அடுத்த ஆறு மாதங்கள் எப்படி கடந்தது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் வேகமாக நகர்ந்தது. தினமும் ரகு தான் ஆதியை பள்ளிக்கு அழைத்துச் சென்றான். அதே போல தினமும் மறைந்திருந்து ஜானகியைப் பார்ப்பான். ஆனால் இது வரை அவளுக்கு எதிரே அவன் சென்றதே இல்லை. ஆனால் அந்த ஆறு மாதமும் அவள் திருமணமும் நடக்காமல் இருக்க குழம்பித் தான் போனான்.
ஆனால் அவ்வப்போது அவளை நவீனுடன் வைத்துப் பார்ப்பான். அவன் காணும் போதெல்லாம் இருவரும் மலர்ந்த முகத்துடன் பேசிக் கொண்டிருக்க ரகுவுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் புகைச்சல் தான் வரும்.
ஜானகி வாழ்க்கையோ எப்போதும் போல தான் நகர்ந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பே ஜானகி விஷ்ணுவிடம் அவனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பேச அவனோ அப்பா வெளிய வரட்டும் என்று முடித்துக் கொண்டான். இத்தனை நாட்களில் நவீனுடனான நட்பு மட்டும் அவளுக்கு இறுகி இருந்தது.
அன்று மோகனுக்கு விடுதலை நாள். காலையிலே தேவகியும் பிள்ளைகளும் அவருக்காக சிறைச்சாலை வாசலில் காத்திருந்தார்கள்.
தலைக்கு டை அடிக்காததால் நரைத்த தலையும், லேசான தாடியுடனும் வெளியே வந்த மோகனின் கம்பீரம் மட்டும் இன்னும் குறையவே இல்லை.
அவர் வெளிய வந்ததும் ஜானகி ஓடிச் சென்று அவரை இறுக அணைத்து அவர் மார்பில் முகம் புதைக்க அவருக்கு ஒரு பக்கம் தேவகியும் மற்றொரு பக்கம் விஷ்ணுவும் அவர் தோளில் சாய்ந்தார்கள்.
மூவரையும் அணைத்துக் கொண்ட மோகனின் கண்களும் கலங்கியது. ஆனால் ஒரு நொடி கூட தான் செய்த கொலையில் அவருக்கு குற்ற உணர்வே வரவில்லை.
தேவகியும் விஷ்ணுவும் தங்களைத் தேற்றிக் கொள்ள ஜானகி மட்டும் தகப்பன் நெஞ்சில் சாய்ந்து கதறிக் கொண்டிருந்தாள். “குட்டி மா, அதான் அப்பா வந்துட்டேன் தானே டா? இன்னும் எதுக்கு அழுற? இனி அப்பா உன் கூடவே தான் இருப்பேன். பழசு எல்லாம் மறந்துரு டா”, என்று சொல்ல அவரை விட்டு விலகி நின்றவள் “சாரிப் பா”, என்றாள்.
“அப்பா கிட்டயே சாரி கேப்பியா நீ? சரி வாங்க வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்ல நால்வரும் காரில் ஏறியதும் கார் வீட்டுக்கு கிளம்பியது.
அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் தேவகி அவரை வீட்டுக்குள் கூட விடாமல் வீட்டின் பின் பக்கம் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றவள் அவர் தலை நிறைய எண்ணெய் வைத்து தேய்த்து சீகைக்காய் போட்டு குளிக்க வைத்து புது உடையை அணிவித்து ஆரத்தி எடுத்த பின்னர் தான் உள்ளே அழைத்துச் சென்றாள். மோகனுக்கு வெகு நாட்கள் கழித்து தன்னுடைய கூட்டுக்குள் வந்த நிம்மதி வந்தது.
அனைவரின் மனதிலும் பல விஷயங்கள் பேச இருக்கிறது தான். ஆனால் அதையெல்லாம் பேசினால் மனம் வருத்தப் படுமே என்று எண்ணியே சாதாரண விசயங்களைப் பேசினார்கள்.
சூடான இட்லியும் நல்லி எலும்புக் குழம்பையும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பரிமாறிய தேவகி கண்களில் வெகு நாட்களுக்கு பிறகு சந்தோஷம் நிறைந்திருந்தது.
இத்தனை வருடம் ஜெயிலில் சாப்பிட்ட சாப்பாடை எண்ணி ஒரு நொடி கலங்கி இட்லியைப் பிய்த்து மோகன் வாயில் வைக்கப் போக அதற்கு முன் அவர் வாயருகே இட்லியை நீட்டிய படி இருந்தாள் ஜானகி.
எப்போதும் அவர் தான் அவளுக்கு ஊட்டி விடுவார். இன்று மகள் அவருக்கு ஊட்டி விட ஆனந்தமாக வாங்கிக் கொண்டவரின் கண்கள் கலங்கியது. ஒரு நொடியில் கண்ணைத் துடைத்துக் கொண்டவர் தன்னுடைய தட்டை நகட்டி விட்டு மகள் ஊட்ட ஊட்ட சாப்பிட்டு முடித்தார்.
தந்தை போதும் என்று சொன்னதும் ஜானகி சாப்பிட ஆரம்பிக்க இப்போது அவர் மகளுக்கு ஊட்டி விட்டார். முன்பு மோகன் அவளுக்கு ஊட்டி விடும் போதெல்லாம் தேவகியும் விஷ்ணுவும் “இவ சின்ன லொல்லையா?”, என்று கேட்பார்கள். இப்போதோ நெகிழ்ந்து போய் இருந்தார்கள்.
ஒரு வழியாக காலை உணவு முடிய சிறிது நேரம் பிள்ளைகளின் வேலை பற்றி பேசியவர் விஷ்ணுவிடம் பழைய வீடு பற்றிக் கேட்டார்.
அந்த வீட்டில் இருந்தால் மோகனின் நினைவு வருகிறது என்று எண்ணி தான் இந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தார்கள். இப்போது மோகனே அங்கு போகலாம் என்று சொல்ல “சரிப்பா நான் ஆட்களை வச்சு அங்க கிளீன் பண்ணிட்டு சொல்றேன். ஒரு நல்ல நாள்ல போகலாம். சரி நான் ஆபீஸ் கிளம்புறேன். மதியம் சாப்பிட வரேன்”, என்று சொன்ன விஷ்ணு வேலைக்கு கிளம்பினான்.
ஜானு தந்தை தோளில் சாய்ந்த படியே பேசிக் கொண்டிருந்தாள். “ஜானு அப்பா கொஞ்ச நேரம் தூங்கட்டும்”, என்று தேவகி சொல்ல மோகன் மறுக்க அம்மா மகள் இருவரும் பிடிவாதமாக அவரை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர்.
தேவகி ஜானு இருவரும் மதிய உணவுகளை செய்ய துவங்க மோகன் நன்கு தூங்கிப் போனார். இத்தனை நாட்கள் அவரை அண்டாத தூக்கம் இன்று அவரை ஆட்கொண்டது.
ஓரளவு வேலைகள் முடிந்ததும் “நீ ரெஸ்ட் எடு குட்டிமா. மத்தது நான் பாத்துக்குறேன்”, என்று தேவகி சொல்ல “சரி மா”, என்று சொல்லி விட்டு வந்தவள் தந்தையை தான் காணச் சென்றாள்.
அவர் நல்ல உறக்கத்தில் இருக்க அவர் அருகே அமர்ந்து அவரையே பார்த்த படி இருந்தாள். தந்தை தன்னோடிருப்பதை எண்ணி அவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
சிறிது நேரத்தில் அவருக்கு விழிப்பு வர எதிரே அமர்ந்திருந்த மகளைக் கண்டதும் “பாப்பா அப்பா ரொம்ப நேரம் தூங்கிட்டேனா டா?”, என்று கேட்டார்.
“இல்லை பா, தூங்குங்க”, என்றவள் அவர் காலருகே அமர்ந்து அவர் காலை எடுத்து மடியில் வைத்து பிடித்து விட ஆரம்பித்தாள்.
“வேண்டாம் குட்டிமா, என்ன செய்யுற? விடு”, என்று அவர் மறுக்க “எத்தனை நாள் எனக்கு செஞ்சீங்க? பேசாம படுங்க”, என்று அவள் அதட்ட சிறு சிரிப்புடன் படுத்திருந்தவர் மகளின் பேச்சைக் கேட்ட படியே மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.
அவர் தூங்கியது தெரிந்தாலும் தந்தையின் கால்களை பிடித்து விட்டுக் கொண்டே இருந்தாள். இத்தனை வருடம் செருப்பு இல்லாமல் நடந்த கால்கள் வெடிப்பு விழுந்து இருக்க அதைக் காணும் போதே மகளுக்கு கஷ்டமாக இருந்தது. பழைய விஷயம் நினைவு வந்தது.
ஜானகி கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் போது ஒரு நாள் ஜானகி சோபாவில் படுத்திருக்க அவளுக்கு கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார் மோகன்.
“நீங்க எதுக்குங்க இதெல்லாம் செய்றீங்க?”, என்று சொன்ன தேவகி மகளை முறைக்க “என் செல்ல குட்டிக்கு நான் செய்யாம யார் செய்வாங்களாம்?”, என்று கேட்டார் மோகன்.
“இவளுக்கு ஓவரா செல்லம் கொடுக்குறீங்க? எங்க போய் முடியப் போகுதோ? என்னைக்காவது இவ திமிரும் அழியும்”, என்று கத்தி விட்டு தேவகி உள்ளே செல்ல “அப்பா”, என்றாள் மகள்.
“அதெல்லாம் இல்லை டா. நீ யாரையும் ஹர்ட் பண்ணுறியா?”
“இல்லை பா”, என்றாள் .
“அப்படின்னா நீ இப்படியே இரு டா. நீ போல்டா இருக்குறது மத்தவங்களுக்கு திமிர் பிடிச்ச மாதிரி தெரியலாம். யாருக்காகவும் நாம மாறணும்னு அவசியம் இல்லை டா”
“ஓகே பா”, என்று சிரித்தாள் மகள். அதற்கு பின்னும் வெகு நேரம் அவளுக்கு காலை பிடித்து விட்டுக் கொண்டே இருந்தார் மோகன். அதை நினைத்துப் பார்த்து இப்போது அவள் தந்தைக்கு செய்தாள்.
அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் பழைய வீட்டுக்கே சென்று விட்டார்கள். வீடு என்றால் சாதாரணமாக எல்லாம் இல்லை. குட்டி அரண்மனை என்று கூட சொல்லலாம்.