அத்தியாயம் 12

நேற்றைய கனவும் 

இன்றைய நினைவும் காட்டுவது 

உந்தன் பிம்பத்தை மட்டுமே!!!

ராகுவின் வீட்டுக்கு சென்றதும் அவர்களை விட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு காரில் திரும்பி விட்டான் விஷ்ணு. போகும் அண்ணனைப் பார்த்த ஜானகி அண்ணனின் திருமணத்தைப் பற்றி வீட்டில் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டு நிர்மலாவுடன் சேர்ந்து தேவகி கொடுத்து அனுப்பியதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

தேவகி கொடுத்து அனுப்பியதையே உண்டார்கள். இரவு தூங்க போகும் போது ஜானகி ஆதியை தூக்கிக் கொள்ள “அவன் என் கிட்ட தான் தூங்குவான் மா. என் ரூம்ல படுக்க வச்சிரு”, என்றாள் நிர்மலா.

“இல்லை அத்தை நான் பாத்துக்குறேன்”

“அவனுக்கு அம்மா நீ தான். நான் உன்னை தப்பா எல்லாம் எடுக்க மாட்டேன். ஆனா இது உங்களுக்கான நேரம். உங்களை மட்டும் பாரு. நீயும் சீக்கிரம் ஒரு பொம்பளைப் பிள்ளையை பெத்து என் கைல கொடு. அதையும் நான் தான் வளப்பேன். ரகு காத்துட்டு இருப்பான். நீ போ”, என்று சொல்ல அடுத்து ஜானகி எதுவும் சொல்ல வில்லை. அறைக்குள் வந்தாள்.

ஆதியை விட்டுவிட்டு வந்ததற்கு ரகு தன்னை தவறாக நினைப்பானோ என்று எண்ணி “ஆதியை தூக்கிட்டு வர நினைச்சேன் ரகு. ஆனா அத்தை தரலை. அவன் நம்ம மகன் தானே? நம்ம கூடவே இருந்து பழகட்டுமே? எனக்கும் இன்னும் ஒட்டுதல் வரணும்ல?”, என்று கேட்டாள்.

“அவன் எப்பவும் அம்மா கூட தான் தூங்குவான். அப்பாவை மறக்க அம்மாவுக்கு உதவியா இருந்தது அவன் தான். அவங்களைப் பிரிக்க வேண்டாம். நீ தான் அவனுக்கு அம்மா. அதனால நீ அவனைக் கவனிக்கலையோன்னு எல்லாம் நினைக்க மாட்டேன். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு”, என்று சொல்ல அவளுக்கு பெருத்த நிம்மதி.

“சரி ரகு”, என்று சொல்லி விட்டு அவள் மாற்றுடையை எடுக்க “ஜானு இங்க வா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றான்.

அதைக் கேட்டு அவள் அவனை யோசனையாக பார்க்க அவன் முகமோ தீவிரமாக இருந்தது. ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறான் என்று புரிந்தது. அதைக் கேட்க தானும் நல்ல மன நிலையில் இருக்க வேண்டுமே என்று இருந்தது.

“இரு ரகு, உன் முகத்தைப் பாத்தாலே ஏதோ சரி இல்லைன்னு தோணுது. நான் நாலு கப் தண்ணி ஊத்திட்டு டிரஸ் மாத்திட்டு வரேன். இந்த சேலையோட இருந்தா நல்லா இல்லை”, என்று சொல்லி விட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் தன்னுடைய யோசனையில் மூழ்கி விட்டான். கீர்த்தியை இங்கே வரவைப்பது பற்றி தான் இப்போது ஜானகியிடம் பேசப் போகிறான். ஆனால் எப்படி பேச, ஜானகி அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று குழப்பமாக இருந்தது. அதை விட கீர்த்தியை எப்படி இதே வீட்டில் தங்க வைக்க என்று மலைப்பாக இருந்தது.

மோகனிடம் முதல் பொண்டாட்டி ரெண்டாவது பொண்டாட்டி என்று வீராப்பாக பேசி விட்டு வந்தாலும் அதை செயல்படுத்த அவ்வளவு தயங்கினான். அவனைப் பொறுத்த வரை கீர்த்தி அவனுக்கு சகோதரி போல தான். ஆனால் ஜானகியின் மனநிலை அப்படி இருக்காதே. அதை ஜானகி எப்படி ஒத்துக் கொள்வாள் என்று பயங்கர யோசனையாக இருந்தது. ஏனென்றால் ஏற்கனவே கீர்த்தியின் வாழ்க்கையை பறித்து விட்டோமோ என்ற மனநிலையில் இருப்பவளிடம் கீர்த்தி இங்கே வரட்டும் என்று சொன்னால் குற்ற உணர்ச்சியில் அவள் சரி என்று தான் சொல்லுவாள் என்று அவன் அனுமானம். ஆனால் உள்ளுக்குள் துடித்துப் போவாள் என்று அவனுக்கு தெரியும்.

பெண்ணின் மன உணர்வுகள் பல வித நரம்புகளால் பின்னப் பட்டது போல. அதுவும் உயிரானவர்கள் என்று வரும் போது அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. என்ன தான் காதல் இருந்தாலும் ஏற்கனவே திருமணம் ஆனவனை அதுவும் குழந்தையுடன் இருப்பவனை திருமணம் செய்ததிலே ஜானகியின் காதல் அவனுக்கு அவ்வளவு தெளிவாக புரிந்தது.

அதுவும் அவன் தொடுகையில் அவள் கரைந்து போவதிலே அவள் காதல் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறது என்று புரிந்தது. தனக்காக இத்தனை வருடம் வந்த நல்ல வாழ்க்கையை எல்லாம் உதறி தள்ளி விட்டு தன்னையே நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவளின் மனநிலை அவனுக்கு அவ்வளவு முக்கியம். தன்னுடைய சிறு செய்கை கூட அவளை காயப் படுத்தக் கூடாது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தான்.

ஜானகி வீட்டில் அவளது அறையில் இருந்த அவனது புகைப்படங்களும், அவளது டைரியில் கொட்டி இருந்த காதலும், பொக்கிசமாக அவள் வைத்திருந்த அவனது சட்டையும், அவன் எழுதிக் கொடுத்த நோட்ஸ் கூட அவள் பத்திரப் படுத்தி வைத்திருந்ததிலே மொத்தமாக வீழ்ந்து போனான்.

“நானெல்லாம் என்ன காதல் செஞ்சேன்? என் காதல் எல்லாம் ரொம்ப சின்னது. லவ் பண்ணினேன். அவளுக்கு பிடிக்குதா பிடிக்கலையான்னு கூட தெரியாம அவளை தொட்டு தொட்டு சீண்டி விட்டேன். கடைசி நாள் லவ்வை சொன்னேன். அவ மறுத்ததும் கோபமா போயிட்டேன். அப்புறம் அப்பா வேற பொண்ணை கல்யாணம் பண்ணச் சொல்லவும் பண்ணிக்கிட்டேன். ஏன் அப்படி பண்ணினேன்? அப்பா செத்துருவேன்னு மிரட்டினப்ப நான் உண்மையிலே சூசைட் பண்ண முயற்சி பண்ணிருந்தா கூட அப்பா அந்த கல்யாணத்தை நிறுத்திருப்பாங்களே. அப்பா கிட்ட என் காதலைக் கூட சொல்லலையே? ஜானு மேல உண்மையா லவ் இருந்திருந்தா என்னால எப்படி கீர்த்தியை கல்யாணம் செஞ்சிருக்க முடியும்? உண்மையான லவ் இருந்தா செத்திருப்பேன் தானே? என்ன இருந்தாலும் பொண்ணுங்க லவ் ஆழம் தான் இல்ல”, என்று சுய அலசலில் இறங்கினான்.

பேசாமல் சுனிலைப் பற்றி, கீர்த்தியைப் பற்றி, ஆதியைப் பற்றி எல்லாம் ஜானகியிடம் சொல்லி விடலாமா என்றும் யோசித்தான். ஆம் சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்தான். கீர்த்தி உயிர் முக்கியம் என்றாலும் ஜானுவின் மனநிலை தான் அவனுக்கு மிக முக்கியம். அவன் வாழ்வில் நடந்த அத்தனை விசயத்தையும் சொன்னால் ஜானகி நிச்சயம் சந்தோஷப் படுவாள். அதுவும் தன்னுடைய காதலும் தன்னுடைய உடல் மனம் எல்லாம் அவளுக்கே சொந்தம் என்று சொன்னால் எந்த பெண் தான் சந்தோஷப் பட மாட்டாள் என்று எண்ணிக் கொண்டான். அதைச் சொன்னதும் அவள் கண்கள் எப்படி விரியும் என்று எண்ணியவனுக்கு முகம் எல்லாம் மத்தப்பாக மலர்ந்து போனது.

அப்போது பார்த்து கீர்த்தியும் அவனை போனில் அழைத்தாள். ஒரு நொடி தயங்கினாலும் அதை எடுத்து “சொல்லு கீர்த்தி”, என்றான்.

“எப்படி இருக்க ரகு?”

“நல்லா இருக்கேன்”, என்று சொன்னவனுக்கு தனக்கு திருமணம் ஆனதை அவளிடம் எப்படிச் சொல்ல என்று தயக்கமாக இருந்தது. சரி நேரில் சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டான்.

“அத்தை என்ன பண்ணுறாங்க?”, என்று அவள் சாதாரணமாக பேச “தூங்கப் போயிட்டாங்க”, என்றான்.

“அப்புறம், லைப் எப்படி போகுது?”

“நல்லா போகுது கீர்த்தி. உனக்கு எப்படி போகுது? வேற ஒரு பிரச்சனையும் இல்லை தானே?”

“நீ என் கூட இருக்குறப்ப எனக்கு என்ன பிரச்சனை வரப் போகுது?”, என்று அவள் கேட்க அவள் பேச்சைக் கேட்டு அவன் எச்சில் விழுங்கினான். அது அவள் சாதாரணமாக பேசியது தான். ஆனால் அதை ஜானகி கேட்டால் என்ன நினைப்பாள் என்று திக்கென்று இருந்தது.

கீர்த்தியை இங்கே வர வைத்து மோகனுக்கு பல்ப் கொடுக்க நினைத்தவனுக்கு இப்போது அது தனக்கே அது ஆப்பாக்காக முடிந்து விடுமோ என்று பயமாக இருந்தது.

“கீர்த்தி உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்”

“என்ன ரகு? சொல்லு”

“நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற? உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு. நான் வந்து பேசுறேன். இல்லைனா நான் மாப்பிள்ளை பாக்கவா?”

“அதெல்லாம் வேண்டாம் ரகு. எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை”

“இன்னும் சுனிலோட ஞாபகம் தானா?”, என்று அவன் கேட்க “ம்ம்”, என்று பொய்ச் சொன்னாள்.

“ஓ, அதையே இன்னும் எத்தனை நாள் நினைச்சிக்கிட்டு இருக்கப் போற? உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. சரி அதை விடு, அப்புறம் பேசலாம். நான் இன்னொரு விஷயம் சொல்லணும். நீ நாளைக்கு இங்க வரியா?”

“நானா சென்னைக்கா? எதுக்கு?”

“இங்க வா சொல்றேன். ஆனா நீ கண்டிப்பா வரணும்”

“சரி வரேன்”

“நான் டிக்கட் போடட்டா கீர்த்தி?”

“நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு ஆபீஸ்ல? அது முடிச்சிட்டு நானே கிளம்பி வரேன்”, என்று அவள் சொல்ல அவனும் சரி என்று சொல்லி போனை வைத்தான்.