ஆனால் அதில் இருந்த ஒரு எழுத்து கூட அவன் கருத்தைக் கவர வில்லை என்பது தான் நிஜம். அவன் நினைவுகள் அத்தனையும் ஜானு மட்டுமே. “இன்னைக்கு ஸ்கூல்க்கு வருவாளா? ஸ்கூல்க்கு சேலைல தானே வருவா? எப்படி பிள்ளைங்களுக்கு பாடம் எடுப்பா?”, என்று பல கேள்விகள் அவனுக்குள் எழுந்து மனது குறுகுறுத்தது.
“டேய் ரகு, குட்டிக்கு ஷூ போட்டு விடு டா. நான் அவனுக்கு ஸ்னாக்ஸ் எடுத்து வைக்கலை”, என்று நிர்மலா சொன்னதும் நடப்புக்கு வந்தான்.
“சரி மா”, என்றவன் சாக்ஸை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்த மகன் அருகில் தரையில் அமர்ந்து “குட்டி ஷூ போடலாமா?”, என்ற படியே அவனது வலது காலை எடுத்து மடியில் வைத்து போட்டு விட ஆரம்பித்தான்.
சாக்ஸ் போட்டு விட்ட படியே அன்னை எங்கே என்று பார்வையால் துளாவியவன் மகனுக்கு மட்டும் கேட்கும் வகையில் மிக மெதுவாக “ஆதி கண்ணா உனக்கு புது ஸ்கூல் பிடிச்சிருக்கா டா?”, என்று கேட்டான்.
“புடிச்சிருக்கு பா, எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க”
“ஸ்கூல்க்கு போயே ஒரு நாள் தானே டா ஆச்சு? அதுக்குள்ள உனக்கு பிரண்ட்ஸ் கிடைச்சிட்டாங்களா?”
“என்ன டா பொண்ணு பேரா சொல்ற? பசங்க பிரண்ட்ஸ் இல்லையா?”
“ரிஷி, அரவிந்த் அவ்ளோ தான் பா”, என்று சொன்ன ஆதியிடம் எப்படி ஜானுவைப் பற்றிக் கேட்க என்று யோசனையாக இருந்தது ரகுவுக்கு.
“சூப்பர் டா, எல்லா மிஸ்ஸும் நல்லா படிக்க வைக்கிறாங்களா? உனக்கு பிடிச்ச மிஸ் யாரு?”, என்று கொக்கி கேட்டான். ரகுவுக்கு மகன் எப்படியாவது ஜானுவைப் பற்றி பேசி விட மாட்டானா என்ற ஏக்கம். அதனால் தான் மகனைக் கேள்விகளால் குடைந்தான்.
“எல்லா மிஸ்ஸும் நல்லா நடத்துவாங்க பா. ஆனா எனக்கு ஜானு மிஸ் தான் ரொம்ப பிடிக்கும்”, என்று மகன் சொல்ல அந்த பெயரில் ரகு கண்கள் ஒளிர்ந்தது.
“உனக்குமா டா?”, என்று கேட்டு விட்டு நாக்கைக் கடித்தவன் “ஏன் டா ஜானு மிஸ்ஸைப் பிடிக்கும்? அவங்க தான் நல்லா நடத்துவாங்களா?”, என்று கேட்டான்.
“நல்லாவும் நடத்துவாங்க. அவங்க தான் அழகா இருக்காங்க. எங்களைப் பாத்து சிரிச்ச்சிட்டே இருப்பாங்க. அப்புறம் ஆதி குட்டின்னு என் கன்னத்தைப் பிடிச்சு கொஞ்சிட்டு போனாங்க. மத்த மிஸ் எல்லாம் அப்படி கொஞ்ச மாட்டாங்க”, என்று சொல்ல அவன் சுவாரசியம் கூடியது.
“அவங்க உன்னைக் கொஞ்சுவாங்களா? உன்னை மட்டுமா? இல்லை மத்த எல்லாத்தையும் கொஞ்சுவாங்களா?”
“இல்லைப்பா, என்னை மட்டும் தான். அதுவும் சாயங்காலம் வீட்டுக்கு போகும் போது தான்”, என்று சொல்ல அவனுக்கு வியப்பாக இருந்தது.
“ஏன் அப்படி? ஒரு வேளை உருவத்தை வச்சு கண்டு பிடிச்சிருப்பாளோ?”, என்று குழப்பத்துடன் மகனுக்கு ஷூ போட்டு முடித்தான். ஆனால் ஆதி கீர்த்தியைப் போல இல்லையே. பின்னே ஏன் இவனிடம் மட்டும் பாசமாக இருக்கிறாள் என்று குழப்பம் வந்தது. அந்த பாசம் ஆதி பேருக்கு பின் இருந்த ரகுராம் என்ற பெயருக்காக தான் என்று ரகு அறியவில்லை.
“என்ன ரகு? நீ இன்னும் ஆபீஸ் கிளம்பலையா?”, என்று நிர்மலா கேட்டதும் “போகணும் மா, இன்னும் நேரம் இருக்கு”, என்றான்.
“அப்படின்னா குட்டியை ஸ்கூல்ல விட்டுறியா டா? எனக்கு கொஞ்சம் படபடன்னு வருது”
“அம்மா என்ன மா செய்யுது? வா மா ஆஸ்பத்திரி போகலாம்”
“எனக்கு ஒண்ணும் இல்லை டா. சுகர் லேசா கூடிருக்கும். மாத்திரை போட்டா சரியாகிரும்”
“ஆமா, சப்பாத்தி சாப்பிட சொன்னா அந்த பிரச்சனை இந்த பிரச்சனைன்னு சொல்லி அரசி சோறா சாப்பிடு. பின்ன சுகர் கூடாம என்ன செய்யும்? ஒழுங்கா ஏதாவது சாப்பிட்டுட்டு மாத்திரை போடு. உடம்பை பாத்துக்கோ மா. இல்லைன்னா வா, குட்டியை ஸ்கூல்ல விட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு போகலாம். நான் லீவ் போடுறேன்”
“எனக்கு ஒண்ணும் இல்லை டா, கவலைப் படாதே எனக்கு ஒண்ணும் ஆகாது. உங்க ரெண்டு பேரையும் அவ்வளவு சீக்கிரம் தனியா விட்டுட்டு போயிருவேனா? சரி நேரம் ஆச்சு. நீங்க கிளம்புங்க”, என்று சொல்ல பெருமூச்சோடு மகனைத் தூக்கி கொண்டு கிளம்பினான்.
காரைக் கிளப்பியதும் மனதுக்குள் குறுகுறுப்பாக இருந்தது. “அவளை இன்று பாக்க முடியுமா? இல்லை அவ என்னைப் பாத்தா என்ன சொல்லுவா? முன்ன மாதிரி கோபமா பேசுவாளா?”, என்று எண்ணினான்.
“அவளுக்கு அன்னைக்கு பாத்த பையன் கூட கல்யாணம் முடிவாகிருக்கும். இந்நேரம் அவ ஸ்கூலுக்கு லீவ் கூட போட்டிருப்பா”, என்ற எண்ணமும் அவனுக்கு வந்தது.
பள்ளியில் காரை நிறுத்தியதும் இறங்கியவன் மற்றொரு பக்கம் வந்து மகனை கீழே இறக்கினான். மகனுடன் ஒரு அடி பள்ளிக்குள் எடுத்து வைக்கவும் தான் பார்க்கிங்கில் இருந்து ஜானகி வருவது தெரிந்தது. ஆனால் அவள் வெளியே பார்க்க வில்லை.
“ஆதி குட்டி அங்க பாரு டா உன்னோட ஜானு மிஸ் போறாங்க”
“ஆமா பா, நான் அவங்க கிட்ட போகட்டா?”, என்று கேட்க “சரி போ”, என்று சொல்ல ஓடிப் போய் அவள் கையைப் பற்றிக் கொண்டான்.
சட்டென்று திகைத்து திரும்பிப் பார்த்த ஜானகி ஆதியைக் கண்டதும் “டேய் குட்டி”, என்ற படியே அவன் உயரத்துக்கு குனிந்து அமர்ந்தவள் அவன் கன்னம் வருடி “என்ன கண்ணா தனியா வந்திருக்க. பாட்டி கூட வரலையா?”, என்று கேட்டாள்.
“அப்பா கூட வந்தேன் மிஸ்”, என்று சொல்லி கண்களைச் சுழற்ற “எங்க டா?”, என்று திரும்பிப் பார்த்தாள். மகனும் தந்தை நின்ற இடத்தை திரும்பிப் பார்த்தான். அங்கே யாரும் இல்லை.
அவன் தேடுவதை பார்த்து “உன்னை விட்டுட்டு போயிட்டாங்க போல டா. சரி சாப்பிட்டியா?”, என்று கேட்டவள் அவன் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.
“சாப்பிட்டேன் மிஸ்”
“குட்டி, என்ன சாப்பிட்டீங்க?”
“தோசை”
“சமத்து”, என்ற படி அவன் கன்னத்தில் முத்தமிட்டு “சரி, நான் உனக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்தேன். இரு தரேன்”, என்று சொன்னவள் சாக்லெட்டை எடுத்து அவன் பையில் வைத்தாள். பின் “இதை வீட்ல போய் தான் சாப்பிடணும் சரியா?”, என்று கேட்டாள்.
“ஏன் மிஸ்? எனக்கு இந்த சாக்லேட் ரொம்ப பிடிக்கும். நான் கிளாஸ்க்கு போய்ச் சாப்பிடுறேன்”
“சமத்து டா. ஆனா உன் பிரண்ட்ஸ் உனக்கு சாக்லேட் ஏதுன்னு கேப்பாங்கல்ல? நீ ஜானு மிஸ் வாங்கித் தந்ததுன்னு சொல்லுவ? அப்புறம் அவங்க எல்லாரும் கேப்பாங்க. எனக்கு அவங்க எல்லாருக்கும் வாங்கிக் கொடுக்க பைசா இல்லை கண்ணா”
“ஓ அப்படியா மிஸ்? சரி நான் வீட்ல போய் சாப்பிடுறேன். அப்பாக்கு ஆச்சிக்கு கொடுத்து சாப்பிடவா? அப்பாக்கு இந்த சாக்லேட் ரொம்ப பிடிக்கும்”, என்று அவன் சொல்ல “ரகுவுக்கும் இந்த சாக்லேட் ரொம்ப பிடிக்கும்”, என்று எண்ணியது அவள் மனது. ஆனால் ஒரு நொடி கூட ரகுவின் குழந்தை தான் ஆதியாக இருக்குமோ என்ற சந்தேகம் வரவே இல்லை. ஏனென்றால் அவளைப் பொருத்த வரை ரகு இந்த ஊரிலே இல்லை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.
“சரி குட்டி, வா கிளாஸ்க்கு போகலாமா?”, என்று கேட்டவள் அவன் தலையாட்டியதும் அவன் கை பற்றி அழைத்துச் சென்றாள். அவனை தூக்கிச் செல்ல வேண்டும் என்று ஆசையாக தான் இருந்தது. ஆனால் யாராவது பார்த்தால் ஏதாவது பேச்சு வரும் என்று எண்ணி அமைதியாக அவனுடன் நடந்தாள். இதையெல்லாம் மறைந்து நின்று ரகு பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
அவர்கள் பேசுவது கேட்க வில்லை என்றாலும் என்ன பேசியிருப்பார்கள் என்று புரிந்தது ரகுவுக்கு. ஏனோ இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பு அவனுக்குள் சிறு திகைப்பையும் யோசனையையும் கொடுத்தது.
தோழியை அவன் உருவில் கண்டதால் தான் ஜானகி ஆதியுடன் ஒட்டுதலாக இருக்கிறாளோ என்று எண்ணியவனுக்கு ஆதி கீர்த்தி போல இல்லை என்ற உண்மையும் புரிந்து தான் இருந்தது. ஆனாலும் கீர்த்தியின் மகன் என்பதால் தான் அவள் மேல் அன்பாக இருக்கிறாள் போல என்று நம்பினான். அவர்களின் நட்பின் மேல் மரியாதையும் வந்தது. ஆனால் அவர்களிடையே இருந்தது நட்பின் ஒரு துளி கூட இல்லை என்று தெரிந்தால் அப்போது என்ன செய்வானோ? இல்லை பல உண்மைகள் தெரிய வந்தால் அவன் மனநிலை எப்படி இருக்குமோ?
அன்று ஞாயிற்றுக்கிழமை, காலை எட்டு மணி போல எழுந்த ஜானகி அறையை விட்டு வெளிய வந்தாள். அங்கே விறுவிறுப்பாக பிரியாணி செய்து கொண்டிருந்தாள் தேவகி.
“பிரியாணியா மா?”, என்று கேட்ட படி அன்னையை கட்டிக் கொண்டு குக்கரை வாசம் பிடித்தாள் மகள்.
“ஆமா டி, அவருக்கு ரொம்ப பிடிக்கும்”, என்று சொல்லும் போதே தேவகி கண்கள் கலங்கியது.
அன்னையை அணைத்துக் கொண்டவள் கண்களும் கலங்கியது. அன்னையை திசை திருப்ப “நேரம் ஆச்சு மா கிளம்பனும்”, என்று சொல்ல “சரி டி”, என்றவள் சமையலில் மூழ்கினாள்.
சரியாக ஒன்பதரை மணிக்கு வீட்டைப் பூட்டி விட்டு தாயும் மகளும் கிளம்பினார்கள். அப்போது சரியாக வாசலில் காரில் இருந்து இறங்கினான் விஷ்ணு.
.
“வா டா விஷ்ணு, நேத்தே வருவேன்னு எதிர் பாத்தோம்? சரி வா உள்ள போகலாம்”
“இல்லை மா, முதல்ல அப்பாவைப் போய் பாக்கலாம். நான் லக்கேஜ் வச்சிட்டு வரேன். நேரம் ஆச்சு”, என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் லக்கேஜ் வைத்து விட்டு வர அவன் வந்த காரிலே மூவரும் கிளம்பினார்கள்.
மோகனைக் காண அவர்கள் சென்றது சிறைச்சாலைக்கு தான். ஏற்கனவே மனுப் போட்டிருந்ததால் சிறிது நேரக் காத்திருப்புக்கு பின் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது.
ஐந்து நாட்கள் ஆன தாடியுடன் கைதி உடையுடன் அவர்கள் முன் பிரசன்னமானார் மோகன். அவரைக் கண்டு தேவகிக்கு கண்ணீர் பெருகியது என்றால் பிள்ளைகளுக்கு மனம் கலங்கியது. அதுவும் ஜானுவோ நொறுங்கிப் போய் நின்றிருந்தாள். அவளுக்காக அல்லவா அவளது தந்தை இந்த நிலையில் இருக்கிறார் என்று அவள் ஆவி துடித்தது.
“மனைவி மகனைப் பற்றி எல்லாம் கேட்காமல் “குட்டி மா எப்படி இருக்க டா?”, என்று மகளைக் கேட்ட பிறகு தான் மனைவி மகனை விசாரித்தார் மோகன். மகள் என்றால் அவரது உயிர் அல்லவா?”
“என்னால தானேப்பா உங்களுக்கு இந்த நிலைமை?”, என்று அவள் அழ அவளை இழுத்து அணைத்து ஆறுதல் சொல்ல முடியாத தவிப்பு அந்த தகப்பனிடம். அவர் விஷ்ணுவிடம் கண்ணை காட்ட “பாப்பா என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி?”, என்று கேட்டவன் ஆறுதலாக தங்கையை அணைத்துக் கொண்டான். அண்ணனின் அணைப்பில் கொஞ்சம் சமாதானமானாள்.
“எப்படி இருக்க தேவி?”, என்று மோகன் மனைவியைக் கேட்க “எனக்கு என்ன? கல்லு மாதிரி தானே இருக்கேன்? நீங்க தான் மெலிஞ்சிட்டீங்க?”, என்று சொன்னாள்.
“உன் சமையல் இல்லாம எப்படி நான் குண்டா ஆக முடியும்? இன்னும் ஆறு மாசம் தான். அப்புறம் வெளிய வந்துருவேன். அப்புறம் ரோடு ரோலர் மாதிரி என்னை ஆக்கிரு”, என்று சிரிக்க பிள்ளைகளும் சிரித்தார்கள்.
“பிள்ளைகளுக்கு ஏதாவது வரன் வந்துச்சா தேவி? தரகர் கிட்ட பேசுனியா?”
“வருதுங்க? ஆனா உங்க பிள்ளைங்க தான் என் பேச்சக் கேக்குறதே இல்லை”
“நாள் ஆக ஆக எனக்கு பயமா இருக்கு தேவி. நான் ஜெயில்ல இருக்கேனு தெரிஞ்சா என் பிள்ளைக கல்யாணம் என்ன ஆகுமோன்னு?”
“அப்படி எல்லாம் இல்லைங்க. நம்மளோட உண்மை நிலையை அறிஞ்சு யார் நம்ம பிள்ளைகளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்காங்களோ அவங்களை தான் பிள்ளைகளுக்கு கட்டி வைக்கணும். முதல்ல நீங்க வெளிய வாங்க. அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்”
“நேரம் ஆகி விட்டது”, என்று ஜெயிலர் சொல்ல அனைவரும் கிளம்பினார்கள். தேவகி முன்னால் நடக்க அவள் பின்னாலே விஷ்ணு சென்றான். கடைசியாக ஜானகி நடந்தாள்.
“குட்டி மா”, என்று மோகன் அழைக்க வேகமாக அவர் அருகே வந்து அவர் கையைப் பற்றி “என்ன பா?”, என்று கேட்டாள்.
“ரகுவை மறந்துட்டியா டா?”
“முடியலைப்பா, சாரி”, என்று சொல்ல “சரி டா அப்பா வெளிய வந்த அப்புறம் பேசிக்கலாம்’”, என்று சொல்ல சரி என்னும் விதமாய் மகள் தலையசைக்க சிரித்த முகமாக அவளை அனுப்பி வைத்தார். மனைவி பிள்ளைகளைக் கண்டு அவர் மனம் கலங்கிப் போனது. அதுவும் மகளுக்காக அதிகமாகவே கலங்கி விட்டார்.
அவர் மனதில் இருந்த ரகசியங்கள் அவரை வெகுவாக காயப் படுத்தியது. இன்னும் அந்த ரகசியங்களை அவர் யாரிடமும் சொல்லி இருக்க வில்லை. சொன்னால் ஜானகி தாங்கிக் கொள்ள மாட்டாள் என்று தான் அவருக்கு தெரியுமே?
இன்னும் ஆறு மாதத்தில் தண்டனை காலம் முடிந்த பிறகு மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியுமா என்று வேதனையாக இருந்தது.
ஏதாவது உருட்டல் மிரட்டல் செஞ்சு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். ஆனால் மகளை இப்படியே தனியே விடவே கூடாது என்பது மட்டும் அவர் முடிவு.