“நானும் சீரியஸா தான் சொல்றேன். நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”
“நிஜமாவா டா?”
“ஆமா, பொண்ணும் பாத்தாச்சு”
“என்ன டா சொல்ற? யார்?”
“ஆதியோட டீச்சர்”
“அந்த ஜானு பொண்ணா?”
“ஆமா மா, ஏனோ அவளைப் பிடிச்சிருக்கு”
“அவங்க வீட்ல ரெண்டாந்தாரமா எப்படி ஒத்துக்குவாங்க? வாய்ப்பே இல்லை டா. பாத்தாலே பெரிய இடத்துப் பொண்ணு மாதிரி இருக்கு”
“அதெல்லாம் ஒத்துக்குவாங்க. அவ கிட்ட கேட்டேன் சரின்னு சொல்லிட்டா. நாளைக்கு அவங்க வீட்ல போய் பேசணும்”
“நிஜமாவா டா சொல்ற? எல்லாம் முடிவு பண்ணிட்டியா?”, என்று கேட்டாள். தன்னைக் கேட்காமல் எல்லாம் முடிவு பண்ணி விட்டானே என்று கோபம் எல்லாம் அந்த தாய்க்கு வரவில்லை. மகன் வாழ்க்கை நல்ல படியாக அமைய வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்தது. இத்தனை நாட்கள் அவன் பட்ட பாட்டை பார்த்தவள் ஆயிற்றே.
“நான் உன்னை தப்பா நினைப்பேனா ராஜா? உன் சந்தோஷம் தான் டா எனக்கு முக்கியம்? நாளைக்கு எப்ப போகணும்? சீக்கிரமே போகலாமா? ஆறு மணியா ஏழு மணியா?”, என்று அவள் ஆர்வமாக கேட்க அவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஒரு பதினொரு மணிக்கு போகலாம் மா. உங்களுக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே?”
“எனக்கு என் மருமகளை இப்பவே கூட்டிட்டு வரணும் போல ஆசையா இருக்கு. ரொம்ப சந்தோஷம் தான்”, என்றவர் தன்னை மறந்து கோதுமை தோசை சுடப் போக அவனும் புன்னகைத்தான்.
அடுத்த நாள் அனைவருக்கும் சாதாரணமாக விடிய ஜானகிக்கு மட்டும் பரபரப்பாக விடிந்தது. ரகு சொன்ன விசயத்தை வீட்டினரிடம் சொல்ல ஜானகி தயங்க அதற்கு அவசியமே இல்லை என்பது போல “ஜானு மா, இப்ப சந்தோஷமா டா? மாப்பிள்ளை சொன்னாரா? கல்யாணத்துக்கு சரினு சொல்லிட்டார். இன்னைக்கு அவங்க அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வறேன்னு சொன்னார். ரொம்ப நாள் கழிச்சு என் பொண்ணோட காதல் கை கூடிருக்கு. இப்ப நிம்மதியா டா?”, என்று மோகன் கேட்க சந்தோஷம் குழப்பம் என கலவையான உணர்வில் இருந்தாள்.
அவன் கிடைப்பது சந்தோஷம் என்றாலும் கீர்த்தி என்ன சொல்வாளோ என்ற பயமும் அவளை நேருக்கு நேர் தன்னால் பார்க்க முடியுமா என்ற குழப்பமும் அவளை ஆட்கொண்டது.
“சந்தோஷம் தான் பா. ஆனா கீர்த்தி….”, என்று அவள் தயக்கத்துடன் சொல்ல “நான் தெளிவா பேசிட்டேன் மா. கீர்த்தி உன் வாழ்க்கைல வர மாட்டா”, என்றவர் மனதுக்குள் “நான் வர விட மாட்டேன்”, என்று எண்ணிக் கொண்டார்.
தேவகி மட்டும் மகள் வாழ்வை எண்ணி கவலையாக அமர்ந்திருக்க விஷ்ணுவும் மோகனும் அவளை சமாதானப் படுத்தினார்கள். ஒரு வழியாக அனைவரும் ரகுராம் ஜானகி திருமணத்தை மனதளவில் ஏற்றுக் கொண்டார்கள். ஜானகி மட்டும் தான் ஒரு மாதிரி குழப்பத்துடன் இருந்தாள்.
நவீனுக்கு அழைத்து அவள் திருமண விஷயத்தைச் சொல்ல அப்போதும் அவள் முடிவு என்று தான் சொன்னான் அந்த உண்மையான நண்பன்.
அன்று ஆதியை பள்ளிக்கு அனுப்பி விட்டு நிர்மலா மற்றும் ரகு இருவரும் திருமண விஷயம் பேச ஜானகி வீட்டுக்கு வந்தார்கள். ஜானகி பேரும் போராட்டத்துடன் இருந்தாள். நடப்பது எல்லாம் உண்மையா இல்லை கனவா என்று கூட அவளுக்கு தோன்றியது.
நிர்மலாவின் மனதில் மகனுக்கு திருமணம் என்று சந்தோஷம் வந்தாலும் ஜானகியை பெண் கேட்க பெரும் தயக்கம் தான். என்ன இருந்தாலும் இவ்வளவு வசதி வாய்ப்புள்ள ஒரு பொண்ணை தன் மகனுக்கு இரண்டாந்தாரமாக கேட்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது. தனக்கு ஒரு பெண் இருந்தால் இப்படி ஒருத்தனுக்கு கட்டிக் கொடுக்க யோசிப்பாளே.
அவளுடைய பயம் அவசியமற்றது என்பது போல ஜானகி வீட்டில் அனைவரும் அவர்களை இயல்பாக வரவேற்று பேசினார்கள். தேவகி அனைவருக்கும் டீ கொடுத்தாள். விஷ்ணுவும் ரகுவிடம் சாதாரணமாக பேசினான்.
ஜானகியும் அவர்களை வரவேற்று தந்தை அருகில் சென்று அமர்ந்தாள். மோகனும் அவளை லேசாக அணைத்த படி நெகிழ்வுடன் அமர்ந்திருந்தார். ஏனென்றால் மகளின் சந்தோஷம் அந்த அளவுக்கு இருந்தது.
அப்பாவும் மகளும் அமர்ந்திருப்பதை எரிச்சலுடன் பார்த்தான் ரகு. “உன் பொண்ணு சந்தோஷம் உனக்கு பெருசு. மத்த பொண்ணுங்க சந்தோஷம் உனக்கு தூசா. ஒரு சின்னப் பொண்ணோட வாழ்க்கையை சிதைச்சிட்டியே?”, என்று எண்ணிக் கொண்டாலும் ரகுவால் ஜானகியை ரசிக்காமல் இருக்க முடிய வில்லை.
அதிக சந்தோசத்தில் அவள் தேஜஸ் இன்னும் கூடி இருப்பது போல தெரிந்தது. அவன் அவளை நேரடியாகவே சைட் அடித்துக் கொண்டிருக்க அவள் தான் அவன் பார்வையில் தடுமாறிக் கொண்டிருந்தாள். மற்ற அனைவரும் சாதாரணமாக பேசினார்களே தவிர யாரும் திருமணம் விஷயம் பேச வில்லை. யார் ஆரம்பிக்க என்ற குழப்பத்திலே நேரம் நகர்ந்தது. நிர்மலா தான் முதலில் ஆரம்பித்தாள்.
“நாங்களா பாத்து தான் எங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். ஆனா ஏன்னு தெரியலை, ஒரு வருசத்துல அவளை வேண்டாம்னு டைவர்ஸ் பண்ணிட்டான். அவளும் இவனை விட்டு பிரிஞ்சிட்டா. குழந்தையைக் கூட அவ வாங்கிக்கலை. இவனும் நாமளே வளக்கலாம்னு சொல்லிட்டான். இவங்க அப்பாவும் இறந்துட்டார். அப்புறம் நானும் இவனும் ஆதியை வளக்க ரொம்ப கஷ்டப் பட்டோம். இப்ப என் மகன் உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறான். ரெண்டாவது கல்யாணம் அது மட்டும் தான் பிரச்சனை. மத்த படி என் மகனை நானே பெருமையா சொல்லக் கூடாது. ஆனா என்ன இருந்தாலும் ஒரு பொண்ணைப் பெத்தவங்க ரெண்டாதாரமாக கல்யாணம் பண்ணிக் கொடுக்க யோசிப்பாங்க தானே? என் மகன் நல்லா இருக்கணும்னு சுயநலம் இருந்தாலும் உங்க பொண்ணு வாழ்க்கையைப் பத்தியும் யோசிக்கணும்ல? இப்ப நீங்க தான் நல்லா யோசிச்சு முடிவு பண்ணனும்”, என்றாள் நிர்மலா.
மற்றவர்கள் அமைதியாக இருக்க “காதல் அப்படிங்குற விஷயம் வந்தால் முதல் கல்யாணம் ரெண்டாவது கல்யாணம் எல்லாம் பெரிய விஷயமே கிடையாது சம்பந்தி. பிள்ளைங்களுக்கு பிடிச்சிருக்கு. அவங்க சந்தோஷமா இருக்கட்டுமே? எங்க எல்லாருக்கும் சம்மதம். கல்யாண தேதி குறிச்சிறலாமா? நான் ஜோசியரைக் கூப்பிடவா?”, என்று மோகன் கேட்க அனைவரின் முகமும் மலர்ந்தது.
அதற்கு பின் ஜோசியர் வந்து திருமண தேதியை குறித்து விட்டே அங்கிருந்து கிளம்பினார்கள். எல்லா பொறுப்பையும் மோகனையே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் திருமணச் செலவுக்கு அனைத்துக்கும் ரகு பணம் தருவதாகவும் சொல்லி விட மோகன் சந்தோஷமாக தலையைசைத்தார். மகளுக்கு செய்யாமல் இருப்பாரா என்ன?
நாட்கள் வேகமாக நகர்ந்தது. திருமண வேலைகள் சூடு பிடித்தது. அவ்வப்போது ரகு கீர்த்தியிடம் பேசினாலும் திருமண விஷயம் பற்றி மூச்சு விட வில்லை. திருமணத்தில் அவளால் ஏதாவது தடங்கள் வருமோ என்று பயந்தானோ என்னவோ? அவளிடம் சொல்லவே இல்லை.
ஆதியிடம் ஜானகியை அம்மா என்று அழைக்கச் சொல்லிக் கொடுத்தான். அவனும் ஜானும்மா என்று அழைத்தான் அவளை. அக்கம் பக்கத்தினர், சொந்த பந்தம் அனைவரும் இரண்டாவது திருமணமா என்று பேச தான் செய்தார்கள். ஆனால் அதை யாரும் பெரிது படுத்த வில்லை.
ஜானகியோ அதிக சந்தோஷத்திலும் எப்போது கீர்த்தி வந்து நிற்பாளோ என்ற அதிக பயத்திலும் இருந்தாள். என்னை நம்பினா கீர்த்தி பத்தி பேசக் கூடாது என்று ரகு சொல்லிய பிறகு அவள் அதற்கு மேல் அவனிடம் அவளைப் பற்றி பேச வில்லை. ஆனாலும் உள்ளுக்குள் பயந்து தான் இருந்தாள். தந்தையிடம் கேட்டாலும் அவளைப் பற்றிக் கவலைப் படாதே என்று மட்டும் சொன்னார்.
ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. ரகுராம் வெட்ஸ் ஜானகி என்ற பெயர் பலகை மண்டப வாசலில் வீற்றிருந்தது. திருமணத்தில் அலங்காரம் சாப்பாடு எல்லாம் கிரண்டாக இருந்தாலும் சொந்தங்கள் அதிகம் எல்லாம் வரவில்லை. நெருங்கிய சொந்தங்களை மட்டும் தான் அழைத்திருந்தனர். நவீனும் வந்திருந்தான்.
ஜானகி அவனை அறிமுகப் படுத்தும் முன்னே “ஒரு வழியா காதல்ல ஜெயிச்சிட்டீங்க தம்பி”, என்று அவனாகவே ரகுவிடம் பேசி நட்பாகிக் கொண்டான். ரகுவும் நவீனுடன் நல்ல முறையிலே பேசினான். ரகுவை விட நவீன் மூன்று வயது மூத்தவன் என்பதால் ரகு அவனை அண்ணா என்று மரியாதையாக அழைத்தான்.
அங்கேயும் வம்புகள் முதுகுக்கு பின் பேசப் பட்டாலும் நேருக்கு நேர் யாரும் எதுவும் பேச வில்லை. அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் நேரம் நகர்ந்தது.
ரகு வெகு நாட்கள் கழித்து சந்தோஷமாக இருந்தான். எத்தனை வருடம் ஆனாலும் அவனது காதல் தோற்க வில்லை என்று அவ்வளவு சந்தோஷம். அவர்கள் வாழ்வில் பல குழப்பம் இருந்தாலும் அவள் மனைவியாவதே போதும் என்று இருந்தது அவனுக்கு.