அத்தியாயம் 10

உந்தன் அருகாமையில் எந்தன் 

வார்த்தைகளும் தூரம் போனது!!!

     ஜானகி போனை வைத்ததும் அவளது தந்தையை அழைத்தான் ரகு. “சொல்லு பா, இப்ப என்ன? அந்த கீர்த்தியைப் பத்தி மட்டும் பேசாதே”, என்றார் மோகன்.

     “நான் அதைப் பத்தி பேச வரலை. எனக்கு ஜானு வேணும்”, என்று அவன் மொட்டையாக சொல்ல “என்னது?”, என்று அதிர்ந்தார் அந்த தந்தை.

     “கேக்கலையா சார்? எனக்கு ஜானகி வேணும். எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க”

     “அப்ப கீர்த்தி?”

     “கீர்த்திக்கும் எனக்கும் டைவர்ஸ் ஆகி மூணு வருஷம் ஆகுது. அது மட்டும் இல்லாம… உங்களுக்கு தான் எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கே? எனக்கு ஜானு வேணும். அவளைக் கேக்க எனக்கு முழுத் தகுதி இருக்கு”

     “எனக்கு தெரியும் பா. ஆனா நான் சம்மதிக்க மாட்டேன்”

     “ஏன்? ஏன்? நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறோம்”

     “அப்படின்னா நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க. நீ கூப்பிட்டா என் பொண்ணு கண்டிப்பா உன் பின்னாடி வருவா. ஆனா நானா கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்”, என்று மோகன் சொல்ல வியந்து போனவன் “உங்களுக்கும் அவ காதல் தெரியுமா?”, என்று கேட்டான்.

     “உனக்கு இப்ப தான் தெரியும்? ஆனா எனக்கு தெரிஞ்சு பல வருஷம் ஆச்சு”

     “நாங்க என்ன சின்ன லொல்லைகளா ஓடிப் போய்க் கல்யாணம் பண்ண? நீங்க தான் பண்ணி வைக்கணும். நான் அம்மாவைக் கூட்டிட்டு பேச வரேன்”

     “அதான் சொன்னேனே? நான் சம்மதிக்க மாட்டேன்னு”

     “ஏன்? என்னைப் பிடிக்கலையா உங்களுக்கு? உங்க பொண்ணுக்கு நான் பொருத்தமானவனா தெரியலையா?”

     “உன் கிட்ட ஒரு குறையும் இல்லை பா. அழகு, படிப்பு, பதவி, குணம், ஒழுக்கம் எல்லாத்துலயும் நிறை தான்”, என்று சொல்ல அவர் மீதிருந்த கோபத்தையும் தாண்டி அவரை அவனுக்கு பிடித்தது.

     “மனுஷன் நம்மளைப் பத்தி இவ்வளவு உயர்வா சொல்றார்? இவர் பொண்ணு கிட்ட நம்ம நடந்துக்கிட்டது எல்லாம் தெரியாது போல?”, என்று எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டான்.

      “என்னை இவ்வளவு புகழ்ற நீங்க எதுக்கு எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டுக்கீங்க?”, என்று கேட்டான்.

     “ஆதி”, என்று அவர் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல “சார்”, என்று அதிர்ந்து போனான்.

     “யெஸ், நீங்க ஆதியை பிரிய மாட்டீங்க? ஆனா அந்த பையன் உங்க கூட இருக்க கூடாதுன்னு எனக்கு தோணுது. அதனால நான் அவனை அனுப்ப சொல்லுவேன். நீங்க முடியாதுன்னு சொல்லுவீங்க. நான் அன்னைக்கு சொன்னது தான். என்னோட கண்டிஷன், ஆதி உங்க கூட இருக்க கூடாது”

     “அன்னைக்கு இருக்கலாம்னு சொன்னீங்க தானே?”

     “சொன்னேன் தான். கீர்த்தியை கொன்ன பிறகு அந்த பையன் தனியா எங்க போவான்? அதான் உங்க கூட இருக்கட்டும்னு சொன்னேன். ஆனா பேங்க்லூர்ல அந்த கீர்த்தியைப் பாத்ததும் அவ சம்பந்தப்பட்ட எதையுமே நான் பாக்க கூடாதுன்னு நினைக்கிறேன். ஆதி உங்க கூட இருந்தா ஜானுவும் நீங்களும் சந்தோஷமா இருக்க முடியாது. கண்டிப்பா ஒரு நாள் என்னையே அறியாம நான் எல்லார்க் கிட்டயும் உண்மையைச் சொல்லிருவேன். அவனைப் பாக்குறப்ப சின்ன பையன்னு தோணுறதை விட கீர்த்தியோட மகன்னு தான் தோணுது. ஒண்ணு கீர்த்தி சாகணும். இல்லைன்னா அந்த ஆதியை நீங்க அவ கிட்ட அனுப்பிறனும். ஆனா நீங்க உங்க மகனை அனுப்ப மாட்டீங்க. அதனால நான் அந்த கீர்த்தியை கொல்லத் தான் போறேன்”, என்றார்.

     “சரி, கல்யாணம் முடிஞ்சதும் நான் ஆதியை அவ கிட்ட அனுப்பிறேன். இனி அவ உங்க பொண்ணு வாழ்க்கைக்கு இடைஞ்சலா வர மாட்டா. அதனால நீங்க அவளை எதுவும் செய்யக் கூடாது”, என்று அவன் அவரிடம் சொல்ல ஒரு நொடி யோசித்தார்.

     பின் “என் பொண்ணு வாழ்க்கைக்கு அவ எந்த இடைஞ்சலும் செய்யாம இருந்தா நானும் அவளை எதுவும் செய்ய மாட்டேன். அவ மகனை அவ கிட்ட கொடுத்துருங்க. என் பொண்ணை மீறி எனக்கு எதுவும் பெருசு இல்லை”, என்று சொன்னார்.

     மகனை விட்டுவிடுவேன் என்று ரகு சொன்னதும் பொய் தான். கீர்த்தியை எதுவும் செய்ய மாட்டேன் என்று அவர் சொன்னதும் பொய் தான். ஆனால் அதை மற்றவருக்கு தெரிவிக்க வில்லை.

     “சரி நான் எங்க அம்மா கிட்ட கல்யாண விஷயம் பேசிட்டு சொல்றேன். அப்புறம் உங்க வீட்ல வந்து பேசுறேன்”, என்று ரகு சொல்ல “சரிங்க மாப்பிள்ளை. அப்புறம் கீர்த்தி பத்தி எந்த விஷயமும் ஜானுவுக்கு தெரியாது. இனி மேலும் தெரிய கூடாது”, என்றார்.

     “இது எல்லாம் வெளிய சொல்லிக்கிற விஷயம் எல்லாம் கிடையாது மாமா. நானும் சொல்ல மாட்டேன். ஆனா உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டான். இயல்பாகவே இருவரும் மாமா மாப்பிள்ளை என்று அழைத்துக் கொண்டனர்.

     “அது எப்படியோ தெரியும் மாப்பிள்ளை. நான் இப்பவே கிளம்பி வரேன். நாளைக்கே உங்க அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க. பேசலாம்”, என்று சொல்லி விட்டு வைக்க அவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

     எடுத்த முடிவு சந்தோஷத்தை தந்தாலும் அதை விட பல குழப்பங்கள் அவனை ஆட்கொண்டது. ஆனால் ஜானு தனக்கு கிடைப்பாள் என்று நிம்மதியே வந்தது. ஆதியை எண்ணிப் பார்த்தவனுக்கு மனம் கனத்தது.

     அவன் உண்மையிலே அவனுடைய ரத்தம் இல்லை தான். ஆனால் இத்தனை நாள் அவனுடைய மகனாக வளர்ந்தவனாயிற்றே. அப்பா என்ற பதவியை கொடுத்தவனாயிற்றே. என்ன தான் காதல் பெரிதென்றாலும் அவனை இழக்க முடியுமா?

     “நிச்சயம் முடியாது. இந்த ஊர் உலகத்தைப் பொறுத்த வரை ஆதி என் மகன். அவன் என் மகனா தான் வளர்வான். அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. உங்க பொண்ணு கூட என் கல்யாணம் நடக்கட்டும் மாமா. அப்புறம் இருக்கு உங்களுக்கு. கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் ஏன் ஆதியை அனுப்பனும்? அதே மாதிரி கீர்த்தியையும் காப்பாத்துவேன். அவ பாவம். என்ன தைரியம் இருந்தா கீர்த்தியை கொல்லுவேன்னு என் கிட்டயே சவால் விடுவீங்க? கல்யாணம் முடியட்டும் பாத்துக்குறேன். என்னை மீறி நீங்க எதுவும் செய்ய முடியாது மாமா. எல்லாம் உங்க பொண்ணுக்காக பண்ணுனீங்க தானே? அந்த பொண்ணை வச்சே உங்களுக்கு பாடம் எடுப்பேன்”, என்று எண்ணிக் கொண்டான்.

     அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது நிர்மலா டீவி பார்த்துக் கொண்டிருக்க அவள் மடியில் உறங்கிக் கொண்டிருந்தான் ஆதி.

     “வா ரகு, குளிச்சிட்டு வா சாப்பிடலாம். அப்புறம் ஆதியை பெட்ல படுக்க வச்சிரு. டி‌வி பாத்துட்டே தூங்கிட்டான்”

     “சரி மா”, என்றவன் மகனைத் தூக்கிக் கொண்டான். ஆதியும் அவன் தோள்களைக் கட்டிக் கொள்ள அவனுக்கு உடல் சிலிர்த்தது. “பெற்றால் மட்டும் தான் பிள்ளையா? இவனை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? எப்படி இருந்தாலும் ஆதி என்னோட பிள்ளை. ஜானகி இவனுக்கு அம்மா அவ்வளவு தான். இதை எந்த மோகன் வந்தாலும் தடுக்க முடியாது. நிச்ச்யம் ஜானகி ஆதியை அனுப்ப மாட்டாள். மாமாவுக்கு பல்ப் தான்”, என்று எண்ணிக் கொண்டு அவனை அன்னையின் அறையில் இருந்த படுக்கையில் படுக்க வைத்தான்.

     பின் குளித்து வேறு உடை அணிந்து வெளியே வர நிர்மலா உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். சாப்பிட அமர்ந்தவன் “அம்மா, நைட் சாப்பாடு வைக்காதீங்கன்னு எவ்வளவு தடவை சொல்றேன்? நாலு சப்பாத்தி செஞ்சு சாப்பிட வேண்டியது தானே? எழுந்து போங்க. சாப்பாடை நான் சாப்பிட்டுக்குறேன். நீங்க நாலு கோதுமை தோசையாவது ஊத்தி சாப்பிடுங்க”, என்றான்.

     “ப்ச் காலைல டிபன், மதியம் சாப்பாடு, நைட் ரொட்டி சாப்பிட நல்லா தான் இருக்கும். ஆனா செய்யுறது தான் கடுப்பா இருக்கு. ஒண்ணு பண்ணு ஒழுங்கா கீர்த்தி கிட்ட பேசி அவளை இங்க கூட்டிட்டு வா. ரெண்டு பேரும் பிடிக்கலைன்னு பிரிஞ்சாலும் இன்னும் மத்தவங்க நினைப்புல தானே வேற கல்யாணம் பண்ணாம வாழ்ந்துட்டு இருக்கீங்க? அப்புறம் என்ன? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழுங்க டா. ஆதிக் குட்டிக்கு அம்மா வேணும் டா”, என்றாள்.

     பல நாட்கள் கழித்து அன்னை இந்த பேச்சை எடுக்கவும் ஒரு நொடி திகைத்தாலும் இது பேச வேண்டிய தருணம் என்று உணர்ந்து “கீர்த்தி என் வாழ்க்கைல முடிஞ்சு போன அத்தியாயம் மா. அவ கூட எல்லாம் வாழ முடியாதுன்னு தானே டைவர்ஸ் வாங்கினேன். அந்த பேச்சே பேசாதீங்க”, என்றான் முடிவாய்.

     “அப்படின்னா வேற கல்யாணம் பண்ணிக்கோ”

     “பண்ணிக்கிட்டா போச்சு”, என்று அவன் அசால்ட்டாக சொல்ல “நான் சீரியஸா சொல்றேன் டா”, என்றாள்.