அந்த ஷாப்பிங் மாலுக்குள் இருந்த ரெஸ்டாரன்ட்டில் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் ஜானகியும் நவீனும். அவர்கள் முன்னே ஆரஞ்ச் ஜூஸ் வீற்றிருந்தது. நவீன் தான் அவளிடம் கேட்டு ஆர்டர் செய்திருந்தான். என்ன பேச என்று இருவருக்கும் தடுமாற்றமே. அதை முதலில் கலைத்த நவீன் “நாளைக்கு சாட்டர்டே, ஸ்கூல் லீவ் தானே?”, என்று கேட்டான்.
“ஆமா லீவ் தான்”, என்று பதில் சொன்னாலும் அடுத்து என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
“நாளைக்கு எங்கயாவது வெளிய போகலாமா?”, என்று அவன் கேட்க அவள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.
அவள் அமைதியாக இருக்க “நான் விஷ்ணு கிட்ட பெர்மிசன் வாங்குறேன். இப்ப நிஜமாவே எனக்கு என்ன பேசன்னு தெரியலை. நீங்களுமே அப்படி தான் இருக்கீங்க? பத்து நிமிசத்துல நமக்குள்ள எதையும் முடிவு பண்ண முடியாதுள்ள? அதான் நாளைக்கு வெளிய போகலாமான்னு கேட்டேன். ஆனா பிளீஸ் நீங்க என்னை நம்பி வரலாம். எனக்கும் ஒரு அக்கா இருக்காங்க. சோ பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியும்”, என்றான்.
“நீங்க அண்ணாவோட ஃபிரண்ட். நீங்க நல்லவங்களா தான் இருப்பிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நாளைக்கு வெளிய போகலாம். நான் வரேன்”, என்று சொன்னாள் ஜானகி.
இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு தனித் தனியே கிளம்பிச் சென்றனர். நவீன் அவளுடன் வீடு வரை துணைக்கு வருகிறேன் என்று தான் சொன்னான். ஆனால் அவள் வேண்டாம் என்று மறுத்து விட்டுச் சென்று விட்டாள்.
வீட்டுக்கு வந்ததும் தேவகி ஜானகியை எதிர்பார்ப்புடன் பார்த்தாள். மகள் நவீனை பிடித்திருக்கிறது என்று சொல்லி விட மாட்டாளா என்று அவளுக்கு ஏக்கமாக இருந்தது.
அன்னையின் ஏக்கம் புரிந்தாலும் “நாங்க இன்னும் மேரேஜ் பத்தி பேசலை மா. நாளைக்கு வெளிய போறோம். அப்புறம் என்னன்னு சொல்றேன்”, என்று சொன்னாள்.
அவள் நவீனுடன் வெளியே செல்ல ஒத்துக் கொண்டதே அந்த தாய்க்கு நிம்மதியாக இருந்தது. “சரி மா, சாப்பிட வா”
“நவீன் கூட சாப்பிட்டேன் மா. நீங்க சாப்பிட்டு படுங்க”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள். உண்மையிலே நவீன் அவளை சாப்பிடச் சொன்னான் தான். ஆனால் ஜூஸ் போதும் என்று மறுத்து விட்டு தான் வந்திருந்தாள். இப்போது சாப்பிட மனதில்லை என்பதால் தான் தாயிடம் பொய் சொன்னாள்.
அறைக்குள் வந்து உடை மாற்றியதுமே விஷ்ணு அவளை அழைத்தான். “சொல்லுண்ணா”
“நவீன் கிட்ட பேசுனியா டா? உனக்கு ஓகே வா?”
ஒரு நொடி தயங்கியவள் “எனக்கு ஓகே தான் அண்ணா. டீஸண்ட்டா பேசுறாங்க, பழகுறாங்க. ஆனா அவங்க கல்யாணம் பத்தி எதுவும் பேசலை. நாளைக்கு வெளிய கூப்பிட்டாங்க. சும்மா ஊர் சுத்த தான். போய் பேசிட்டு அப்புறம் பதிலைச் சொல்லவா?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.
“சரி மா, நவீன் ரொம்ப நல்லவன். அவனை மிஸ் பண்ணிறாத. நீ அவன் கூட வெளிய ஒரு டிரிப் போக ஒத்துகிட்டதே எனக்கு போதும். ஆனாலும் கவனம் சரியா?”, என்றவன் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தான். விஷ்ணுவுக்கு நண்பன் மீதும் தங்கை மீதும் நம்பிக்கை இருந்தது. அவன் எச்சரித்தது கூட வேறு ஏதாவது பிரச்சனை வந்து விடக் கூடாது என்று தான்.
இது வரை நவீனைப் போல நான்கு மாப்பிள்ளைகளை சந்தித்திருக்கிறாள். அவர்களுடன் வெளியே எல்லாம் சென்றது இல்லை. வீட்டுக்கே அவளைப் பார்க்க வந்தார்கள். ஆனால் பார்த்த உடனே அவர்களை அவளுக்கு பிடிக்காமல் போனது, இல்லை என்றால் அவர்கள் செய்கை பிடிக்காமல் போனது. ஆனால் நவீனை கொஞ்சமாவது பிடித்திருக்க காரணங்கள் இரண்டு. ஒன்று அவளுடைய அண்ணனுக்காகவும் அன்னைக்காகவும். இதற்கு மேல் அவர்களை காயப் படுத்த அவளுக்கு மனதில்லை.
இன்னொரு காரணம் நவீனின் கண்ணியமான பார்வையும் பேச்சும். ஆனால் அந்த பேச்சும் அவனது மரியாதையான பார்வையும் அவளுக்கு ரகுவை நினைவு படுத்துவது தான் இங்கு பிரச்சனையே. உண்மையிலே அவள் எதிரில் அமர்ந்து நவீன் பேச பேச ஜானகிக்கு இப்படி தானே ரகுவும் பேசுவான் என்றே தோன்றி வைத்தது. உண்மையிலே ரகு அப்படி தான். அவளிடம் அவனை மீறி சில்மிஷம் செய்வானே தவிர மற்றவர்களிடம் அவ்வளவு கண்ணியமாக பேசுவான். இப்போது நவீன் ரகுவை நினைவு படுத்தவும் இதில் இருந்து எப்படி மீள என்று அவள் அறிவு வேகமாக சிந்தித்தது.
ஆனால் அவள் நாடி நரம்புகளில் ஓடும் ரத்தம் எப்படியோ அது போல தான் அவள் உயிரில் கலந்த ரகுவும். அவனை அவ்வளவு எளிதாக அவளால் கடக்க முடியுமா? அவன் இருந்த இடத்தில் அம்மா அண்ணனுக்காக என்றாலும் நவீனை வைக்க முடியுமா என்ற குழப்பத்திலே தலை வலி வந்தது.
ரகுவை மறக்கணும். நவீனைக் கல்யாணம் பண்ணிக்கணும். ரகுவை மறக்கணும். ரகுவை நினைக்க கூடாது என்று சொல்லி சொல்லி மீண்டும் மீண்டும் அவள் மனது ரகுவையே சுற்றி வந்தது. அவன் நினைவுடனே தூங்கிப் போனாள். அதே நேரம் ரகுராமும் நிம்மதி இல்லாமல் தூக்கத்தை தொலைத்தான்.
அவன் படித்து முடித்து விட்டு கல்யாணம் முடிந்ததும் பெங்க்ளூரில் குடியேறி விட்டான். அங்கே இருக்கும் போதே அவனுக்கு வேலை கிடைத்தது. முதல் போஸ்டிங் திருவனந்தபுரம் தான். அதற்கு பின் இப்போது சென்னைக்கு டிரான்ஸ்பர் கிடைத்ததால் தான் இங்கேயே வந்தான். அதுவும் வந்த நான்கு நாட்களிலே அவனது மிர்ச்சியைப் பார்த்து விட்டான். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று தெரியாத ஒரு தடுமாற்றம் அவனை ஆட்கொண்டது. அவளைப் பற்றிய பழைய நினைவுகளிலே அன்றைய இரவைக் கழித்தான்.
அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு ஜானகியை அழைத்த நவீன் “நான் கிளம்பி வந்துட்டேன். உன்னை வீட்டுக்கு கூப்பிட வரவா ஜானகி?”, என்று கேட்டான்.
“இல்லை நவீன். நான் கிளம்பி மெயின் ரோட்டுக்கு வந்திறேன். அங்க வெயிட் பண்ணுங்க. இன்னும் அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன்”, என்று சொல்லி போனை வைத்தவள் அன்னையிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.
அவள் மெயின் ரோட்டுக்கு நடந்தே சென்ற போது நவீன் அங்கே அவளுக்காக காத்திருந்தான். நேற்று போல வண்டியை எடுத்து வராமல் காரை எடுத்து வந்திருந்தான். நிச்சயம் அது அவளுக்காக தான் என்று புரிந்தது. அவன் மேல் இன்னும் நல் மதிப்பு உண்டானது. நிச்சயம் அவளால் அவனுடன் ஒரே பைக்கில் எல்லாம் செல்லவே முடியாது. அவன் பைக் கொண்டு வந்திருந்தால் நான் ஆட்டோவில் வருகிறேன் என்று சொல்லி இருப்பாள்.
அவள் அருகே வந்ததும் முன் பக்க கார் கதவைத் திறந்து விட “குட் மார்னிங் நவீன்”, என்ற படியே ஏறி அமர்ந்தாள்.
“குட் மார்னிங் ஜானகி”, என்ற படியே காரைக் கிளப்பினான். வெகு நாட்கள் கழித்து இப்படி அவுட்டிங்க் போவதால் மனம் லேசாக இருக்க நட்புடன் “நாம இப்ப எங்க போறோம் நவீன்?”, என்று உற்சாகமாக கேட்டாள்.
அவள் உற்சாகம் அவனையும் தொற்ற “பர்ஸ்ட் மூவி போகலாமா?”, என்று கேட்டான்.
“ம்ம் சரி”, என்று சொன்னதும் தியேட்டருக்கு வண்டியை விட்டான். முன்பு ஒரு நாள் தியேட்டருக்கு நண்பர்களுடன் சென்றதும் ரகுவின் முதல் தீண்டலும் அவளை அறியாமலே அவள் மனதில் வந்தது.
இப்போது நினைத்தாலும் அவனது தொடுகை சிறு சிலிர்ப்பை ஏற்படுத்தியது தான் விந்தை. இத்தனைக்கும் அன்று ரகு அவள் கையை மட்டும் தான் பற்றினான்.
“இப்ப கையை விடலை செருப்பு பிஞ்சிரும் ரகு”, என்று தான் சொன்னதும் அதற்கு அவன் முகம் சுண்டிப் போனதும் இப்போது நினைவில் வந்தது. ஒரு உன்னதமான அன்பை, ஒரு இளைஞனின் மனதை தான் எந்த அளவுக்கு காயப் படுத்தியிருக்கிறோம் என்று வருந்தினாள். ஆனால் அதற்கான காரணம் அவள் மட்டும் அறிந்ததே. ஐயோ என்று உள்ளம் ஓலமிட்டது.
அந்த தியேட்டருக்கு சென்று ஒரு காதல் படத்துக்கு நவீன் டிக்கட் வாங்கினான். அதே தியேட்டரில் தான் ஆதியை அழைத்துக் கொண்டு ஒரு திரீ டி அனிமேஷன் படத்துக்கு வந்திருந்தான் ரகு.