Advertisement

அத்தியாயம் 19

தழுவிச் செல்லும் தென்றல் 

போல வருடிச் செல்கிறது 

உந்தன் நினைவுகள்!!!

தங்கள் வாழ்வில் நடந்த உண்மைகளை ஜானகி, ரகு, மோகன் மூவரும் பேசி முடித்தார்கள். நிர்மலா மற்றும் விக்ரம் சிங் இருவரும் அதிர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். கீர்த்தி இப்படி எல்லாம் செய்திருப்பாள் என்று யாராலும் நம்ப முடிய வில்லை. அத்தை அத்தை என்று தன்னிடம் பேசும் அந்த கீர்த்தி இவ்வளவு கொடூரமானவளா என்று எண்ணினாள் நிர்மலா.

இப்போதும் ஜானகியை சுனில் ஆடை இல்லாமல் வீடியோ எடுத்ததை மட்டும் மோகன் சொல்ல வில்லை. எப்படி சொல்வாராம்? அது தெரிந்தால் மகள் தாங்க மாட்டாள் என்று அவருக்கு தெரியுமே.

மோகன் மூலம் தெரிந்த உண்மைகளை ரகு மற்றும் கீர்த்தியால் ஜீரணிக்கவே கூட முடிய வில்லை. அதுவும் ரகுவுக்கு… தன்னை வைத்து இவ்வளவு பிரச்சனைகள் நடந்திருக்கும் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லையே.

தனக்காக, தன்னுடைய மானத்துக்காக, தன்னுடைய போட்டோவுக்காக ஜானகி சுனிலை தேடிச் சென்றதே அவ்வளவு பெரிய விஷயம் என்றால் மோகன் ஜெயிலுக்கே சென்றது எல்லாம் அவனால் ஜீரணிக்கவே முடிய வில்லை.

தன்னை இத்தனை நாள் எவ்வளவு ஏமாளியாக அந்த கீர்த்தி நினைத்திருப்பாள் என்று அவனுக்கு அவன் மீதே அவ்வளவு கோபம் வந்தது. ஜானகியோ கீர்த்தியா இப்படி என்று மனதுக்குள் நொந்து போனாள். அவளுக்காக காதலை இழந்து எவ்வளவு துடித்திருப்பாள். இதோ நேற்று கூட ரகுவை அவளுக்கு விட்டுக் கொடுத்து விட்டுச் சென்று விட வேண்டும் என்று நினைத்தாளே?

“அந்த கீர்த்தி மனுஷ ஜென்மமே இல்லை மாப்பிளை. அதுவும் பேங்க்ளூர்ல அவ இப்ப எவ்வளவு கேவலமான வேலை எல்லாம்  செய்யுறா தெரியுமா? அவ ஒருத்தன் ரெண்டு பேர் கூட எல்லாம் இருக்கலை மாப்பிள்ளை”, என்றார் மோகன்.

“மாமா இதெல்லாம் உண்மையா? எனக்கு அதிர்ச்சியா இருக்கு. கீர்த்தியா இப்படி எல்லாம் செஞ்சது? எவ்வளவு ஏமாளியா இருந்துருக்கேன் நான்? நான் இவ்வளவு நாளா எவ்வளவு கஷ்டப் பட்டேன்? அதை எல்லாம் கூட இருந்தே பாத்துருக்காளே? அவ எல்லாம் மனுஷ ஜென்மமா?”, என்று கேட்டான் ரகு.

“அப்பா கீர்த்தியா இப்படி? அப்படின்னா ரகு கீர்த்தி கூட சேந்து வாழலையா? ஆதி சுனிலோட குழந்தையா? ரகுவோட பையன் இல்லையா?”, என்று அதிர்வாக கேட்டாள் ஜானகி. அவளுக்கு அவள் கவலை.

“ஏய் லூசு, நிஜமாவே அவன் சுனிலோட பையன் தான் டி. அவனை வாங்க தான் இன்னைக்கு இதோ இவர் வந்திருக்கார். இவர் சுனிலோட அண்ணன். நான் கீர்த்தியை இது வரை தொட்டது கூட கிடையாது. அந்த நாய் நம்ம வாழ்க்கைல இப்படி எல்லாம் விளையாடிருக்கும்னு நான் யோசிக்கவே இல்லை. ஆனா இதுக்கெல்லாம் காரணம் நீ தான் டி. எங்க அப்பாவுக்கு நீ தானே சொன்ன? ஏன் டி இப்படி பண்ணின? நீ லட்டர் போடலைன்னா எங்க அப்பா இந்த கல்யாணம் பண்ணிருக்கவே மாட்டாங்க. என் மேல நம்பிக்கை வைக்க வேண்டிய நீ என்னை நம்பாம போனதும் இல்லாம எங்க அப்பா கிட்ட வேற சொல்லி….”, என்று ரகு கோபப் பட அவள் தலை குனிந்தாள். அவன் சொன்னது சரி தானே? கீர்த்தி பேச்சைக் கேட்டு ரகுவை சந்தேகப் பட்டு அவர்கள் திருமணம் நடக்க காரணமே அவள் தானே?

“ஐயோ, நீங்க சண்டை போடாதீங்க. இதை எல்லாம் பண்ணினது கீர்த்தி. உங்க ரெண்டு பேர் மேலயும் எந்த தப்பும் இல்லை. அதுவும் ஜானகியை தப்பு சொல்லாதீங்க மாப்பிள்ளை. அவ உங்களை உயிரா நினைச்சது எனக்கு தான் தெரியும். உங்க கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு அவ துடிச்ச துடிப்பு எனக்கு தான் தெரியும்”, என்றார் மோகன்.

“ஆமா டா, நீங்க எதுக்கு சண்டை போடணும்? அந்த கீர்த்தி தான் எல்லாம் பண்ணிருக்கா. உண்மையா லவ் பண்ணுற எவளும் இப்படி பண்ண மாட்டா. அவ எல்லாம் பொம்பளையா? நல்ல பொம்பளை பெத்த பிள்ளையை கை விட மாட்டா. ஆனா அந்த கீர்த்தி இப்ப வரை ஆதியை எட்டிப் பாத்துருப்பாளா? அவளைப் பத்தின ஏதோ உண்மை தெரிஞ்சு தான் உன் அப்பாவுக்கும் ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. நல்ல நிலைமைல அவளை பாக்கப் போன போன மனுஷனை ஒரெடியா அனுப்பிட்டாளே? ஐயோ என் குடும்பத்தையே சிதைச்சிட்டாளே அந்த படுபாவி”, என்று அழுதாள் நிர்மலா. விக்ரம் கூட ஒரு பெண் எப்படி இத்தனை பேரையும் ஆட்டிப் படைத்திருக்கிறாள் என்று அதிர்ந்து போனான்.

அப்போது ஆதி தூக்கத்தில் இருந்து எழுந்து வர அவன் முன் எதுவும் பேச முடியாமல் அமைதியானார்கள். நிர்மலா அவனுக்கு பால் கலக்கச் செல்ல ஜானகி அவனைத் தூக்கிக் கொண்டு நிர்மலா பின் சென்றாள். என்ன தான் கீர்த்தி மேல் அனைவருக்கும் கோபமும் அருவருப்பும் வந்தாலும் அதை ஆதியின் மேல் அவர்கள் காட்ட முடியாதே. இத்தனை நாள் வளர்த்த பாசம் மறையாதே.

பெண்கள் உள்ளே சென்றதும் “மாமா”, என்று அழைத்தான் ரகு.

“சொல்லுங்க மாப்பிள்ளை”

“என்னை மன்னிச்சிருங்க மாமா”

“மன்னிக்க கூடிய தப்பு எதுவும் நீங்க செய்யலை மாப்பிள்ளை”

“இருந்தாலும் அவளுக்காக பரிஞ்சு பேசி உங்களை மரியாதை இல்லாம பேசிட்டேன்”

“விடுங்க, எல்லாம் நேரம்”

“மாமா, சுனில் நடந்து கிட்டது தப்பு தான். அதுக்கு அவனை நாலு வெளுத்துட்டு விட்டுருக்கலாம்ல? இல்லை போலீஸ் கம்ப்லைண்ட் பண்ணிருக்கலாமே? எதுக்கு அவனைக் கொலை பண்ணுனீங்க? அது தப்பு தானே? நீங்களும் எவ்வளவு கஷ்டப் பட்டுருப்பீங்க ஜெயில்ல? அவன் மட்டும் உயிரோட இருந்திருந்தா எல்லாருக்கும் இவ்வளவு கஷ்டம் இருந்துருக்காது தானே? கீர்த்தியை பத்தி முன்னாடியே நமக்கு தெரிஞ்சுருக்குமே?”, என்று கேட்டான் ரகு.

“சுனில் பண்ணினது தப்பு தான் சார். அவனை நல்லா அடிச்சிட்டு எங்களைக் கூப்பிட்டு கண்டிச்சிருக்கலாமே? அவனை கை காலை உடைச்சு உயிரோட விட்டுருக்கலாமே? ஏன் கொன்னீங்க?”, என்று கேட்டான் விக்ரம்.

“நீங்க ரெண்டு பேரும் ஈஸியா ஏன் கொன்னீங்கன்னு கேக்குறீங்க? ஆனா அப்போதைக்கு நிலைமை அப்படி இல்லையே பா. அவன் என் பொண்ணு கிட்ட தப்பா நடக்க பாக்குறான். அப்ப நான் அவனை என்ன செய்யணும்? அவன் என் பொண்ணு கிட்ட மட்டும் இல்லை, வேற எந்த பொண்ணுக் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாலும் நான் அவனைக் கொன்னுருப்பேன். ஆனா அவனைக் கொல்லணும்னு அடிக்கலை. கோபத்துல அடிச்சேன், செத்துட்டான். ஆனா அதுக்கப்புறம் தான் அவனைக் கொன்னது தப்பே இல்லைன்னு புரிஞ்சது”, என்று மோகன் சொல்ல இருவரும் அவரை திகைப்பாக பார்த்தார்கள்.

“ஆமா மாப்பிளை, இது வரைக்கும் யார் கிட்டயும் சொல்லாத விஷயத்தை உங்க கிட்ட சொல்றேன் மாப்பிள்ளை”, என்று ரகுவிடம் சொன்னவர் விக்ரம் புறம் திரும்பி “உங்க தம்பி யோக்கியதை உங்களுக்கும் தெரியணும் தம்பி. ஆனா இந்த விஷயம் உங்க ரெண்டு பேரைத் தாண்டி வேற யாருக்கும் தெரியக் கூடாது. அந்த சுனில்… என்ன பண்ணினான் தெரியுமா?”, என்றவர் அதற்கு பின்னர் தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டார்.

இதை எப்படி வெளிய சொல்ல முடியும்? நிச்சயம் அவரால் முடியாது. அவசரப் பட்டு உணர்ச்சி வசப் பட்டு உளறியதை எண்ணி நொந்து கொண்டவர் பின் எப்படியும் இந்த உண்மை கீர்த்தி மூலம் விக்ரம் மற்றும் ரகுவுக்கு தெரியத் தான் செய்யும் என்பதால் ஜானகியை உடை இல்லாமல் வீடியோ எடுத்ததையும், கீர்த்தி சுனில் என்று எண்ணி தன்னிடம் போனில் பேசியதையும் சொன்னார்.

அதைக் கேட்டு இருவரும் அதிர்ந்து போனார்கள். “மாமா”, என்று ரகு அதிர்வுடன் அழைக்க “இப்ப சொல்லுங்க மாப்பிள்ளை, என் பொண்ணைக் கேவலப் படுத்த நினைச்சு வீடியோ எடுத்து, அவளை ரேப் பண்ண நினைச்ச அவனை நான் சும்மா விடுவேனா?”, என்று ஆக்ரோசத்துடன் கேட்க இருவரும் எந்த பதிலும் சொல்ல வில்லை.

“இனியும் அந்த கீர்த்தியை சும்மா விட மாட்டேன் மாப்பிள்ளை. இதைச் செஞ்ச சுனிலுக்கே இந்த தண்டனைன்னா அதைச் செய்ய சொன்னவளை எப்படி சும்மா விடுவேன்? ஆனா அவன் என் பொண்ணை வீடியோ எடுத்தது எப்பவுமே என் பொண்ணுக்கு தெரியவே கூடாது. அந்த விஷயம் தெரிஞ்சா எந்த பொண்ணு தான் சகஜமா இருப்பா மாப்பிள்ளை? ஜானகி சாகவும் தயங்க மாட்டா”

“அந்த கீர்த்தியை என்ன வேணும்னாலும் செய்ங்க மாமா. நான் உங்க கூட இருக்குறேன். அதுக்கு முன்னாடி அவளுக்கு பாடம் எடுக்கணும்”, என்று சொன்ன ரகுவின் குரலில் அவ்வளவு உறுதி.

Advertisement