தீர்க்கமாக பார்ப்பாள். அந்த பார்வையிலே அவன் சாரி என்று சொல்லி விடுவான். ஆனால் இப்போதோ அவனை முறைக்க கூட செய்யாமல் நடுங்கி நின்றாள்.

“மிர்ச்சி ரொம்ப மாறிட்டா”, என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போது அவளும் அவனைப் பார்த்தாள்.

அவன் கண்களில் கசிந்த காதலும் அதில் இருந்த ஆசையும் ஏக்கமும் கையில் இருந்த மிட்டாயை பிடுங்கினால் விழிக்கும் குழந்தை போல இருந்த அவன் பார்வையும் அவளை என்னவோ செய்தது.

ஏதோ இப்போதும் அவன் முகம் தன்னுடைய நெஞ்சத்தில் இருப்பது போல ஒரு உணர்வு ஆட்கொள்ள வேகமாக எழுந்து சென்று ஆதி அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

கண்களை மூடி சுவரில் சாய்ந்து தன்னுடைய நடுக்கத்தை குறைக்க முயன்றவளின் செய்கையைப் பார்த்த ரகுவுக்கு “கொஞ்சம்  ஓவரா நடத்துகிட்டோமோ?”, என்று தோன்றினாலும் அவன் உணர்ந்த வெம்மையும் மென்மையும் அவனையும் படுத்தி எடுத்தது.

இன்னும் இன்னும் அவளுக்குள் புதைய ஆவல் எழ தனக்குள் எழும் உணர்வுகளில் கிளர்ந்து அதை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான். அந்த அழகான தருணத்தை ஏதாவது பேசி கெடுத்துக் கொள்ள இருவருமே விரும்ப வில்லை. அமைதியாக அந்த இனிமையான தருணத்தை அசை போட்டார்கள்.

இருவரும் மோன நிலையில் இருக்க அப்போது எழுந்த ஆதி “மிஸ்”, என்ற படி அவள் கழுத்தைக் கொள்ள அதற்கு பிறகு தான் இருவரும் கண் திறந்து பார்த்தார்கள்.

ஆனாலும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்க்க சங்கடமாக தான் இருந்தது. அதற்கு பின் ஆதியின் பேச்சில் நடப்புக்கு திரும்பினாலும் ரகுவை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை அவளால்.

“ஆதி, இவங்களா டா உங்க மிஸ்?”, என்று கேட்டு வம்பிழுத்தான் ரகு.

“ஆமா பா”

“என்னமோ உங்க மிஸ் ரொம்ப அழகுன்னு சொன்ன? அப்படி ஒண்ணும் தெரியலையே?”, என்று கேட்டு அவன் வம்பிழுக்க அவள் அவனை முறைத்தாள்.

“என்ன டி முறைக்கிற?”, என்று அவன் நேரடியாக கேட்க “ஒரு காலத்துல நான் அழகின்னு என் பின்னாடியே அலைஞ்சது மறந்துருச்சா?”, என்று நக்கலாக கேட்டாள்.

“இப்ப கூட உன் பின்னாடி அலைய தான் ஆசையா இருக்கு”, என்று அவன் ஏக்கமாக சொல்ல அவன் சொன்னதும் அவன் குரலில் இருந்த ஏக்கத்தை கண்டு வாயடைத்துப் போனாள். அங்கே இருக்கவே அவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

அவன் முன் இருக்க இருக்க அவளுக்கு எப்படியோ இருந்தது. தன்னைப் பற்றி அவன் என்ன நினைப்பான் என்ற எண்ணமே அவளுக்கு அவமானமாக இருந்தது.

அவள் அவனை மறந்து ஆதியிடம் பேசிக் கொண்டிருக்க “முன்னாடி மாதிரி எதையுமே மனசுக்குள்ள வச்சு தப்பா முடிவெடுக்க மாட்டேன் ஜானு. அதான் நேரடியா கேக்குறேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது உனக்கு பிடிச்சதா?”, என்று அவன் வெளிப்படையாகவே சிறு கூச்சமின்றி கேட்க அவள் முகம் குங்குமமாக சிவந்தது. அவன் இப்படி கேட்பான் என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை.

ஆதியும் தந்தையை குழப்பமாக பார்க்க ரகுவைத் தீயாக முறைத்தவள் “உனக்கு எப்ப என்ன பேசன்னே தெரியாதா டா?”, என்று கடுப்புடன் கேட்டாள்.

மகன் கவனம் தங்கள் மேல் இருப்பது உணர்ந்து அவனும் அடுத்து எதுவும் பேச வில்லை.

நிர்மலா வந்ததும் ஜானகி ஆதியை அழைத்துக் கொண்டு கிளம்பப் போக அவள் கிளம்ப போகிறாள் என்றதும் ரகு முகம் சுருங்கியது. ஏனோ அவள் தன்னுடனே இருக்க வேண்டும் என்று அவன் மனம் எதிர் பார்த்தது.

“நான் வரேன் ஆண்ட்டி”, என்று நிர்மலாவிடம் சொன்ன ஜானகி ஆதி புறம் திரும்பி “குட்டி அப்பா கிட்டயும், ஆச்சி கிட்டயும் சொல்லிட்டு வா. நம்ம வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்ல ஆதியும் இருவருக்கும் டாட்டா காட்டி விடை பெற அவனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். தன்னை திரும்பிக் கூட பார்க்காமல் அவள் செல்வது அவனுக்கு சிரிப்பைத் தான் வரவைத்தது. தன்னுடைய தொடுகை அவளை பாதிக்கிறது என்ற உண்மை அவனுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது.

“நல்ல பொண்ணு இல்லைப்பா”, என்று நிர்மலா சொல்ல “ஆமா மா, ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு”, என்று முணுமுணுத்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டான். அவனுக்கு இப்போது தனிமை வேண்டும் போல இருந்தது. அவளுடன் இருந்த தருணங்களை எல்லாம் அசை போட்டான். அதுவும் சற்று முன் அவளால் ஏற்பட்டிருந்த உணர்வுகளுக்கு கற்பனையில் உருவம் கொடுக்க முயற்சி செய்தான். அந்த சுக கற்பனை அவனுக்கு அவ்வளவு பிடித்தது.

“உன்னை விட்டுக் கொடுக்கவே கூடாதுன்னு தோணுது டி மிர்ச்சி. பிளீஸ் எனக்கு நீ வேணும். உன்னால மட்டும் தான் நான் உயிர்ப்போட இருக்க முடியும்”, என்று எண்ணிக் கொண்டான்.

வெளியே சென்ற ஜானகியோ போனைக் கடையில் கொடுத்து விட்டு ஆதிக்கு என்று ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற படபடப்பு வேறு அவளை ஆட்கொண்டது.

இன்னும் மகள் வீட்டுக்கு வரவில்லையே என்று தேவகி மோகனிடம் புலம்பிக் கொண்டிருக்க அப்போது அவள் வண்டி சத்தம் கேட்டதும் இருவரும் வாசலுக்கு வந்தார்கள்.

“ஏன் டி லேட்?”, என்று கேட்க வந்த தேவகி அவளுடன் வந்த ஆதியைக் கண்டு “ஏய் யார் பையன் டி இது? ரொம்ப அழகா இருக்கான். டேய் குட்டிப் பையா”, என்ற படி தூக்கிக் கொள்ள மோகனும் குழப்பத்துடன் மகளைப் பார்த்தார்.

மூவரும் உள்ளே வர ஜானகி அமைதியாக இருக்க “குட்டி மா, இது யார் பையன் டா?”, என்று கேட்டார் மோகன்.

“இது… இது… ரகுவோட பையன் பா”, என்று அவள் தடுமாற்றத்துடன் சொல்ல இருவரும் தீச்சுட்டது போல அதிர்ந்து போனார்கள்.

மகள் மேல் அவ்வளவு கோபமும் ஆதங்கமும் வந்தாலும் அந்த சிறு குழந்தை முன்பு காட்ட விருப்பம் இல்லாமல் “முகம் கழுவிட்டு வா, டீ தரேன்”, என்று சொன்ன தேவகி ஆதியை அவள் கையில் கொடுக்க அவனைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

“என்னங்க இது? இப்ப என்ன புதுப் பிரச்சனை? ஏற்கனவே அந்த பையன் மேல பைத்தியமா இருக்கா. இப்ப இது வேற? என்ன நடக்கப் போகுதோ?”, என்று கவலையாக கேட்டாள் தேவகி.

“நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது. போய் டீ போடு தேவி”, என்று சொல்ல அன்று இரவு வரை மகளிடம் விசாரிக்க அவர்களால் முடிய வில்லை. வேலை முடிந்து வந்த விஷ்ணுவும் ஆதி யார் என்று தெரிந்து முதலில் அதிர்ந்தாலும் வேறு ஒன்றும் கேட்க வில்லை.