Advertisement

நதியின் ஜதி ஒன்றே 1

கந்தன் முன்பு வணங்கி கொண்டிருந்த சகுந்தலா கணவனின் குரல் கேட்கவும் குங்குமம், திருநீறு இட்டு கொண்டு வந்தார்.

“எனக்கு நேரம் ஆச்சு சகு” என்று சங்கர் அவசரபட,

“இதோ டிபன் வைக்கிறேன். ஒரு நிமிஷம்” என்று கிட்சனுக்குள் ஓடினார்.

“தம்பி எங்க? வேன்க்கு நேரம் ஆச்சே” என்று கேட்க,

“வந்திடுவாங்க” என்றபடி காலை உணவு பரிமாற, சங்கர் வேகமாக உண்ண ஆரம்பித்தார்.

“ப்பாபாபா” என்ற குரல் எங்கிருந்தோ  ஓங்கி ஒலிக்க,

“ஆரம்பிச்சுட்டா” என்றார் சகுந்தலா சிரிப்புடன்.

“பலராம் எப்படி தான் சமாளிக்கிறாரோ? பஞ்சாயத்து பண்ணியே ஓய்ஞ்சு போறார்” என்றார் சங்கர்.

“இரண்டு பிள்ளைங்கன்னா அப்படி தாங்க. நமக்கு தான் ஒண்ணா போச்சா” என்றார் சகுந்தலா வருத்தத்துடன்.

“இப்போ கூட ஒன்னும் குறைஞ்சு போகலை. சொல்லு ரெடி பண்ணிடலாம்” சங்கர் கண்ணடித்து கேட்க,

“தம்பி வர போறான். பேச்சை பாரு” என்று சகுந்தலா கிச்சனுக்குள் சென்றுவிட்டார்.

சங்கர் சிரித்தபடி உணவை முடிக்க, “குட் மார்னிங்ப்பா” என்று மகன் வந்தான்.

“அஜய்.. குட் மார்னிங். கிளம்பியாச்சா? சீக்கிரம் சாப்பிடு. வேன் வந்திடும்” என்றார் சங்கர்.

“வேன் வந்தாலும் பிரச்சனை இல்லைப்பா. பக்கத்து வீட்டு வானரம் இன்னும் குளிக்க கூட செஞ்சிருக்காது” என்றான் அஜய் தோள்குலுக்கி.

“அது என்னமோ உண்மை தான். நான் கிளம்புறேன்” என்று மனைவி, மகனுக்கு சொல்லி கொண்டார்.

கீழே வந்து பைக் எடுக்க, “ஹலோ சார்” என்று வந்தார் பலராம்.

“பஞ்சாயத்து பண்ணிட்டிங்களா” என்று சங்கர் கேட்க,

“அது நைட்டுக்கு போஸ்ட்போன் பண்ணிட்டேன் சார்” என்றார் பலராம்.

“நல்ல முடிவு. மீட்டிங் இருக்கே” என, இருவரும் சிரித்தபடி அவரவர் பைக்கில் அலுவலகம் கிளம்பினர்.

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அந்த சிமெண்ட் தொழிற்சாலை.

அங்கு பணிபுரிவோரின் பதவிக்கு ஏற்ப, அங்கேயே அனைவருக்கும் குவார்ட்டஸ் உண்டு. பள்ளியும் அவர்கள் கம்பெனிக்குடையதே.

அசிஸ்டன்ட் மேனேஜர், டெபியூட்டி மேனேஜர், மேனேஜர் போன்றோர்க்கான தனி குடியிருப்பில் தான் சங்கர், பலராம் குடும்பம் உள்ளது.

பள்ளி வேன் இவர்கள் பிளாக் முன் வந்து ஹார்ன் அடிக்க, உணவு முடித்திருந்த அஜய் சாவகாசமாக அம்மாவிற்கு சொல்லி கொண்டு வந்தான்.

பக்கத்து வீட்டில், “வேன் வந்திடுச்சுடி” என்ற குரலை  தொடர்ந்து,

“எனக்கு தெரியும் நீ சொல்லாத” என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

“சீக்கிரம் கிளம்பு பாப்பா”

“இப்போ மட்டும் வரீங்க. உங்க செல்ல பொண்ணு எனக்கு ரிப்பன் தர மாட்டேன்னு சொன்னப்போ  கண்டுக்காம இருந்தீங்க?”

“குட்டி கிளம்பு. ஈவினிங் அம்மா அவளை திட்டுறேன்”

“திட்டு எல்லாம் கிடையாது. அவளை அடிக்கணும்”

“ம்மா..  அவ ரிப்பன் தொலைச்சதுக்கு என்னை அடிக்கணுமா? இதென்ன அநியாயம்?”

“நீ பேசாத. நான் உன்கிட்ட பேசலை”

“தாரணி கொஞ்ச நேரம் அமைதியா இரு”

“ம்மா. அவ பேசுறது உங்களுக்கு தப்பாவே தெரியலையா? இவளுக்கு என் ரிப்பன் கிடையாது போங்க” என்று ரிப்பனோடு வேனுக்கு வந்துவிட்டாள் தாரணி.

“ம்மாமா”

“காத்தாத. ரிப்பன் இல்லாம போய் அடி வாங்கு. போ. அப்போ தான் பொறுப்பா எடுத்து வைப்ப. கிளம்பு போ” என்று முதுகிலே அடி விழுந்தது.

“அம்மாவும் மகளும் சேர்ந்து என்னை கொடுமை படுத்துறீங்க. அப்பா வரட்டும்” என்று மூக்கை உறிஞ்சு கொண்டே வேனுக்கு வந்தாள் அவள்.

“ஜீவிதா. லன்ச் எடுத்துட்டு போ” பின்னாலே அவளின் அம்மா கல்பனா வர,

“எனக்கு வேணாம். உங்க செல்ல பொண்ணுக்கே கொடுங்க” என்று வாங்கவே இல்லை.

“என்கிட்ட கொடுங்கக்கா” என்று வேனில் இருப்பவர் வாங்கி கொள்ள, ஜீவிதா கண்ணில் கண்ணீருடன் முறுக்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.

“இன்னைக்கு என்ன பஞ்சாயத்து?” தாரணி பக்கம் அமர்ந்திருந்த அஜய் கேட்க,

“ரிப்பன் தொலைச்சுட்டா. போனா போகுதுன்னு என்னது கொடுத்தா ரொம்ப பேசுறா” என்றாள் தாரணி கடுப்புடன்.

“போய் அவளுக்கு ரிப்பன் கட்டி விடு தாரு. கேம்பஸ் வர போகுது. PT சார் பார்த்தா தொலைஞ்சா” என்றாள் சீனியர் மாணவி.

“பனிஷ்மென்ட் வாங்கட்டும்க்கா” தாரணி சொல்ல,

“தாரு. கோ” என்றான் அஜய்.

“எல்லாம் அவளுக்கே சப்போர்ட் பண்ணுங்க” தாரணி முனங்கி கொண்டே இரண்டு சீட் முன் அமர்ந்திருந்த தங்கையிடம் ரிப்பனை கொடுத்தாள்.

“எனக்கு ஒன்னும் வேணாம் போ” என்று மறுக்க,

“ஒழுங்கா கட்டித் தொலை” என்று தாரணி அவளுக்கு கட்டிவிட, மீண்டும் தட்டிவிட்ட ஜீவிதாவின் பின் தலையில் சுள்ளென அடி விழுந்தது.

அஜய் நின்று கொண்டிருக்க, “ஸ்ஸ்” என்று தேய்த்தவள், பின்னால் திரும்பி பார்க்கவே இல்லை. ஆனால் மூக்கு விடைத்து கண்ணீர் மட்டும் இன்னும் ஜோராக வந்தது.

“மூச். சத்தம் வர கூடாது. தாரு கட்டிவிடு” என்றான் அஜய்.

தாரணி கட்டிவிட, வேன் பள்ளி வளாகத்தில் நின்றது. எல்லாம் இறங்க, “க்கா” என்று பஸ் அட்டண்டர் முன் நின்றாள் ஜீவிதா.

“அவர் என்னை அடிச்சார். நீங்க கேட்கவே இல்லை” என்றாள்.

“நான் பார்க்கலையே கண்ணு. அடுத்த முறை பார்த்தா கண்டிச்சு விடுறேன்” என்று சென்றுவிட்டார்.

‘எல்லாம் பிராடு’  ஜீவிதா வகுப்புக்கு சென்றாள்.

பிள்ளைகள் பள்ளி செல்லவும், “கல்பனா” என்று சகுந்தலா வந்தார்.

“வா சகுந்தலா” என்று அவர் அமர இடம் ஒதுக்கி கொடுத்தார்.

வீடே கந்தலாகி இருந்தது. “இவளுங்க சண்டையில எனக்கு தான் தினமும்  முதுகு உடையுது” என்றபடி அவருக்கு காபி எடுத்து வந்தார்.

சகுந்தலா எடுத்து வந்த பொங்கலை சாப்பிட ஆரம்பித்த கல்பனா, “அடுத்த வாரம் ஏதோ பங்க்ஷன்ன்னு சொல்லிட்டிருந்தாங்க” என்று கேட்டார்.

“ஆமா. பிளான்ட் ஆரம்பிச்ச வருஷத்தை கொண்டாடுறாங்க” என்ற சகுந்தலா, “வருஷம் எவ்வளவு வேகமா ஓடுது பாரு” என்றார்.

“ஆரம்பிச்ச புதுசுல இங்க வந்தோம். இப்போ பெருசு இரண்டும் ஒன்பதாவதே வந்துடுச்சுங்க” என்றார் கல்பனா.

தாரணி வயிற்றில் மூன்று மாதம் இருக்கும் போது இங்கு வந்தனர். அப்போது தான் சகுந்தலா, சங்கருக்கு திருமணம் முடிந்த புதிது. அடுத்த இரண்டாம் மாதம் அஜய் உண்டாகி இருந்தான்.

இருவரும் நலம் விசாரித்து, உணவோடு கர்ப்பவதிக்கான உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததில் உண்டான நட்பு இது. சில சில வேறுபாடுகள் வந்த போதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அஜய், தாரணி ஒன்பதாம் வகுப்பு படிக்க, ஜீவிதா ஆறாம் வகுப்பு படிக்கிறாள்.

ஆண்களுக்கு காலை எட்டு மணிக்கே வேலை நேரம் ஆரம்பித்து,  மாலை நான்கு மணிக்கு முடிந்துவிடும் என்றாலும், ஓயாத வேலையால் வீட்டுக்கு வர ஏழு எட்டு ஆகிவிடும்.

பிள்ளைகள் நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவர். கல்பனா ரவா லட்டு செய்திருக்க, ஜீவிதா காலை நடந்த சண்டையை மறந்து அக்காவுடன் சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்.

“ட்ரஸ்ஸை கூட மாத்துறதில்லை. இந்தா இதை போய் அஜய்க்கு கொடுத்திட்டு வா” என்று சின்ன மகளிடம் பாக்ஸை நீட்டினார்.

“இதுக்கு மட்டும் நானா? உங்க செல்ல பொண்ணை அனுப்புங்க” என்றாள் ஜீவிதா.

“எனக்கு ரிக்கார்ட் ஒர்க் இருக்கு. நீ எழுதி தரியா?” என்று தாரணி கேட்க,

“நான் ஏன் எழுதணும்?” என்று அடுத்த சண்டை ஆரம்பித்தது.

“ம்மா.. இவ ஹோம் ஒர்க்”

“ம்மா நான் கிளம்பிட்டேன்” என்று ஜீவிதா பக்கத்து வீடு ஓடி வந்துவிட்டாள்.

“அத்தை” என்று மெல்ல எட்டி பார்த்தவள், சங்கர் இன்னும் வாரததில் சுதந்திரமாக சோபாவில் சென்று அமர்ந்தாள். அவரிடம் பயம் கலந்த மரியாதை அதிகம்.

“வா ஜீவி” என்று சகுந்தலா வர, பாக்ஸை நீட்டினாள்.

“அஜய்க்கு கொடுத்துட்டு வரேன்” என்று மகனின் அறைக்கு சென்று கொடுத்து வந்தார்.

“அத்தை உங்க மகன் என் தலையில அடிச்சுட்டார்” என்று புகார் வாசித்தாள்.

“இதுக்கு தானே  டப்பாவை தூக்கிட்டு வந்த” என்ற அஜய் குரல் அறையில் இருந்து வந்தது.

“அவ எனக்கு ரிப்பன் தரலன்னு கேட்டதுக்கு இவன் அடிக்கிறான். சின்ன பொண்ணுன்னு எல்லாருக்கும் நான் தான் இளைச்சவ”

“ஆஆ அம்மா” ஜீவிதா நடுதலையில் விழுந்த கொட்டில்,  தேய்த்து கொண்டு கத்தினாள்.

“மரியாதையா பேசு” என்று நின்றான் அஜய்.

“இவர் மட்டும் என்னை அடிக்கலாமா அத்தை?”

“முரண்டு பிடிச்சா அடி தான் விழும்”

“அவ செய்றது எல்லாம் இவருக்கு தெரியாதா அத்தை?”

“தாரு என் ப்ரெண்ட். பிறந்ததில் இருந்து அவளை தெரியும்”

“என்னையும் தானே பிறந்துதுல இருந்தே இவருக்கு தெரியும். அப்போ எனக்கும் தானே இவர் சப்போர்ட் பண்ணனும் அத்தை?”

அஜய் அறைக்கு போக, “பதில் சொல்லிட்டு போக சொல்லுங்க அத்தை” ஜீவிதா கத்தினாள்.

அஜய் திரும்பி வந்து அவள் ஜடை சுருட்டி பிடித்து முறுக்கியவன், “என்கிட்ட கேட்டா தான் பதில் வரும்” என்றான்.

“வலிக்குது வலிக்குது” பெண் குதித்தாள்.

“விடு அஜய். பாவம்” சகுந்தலா உதவிக்கு வர,

“ம்மா. இவளுக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு. மூணு வருஷம் பெரியவன். என்கிட்ட பேசுற முறையா இது” என்றான் அஜய்.

“அதுக்காக பூரண கும்ப மரியாதை கொடுத்தா பேச முடியும் அத்தை?” ஜீவிதா வலியிலும் பேசினாள்.

அஜய் இன்னும் வலுவாக முடியை இழுக்க, “இவர் தானே நேத்து என்கிட்ட பேசாதன்னு சொன்னார் அத்தை?” என்றாள் ஜீவிதா.

“படிக்கும் போது வந்து நொய் நொய்ன்னு கத்தினா” என்ற அஜய் முடியை விட்டான்.

“பாருங்க யூனிபார்ம் கூட மாத்தலை. கால்ல இருக்குற சாக்ஸை கூட உருவி போட முடியாதா. ஒரு டிசிபிளின் இல்லை. நல்ல பழக்க வழக்கம் இல்லை. வாய் மட்டும் எட்டூருக்கு போகும்” முகத்தை சுளித்து கொண்டு அஜய் சொல்ல,

ஜீவிதா உதடு பிதுக்கி அழுகைக்கு தயாரானாள்.

“ஷ்ஷ்ஷ் அழுத கொன்னுடுவேன். எல்லோரையும் ஏய்க்கற மாதிரி என்கிட்ட நடக்காது”

“விடு அஜய். இப்போ பண்ணிடுவா” என்ற சகுந்தலா அவளுக்கு பூஸ்ட் கொண்டு வந்தார்.

“கல்பனா அத்தையை நல்லா ஏமாத்துறா, அங்கிள் அதுக்கு மேல செல்லம். ஹோம் ஒர்க் பண்ணாம போய் இவளால தாரணி இன்னைக்கும் திட்டு வாங்குனா. ஷட்டில் விளையாட போக கூடாது. மீறி போன பார்த்துக்கோ” என்றான் மிரட்டலாக.

“நீ பூஸ்ட் குடிச்சுட்டு கிளம்பு ஜீவி” சகுந்தலா சொல்ல,

“எனக்கு வேணாம்” என்றாள் ரோஷமாக.

“வேணாம்ன்னா போ. ம்மா. அவளை அனுப்பி விடுங்க” என்று அஜய் அறைக்கு சென்றுவிட்டான்.

ஜீவிதா கோவமாக வீட்டுக்கு வந்தவள், “உன்னால தான் இன்னைக்கும் திட்டு வாங்கினேன். ஒழுங்கா உன் பிரென்ட்கிட்ட சொல்லி வை” என்று அக்காவிடம் கத்திவிட்டு, ஒரே மூச்சிலே முழு ஹோம் ஒர்க்கையும் முடித்தாள்.

பலராம் மகளின் படிப்பில் மகிழ்ந்து போனவர், அவளுக்கு படம் வரைய எல்லாம் உதவி செய்தார். இரவு உணவையும் அப்பாவையே ஊட்ட சொல்லி எழுதி முடித்தவள், “ப்பா வாங்க நாம ஷட்டில் விளையாட போலாம்” என்று நின்றாள்.

“இப்போ நேரம் என்னன்னு பார்த்தியா? ஒன்பதாக போகுது, தூங்க போ” என்று கல்பனா அதட்ட,

“ப்பா” என்று அப்பாவையே பார்த்து நின்றாள் பெண்.

“சரி சரி இன்னைக்கு ஒரு நாள் மட்டும். பிள்ளை இவ்வளவு நேரம் படிச்சுது இல்லை” என்று மனைவிக்கு சமாதானம் சொல்லி மகளுடன் வந்தார்.

இவர்கள் பிளாக் முன் இருக்கும் இடத்திலே இருவரும் ஷட்டில் விளையாட, அந்த சத்தத்தில் அஜய் பால்கனி வந்து பார்த்தான்.

ஜீவிதா  அவனை பார்த்தே இன்னும் ஜோராக விளையாடினாள்.

“ஹோம் ஒர்க் முடிச்சியா?” அஜய் சந்தேகமாக கேட்க,

“முடிச்சுட்டா அஜய். பாவம் இவ்வளவு நேரம் உட்கார்ந்து எழுதினா” என்றார் பலராம்.

“பெண்டிங் வைச்சா அப்படி தான் அங்கிள்” என்று அஜய் சொல்லி அறைக்குள் சென்றுவிட்டான்.

“நான் பெண்டிங் வைச்சா இவனுக்கு என்னவாம்ப்பா? அக்கா என்னால திட்டு வாங்கிட்டாளாம். அதுக்கு என்னை கொட்டிட்டான்” என்றாள் அப்பாவிடம்.

“நீ ஹோம் ஒர்க் பண்ணாம போனதும் தப்பு ஜீவிதா. இனி இப்படி பண்ணாத” என்றார் தந்தை கண்டிப்புடன்.

“எல்லாம் என்னையே திட்டுங்க. எனக்கு போதும்” என்று வீட்டுக்கு ஓடிவிட்டாள்.

Advertisement