Advertisement

அத்தியாயம் -34(3)

வெவ்வேறு கடைகள் செல்ல வசதியாக இருக்கும் என்பதால் பாலன் பைக் எடுக்க நானும் வருவேன் என எல்லாம் போட்டி போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

“கார்ல போண்ணா, கூட அண்ணியையும் அழைச்சுக்க” என யோசனை தந்தான் வருண்.

பாலன் பிரியாவை பார்க்க அவள் வரவில்லை என கண்களால் சொல்ல, “அவ வேணாம் நீ வா” என தம்பியையும் மற்ற பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்றான் பாலன்.

லிஸ்டில் உள்ள எல்லாம் வாங்கி வரவும் எந்த பொருளை வைத்து எப்படி விளையாடுவது என எழுதி வைத்திருந்த காகிதத்தை மாமியாரிடம் காட்டி, “டென் டேஸ் இப்படித்தான் இவங்கள எங்கேஜ் பண்ணனும்” என சொல்லிக் கொடுத்தாள்.

பின் அவளே திண்ணையில் மேட் விரித்து டம்ளர் ஸ்பூன் வைத்து உருவங்கள் உருவாக்க கற்றுக்கொடுக்க தருண் எல்லாம் கலைத்து போட்டான். பார்த்திருந்த பாலன் தருணை தூக்கி மடியில் வைத்துக்கொள்ள குழந்தைகள் தானாக செய்ய ஆரம்பிக்கவும் அப்படியே சுருண்டு படுத்து விட்டாள்.

“பிரியா என்ன செய்யுது?” எனக் கேட்டான் பாலன்.

“தெரியலை, படுக்கணும் போல இருந்தது, படுத்திட்டேன்” என்றாள்.

மருமகளை ஊன்றி கவனித்த பிரகதீஸ்வரி, “களைச்சு தெரியுற, நீ போய் படு, நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

பிரியா உள்ளே சென்று விடவும் தருணை டிவி பார்த்துக் கொண்டிருந்த வருணிடம் விட்டு பாலனும் அறைக்கு சென்றான்.

படுத்திருந்த பிரியாவிடம், “நீ ஆள் சரியில்லை, நிஜத்தை சொல்லு, என்ன பண்ணுது?” என கண்டிப்போடு கேட்டான்.

அவனை பார்த்து சிரித்தவள், “சரியா தெரியலை, செக் பண்ணனும்” என்றாள்.

உடனே முகம் மாறியவன், “என்ன சொல்ற?” என அதிர்ச்சியோடு கேட்டான்.

“எவ்ளோ நாளா கேட்டு கேட்டு ஒரு வழியா ஓகே சொன்னீங்கதானே? இப்போ என்ன?”

“ஓகே சொல்லி ஒரு வாரம்தான் ஆகுது”

“ஹான்… திடீர்னு இப்படின்னா ஷாக் ஆகாது உங்களுக்கு? அதான் உங்க வாயாலேயே ஓகே வாங்கிட்டு மெதுவா சொல்லலாம்னு இருந்தேன்” என்றவளை கண்டு முதலில் முறைத்தவன் பின் அருகில் அமர்ந்து, “விளையாடாத பிரியா” என்றான்.

“நீங்கதான் பெட்ல என்னோட விளையாடுனீங்க, அதோட ரிசல்ட்தான் இது” என்றாள்.

அவன் முகம் தெளியாமல் இருக்க, “ரதி மாதிரி இன்னொரு பாப்பா வந்தா நல்லாத்தானே இருக்கும்? ஓ இனிமே பெட்ல விளையாட முடியாதுன்னு ஃபீலிங்ஸா?” என கிண்டலாக கேட்டாள்.

“வேணாம்னு சொன்னா எங்க கேட்குற? ஆசை படுற… ஹாஸ்பிடல் போயிட்டு வரலாமா?”

“நாளைக்கு செக் பண்ணிட்டு போலாம்”

“உனக்கு எப்போ தெரியும்? என்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லாம கூட இருக்க முடியுமா உன்னால?” என குறையாக கேட்டான்.

அவன் கன்னங்களை கிள்ளி இழுத்துக் கொண்டே, “தேங்கா பர்ஃபி செய்ய டைம் கிடைக்கல, பர்ஃபி ஊட்டி சொல்லலாம்னு இன்னிக்கு நாளைக்குன்னு அப்படியே தள்ளி போட்டுட்டேன். இதுக்கு மேல மறைக்க முடியல” என்றாள்.

“தேங்கா பர்ஃபி வேணாம்” என்றவன் சட்டென அவளுக்கு மென்மையான இதழ் முத்தம் கொடுத்து விலகி கண்களால் ‘இது போதும்’ என்றான்.

அவனது கீழ் உதட்டை லேசாக வலிக்கும்படி கிள்ளிக் கொண்டே, “போன தடவ விட அதிகமா என்னை செல்லம் கொஞ்சணும்” என்றாள்.

“என் பொண்ணை விட அதிகமா உன்னைத்தானே கொஞ்சுறேன்” என சொல்லி சிரித்தான்.

“ம்ம்ம்…” வெட்கத்தோடு ம் போட்டவள், “இப்போ யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க, இல்லைனு ஆச்சுன்னா நல்லா இருக்காது” என்றாள்.

“கண்டிப்பா பாப்பாதான், பயப்படாத. ரெஸ்ட் எடு, லஞ்ச் ரெடி ஆனதும் கூப்பிடுறேன்” என சொல்லி வெளியேறப் போனவன் கையை பிடித்தவள் ஐந்து விரல்கள் காட்டி பின் மூன்று விரல்கள் மட்டும் காட்டி, “த்ரீ மினிட்ஸ்…” என்றாள்.

அவள் பக்கம் படுத்து அணைத்துக் கொண்டவன், “அப்படி என்னதான் எம்மேல கிறுக்கோ உனக்கு? நீ மாறவே இல்ல டி” என சொல்லி கொஞ்சினான்.

வருண் மடியில் இருந்த தருண், சௌமியாவை பார்த்து விட்டு அவளிடம் செல்ல அடம் செய்ய, “பிரியாக்காகிட்டதானே இருந்தான், ஏன் நீங்க வாங்குனீங்க?” எனக் கேட்டுக்கொண்டே குழந்தையை வாங்கி சமாதானம் செய்தாள்.

“அண்ணிக்கு முடியலை போல, நான் வெளில அழைச்சிட்டு போறேன் இவனை” என சொல்லி தருணோடு வெளியே சென்றான் வருண்.

கதவு தட்டப் படவும் தன் மேல் கால் போட்டுக் கொண்டு உறங்கும் பிரியாவை மெல்ல நகர்த்தி விட்டு வேகமாக சென்று கதவு திறந்தவன், “தூங்குறா, சத்தம் போடாதீங்க” என்றான்.

சௌமியாவும் உத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “நல்லாத்தானே ண்ணா இருந்தா, என்னாச்சு அவளுக்கு?” உத்ரா கவலையாக கேட்க, சௌமியாவும் கவலையோடு பார்த்திருந்தாள்.

“பயப்பட ஒண்ணுமில்ல, எல்லாம் நல்ல விஷயமாதான் இருக்கும்னு சொல்றா” அவர்களின் வருத்தம் பொறுக்க முடியாமல் சொல்லி விட்டான் பாலன்.

பெண்கள் இருவரும் முகம் மலர, “தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க, நாளைக்கு அவளே செக் பண்ணிட்டு சொல்வா” என சொல்லி முடித்து விட்டான்.

உத்ராவுக்கு அதுவரை பொறுக்க முடியவில்லை. கணவனுக்கு அழைத்து கிட் வாங்கி வர சொன்னாள்.

“செல்லம் டவுட்டே வேணாம், அது இல்ல, டெஸ்ட் பண்ணாமலே எனக்கு தெரியும். நீ ஏன் உன்னை பத்தி எதுவும் தெரிஞ்சுக்க என்னை கேட்க மாட்டேங்குற?” என வசனம் பேசினான்.

“நீங்க நேர்ல வரும் போது சிரிச்சுக்கிறேன். இப்போ சொன்னதை செய்ங்க”

“ஏய் உனக்கில்லையா? இருந்தாலும் இந்த வருண் பய இவ்ளோ ஸ்பீடா போக கூடாது”

“என்னங்க!” அலறி விட்டாள் உத்ரா.

“அவன் வைஃபுக்கும் இல்லையா?” எனக் கேட்ட ஆதவன், “ரதி பொறந்தப்பவே இவளுக்கு மேல இல்லைனு வசனம்லாம் பேசினார்டி உங்கண்ணன்… வர்றேன் நேர்ல வந்து பேசிக்கிறேன்” என குதூகலமான குரலில் பேசி வைத்தான்.

மதியம் ஆதவன் மனைவியின் பிறந்த வீடு வந்திருக்க உனக்காக செய்த சாப்பாடு வீணாகி போகிறது என குறை பட்டார் துர்கா.

அண்ணனிடமிருந்து கைபேசி வாங்கிய பிரியா, “ஈவ்னிங் அப்பாட்ட கொடுத்து விடும்மா. நான் சாப்பிட்டுக்கிறேன். உன் கை சாப்பாடு சாப்பிட்டு நாளாகுது” என அவர் மனம் குளிரும் விதமாக பேசிக் கொண்டே உத்ராவை பார்த்து கண்கள் சிமிட்டினாள்.

துர்காவும் அகமகிழ்ந்து போய் விட்டார்.

ஆதவன் அங்கேயே ஓய்வெடுக்க அண்ணனிடம் கிட் இருந்த பேப்பர் கவரை கொடுத்த உத்ரா, “ஒரு நாள் வரைக்கும் என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது, ஈவ்னிங்கே நான் திரும்ப அத்தை ஆகப் போறேன்னு சொல்லிடுண்ணா” என சொல்லி சென்றாள்.

தருண் உறங்கியிருக்க தர்ஷன் வெளியில் மற்ற பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டுதான் இருந்தான். சௌமியா ஓய்வாக படுத்திருக்க, “உனக்கு பிடிச்ச படம் ஓ டி டி ல வந்திருக்கு. பார்க்கிறியா?” எனக் கேட்டான்.

“அதான் தியேட்டர் போய் பார்த்திட்டோமே?”

“திரும்ப பார்க்கணும்னு சொன்னதானே?”

“தருண் முழிச்சிப்பான்”

“நான்தான் இருக்கேனே, நீ பாரு” என்றவன் லேப்டாப்பில் படத்தை வைத்துக்கொடுத்து விட்டு மகனோடு இருந்து கொண்டான்.

உத்ராவும் பிரியாவும் சமையலறையில் இருந்தனர். பிரியாவின் கர்ப்பம் ஆம் என ஊர்ஜிதமாகியிருந்தது. அந்த சமயம் பாலன் தன் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய விதம் நினைத்துப் பார்த்த பிரியாவின் முகம் மலர்ந்து போனது.

தானாக சிரிக்கும் பிரியாவின் கையை பிடித்துக்கொண்டு, “அழகிய அண்ணி… அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாளே…” என பாடி கிண்டல் செய்தாள் உத்ரா.

அதே பாடலை திரும்ப பாடி உத்ராவை ஒரு வழி செய்தாள் பிரியா.

“என்ன அக்கா… தேங்கா பர்ஃபி செய்யலாமா?” எனக் கேட்டுக் கொண்டே வந்தாள் சௌமியா.

“நான்தான் செய்வேன்” செல்ல அடத்தோடு கூறினாள் பிரியா. அதற்கும் மற்ற இரு பெண்களும் ஓட்ட, “பிரியாம்மா” “பிரியாத்த” என்ற பிள்ளைகளின் குரல்கள் கேட்டன.

தம்பியை வீட்டிலேயே இருக்க சொல்லி விட்டு பாலன் மட்டும் கடைக்கு சென்றிருக்க வருணும் ஆதவனும் பிள்ளைகளை சமாளித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பிள்ளைகளுக்கு ஒத்து வரவில்லை.

“ஷ் அத்தைக்கு பாப்பா வரப் போகுது, டிஸ்டர்ப் செய்யக் கூடாது” என ஆதவன் தன் மக்களிடம் சொல்ல அதையே வருணும் சொன்னான்.

“பாப்பா வந்ததும் நான்தான் தூக்கி வச்சுப்பேன்” என தர்ஷன் சொல்ல “இல்ல நானு” என்றான் ஹரிஸ்.

“அப்பா எனக்கும் பாப்பா வேணும்” என அப்பாவின் மடியில் அமர்ந்து அவன் மோவாய் பிடித்து கொஞ்சி கேட்டாள் ஹரிணி. ஒன்றும் புரியா விட்டாலும் தருணும் அவன் அப்பாவிடம் அப்படியே மழலையில் கேட்க ஆதவனும் வருணும் சிரித்தார்கள்.

“ஆமாம்டா நாங்க பாப்பா பெத்து தர்ற மெஷின். வெயிட் பண்ணுங்க, பிரியா குழந்தைய டைம் டேபிள் போட்டு தூக்கி வச்சுக்கலாம்” என தீர்வு சொன்னாள் அனைவருக்கும் ஸ்னாக்ஸ் வழங்கிய உத்ரா.

இரவில் பிரகதியை உறங்க வைத்த பின் எப்போதோ தூங்கியிருந்த பிரியாவின் நெற்றி கன்னம் என முத்தமிட்டு விலகினான் பாலன்.

“ப்ச் தூங்குறப்ப கிஸ் பண்ணினா எனக்கெப்படி தெரியும், முழிச்சிட்டிருக்கும் போது தாங்க” என்றாள்.

“அடியே கேடி! தூங்கிலியா நீ இன்னும். அதான் இப்ப முழிச்சிட்டுதானே இருந்த, போதும் போதும் தூங்கு” என்றான் பாலன்.

“இல்லயில்ல தூங்கிட்டுதான் இருந்தேன்”

“அப்புறம் எப்படி தெரிஞ்சது?”

“அது கனவுன்னு நினைச்சேன்”

“உன் கனவெல்லாம் ஒரு மார்க்கமாவுல இருக்கும். இன்னிக்கு கிஸ்ஸோட நின்னு போச்சா கனவு?”

“அதானே… சரி அப்போ நல்ல கனவு காண வைங்க” என்றாள்.

பாலன் முறைக்க, “ஒரு உம்மாக்கு கெஞ்ச வைக்கிற ஹஸ்பண்ட் நீங்களாதான் இருப்பீங்க. போங்க நீங்க” என சலித்தாள்.

அவளை அருகில் இழுத்து முத்தமிட ஆரம்பித்தான் பாலன். முத்தப் பயணம் வேகமெடுத்து கொஞ்சம் திசை மாற விபரீதம் புரிந்து சட்டென விலகிய பாலன், “இதுக்குத்தான் விலகி விலகி போறேன், படுத்துவ பிரியா நீ” என்றான்.

“சரி சரி… சாரி” என்றவள் அவனை அணைத்து முதுகில் வருடிக் கொடுத்து ஆசுவாச படுத்தினாள்.

பிரியாவின் பாதங்கள் மீது பாதங்கள் போட்டுக் கொண்டு நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான் சிவபாலன்.

சிறிது நேரத்தில் ரதி உறக்கத்தில் சிணுங்க மகளை தட்டிக் கொடுத்து, “தூங்குடா செல்லம், அப்பா தூங்குறாங்க பாரு” என்றாள்.

பாலனின் இதழ்கள் தானாக விரிந்து கொண்டன. மனைவியை அள்ளி அணைத்துக் கொண்டவன், “நீ தூங்கு, உங்கள பார்த்துக்கத்தான் நான் இருக்கேன்” என்றான்.

கணவன் நெற்றியில் புரண்ட சிகையை வாயால் ஊதி ஒதுக்கி, அவனது கண்களில் முத்தமிட்டு அவனது மார்பிலேயே சௌகர்யமாக அடங்கிக் கொண்டாள் வள்ளிப்பிரியா.

இந்த ஜீவ தீபங்கள் என்றென்றும் சுடர் விட்டு பிரகாசிக்கட்டும்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement