Advertisement

திருநெல்வேலி பாளையங்கோட்டையில், தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்தபடி வீட்டில் தனது அறையில் அபியுதித் கிளம்பிக் கொண்டு இருக்க,

அவன் அறையினுள் வந்த அவனது தந்தை அன்பரசு வருத்தம் தோய்ந்த குரலில், என் மகன் என்னை போல் யாருக்கும் தீங்கு நினைக்காதவன்னு பெருமையா மார்தட்டிட்டு இருந்தேன்.. அதை கானல் நீரா மாத்திட்டியே! உன் உடம்பில் உன் அம்மா ரத்தம் தான் அதிகம் ஓடுது போல!” என்று கூற,

அவனோ மென்னகையுடன் அவரை பார்த்தான்.

“இந்த சிரிப்புக்கு பின்னாடி ஒரு வில்லத்தனம் இருக்கும்னு இப்பவும் என்னால் நம்ப முடியலை” 

“அப்போ நம்பாதீங்க” என்று அதே புன்னகையுடன் இலகு குரலில் அவன் கூற, அவர் வருத்தமும் இயலாமையுமாக அவனைப் பார்த்தார்.

புன்னகையுடன் அவரது தோள்களை பற்றி மெத்தையில் அமர செய்தவன், “எதை சொன்னாலும் ஆராயாம நம்பிடுவீங்களா? ஏன்பா இப்படி வெளுத்ததெல்லாம் பால்னு  இருக்கிறீங்க!” என்றான்.

“ப்ச்” 

“அதான் பெரிய மாமா ஈஸியா உங்களை பிஸ்னஸ்ஸில் ஏமாத்துறாங்க” 

“அவன் ஏமாத்துறது எனக்கு தெரியாம இல்லை.. அதே மாதிரி நீ நினைக்கிற அளவுக்கு நான் வெகுளியான ஏமாளியும் இல்லை” 

அவன் சிரிக்கவும்,

“குடும்பதில் அமைதி நிலவ, நான் அமைதியா இருக்கிறேன்.. அவ்ளோ தான்.. மேலும், நான் சொன்னா கேட்கிற ரகமா உன் அம்மா?” என்றார்.

“சொல்ற விதத்தில் சொன்னா கேட்பாங்க” 

“அட போடா” 

“ஏன் நான் கேட்க வைக்கலை!” 

“இதை வேணா ஒத்துக்கிறேன்.. சுட்டுப்போட்டாலும் உன்னோட நீக்கு போக்கு எனக்கு வராது” 

விரிந்த புன்னகையுடன், “அதை விடுங்க.. மாமாவை கேட்கலாம் தானே!” என்றான்.

“எதுக்கு! ஒரு ஊரையே பகைச்சுக்கிட்டது போதாதா! அப்படி என்ன பெருசா ஏமாத்திட்டான்! லாபத்தில் கொஞ்சம் அடிப்பான்.. அதை வச்சு எந்த கோட்டையை கட்டிட்டான்! இல்ல அதனால் நான் தான் குறைந்து போயிட்டேனா! ராஜதந்திரம் மாதிரி இது விட்டுகொடுத்து போற குடும்பதந்திரம்” 

“அட போங்கப்பா! அந்த குடும்பதில் மொத்தமும் விஷ ஜந்துக்கள்.. மகி குட்டி மட்டும் விதிவிலக்கு.. அவளும் வளர்ந்தா எப்படி வருவாளோ!” 

“நீயும் அந்த கூட்டதில் சேர்ந்திட்டியோனு  தான் எனக்கு பயமா இருக்குது” 

“அப்பா.. அப்பா” என்று அவன் சிரிக்க,

“நான் உன் அப்பன்டா” என்றார்.

“இதனால் தாங்கள் சொல்ல வரும் கருத்து!” 

“நீக்கு போக்கா அம்மாவை ஏமாத்தலாம், என்னை முடியாது” 

புன்னகையுடன் புருவத்தை ஏற்றி இறக்கியபடி, “இன்ட்ரெஸ்டிங்” என்றான்.

“நீ அந்த கூட்டத்தில் சேரலை தான்.. ஆனா அவங்க நினைக்கிறதை தானே நீயும் செய்ய நினைக்கிற! அதைத்  தான் சொல்றேன்.. உன் அம்மா தான் வெறியோட இருக்கானா, நீயும் கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறியே! தப்புடா.. அந்த பொண்ணு வாயில்லா பூச்சி….” என்றதும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

“என்னணா! எதுக்கு இந்த வெடி சிரிப்பு?” என்றபடி அவனது தங்கை மைத்ரேயி உள்ளே வந்து கதவை மூடினாள்.

அவன் அப்பொழுதும் சிரிப்பை அடக்க முடியாமல் ஒரு கையால் வயிற்றை பிடித்தபடி சிரித்து கொண்டே மறுகையால் தந்தையை சுட்டிக் காட்ட,

“அப்படி என்ன ஜோக் சொன்னீங்கப்பா?” என்று கேட்டாள்.

அன்பரசு அவளை பாவமாக பார்த்துவிட்டு மகனை முறைத்தார், இல்லை முறைக்க முயற்சித்தார்.

மைத்ரேயி புன்னகையுடன், “என்னப்பா அண்ணாவை முறைக்கிறீங்களா? சொல்லிட்டு செய்யுங்கப்பா” என்று கூற, அவர் இன்னும் பாவமாக பார்த்தார்.

ஒருவாறு சிரிப்பை அடக்கிய அபியுதித், “பனிமலர் வாயில்லா பூச்சியாம்” என்றதும்,

அவளும் சிரிப்புடன், “அப்பா!” என்றாள்.

அபியுதித், “நீங்க அவளை பார்த்து பத்து வருஷம் ஆச்சு தான்.. ஆனா அவளை பற்றி கேள்விப்பட்டு இருப்பீங்க தானே!” என்றான்.

“அது ஏதோ உங்க அம்மா கரிச்சு கொட்டும் போது கேள்விபட்டு இருக்கிறேன்” 

“என்னன்னு?” 

“அந்த ஊரை நல்ல டெவலப் செய்து இருக்கானு” 

“அப்படிபட்டவ வாயில்லா பூச்சியா இருப்பாளா? அதுவும் ஊர் தலைவி வேற!” 

“அது..”

“அப்பவும் சரி இப்பவும் சரி, அவ வாயில்லா பூச்சி கிடையாதுப்பா.. பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்க இடம் தெரியாத மென்மையான குணத்தோட இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் நச்சுனு சரியா பேசுவா.. ஆனா இப்போ சவுண்ட் சரோஜாவும், பறந்து பறந்து அடிக்கும் ஜாக்கிஜானும் கலந்த கலவையான ஜான்சி ராணி தான் அவ” 

அன்பரசு சிறு அதிர்வுடன் அவனைப் பார்க்க,

மென்னகையுடன், “பூவை புயலா மாத்தி வச்சிருக்காங்க” என்று முடித்தபோது அவனது முகம் ஒரு நொடி இறுகி மீண்டது.

“இப்போ தான்டா ரொம்ப கவலையா இருக்குது” என்று அன்பரசு கூற, அவன் கேள்வியாய் நோக்கினான்.

“கல்யாணத்தை நிறுத்திய பிறகு உன்னோட நிலமை!” என்று அவர் கவலையுடன் கூற, மைத்ரேயி வாய்விட்டு சிரிக்க, அவன் இடுப்பில் கை வைத்தபடி இருவரையும் முறைத்தான்.

மைத்ரேயி, “அப்பா.. அப்பா! கவலைப்படாதீங்க.. அண்ணா கல்யாணத்தை நிறுத்த மாட்டான்.. அப்படி சொன்னா தான் அம்மா, பெரியத்தை திட்டங்களை கண்டு பிடிக்க முடியும்னு அப்படி சொல்லி இருப்பான்” என்றாள்.

அன்பரசு அப்பொழுதும் சந்தேகமாக மகனைப் பார்க்க,

“நீயே சொல்லுணா” என்றாள்.

அவனோ உதட்டோர புன்னகையுடன் தோளை குலுக்கிவிட்டு உதட்டை குவித்து விசில் அடித்தபடி கதவை திறந்து வெளியே சென்றான்.

இப்பொழுது அவள் சிறு சந்தேகத்துடன், “அப்பா!” என்று அழைக்க,

பெருமூச்சை வெளியிட்ட அன்பரசு, “32 வயசாகியும், உன் அண்ணன் ஏன் கல்யாணம் செய்யாம இருக்கிறான்னு நினைக்கிற!” என்று கேட்டார்.

அவள் புரியாமல் பார்க்க,

“என் மனசு சொல்லுது.. இவனும் கல்யாணத்தை நிறுத்த தான் போறான், ஆனா காரணம் தான் வேற” என்றார்.

அவள் அதிர்வுடன், “அண்ணா மலரை விரும்புறானா?” என்று கேட்டாள்.

“கத்தாத.. உங்க அம்மா காதில் விழுந்தது! அவளுக்கு முன்னாடி உங்க அண்ணன் நமக்கு சமாதி கட்டுனாலும் கட்டிடுவான்” என்று அவர் கூறவும் வேலம்மாள் அங்கே வரவும் சரியாக இருக்க, இருவரும் பயத்துடன் முழித்தனர்.  

வேலம்மாள், “அபி கார் எடுக்க போயிட்டான்.. நீங்க ரெண்டு பேரும் ஆடு திருடின கள்ளனாட்டம்  முழிச்சுட்டு இங்க என்ன செய்துட்டு இருக்கிறீங்க?” என்று அதிகார தோரணையில் மிரட்டலாக கேட்டார்.

“அண்ணாவை கூப்பிட தான்மா நான் வந்தேன்.. இப்போ தான்மா அண்ணா வெளிய போனான்” என்றவள், “வாங்கப்பா நாமளும் போய் காரில் ஏறுவோம்” என்றபடி தந்தையை இழுத்துக் கொண்டு சென்றாள்.

“பெரிய மனுஷனா பிள்ளைகளை கிளப்பாம, பிள்ளைங்க இழுக்கும் இழுப்புக்கு  போற அப்பா! எனக்குனு வந்து வாயிச்சு இருக்குதே!” என்றபடி வேலம்மாளும் வீட்டை பூட்டிவிட்டு அவர்கள் பின்னால் சென்றார்.

“வரலைனு சொன்ன நம்மளை எதுக்குப்பா அண்ணா கன்வின்ஸ் செய்து கூட்டிட்டு போறான்? என்ன பிளான் போட்டு இருக்கான்?” என்று தந்தையிடம் கிசுகிசுத்தபடி மைத்ரேயி செல்ல,

“அங்க என்னடி முணுமுணுப்பு!” என்ற வேலம்மாளின் அதட்டலில்,

“ஒன்னுமில்ல ம்மா” என்று கூறி அவசரமாக மகிழுந்தின் முன்பக்கம் ஏறிக்கொள்ள, அபியுதித் அவளைப் பார்த்து சிரித்தான்.

“டேய் அண்ணா! நீ நல்லவனா! கெட்டவனா?” என்று அவள் குரலை தாழ்த்தி வினவ,

அவனோ விரிந்த புன்னகையுடன், “ரெண்டும் கலந்த கலவை” என்று கூறி கண் சிமிட்டியவன் பெற்றோர் ஏறியதை உறுதி செய்தபடி வண்டியை கிளப்பினான்.

“ஆளவந்தானா நீ!” 

“ஆளவந்தான் இல்ல ஆளப்போறேன்” 

“யாரை?” என்று அவள் கேட்டபோது,

வேலம்மாள், அபி, லக்ஷ்மிக்கு போன் போட்டியா? அவங்க கிளம்பிட்டாங்களா?” என்று கேட்டார்.

“இதில் கூட அந்த சீமாட்டிய உன் கூட கோர்த்து விடுறாங்க பார்! அங்க நிக்குறாங்க நம்ம அம்மா” என்று மைத்ரேயி முணுமுணுக்க,

புன்னகையுடன் அவளை நோக்கியவன் பின் அன்னையிடம், “துரைக்கு போன் போட்டு கேட்டுட்டேன்.. அவங்களும் இப்போ கிளம்பி இருப்பாங்க” என்றான்.   

மைத்ரேயி மீண்டும் முணுமுணுப்பாக,நீயும் நாசூக்கா எஸ் ஆகுற பார்த்தியா!” என்றவள், எப்படி அண்ணா இப்படி ஒரு கூல் பெர்சனா இருக்க?” என்று கேட்டாள்.

“குடும்பத்தில் ஒருத்தராவது கூலா இருக்கனும்ல” 

“அது சரி” என்றவள் அடுத்த நொடியே, “ஏய்! இதில் எதுவும் உள் அர்த்தம் இருக்குதா?” என்று கேட்டாள்.

அவன் விரிந்த புன்னகையுடன், “என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.

“நீ குடும்பம்னு எந்த அர்த்தத்தில் சொன்ன?” 

தோள் குலுக்களுடன், “எனக்கு தெரிந்து குடும்பத்துக்கு ஒரு அர்த்தம் தான்” என்றான்.

அவள் சந்தேகமாக பார்த்தபடி ஏதோ கேட்க வர,

அதற்குள், “அது என்னடி எப்ப பார்த்தாலும் முணுமுணுத்துட்டே இருக்க! என்ன பழக்கமோ!” என்று வேலம்மாள் அதட்டவும், கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டாள். அதற்கும் அவனிடம் உதட்டோர சிரிப்பு தான்.

Advertisement