Advertisement
வருணாவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தருணை கவிதாவே பள்ளிக்கு அழைத்து வந்திருந்தாள். வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியவள் மகனிடம் யார் சுப்ரணா என்று கேட்டு தெரிந்து கொண்டு அவளின் வரவுக்காக காத்திருக்க,
ஸ்கூட்டியில் சீறி கொண்டு வந்தவள் பள்ளியை நெருங்கியதும் வேகத்தை குறைத்து கொண்டு வாசலில் வாகனத்தை நிறுத்தி “நேத்து மாதிரி யார்கிட்டயும் வம்பு பண்ண கூடாது சுபா நல்ல பொண்ணா இருக்கணும் சரியா?” என வருணா மிரட்டும் தோணியில் சொல்ல,
“சரி” என்றாள் தலையை தொங்க போட்டு.
“அதை கொஞ்சம் நல்லா சொன்னா தான் என்னவாம்” என்றவள் மகளின் கூம்பிய முகம் பொறுக்காது சன்னமாய் முறுவலித்தபடி,
“சரி நீ தப்பு பண்ணலை அந்த பையன் தான் தப்பு பண்ணான் போதுமா” என அவளுக்கு சாதகமா பேசவும் சுபர்ணாவின் முகம் மலர்ந்தது.
மகளின் மலர்ச்சி அவளையும் தொற்றி கொள்ள, “சரி இந்தா சாக்லேட்” என நீட்டியவள் சுபர்ணாவின் கன்னத்தில் இதழ் பதித்து நிமிர,
அவளை நோக்கி சிறு புன்னகையுடன் தருணை அழைத்து கொண்டு வந்தாள் கவிதா. வந்தவளை புரியாது பார்த்தவள் “உங்களுக்கு என்ன வேணும் யார் நீங்க?” என கேட்க,
“அம்மா” என வருணாவின் புடவையை பிடித்து இழுத்தவள் “இவன் தான் என்ன தள்ளிவித்தான்” என புகார் கூறினாள் சுபர்ணா.
புருவங்கள் மேலேற எதிரில் இருந்தவளை பார்த்தவள் வாய் திறக்கும் முன்பே “சாரி நான் தருணோட அம்மா. தப்பு இவன் மேல தான் மன்னிச்சிடுங்க ஏதோ தெரியாம பண்ணிட்டான் இனிமே அப்டி ரூடா பிகேவ் பண்ண மாட்டான்” என்றவள் பெயர் தெரியாமல் தடுமாற,
“வருணா!” என்றாள் சிநேகம் பொதிந்த புன்னகையில்.
“ஓ நீங்க தான் இவனோட அம்மாவா உங்கள பாத்து நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க” என்றவளின் முகத்தில் புன்னகை மறைந்து கடுமை குடிகொள்ள,
கவிதாவின் மனம் படபடத்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள் “மனிச்சிருங்க ஏதோ தெரியாம பண்ணிட்டான்” என இறைஞ்சும் குரலில் பேசினாள்.
அவளின் முகபாவனை வருணாவிற்கு சிரிப்பை பீறிட செய்ய, “கோபமா பேசுற மாதிரி நடிச்சா நிஜமாவே பயந்துட்டீங்க உங்கள ஈஸியா ஏமாத்திறலாம் போலயே” என சிரித்தாள் வருணா.
கவிதாவின் முகம் சமாளிப்பான புன்னகையை பிரதிபலிக்க, அப்புன்னகையின் பின்னே மறைந்திருந்த ஏமாற்றத்தின் வலியை அவள் மட்டுமே அறிவாள்.
அவள் பெயரை கேட்டு தெரிந்து கொண்டவள் “பின்ன என்ன கவிதா சின்னபசங்க இன்னைக்கு சண்டை போடுவாங்க நாளைக்கு சமாதனமாகி விளையாடுவாங்க அதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு சண்டை போடுறது நல்லாவா இருக்கும்.
இதுக கூட்டுன அலபறைக்கு மன்னிப்பு கேட்க வந்துட்டீங்க. நானே உங்கள பாத்து பேசலாம்னு இருந்தேன், தருண் பண்ணது தப்புன்னா சுபர்ணா பண்ணதும் தப்பு தான். விடுங்க கவிதா“என பெருந்தன்மையாய் உரைத்தவள் பையில் இருந்து சாக்லெட்டை எடுத்து தருணிடம் நீட்டினாள்.
அனுமதி வேண்டி கவிதாவை பார்த்தவன் “வாங்கிக்கோ” என சொல்லவும்,
ஆசையுடன் பெற்று கொண்டு “தங்க்ஸ் ஆன்ட்டி மாமா கூட இதை தான் சொன்னாரு. என்னம்மா“.
“ஆமா வருணா அவனும் உங்கள மாதிரி தான் பேசுனான் அவன் மட்டும் தடுக்கலை செமத்தியா அடிவாங்கிருப்பான்” என மகனை பார்த்தாள் கவிதா.
“இந்த வாங்க போங்க வேணாமே கொஞ்சம் ஓவரா இருக்கு. சோ வா போன்னே சொல்லுங்க உங்கள விட வயசுல சின்னவ தான்” என்று சிரித்தவள் “சரி எனக்கு டைம் ஆச்சு நாளைக்கு பாக்கலாம்” என்று ஸ்கூட்டியை வளைத்து திருப்ப,
“ஆன்ட்டி நீங்க கவலைப்படாம போங்க சுப்ரணா குட்டிய நா பத்திரமா பாத்துகிறேன்” என்றவனை பார்த்து கண்சிமிட்டி புன்னகைத்தவள் “ஓகே சார்” என்று தலையாட்டி அங்கிருந்து விடைபெற்று சென்றாள் வருணா.
சிறு பிள்ளைகள் இருவரும் உடன்பிறப்புகளை போல் நடந்து கொள்ள கவிதாவிற்கும் வருணாவிற்கும் இடையில் பரஸ்பர நட்பு உண்டானது.
நந்தனும் இரண்டு நாட்களை பெங்களுரில் கழித்துவிட்டு சென்னை கிளம்பி சென்றான்.
இல்லம் சென்றதுமே முத்துவின் புலம்பல் தான் அவன் செவிகளை முதன்மையாய் நிறைத்தது.
“என்ன முத்து ண்ணா ரெண்டு நாள் ரொம்ப ஹாப்பியா இருந்திங்களா?” என வேண்டும் என்றே கேட்டான் அபிநந்தன்.
அவன் சிரித்து கொண்டே கேட்ட விதம் கேலி என்பதை உணர்த்திட, “அட போங்க தம்பி நீங்க போயிட்டீங்கன்னு ரெண்டு பேருக்கும் சோறு தண்ணி இறங்கல உங்கள காணோம்னு வீட்டை சுத்தி சுத்தி வந்து ரெண்டு பேரும் பண்ண அட்டகாசம் இருக்கே ஹப்பா சொல்லி மாளாது. உள்ள வாங்க தம்பி உங்கள பாத்தா ரெண்டும் துள்ளிக்கிட்டு வருங்க” என்றவர் அவன் கையில் இருந்த துணி பேக்கை அவர் கைக்கு மாற்றி கொண்டார்.
பரபரப்பும் ஆர்வமும் சேர்ந்து கொள்ள உள்ளே சென்றவன் “முத்து ண்ணா” என்று குரல் கொடுக்க,
குரல் வந்த திசையை பார்த்த இருவரும் படுத்திருந்தவாறே கோபமாக முகத்தை திருப்பி கொண்டனர்.
“என்மேல கோபமா இருக்கீங்களா?” என இருவருக்கும் இடையில் சென்று அமர்ந்தவன் “உங்க கிட்ட சொல்லாம உங்கள விட்டுட்டு போனது தப்பு தான் சாரி” என இருவரையும் தூக்கி மடியில் வைத்து கொண்டான் நந்தன்.
அவன் கை தீண்டலில் முறைப்புகள் எல்லாம் முரண்களாகிட, வாதம் புரிய தொடங்கிய இருவரையும் சமாதானம் செய்து அரவணைத்து கொண்டவன்,
“முத்து ண்ணா ரெண்டுபேருக்கும் சாப்பாடு கொண்டு வாங்க” என்று குரல் கொடுக்க,
இருவருக்கும் உரிய தட்டில் உணவை கொண்டு வந்த முத்து “தம்பி இந்தாங்க உங்க கையாலேயே அவங்க உண்ணாவிரதத்தை முடிச்சு வைங்க” என்றார்.
“ஸ்கூபி, ஸ்மோக்கி சாப்பிடுங்க” என்றதும் உணவில் வாயை வைத்த நொடி பசியில் தட்டு காலியாகிட அப்பாவியாய் அவனை பார்த்தன நாய் குட்டிகள்.
‘உணவு காலி இன்னும் வேண்டும்‘ என அவனுக்கு உணர்த்தும் விதமாய் இரண்டும் திருதிருவென விழித்து பார்க்க,
“போதும் சாப்ட்டது” என்றவன் சற்று நேரம் அதனுடன் செலவழித்துவிட்டு இரண்டையும் முத்துவிடம் ஒப்படைத்து விட்டு அறைக்கு சென்றான் அபிநந்தன்.
கோடை மழையில் ஒதுங்க இடம் இல்லாமல் மழை நீரில் நனைந்து குளிரில் நடுங்கியபடி காரின் அடியில் கதகதப்பிற்கு தவித்து தள்ளாடி கொண்டிருந்த குட்டிகள் இரண்டையும் அரவணைத்து ஆதரித்து கொண்டான் நந்தன். சில நேரங்களில் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் மருந்தே அவைகள் தான். எத்தனை மனஅழுத்தம் இருந்தாலும் வீட்டின் உள்ளே நுழைந்ததும் காலை சுற்றி சுற்றி வருவதை கண்டதும் அழுத்தம் இறுக்கமெல்லாம் கரைந்து காணாமல் போய்விடும் அவனுக்கு. அவனில்லாமல் அவை இல்லை அவை இல்லாமல் அவன் இல்லை.
அழுக்கு துணிகளை மெஷினில் போட்டுவிட்டு குளித்து முடித்து வெளியே வர காஃபி கப்புடன் உள்ளே நுழைந்தார் முத்து.
“தம்பி டிஃபன் ரெடி பண்ணிட்டேன் சீக்கிரம் வாங்க” என சொல்லிவிட்டு செல்ல எத்தனித்தவர் தயக்கத்துடன் மீண்டும் “தம்பி” என அழைத்தார்.
“சொல்லுங்க ண்ணா“.
“நம்ம கவிதா பாப்பா வீட்டுக்காரர் வந்துருந்தாரு“.
“என்னவாம்?”,ரத்தின சுருக்கமாய் கேள்வி எழுப்பினான்.
“தெரியலை தம்பி கேட்டதுக்கு உங்ககிட்ட பேசணும்னு சொல்லிட்டு போயிட்டாரு கொஞ்சம் கோபமா இருந்தாரு, நீங்க வந்ததும் உங்ககிட்ட சொல்ல சொன்னாரு” என்று தயங்கி கொண்டே விஷயத்தை உரைத்திட,
“சரி நா பாத்துக்கிறேன்” என்றதும் அங்கிருந்து சென்றுவிட்டார் முத்து.
அவசரமாக அலைபேசியில் யாருடனோ தொடர்பு கொண்டு பேசியவன் அலுவலகம் செல்ல தயராகி கீழே வர, காலை உணவு தயாராய் இருந்தது.
சூடான அப்பமும் அதற்கு தொட்டு கொள்ள கடலை கறியும் பரிமாறியவர் அவன் ரசித்து உண்ணும் அழகை இமைக்காது பார்த்தார்.
“அப்டி பாக்காதீங்க ண்ணா வயிறு வலிக்கும்” என்று சிரித்து கொண்டே சொன்னவன் “நீங்களும் உக்காருங்க” என வாயில் உணவை அடைத்து கொண்டே சொல்ல,
“இருக்கட்டும் தம்பி நீங்க சாப்டுங்க” என்றவர் மேலும் இரண்டு அப்பங்களை தட்டில் வைக்க,
“போதும் போதும்மன்ற அளவுக்கு சாப்பிட வைக்கிறீங்க ஆனா வயிறு நிறையிற அளவுக்கு மனசு நிறைய மாட்டேங்கிது. தனியா சாப்பிட போர் அடிக்கிதுன்னு தானே உங்களையும் சேர்ந்து சாப்பிட சொல்றேன், நாளையில இருந்து நீங்களும் சாப்பிடுறதா இருந்தா சமையல் பண்ணுங்க இல்லன்னா நா வெளிய சாப்ட்டுகிறேன்” என கண்டன குரலில் கூறினான் அபிநந்தன்.
‘கோபமே‘ என எண்ணி கொண்டவர் “அய்யோ என்ன தம்பி நீங்க. நா இருக்கும் போது எதுக்கு நீங்க வெளிய சாப்பிடணும் லேட்டா சாப்ட்டு பழகிடுச்சு தம்பி பழக்க தோஷத்தை மாத்திக்க முடியலை” என்றார் சங்கடம் நிறைந்த குரலில்.
“எனக்காக மாத்திக்க கூடாதா?” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை தட்டில் கைகழுவி எழுந்து கொண்டவன் “மதியம் லன்ச் அனுப்ப வேணாம் ண்ணா ஆபிஸ்ல இருக்க மாட்டேன் சைட்டுக்கு போயிருவேன்” என தகவல் சொல்லிவிட்டு விடைபெற்று கிளம்பினான்.
வாட்டம் நிறைந்த நாட்கள் எல்லாம் வசந்தமாய் மாறிட, மகிழ்ச்சியாய் உணர்ந்தாள் வருணா. புதிய உறவு கிடைத்ததில் அவன் நினைவுகள் கூட அவளுக்கு அதிகமாய் வருவதில்லை. விடுமுறை நாள் என்றால் சுபர்ணா தருண் இருவரையும் ஊர் சுற்ற அழைத்து சென்றுவிடுவாள் வருணா. மாலை வரை சுற்றி விட்டு இல்லம் அழைத்து வந்து சாராதவின் கையால் சிற்றுண்டியை சுவைக்க வைத்துவிட்டு அதன்பிறகே அவனை இல்லத்திற்கு அழைத்து சென்றுவிடுவாள். கவிதாவையும் உடன் அழைப்பாள் ஆனால் சில காரணங்களை கூறி தவிர்த்துவிடுவாள் கவிதா.
அன்று பள்ளியில் முக்கிய வேலை இருப்பதாக கூறிவிட்டு வருணா விரைவாகவே கிளம்பி சென்று விட,ராகவன் தான் சுபர்ணாவை பள்ளி அழைத்து சென்றான்.
கவிதாவை பற்றி பலமுறை பேச கேட்டது தானே ஒழிய நேரில் பார்த்தது கிடையாது. சுப்ரணாவை பார்த்து புன்னகைத்து கொண்டு வந்தவளை கண்கள் இடுங்க பார்த்தவன் முதலில் யார் என்று தெரியாமல் விழிக்க,
“மாமா இவங்க தான் கவிதா ஆன்த்தி” என்று அறிமுகம் செய்தாள் சுப்ரணா.
அருகில் வந்தவளை கண்டு கொண்டவன் அதிர்ச்சியை காட்டாது அமைதியாய் நிற்க, அவன் மறைத்ததை சன்னமாய் விழிகளில் வெளிப்படுத்தினாள் கவிதா.சுற்றம் உணர்ந்தவள் “ஹாய் சுப்ரணா குட்டி” என கொஞ்சிவிட்டு,
“எங்க வருணா வரலையா?”என ராகவனிடம் தயக்கத்துடன் கேட்டாள்.
அவனிடம் இயல்பாய் பேச சிரம்மாய் இருந்தது கவிதாவிற்கு. முகத்தில் தெரிந்த தயக்கத்தை கண்டே உள்ளத்தை உணர்ந்து கொண்டவன் வெற்றுபுன்னகையில் இதழ் சுழித்தான். அவளுக்கு மேலும் சங்கடத்தை கூட்டாமல்,
“இல்ல அவங்க ஸ்கூல்ல ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சீக்கிரமே கிளம்பி போய்ட்டாங்க” என பதிலளித்தவன், அவளிடம் பேச வார்த்தைகள் இல்லாதது போல சுபர்ணாவிடம் விடைபெற்று சென்றுவிட்டான் ராகவன்.
‘அவனின் இயல்பான குணம்‘ என சாதாரணமாக எண்ணி கவிதாவால் கடந்து செல்ல முடியவில்லை.தோல்வியின் பிரதி அழிந்திருக்குமா என்ன“.
சட்டென விழிகளில் ஈரம் படர எவரும் அறியாமல் ஈரத்தை உள்வாங்கி கொண்டவள் புன்னகையை வெளி பூச்சாய் அப்பி கொண்டு மழலைகள் இருவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்.
‘கவிதா‘ என வருணா கூறியதும் யாரோ ஒருத்தி என எண்ணி இருந்தவனுக்கு நேரில் அவளை பார்த்ததும் பேச வார்த்தைகள் வரவில்லை.
என் நந்தவனைத்தை கிழித்து கொண்டோடி சட்டென வற்றிவிட்ட நதி நீ..
பிரிவை தயாரித்து கொண்டு தானே காதலை அறிவித்தாய்.
ஒரு நாள் பூத்த மலராய் வாசம் வீசிய காதல் குலுங்கும் முன்பே கண்பட்டு இறந்து போக முதல் கண்ணீரை அவளுக்காக அர்பணித்தான் ராகவன்.
பருவம் அடைந்த வயதில் காதல் பட்டாம்பூச்சியை போல கிலுக்கிலுப்பை உண்டாக்கும். எந்நேரமும் சிந்தனைகளை சிதற வைக்கும். பார்க்கவில்லை என்றால் பதற வைக்கும். பார்த்துவிட்டால் படபடக்கும். பேச வேண்டும் என உள்ளம் துடிக்கும். பேச சென்றால் மூச்சு முட்டும். நிறைமாத கர்பிணியை போல மனம் அவஸ்தையில் அலைகழிக்கும். இறுதியில் என்ன ஒரு வாழ்க்கை என்று அவரவர்க்கு ஏற்ற வகையில் பெருமூச்சை சொரிய வைக்கும்.
அவனுக்குள்ளும் காதல் பட்டாம் பூச்சி துளிர்த்தது. அடைகத்தா நாட்கள் போதுமென கூட்டை கிழித்து கொண்டு பறக்க தயாராய் இருந்த தருணம் சொல்லாமல் சொல்லி சென்றாள் அவள் காதலின் அளவுகளை. முதல் தோல்வி, அழுகையோடு சேர்ந்த புன்னகையை ஒளிர்வித்தது அவனிடத்தில். நீங்காத நினைவில் உழன்றவன் பத்திரமாய் இல்லம் வந்து சேர்ந்ததை அறியான்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் வேண்டும் என்றே கவிதாவின் சந்திப்புகளை தவிர்த்தான் ராகவன். சில நாட்கள் வருணா அழைத்து சென்று விடுவாள் இல்லையென்றால் வழமையான நேரத்திற்கு முன்பே சுப்ரணாவை பள்ளியில் விட்டுவிட்டு பணிக்கு சென்று விடுவான்.
அவனை காண வேண்டும் என்று அவளும் அலைமோதவில்லை அவனும் ஆர்வம் கொள்ளவில்லை. ‘ஒரே ஒரு வார்த்தை தற்போது வரை நெஞ்சை பிசைந்து உயிரறுக்கும் அந்த ஒரு வார்த்தைகான பதிலை மட்டும் தெளிவுபடுத்தி விட்டால் மனம் நிர்மலம் அடையும்‘ என சரியான சந்தர்ப்பம் அமைய காத்திருந்தான் ராகவன்.
விதி ஆடிய விளையாட்டில் விரும்பிய மனங்கள் விரும்பமில்லாமல் பிரிந்திட இருவரையும் சேர்த்து வைக்க மீண்டும் விதி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் இரு உள்ளங்கள் ஒன்று படுமா அல்லது அவரவர் வழிபார்த்து செல்லுமா? படைத்தவனே அறிவான்.
தொடரும்..
Advertisement