ஜானகிக்கும் திருமணத்தில் சந்தோஷம் தான். ஆனாலும் கீர்த்தி வருவாளா? வந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுவாளா? தன்னை சந்தித்து “நாங்க மனசு வேறுபாட்டால பிரிஞ்சிட்டோம். உடனே நீ என் புருஷனை எடுத்துக்குவியா?”, என்று கேட்டு விடுவாளோ என்று பயந்து தான் இருந்தாள்.
ஏனென்றால் ஜானகியைப் பொறுத்த வரைக்கும் கீர்த்தியும் ரகுவும் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் கீர்த்திக்கு ரகு என்றால் உயிர். அப்படி இருக்க அவர்கள் பிரிவு ஏன்? கீர்த்தி எப்படி ரகுவை தனக்கு விட்டுக் கொடுப்பாள் என்று பல கேள்விகள். அது மட்டும் அல்லாமல் அவள் மனதுக்குள்ளும் பல உண்மைகள் மறைந்து இருக்கிறது. அதனால் குழப்பத்துடனே தான் இருந்தாள்.
ஆனால் அவள் பயந்த மாதிரி எதுவும் நடக்க வில்லை. ரகு சந்தோஷமாக அவள் கழுத்தில் தாலியைக் காட்டினான். இரண்டு வீட்டு பெரியவர்களுக்கும் சந்தோஷம் தான். தன்னுடைய காதல் நிறைவேறியதில் ரகு ஜானகி இருவருக்கும் தனித் தனியே சந்தோஷம் தான்.
தெய்வத்தின் தீர்ப்பு இது தான் போல? அதனால் தான் பிரிந்த இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டனர் என்று எண்ணிக் கொண்டார் மோகன். “இனிமேல் உங்களுக்கு பிரிவே கிடையாது. உங்க காதலே உங்களை சேத்து வச்சிருச்சு. சந்தோஷமா இருங்க”, என்று மணமக்களை வாழ்த்தினார் மோகன்.
திருமணம் நல்ல படியாக முடிந்து எல்லா சடங்குகளும் முடிந்து ரகுவின் வீட்டுக்கு வந்தார்கள். அங்கேயே இரவு உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தான் ரகு. ரகு சாப்பிட அமர தேவகி ஜானகியை பரிமாறச் சொல்ல நிர்மலாவோ இருவரையும் அமர வைத்து பரிமாறினார்.
ஆதி ரகு மற்றும் ஜானகியிடம் போக முயலும் போதெல்லாம் அவனுக்கு தடை விதித்தார் மோகன். அதை எல்லாம் ரகு கவனித்துக் கொண்டு தான் இருந்தான். மனதுக்குள் சிரித்துக் கொண்டான். ஆதியை அனுப்ப மாட்டேன் என்று சொன்னால் மோகன் பிரச்சனை செய்வார் என்று அவனுக்கு தெரியும். அதை ஜானகியை விட்டே தீர்த்துக் கொள்வேன் என்று எண்ணினான். நிச்சயம் ஆதியை ஜானகி விட மாட்டாள் என்று நம்பினான்.
அதற்கு பின் வந்த நேரங்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ரகுவின் பார்வை காதலாக ஆசையாக அவளைத் தழுவியது. அதைப் பார்த்துக் கொண்டு தான் ஜானகியும் இருந்தாள். அவள் மனம் முழுவதும் அவன் பார்வையே ஆக்ரமித்திருந்தது.
“எப்படிப் பாக்குறான் பாரு? காலேஜ் படிக்கும் போதும் இப்படி தான் பண்ணுவான். பக்கத்துல யார் இருக்கா இல்லைன்னு எல்லாம் இவனுக்கு தெரியாது. சரியான திருடன்”, என்று எண்ணியவளுக்கு அவனுடனான தனிமையை நினைத்தே பயமாக தான் இருந்தது.
அவளுக்கும் அவன் வேண்டும் தான். ஆனால் அவனிடம் பேசி தீர்க்க வேண்டிய பல விசயங்கள் இருக்க அதற்கு எல்லாம் விடை தீர்ந்த பிறகு தான் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தாள். அதற்கு அவன் விட வேண்டுமே.
அன்று இரவு ஜானகியை ரகுவின் வீட்டில் விட்டுவிட்டு ஜானகி குடும்பம் கிளம்பியது. அப்போது “சம்பந்தி அம்மா, ஆதி குட்டி இன்னைக்கு நைட் எங்க வீட்ல இருக்கட்டும். நாங்க கூட்டிட்டு போறோம். நாளைக்கு பொண்ணும் மாப்பிள்ளையும் மறுவீட்டுக்கு வரும் போது கூட்டிட்டு போகட்டும்”, என்று சொன்னார் மோகன்.
அவரைக் கூர்மையாக பார்த்த ரகு வேறு ஒன்றும் சொல்ல வில்லை. “சரிங்க சம்பந்தி”, என்று நிர்மலாவும் சொல்லி விட அவர்கள் கிளம்பினார்கள். விஷ்ணு ஆதியை நன்கு கவனித்துக் கொண்டதால் அவனும் மாமா மாமா என்று அவன் பின்னேயே சுற்றினான். அதனால் சந்தோஷமாக அவனுடன் கிளம்பி விட்டான்.
ரகுவுக்கு மோகன் பிளான் தெளிவாக தெரிந்தது. முதல் நாளே ஆதியை தன்னிடம் இருந்து பிரிக்க தான் இந்த திட்டம் என்று அவனுக்கு தெரிந்தே இருந்தது. “எத்தனை நாள் உங்க ஆட்டம்னு பாக்குறேன் மாமா”, என்று வன்மமாக மனதுக்குள் எண்ணிக் கொண்டான்.
ரகு அவனது அறைக்குள் சென்று மறைய நிர்மலா மற்றும் ஜானகி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஹாலில் இருந்த எல்லா போட்டோக்களும் அப்படியே இருந்தாலும் கீர்த்தியின் புகைப்படங்கள் மட்டும் அப்புறப் படுத்தப் பட்டிருந்தது.
ரகு கீர்த்தி புகைப்படங்களை எல்லாம் மாட்டி இருந்ததில் ரகுவுக்கே உடன்பாடு இல்லை தான். ஆனால் தாய்க்கு சந்தேகம் வரக் கூடாது என்று எண்ணி தான் அமைதியாக இருந்தான். இப்போது தாயே அதை அகற்றி இருப்பதைக் கண்டு அவனுக்கு நிம்மதி தான். ஜானுவுக்கும் அது சந்தோஷம் தான்.
இரவு பத்து மணி ஆனதும் அவள் கையில் ஒரு சொம்பு நிறைய பாலைக் கொடுத்த நிர்மலா “நேரம் ஆச்சு டா, போய்த் தூங்கு. பழைய விசங்களை ரெண்டு பேருமே மறக்குறது தான் நல்லது. நீ என்ன நினைச்சு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்னு தெரியாது. ஆனா இனி ரகு உன்னோட புருஷன். நீ மட்டும் தான் அவனுக்கு கடைசி வரை துணை. ஒரு மனைவி என்ன செய்யணுமோ அதை நீ செய். போ”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள். தயக்கத்துடன் ஜானகியும் அவனது அறைக்குச் சென்றாள்.
அமைதியான இரவு…. ஆனால் இதயத் துடிப்பு மட்டும் பலமாக இருந்தது ஜானகிக்கு. எந்த வித அலங்காரமும் இல்லாமல் சாதாரணமாகவே இருந்தது ரகுவின் அறை. அதைக் கண்டு கொஞ்சம் நிம்மதி. விஷ்ணு அறையை அலங்கரிக்கிறேன் என்று சொன்னதற்கு ரகு வேண்டாம் என்று மறுத்தது அவளுக்கு தெரியாதே.
ரகு அறைக்குள் இருந்த கட்டிலில் அமர்ந்திருக்க ஜானகி தயக்கத்துடன் உள்ளே வந்தாள். ரகு அவளுக்கு புதியவன் இல்லை தான். ஆனாலும் தடுமாற்றமாக தான் இருந்தது. அவனும் அவளைத் திரும்பிப் பார்த்தான். கழுத்தில் மின்னும் புதிய தாலிச்சரடு, நெற்றி வகிட்டில் குங்குமம், தோள்களில் வழிந்த மல்லிக்கைப் பூ, உடலை உறுத்தாத மென்மையான சேலை, அளவான நகைகள் என நின்ற புது மனைவியை ஒரு பார்வை பார்த்தான் ரகு.
அவள் மேல் மலையளவு ஆதங்கம் இருந்தாலும் அதை விட அதிகமாக காதல் இருந்ததால் அவன் கண்கள் அவளை ரசனையாக அளவிட்டது.
ரகுவின் கண்கள் ஜானகியின் அழகை ரசிக்க அவளுக்கு வெட்கம் வந்தது. “ஏய் ரகு என்ன இது? எப்ப பாத்தாலும் இப்படியே பாத்துட்டு இருக்க? எனக்கு ஒரு மாதிரி இருக்கு. இந்தா அத்தை கொடுத்தாங்க”, என்று சொல்லி பாலை அவனிடம் கொடுத்தாள்.
“இது இப்ப தேவைப் படாது”, என்று சொல்லி அதை வாங்கி டேபிளில் வைத்தவன் “வா மிர்ச்சி, இங்க வந்து உக்காரு”, என்றான்.
தயக்கத்துடன் அவன் அருகே சென்று அமர்ந்தவள் “நானே உன் கிட்ட பேசலாம்னு நினைச்சேன். எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு. பேசலாமா? உனக்கு தூக்கம் வரலை தானே?”, என்று கேட்டு தன்னுடைய படபடப்பை குறைக்க முயன்றாள்.
“ஓ பேசலாமே?”, என்று சொன்னவன் அவள் மடியில் இருந்த வலது கையை எடுத்து தன்னுடைய உதட்டருகே கொண்டு வந்து ஒவ்வொரு விரலாக முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். அவன் தொடுகையில் அவள் உடல் சிலிர்த்தது.
“ரகு பேசணும்”, என்று தடுமாறிச் சொல்ல “அதை தான் நானும் செய்றேன்”, என்று சொன்னவன் முத்தத்தை மட்டும் நிறுத்தவே இல்லை.
அவன் தொடுகையில் உள்ளுக்குள் என்னவோ செய்ய “ரகு பிளீஸ் சும்மா இரு”, என்று சொல்லி கையை உருவிக் கொள்ள முயன்றாள்.
அவள் கையை இறுக்கிப் பிடித்தவன் “ரொம்ப ஏக்கத்துல இருக்கேன் டி. உன் கூட வாழுறது எனக்கு ரொம்ப வருஷ கனவு. பிளீஸ் தடை போடாத. என்னை அப்படியே விட்டுரு”, என்றான்.
அவன் கண்களில் ஏக்கமும், தாபமும், கெஞ்சலும் இருக்க அதற்கு மேல் எப்படி மறுக்கவாம்? கூடவே அவனுடன் வாழ அவளுக்கும் மலையளவு ஆசை இருக்க ஒப்புதலாக கண்களை மூடிக் கொண்டாள்.
அதையே அவள் சம்மதமாக எடுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அதற்கே அவள் நெகிழ்ந்து போய் இருக்க அடுத்த நொடி அவள் அவனுடைய ஆவேச அணைப்பில் இருந்தாள்.
அவன் இதழ்கள் முதல் முறையாக அவள் இதழ்களைச் சிறை செய்ய அவள் கரங்களும் உயர்ந்து அவனை அணைத்துக் கொண்டது.
கிட்டத்தட்ட எட்டு வருட காதலை அந்த ஒற்றை முத்தத்தில் அவன் ஈடுகட்ட அவள் தான் துவண்டு போனாள். அவள் மூச்சுக்கு திணறவும் தான் அந்த முத்தத்தை முடித்தான்.
அவன் முத்தத்தில் கிறங்கி, கண்கள் மூடி, இதழ்கள் துடிக்க, உடல் நடுங்க அவள் அமர்ந்திருக்க அதற்கு மேல் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. அவள் மேல் படர்ந்து அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் வாசனையை ஆழமாக நுகர அவன் செய்கையில் திண்டாடிப் போனாள். அவள் வாசனையை நுகர்ந்தவனுக்கு கள்ளுண்ட போதை மயக்கத்தில் இருப்பது போல இருந்தது.
அடுத்த நொடி அவன் உரிமையாக அவளை ஆக்ரமிக்க அவள் கரங்களும் அவனை இறுக அணைத்துக் கொண்டது. அவள் முழுக் காதலுடன் அவன் தொடுகையில் சிவந்து சிணுங்கி காதலைக் கொட்ட அவன் தான் முதல்முறை என்பதால் தடுமாறிக் கொண்டிருந்தான்.
“இவன் என்ன புதுசா பொண்ணு கூட இருக்குற மாதிரி பண்ணுறான்?”, என்று எண்ணியவள் “ஏன் கீர்த்தி கூட இவன் ஒண்ணா இருந்தது இல்லையா?”, என்ற கேள்வியை வாய்க்குள்ளே புதைத்துக் கொண்டாள். இப்போது அதைப் பற்றி பேசினால் அது பெரிய அசிங்கம் என்பதால் அந்த நினைவை ஒதுக்கி தள்ளி அவனைக் காதலுடன் அணைத்துக் கொண்டாள்.
இருவரின் இத்தனை வருட காதலும் போட்டி போட்டுக் கிளம்ப அந்த இரவு முழுதும் அவர்களுக்கு பகலாக மாறிப் போனது. இருவருக்கும் பேச ஆயிரம் விஷயங்கள் இருந்தது. நிறைய கேள்விகள் இருந்தது. ஆனால் இருவருமே பழைய விஷயங்களை ஒரு நொடி கூட பேச வில்லை. இந்த நொடியே உண்மை, இதுவே நிதர்சனம் என்று புரிந்து வாழ்ந்து பார்த்தார்கள். அவளை அவன் தூங்க அனுமதிக்கும் போது அதிகாலை நான்கு மணி ஆகி இருந்தது.