அவள் அவனைப் பார்க்க வில்லை. ஆனால் அவன் பார்த்தான். ஊதா நிறச் சுடிதாரில் உண்மையான சங்குப்பூ போல அவ்வளவு அழகாக இருந்தாள் அவனது ஜானு.
“மிர்ச்சி ரொம்ப மாறிட்டா. அன்னைக்கு என்னனா சேலை. இப்ப சுடிதார். முகமும் ரொம்ப சந்தோஷமா இருக்கு”, என்று எண்ணியவனுக்கு இப்போது அவள் முகத்தில் உள்ள புன்னகை உள் மனதில் இருந்து வருவது என்று புரிந்தது.
“மிர்ச்சி நீ எப்பவும் சிரிச்சிட்டே நல்லா இருக்கணும் டி. என்னை உதாசீனப் படுத்தி என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கலைன்னு உனக்கு சாபம் எல்லாம் கொடுக்க மாட்டேன்”, என்று எண்ணிக் கொண்டு மகனைத் தூக்கிக் கொண்டு தியேட்டருக்கு சென்று விட்டான். நவீனும் ஜானுவும் படம் பார்க்க அமர்ந்தார்கள். இடைவெளி வரும் வரைக்கும் இருவருக்கும் இடையே எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. இடைவெளி விட்டதும் “சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரவா?”, என்று அவன் கேட்க அவளும் அவனுடன் சென்று ஸ்னாக்ஸ் ஐட்டங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் சீட்டில் அமர்ந்தார்கள்.
“இப்ப பேசலாமா?”, என்று கேட்டான் நவீன்.
இது வரை இருந்த இதம் போய் “ம்ம்”, என்று முணுமுணுத்தாள்.
“உன்னைப் போட்டோல பாத்ததுமே எனக்கு பிடிச்சிருச்சு ஜானு. விஷ்ணுவும் உன்னைப் பத்தி நிறைய சொன்னான். நான் கடைசி வரை உனக்கு நல்ல லைப் பார்ட்னரா இருப்பேன். உன் முடிவு சொல்லு. என்னை உனக்கு பிடிச்சிருக்கா?”
“பிடிச்சிருக்கு நவீன்”, என்று சொன்னாள். மனம் ஒரு மாதிரி இருந்தாலும் அன்னை, அண்ணனுக்காக இது தான் அவள் முடிவு.
அவள் அப்படிச் சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது. “ஏய் ஜானு நிஜமாவா? அப்படின்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? நான் வீட்ல பேசட்டா?”, என்று கேட்க “சரி பேசுங்க. எனக்கு சம்மதம்”, என்றாள். ஆனால் அதைச் சொல்லும் போது அவள் முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை.
அதைக் கவனிக்காதவன் அவள் கையைப் பற்றிக் கொண்டு “தேங்க்ஸ் ஜானு. நீ சட்டுன்னு சம்மதம்னு சொல்லுவேன்னு நான் நினைக்கலை”, என்றான். அவன் தொடுகையில் அவள் கையை உருவிக் கொள்ள நினைக்க அப்போது அவளுடைய கையை தன் வாயருகே முத்தமிட கொண்டு சென்றான் நவீன். அடுத்த நொடி படக்கென்று கையை உருவி விட்டாள்.
“பிளீஸ் ரகு, கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் வேண்டாமே”, என்று கண்களை மூடிக் கொண்டு முனகினாள். அடுத்த நொடி தீச்சுட்டது போல படக்கென்று விலகி அமர்ந்தான் நவீன். அங்கே அமைதியே நிலவியது. அவனும் பேச வில்லை அவளும் பேச வில்லை.
“என்ன ஆச்சு ஏன் அமைதியா இருக்காங்க? என் மேல கோபமா?”, என்று எண்ணி அவள் அவனைப் பார்க்க அவன் பார்வையோ எங்கோ வெறித்தது.
“என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கார்? கல்யாணத்துக்கு அப்புறம் தொடுன்னு சொன்னது தப்பா?”, என்று எண்ணியவளுக்கு அப்போது தான் ரகு என்ற பெயரை தான் சொன்னதே நினைவில் வந்தது. அவசரமாக அவனை திரும்பிப் பார்த்தாள். இப்போது அவன் கூர்மையுடன் அவளையே பார்த்தான்.
அவன் பார்வை அவளைக் குற்றம் சாட்ட ஜானகி கண்கள் கலங்கி விட்டது. அவனைக் காயப் படுத்தி விட்டோம் என்று நன்கு புரிந்தது அவளுக்கு. திருமணத்துக்கு சம்மதம் சொல்லி, அவனை பிடித்திருக்கிறது என்றும் சொல்லி அவன் முத்தமிட வரும் போது வேறு ஒருவனின் பெயரை சொன்னால் அதை எந்த ஆண்மகனால் தான் தாங்க முடியும்?
“நவீன் நான்…. அது…”, என்று அவள் திணற “உன்னோட ஒன் சைட் லவ் பத்தி வருண் சொன்னான். அவன் பேர் ரகுவா?”, என்று கேட்டான்.
“ம்ம்”
“இப்பவும் அவனை விரும்புறியா?”
“அது…”
“அவனுக்கு மேரேஜ் ஆகிருச்சு தானே?”
“ஆமா”
“அப்படியும் அவனை மறக்க முடியலையா?”, என்று அவன் கேட்க மௌனமாக இருந்தாள்.
“ஒரு பொண்ணு காதலிச்சா அப்படிங்குறதுனால அவளை வேண்டாம்னு சொல்ற அளவுக்கு நான் அறிவில்லாதவன் இல்லை. அதே நேரம் இன்னொருத்தரை மனசுல வச்சிருக்குற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு எனக்கு பெரிய மனசும் இல்லை. நான் சொல்றது உனக்கு புரியுதா ஜானு?”
“புரியுது. தப்பு என் பேர்ல தான்”, என்று குற்ற உணர்வுடன் சொன்னாள்.
“சரி எல்லாத்தையும் விடு. நான் இப்ப கேக்குறதுக்கு தெளிவா யோசிச்சு பதில் சொல்லு. அவசரமே வேண்டாம். எவ்வளவு நாள் வேணும்னாலும் டைம் எடுத்துக்கோ. நான் நாளைக்கே எங்க வீட்ல பேசி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வச்சிக்கோ. கல்யாணம் முடிஞ்சதும் உனக்கு எத்தனை வருஷம் வேணும்னாலும் டைம் தரேன். ஆனா நீ ரகுவை மறக்கணும். அவனை மறந்து என் கூட வாழனும். நீ முழுசா மாறுற வரை நான் காத்திருப்பேன். ஆனா உன்னால அது முடியுமா? ரகுவை மறந்துருவேன்னு உன்னால உத்திரவாதம் கொடுக்க முடியுமா?”, என்று அவன் கேட்க மறுப்பாக தலையசைத்தாள். அதுவே அவள் இனி தனக்கு இல்லை என்ற உண்மையை நவீனுக்கு உணர்த்தியது.
“எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற அவரை மறக்க முடியாதுன்னு?”, என்று கேட்டான்.
“ஏன்னா ரகு இன்னொரு பொண்ணோட புருசன்னு ஆனதுல இருந்தே அவனை மறக்க டிரை பண்ணிட்டு தான் இருக்கேன். ஆனா என்னால முடியலை. மறக்கணும் மறக்கணும்னு நினைக்க நினைக்க தான் அவனை ஓவரா நினைக்கிறேன். நீங்க பெரிய மனசு பண்ணி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நவீன் ரொம்ப நல்லவர். நவீன்க்காக நான் ரகுவை சீக்கிரம் மறக்கணும்னு சொல்லி சொல்லியே ரகுவை நான் அதிகமா தான் நினைப்பேன்”, என்று மனதை சொல்லி விட்டாள்.
“அப்புறம் எந்த தைரியத்துல கல்யாணத்துக்கு சரின்னு சொன்ன?”
“தெரியலை. ரகுவை மறந்துற முடியும்னு என்னையே நான் ஏமாத்திக்கிட்டேனோ என்னவோ? ஆனா உங்க அருகாமை எனக்கு அவனை தான் நினைவு படுத்துச்சு. ஏதோ அவனே கிட்ட வந்த மாதிரி…. சாரி”
“எனக்கு உன்னைப் புரிஞ்சிக்க முடியுது ஜானு. இன்னும் சொல்லப் போனா ஒரு பொண்ணு ஒரு பையனை இந்த அளவுக்கு லவ் பண்ணுவாளான்னு எனக்கு வியப்பா இருக்கு. உன்னை மிஸ் பண்ணுறோம்னு கஷ்டமா இருக்கு”, என்று அவன் முடிவைச் சொல்ல அவனது புரிதலில் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
“இட்ஸ் ஓகே ஜானு. பட் இதுக்கு எண்ட் கார்ட் இல்லையா? உன் வாழ்க்கை முழுக்க அவனை நினைச்சிட்டு வீணாக்க போறியா?”
“இந்த விசயத்துக்கு ஒரே ஒரு எண்ட் கார்ட் இருக்கு”
“எப்படி?”, என்று ஆர்வமாக கேட்டான்.
“என்னோட டெத்ல?”, என்று சொல்ல “வாட்?”, என்று அதிர்ந்து போனான்.
“ஆமா, நான் சாகுற அன்னைக்கு என்னோட எல்லா நினைவுகளும் அழிஞ்சிரும். ரகுவோட நினைவுகளும் என் கூடவே புதைஞ்சு போயிரும். நோ… என்னைப் புதைக்க கூடாது என் உடலை எறிச்சிரனும். அப்ப தான் அவன் லைப் சந்தோஷமா இருக்கும்”, என்றாள்.
அதைக் கேட்டு அதிர்ந்தவன் “லூசா நீ?”, என்று கடுப்புடன் கேட்க அவள் அழகாக புன்னகைத்தாள். ஏனோ நவீனுடன் நல்ல நட்புடன் இருக்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
“அந்த ரகு அன் லக்கி பெல்லோ ஜானு. இப்படி ஒரு பொண்ணை இழந்துட்டான்”, என்று எரிச்சலுடன் சொன்னான் நவீன்.
“நோ நவீன். நான் தான் அவனை இழந்துட்டேன். அவன் காதலை எட்டி உதைச்சிட்டேன். அவனுக்கு வலிக்கும்னு தெரிஞ்சே அவன் நெஞ்சத்தை கீறிட்டேன்”
“ஏன் அப்படி செஞ்ச? இந்த அளவுக்கு காதலை வச்சிட்டு ஏன் அவனை விட்ட? ஒரு வேளை அவன் உன் வாழ்க்கைல இருந்து போன அப்புறம் தான் அவன் காதல் உனக்கு புரிஞ்சதா?”
“இல்லை, அவனை நான் விலக்குறதுக்கு முன்னாடியே ஐ லவ் ஹிம். ஆனா என் காதலை அவன் கிட்ட சொல்ல முடியலை. அதுக்கு பதிலா அவனை கேவலமா பேசி விரட்டினேன்”
“ஏன் அப்படி பண்ணின?”
“பிரன்ஷிப்”
“வாட்”
“யெஸ், ரகு கல்யாணம் பண்ணிருக்குறது என்னோட ஃபிரண்ட் கீர்த்தியை”, என்று அவள் சொன்னதும் அதிர்ந்து போனான்.
“என்ன சொல்ற நீ? உன் பிரண்டும் ரகுவை விரும்பினாளாக்கும்? உன் கிட்ட என் லவ்வரை விட்டுடுன்னு சொன்னாளா? நீயும் விட்டுட்டியா?”
“கிட்டத்தட்ட அப்படி தான். ஆனா என் லவ் யாருக்கும் தெரியாது. கீர்த்திக்கும் தெரியாது. அவ லவ் எனக்கு தெரிஞ்சது. அதனால அவங்களை அவங்களுக்கே தெரியாம சேத்து வச்சிட்டேன்”, என்று சொல்ல அவளை வேதனையாக பார்த்தான்.
“உனக்கு என்ன பைத்தியமா ஜானு?”
“பைத்தியம்னு சொல்லிற முடியாது. சைக்கோன்னு சொல்லலாம்”, என்று சிரிக்க இப்போது நவீனும் புன்னகைத்தான்.