தாரகை 32

சந்திரமுகன் ஜெய்யை அடித்துக் கொண்டே இருக்க, மான்விழி அழுது கொண்டே தன் கணவனை தடுக்க முயன்றார்.

ரிஷி அதிர்ந்து தன் அண்ணனை பார்த்துக் கொண்டிருந்தான்.

புகழ் சந்திரமுகனை தடுத்து, “அங்கிள் உங்க மேலையும் தப்பு இருக்கு” சினமுடன் கத்தினான். அவர் அவனை பார்க்க, எல்லாரும் புகழமுதனை பார்த்தனர்.

“இதுவரை ஸ்ரீ ரிஷிக்காக தான இந்த பொறுப்பை ஏத்துக்கிட்டா. இனி நீங்களே எல்லாத்தையும் பார்த்துக்கோங்க” ஜெய்யிடம் வந்து,

“ஸ்ரீக்கு எதுவும் தேவையில்லை. நீங்க உங்க அப்பாவின் கம்பெனியை எடுத்து நடத்த தான செய்றீங்க? அவள் எண்ணினால் அவளாகவே கம்பெனி ஒன்றை உருவாக்க முடியும்.

இல்ல..இல்ல..கண்டிப்பா ஆரம்பிக்கப் போறா. அதுக்கான வேலையை நாங்க சீக்கிரமே பார்க்கப் போறோம். உங்க பிராப்பர்ட்டிஸ் எதுவும் அவளுக்கு வேண்டாம். அவளுக்கு தேவையும் இல்லை” ரிஷியை பார்த்தான்.

“ரிஷி நீங்க அவளுக்கு விவாகரத்து கொடுத்திருங்க. அதான் நான் வந்துட்டேன்ல்ல. நான் பார்த்துக்கிறேன். இதுவரை நீங்க அவளை பார்த்து கிழிச்சதெல்லாம் போதும். விவாகரத்து முழுமையாக கிடைக்கும் வரை உங்க வீட்ல உங்க அறையில தான் ஸ்ரீ இருப்பா” என்று சொல்ல,

“நமக்கு நேரம் கிடைக்கும்” என ரிஷி நினைக்கும் நொடி அதனை தகர்த்தெறிவது போல “நானும் உங்க அறையில தான் இருக்கப் போறேன்” என்றான் புகழ்.

“புகழ்” பனிமலர் சத்தமிட, “அத்த நம்ம ஸ்ரீயை பத்திரமா இவனால பார்த்துக்க முடியாது. நான் பார்த்துப்பேன்” என்றான்.

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். என்னோட பொண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும்” ரிஷி சினமுடன் பேசினான்.

“அதான் இந்த ஆறு மாதம் பார்த்துக்கிட்ட வள்ளலலை தான் நானும் பார்த்தேனே! முதல்ல உங்க கல்யாணம்ன்னு சொல்லவும் நிறுத்த எண்ணினேன். என்னோட ஸ்ரீயின் காதலுக்காக உனக்கு வாய்ப்பு கொடுத்தேன். உன்னால தான் எதுவும் முடியலையே!

ஸ்ரீயை கஷ்டப்படுத்தின, அவள கொல்ல பார்த்துருக்கானுக. அது தெரியாம இருந்திருக்க? அவ கஷ்டபடும் சூழ்நிலையில் அவளுக்காக நீ இல்லை. அவளையும் உன்னால பார்த்துக்க முடியல. உங்க குழந்தையையும் பார்த்துக்க முடியல. உனக்காக அவ செய்த எல்லாமே வீண் தான். நீயே தெண்டம் தான்” அவன் சொல்ல சொல்ல, ரிஷிக்கு சினம் உச்சிக்கு சென்றது.

“புகழ்” ஸ்ரீநிதி தலையை பிடித்துக் கொண்டு சத்தமிட்டாள்.

“ஸ்ரீ நீ எதுக்கு ஸ்ட்ரைன் பண்ற? நீ தான இவனை விவாகரத்து பண்ணனும்ன்னு அவனிடம் சைன் பண்ணி கொடுத்த? வீட்டை விட்டு வந்துட்ட? அதை விட அவனுக்கு உன் குழந்தையை பாதுகாக்க கூட தெரியல. இவனோட வாழ்ந்து என்ன செய்யப் போற?” ஸ்ரீநிதி, ரிஷி இருவருக்கும் தூண்டில் போட்டான் புகழமுதன்.

இரு மீன்களும் சிக்கிக் கொண்டன.

“ஆம். அவன் சொல்வது சரிதான். என்னால தான ஸ்ரீக்கு இவ்வளவு கஷ்டம். விவாகரத்து செய்துட்டா அவ சந்தோசமா இருப்பா. அவளுக்கு பிடித்த இவன் உயிரோட வந்துட்டான். இனி என்னோட ஸ்ரீ எனக்கில்லை” கண்ணீருடன் ஸ்ரீநிதியை பார்த்துக் கொண்டே எண்ணினான் ரிஷி.

ஸ்ரீநிதியும் அவனுக்கு சமமாக, எங்க குழந்தையை பாதுகாக்க இவனால முடியல. இவன் காரில் என்னுடன் இருந்தால் என் வயிற்றில் குழந்தை இருந்திருக்கும். என்னையும் என் குழந்தையையும் தவறாக பேசிய இவன் எனக்கு வேண்டாம். நீ என்ன செய்தாலும் சரி” என்று ஸ்ரீநிதி கூற, “நான் ஸ்ரீக்கு விவாகரத்து தருகிறேன்” ரிஷி கூற, அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.

“இவன் என்ன சொல்லீட்டு என்ன செய்றான்?” அழகி தர்மேந்திரனிடம் கேட்டார்.

“அவன் பார்த்துப்பான். நீ வேடிக்கை மட்டும் பாரு” அவர் கூறினார்.

“எல்லாருக்கும் ஓ.கே தான? நான் உங்க வீட்டுக்கு வந்த பின் என்னிடம் யாரும் கோபப்படுவதோ, எனக்கு மட்டும் உணவில் மிளகாய்ப்பொடியை அதிகமாக கலந்து என்னை விரட்ட கொடுப்பதோ இருக்கக் கூடாது” மான்விழியை பார்த்தான்.

“உனக்கு எப்படிடா தெரியும்?”

உன்னோட அத்தை, அவங்க புருசனை யார் சைட் அடிச்சாலும் மிளகாய்ப்பொடி கலந்து கொடுப்பதை ஒரு பெண்மணி சாப்பிட்டு கூறினார்.

“என்னது?” சந்திரமுகன் தன் மனைவியை பார்க்க, அவர் கணவனை ஏறிட்டார்.

“நீங்க எதுக்கு என்னோட அப்பாவை பாலோ பண்ணீங்க?” நளினியிடம் வந்து புகழ் கேட்டான்.

“பாலோ பண்ணாங்களா? இவரையா?” அழகி பாவமாக தன் கணவனை பார்த்து நளினியை பார்த்து முறைத்தார்.

“ஆமாம்மா, இவங்க அப்பாவை மட்டும் தான் பாலோ பண்ணாங்க. ஆனால் எதையும் தேடி அல்ல…” புகழ் நளினியை பார்க்க, தலை குனிந்தார் நளினி.

“நள்ளூ” பாட்டி சத்தமிட, “அம்மா என்ன இதெல்லாம்?” தன்வி சீற்றமுடன் கேட்டாள். அவருக்கு கண்ணீர் வந்து விட்டது.

அனைவரையும் நகர்த்தி, “சித்தி..அன்று நீங்க சொன்னது உண்மையா?” கேட்டான் ரிஷி.

ம்ம்! நளினி தலையை மட்டும் அசைத்தார்.

“என்ன உண்மை?” பாட்டி சினமுடன் வந்தார்.

“பாட்டி உன்னோட இரண்டாவது பிள்ளை பற்றி சொல்லு?” ரிஷி கேட்க,

அவனுக்கு என்னடா? அவனும் நம்ம சந்தூ போல தான். நல்லவன்.அவன் வேலையை தவிர எதையும் பெரிதாக எண்ணாதவன்..

“பொறுக்கின்னு சேர்த்துக்கோங்க” நளினியிடமிருந்து பதில் வந்தது. அனைவரும் திகைக்க, “என்னடி சொன்ன?” பாட்டி நளினியை அடிக்க கையை ஓங்கினார்.

தர்மேந்திரன் அவர் கையை பிடித்து, “அவ சொல்றது உண்மை தான்” என்றார்.

“தரு” அழகி அழைக்க,

இரும்மா. உங்க பையனுக்கும் ப்ளோரிடா என்ற அமெரிக்க பொண்ணுக்கும் பழக்கம் இருந்தது. இது நள்ளி திருமணத்தின் முன்னே எங்களுக்கு தெரியும்..

“நள்ளியா?” கண்ணீருடன் தன் கணவனை பார்த்தார் அழகி.

தன் மனைவி கையை பற்றிய தர்மேந்திரன் நானும் நளினியும் ஒரே கல்லூரி தான். நாங்க ப்ரெண்ட்ஸூம் கூட. நானும் எங்களது நண்பர்களும் அவள் திருமணம் பற்றி கேள்விப்பட்டு விசாரித்த போது தான் உங்கள் மகன் பற்றி விசாரித்து அவள் பெற்றோரிடம் பேச சென்றோம். ஆனால் அவர்கள் அவளை பார்க்கவும் விடவில்லை. அவர்கள் ஸ்டேட்டஸூக்கு சரியான மாப்பிள்ளைன்னு கல்யாணம் செய்து வச்சுட்டாங்க.

அதன் பின் தான் அழகியும் நானும் சந்திக்கும் போது யாரோ பின் தொடர்வது போல இருக்கும். அது நளினி தான்னு கண்டுபிடித்து அவளிடம் பேச வந்தேன்.

அவளது கணவனை பற்றி கூறினாள். கோபம் வந்தது தான். என்ன இருந்தாலும் நீங்க பெரிய இடம். நான் கை வைத்தால் என்னால என் அழகியோட சேர்ந்து வாழ முடியாதுன்னு எங்களுக்காக யோசித்து அவளது பெற்றோரிடம் அழைத்து சென்றேன்.

ஆனால் அங்கே உங்களது நல்ல மகன் நளினியின் அப்பாவை அடித்து காயப்படுத்தி இருந்தான். அவர் தரையில் விழுந்து கிடந்தார். அவள் அம்மா அவனிடம் கதறி அழுது கொண்டிருந்தார்.

நளினி அதை பார்த்து பதறி தன் அம்மாவிடம் சென்றாள். ஆனால் அவங்க அவளை திட்டினாங்க. அவளோட அப்பா அப்பொழுதும் உங்க மகனை எதுவும் கூறவில்லை. நளினியை பார்த்து, “இனி நீ எங்க மகளில்லை. வெளிய போ” கத்தினார்.

அவள் அதிர்ந்து நிற்க, வக்கிரமாக சிரித்த உங்க மகன் “வீட்டுக்கு வா” என்று என்னை பார்த்து விட்டு சென்றான். அவள் மொத்தமாக உடைந்து போனாள். என்னால அவளுக்கு ஆறுதல் கூறமுடியவில்லை. அதனால உங்க கணவரை பார்க்க சென்றேன். அவரிடம் எல்லாவற்றையும் கூறினேன்.

அவர் அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். எம் மருமக பாதுகாப்பா இனி இருப்பான்னு சொன்ன பின் தான் நிம்மதியாக சென்று விட்டேன். அவள் அதன் பின் என்னை தேடி வரவில்லை. நல்லா இருக்கான்னு நனைச்சேன்.

ஆனால் உங்கள் கணவன் இறப்பை அறிந்து அன்று உங்க வீட்டுக்கு வந்தேன். நளினியின் தோற்றம் எனக்கு சரியாக படவில்லை. அதனால் அவள் கணவனிடமே பேசலாம்ன்னு போனேன். ஆனால் அவன் கொஞ்சமும் மதிக்கலை. பணமிருக்கும் திமிறில் என்னோட அவளை சேர்த்து பேசவும் கோபமுடன் சென்று விட்டேன். அவன் இறந்த செய்தி கேட்டு நிம்மதி தான் அடைந்தேன். இனியாவது நிம்மதியா இருப்பான்னு என்று கண்கலங்க நளினியை பார்த்தார் தர்மேந்திரன்.

இறுகி நின்றிருந்த நளினி கையை பிடித்த தனு, “மாம் டாட் என்ன பண்ணார்?” அவள் கேட்கவும், கண்ணீர் பொலபொலவென வந்தது நளினிக்கு.

“நள்ளூ” பாட்டி அவர் கையை பிடிக்க, அதை எடுத்து விட்டார் நளினி.

என்னோட தந்தையின் அந்த ஸ்டேட்டஸ் பார்வையால் தான் என்னுடைய எல்லாத்தையும் இழந்தேன். என்னோட பொண்ணும் ஸ்டேட்டஸ்ன்னு போகக் கூடாதுன்னு முடிவெடுத்து தான் வேண்டுமென்றே என் தந்தை போல பேசினேன். நான் எண்ணியது போல தனு ஸ்டேட்டஸ் பாராமல் எல்லாரிடமும் பழகினாள். இனி அவள் வாழ்க்கை நல்லா இருக்கும்ன்னு நிம்மதியா இருந்தேன்..

இருந்தேன்னா? மாம்…நான்…

“ஜோவும் நீயும் லவ் பண்றீங்க? உங்களை நான் எதிர்க்கலை” கண்ணீருடன் அமர்ந்தார்.

மாம்..

அப்பனுக எல்லாரும் பொண்ணு வசதியா வாழணும்ன்னு தான் நினைக்கிறாங்க. சந்தோசமா வாழணும்ன்னு நினைக்க மாட்டேங்கிறாங்க. தர்மாவும் எங்களின் நண்பர்களும் எனக்காக திருமணத்தின் முன் வந்தது அன்றே எனக்கு தெரியும்.

நான் வெளியே வரவில்லை. என் குடும்பத்தினருக்கு, என் தந்தைக்கு பணத்தை விட எதுவும் பெரியதாக தெரியவில்லை. அதே தான் அழகியின் தந்தைக்கும். அவரும் அப்படி தான்.

அவள் தர்மாவிற்காக தர்மாவை நம்பி வீட்டை விட்டு வந்து விட்டாள். ஏனென்றால் அவன் அவளை தான் காதலிக்கிறான்னு அவளுக்கு உறுதியாக தெரியும் என்பதால்.

என்னோட கணவனுடன் நான் எப்படி வாழ்ந்தேன்னு முக்கியமில்லை என்று கண்ணீருடன் தன்வியை அணைத்துக் கொண்டு,

“உன்னோட டாட் தவறாவனர் இல்லை. அவர் என் நிலைக்காக தனிமையை போக்க, என் வலியை குறைக்க தான் உன்னை கொடுத்தார். என்னோட குழந்தை பிறந்தவுடன் செத்து போச்சு” கதறி அழுதார் நளினி.

“மாம்” தன்வி கத்த, அழகி கண்கலங்க நளினியை பார்த்தார்.

நளினி அழுகையை கட்டுப்படுத்தி, “நீ என்னோட பொண்ணு இல்லை தனு. எனக்கு சில நாட்களின் முன் தான் இந்த விசயம் தெரியும். உன்னோட பிக்ப்பாவும் பாட்டியும் என் வாழ்க்கைக்காக மூடி மறைச்சிட்டாங்க” அழகியிடம் சென்று,

“என்னோட சுயநலத்துக்காக உன்னோட பொண்ணை உங்களிடமிருந்து எனக்கே தெரியாமல் பிரிச்சி வச்சிருந்திருக்கேன். என்னை மன்னிச்சிரு அழகி” அவர் காலில் விழுந்து நளினி கதறி அழுதார்.

அழகி நளினியை தூக்கி விட்டு அணைத்துக் கொண்டார். நளினி தர்மேந்திரனை பார்த்து விட்டு அழகியை நகர்த்தினார்.

கண்ணில் கரைபுரண்ட கண்ணீருடன் தனுவை பார்த்து அழுது கொண்டே வெளியே சென்றார் நளினி.

யாருக்கும் இவ்விசயம் தெரியாததால் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தன்வி அழகி தர்மேந்திரனை பார்த்து விட்டு, “மாம்” அழைத்துக் கொண்டே நளினியை பார்க்க ஓடினாள்.

“மாமா” ஜோ அழைக்க, “ஆமா தன்வி எங்க பொண்ணு தான். அழகி நான் செய்தது தவறாம்மா?” தர்மேந்திரன் தன் மனைவியிடம் கேட்டார்.

“இல்லை” தலையசைத்த அழகி நளினிக்காக வருந்தினார்.

“ஜோ உன்னோட அத்தையை அழைச்சிட்டு வா” அமரேசன் கூறினார்.

தாத்தா…

“அழைச்சிட்டு வா” அவர் கூற, தர்மேந்திரனும் அழகியும் வெளியே செல்ல திரும்பினர்.

ஒரு நிமிசம்மா… நில்லு என்றார் அமரேசன்.

சந்திரமுகன் உங்களுக்கு என்னை பற்றி எல்லாம் தெரிந்து தான பவி, நிதுவை கட்டிக்க சம்மதம் கொடுத்தீங்க? கேட்டார்.

நல்லா தெரியும். எல்லாமே தெரியும்.

நளினி வந்து விட அமரேசன் அவர் முன் வந்து, “எம் பிள்ள வாழ்க்கையை நீ தாம்மா காப்பாத்தி குடுத்திருக்க?” கையெடுத்து கும்பிட்டார்.

“போதும். எதுவும் பேசாதீங்க. அந்த நேரம் தர்மாவும் அழகியும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க?” நளினி சினமுடன் கேட்டார்.

அழகி நளினியை அதிர்ந்து பார்க்க, “நள்ளி என்ன பேசுற?” தர்மேந்திரன் கேட்டார்.

உங்களை பிரிக்க தான் சௌபாக்கியத்தின் இரண்டாவது மகனை என் பொண்ணு அழகிக்கு திருமணம் செய்து வைக்க நான் முடிவெடுத்திருந்தேன். ஆனால் அதற்குள் நளினி அவள் வாழ்க்கையை பணயமாக கொடுத்து விட்டாள். உங்களை பின் தொடர்ந்தவளுக்கு நான் உங்களை பிரிக்க எண்ணுவது தெரிந்து தான் அவளாக அவள் அப்பாவிடம் சொல்லி இந்த மாப்பிள்ளையை தேர்வு செய்தாள்.

திருமணம் முடிந்த பின், என்னோட மாப்பிள்ளை தர்மேந்திரனுக்கு கடிதம் அனுப்பியதும் நளினி தான். அக்கடிதத்தில் நான் என்னோட பொண்ணுக்கு மறுநாளே திருமணம் செய்வதாக அறிவித்ததால் தான் நீங்க இருவரும் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்தீங்க. இது தெரிந்து தான் ஏற்கனவே என் மீது கோபத்தில் இருந்த மனைவி என்னை மொத்தமாக வெறுத்து விட்டாள் கண்ணீருடன் இரண்டாவது பாட்டியை பார்த்தார்.

அனைவரும் அதிர்ந்தனர்.

“என்னோட பாட்டியை நீங்க தாத்தா…” புகழ் திணறினான்.

“ம்ம்! இவங்க எல்லாரும் என்னோட குடும்பம் தான். நான் இந்த குடும்பத்தின் இரண்டாவது மாப்பிள்ளை” என்றார் அமரேசன்.

பவிதா அதிர்ந்து “தாத்தா அப்ப புகழ் எனக்கு?”

“ம்ம்! புகழ் உனக்கு மட்டுமல்ல உன் அக்கா ஸ்ரீநிதிக்கும் முறைமாமன் தான்” அமரேசன் ஸ்ரீநிதி, ஜோ, பனிமலரை பார்த்தார்.

ஜோ நெஞ்சை பிடித்து அதிர்வது போல நடித்து சிரித்தான்.

எம் பிள்ள பரசுவோட மூத்த மனைவி கனிமொழியின் பிள்ளைகள் தான் ஸ்ரீநிதியும் ஜோவும்.

கனிமொழியை வலுக்கட்டாயமாக பரசுவுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால் அவன் விரும்பியது கனிமொழியின் தங்கை பனிமலரை. பனிமலரும் என் மகனை கனிக்கு பார்க்கும் முன்னே விரும்பி இருக்கிறாள். இருவரும் காதலித்து இருக்கிறார்கள். ஒன்றாகவும் இருந்திருக்கார்கள்…

“பனிமலரின் ஒரே மகள் தான் பவிதா” மூன்று பேரன் பேத்திகளை அமரேசன் பார்க்க, ஏற்கனவே கணவனின் செயலில் மனவேதனையில் இருந்த பவிதா இந்த உண்மையில் துவண்டு போனாள்.

“தாத்தா” ஜோ சத்தமிட்டான்.

“இது தான் உண்மை ஜோ” ஸ்ரீநிதி கூற, எல்லாரும் அவளை பார்த்தனர்.

“மலரு நிதுவுக்கு?” அமரேசன் கேட்க, அவளுக்கு பள்ளியில் படிக்கும் போதே தெரியும்.

“நிது உனக்கு தெரியுமா?” புகழ் கேட்க, எனக்கு தனு நம்ம குடும்பம்ன்னு மட்டும் தெரியாது.

“அம்மூ” அழகி அழைக்க, அத்தை புகழ் என்னோட முறைப்பையன்னு எனக்கு தெரியும்.

“சும்மாவே இவன் ஓவரா பேசினான். இப்ப எல்லாமே போச்சு” ரிஷி தலையில் இடி விழுந்தது போல அமர்ந்தான்.

ம்ம்! என்னை மன்னிச்சிருங்க பசங்களா? என்னோட கோபம் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம். நம்ம குலதெய்வம் அக்காளம்மாவின் சாபம் நம்ம குடும்பத்திலும் விழுந்திருந்தது. அதான் குடும்பமே பிரிஞ்சு போச்சு.

நான் அநாதையா இருக்கும் போது, “நான் தான் உன் அம்மான்னு உனக்கு சொல்லத் தோணவேயில்லையா?” பனிமலரை பவிதா அழுது கொண்டே உலுக்கினாள்.

உனக்கு என்னை பிடிக்கலைன்னா கொன்றுக்கலாமே! பவிதா கத்த, அழகி அவள் கன்னத்தில் அறைந்தார்.

என்ன பேசுற? நிது, ஜோவோட அம்மா இவங்க காதலையும் உன்னை பற்றியும் தெரிந்து தற்கொலை செய்து கொண்டாள். உன்னோட அப்பாவும் பனிமலரும் காதலிச்சாங்க. ஆனால் உன்னை கருவில் சுமந்ததிலிருந்து மலர் அவளாக தான் உன்னை பார்த்துக் கொண்டாள். தன் அக்காவிற்காக உன்னை மறைக்க அவள் பட்ட பாடு இருக்கே!

“உன்னை அவளோட மகளாக ஏன் காட்டிக்கலைன்னு தெரியுமா?” உன்னோட தாத்தா அமரேசன் தான் காரணம். அவர் தான் கனி பசங்கள மலரு கஷ்டப்படுத்துவான்னு வீட்டுக்குள்ளவே விடலை.

“உங்க அப்பன் சாகலாம் இல்லை. விரக்தியில் ஓடிட்டான். காதலித்த பொண்ணையும் விட்டு இப்படி ஓடுவான்னு நினைக்கலை. இது கூட எனக்கு சந்தேகமா தான் இருக்கு” அழகி அமரேசனை பார்த்தார்.

நான் எதுவும் செய்யலம்மா. என்னோட பேரம் பேத்திகளுக்கு இடையே பாகுபாடு வரக் கூடாது தான் இவ்வளவும் செய்தேன்.

மலர் மூன்று பிள்ளைகளையும் உங்க சொத்தில்லாமல் வளர்த்து காட்டுகிறேன்னு சொன்னா.

ஆனால் இவர் உன்னை பிடுங்கி, “உம் பொண்ணை நான் பார்த்துக்கிறேன்னு அவகிட்ட இருந்து பிரிஞ்சிட்டார்” அழகி தன் தந்தை அமரேசனை பார்த்து முறைத்தார்.

“எல்லாரும் ஆளாளுக்கு முடிவெடுத்துட்டு இப்படி எல்லாத்தையும் மறைச்சிருக்கீங்க?” கத்தினான் ஜோ.

நிது, பவி, ஜோ உடன் பிறந்தவர்களா? என்ற தனுவிற்கு ரிஷிக்கு பவி மீதான காதல் நினைவு வந்து, அந்த சாபம் தொடருதா? முணங்கியவாறு மயங்கினாள்.

தனு அனைவரும் அவளிடம் வந்தனர்.

தர்மேந்திரன் தன் பொண்ணு தன்வியை தூக்க, சினமுடன் அவள் மீது தண்ணீரை ஊற்றினான் ஜோ.

டேய்…ஜோ…அனைவரும் சீறினார்கள்.

இருக்கிற பிரச்சனையில் இவளும் டென்சன் ஏத்துறா? கத்தினான்.

விழித்து தர்மேந்திரனை பார்த்து, “டாட்” சுற்றி இருந்தவர்களை பார்த்த தன்வி ரிஷியை பார்க்கவும் அவரிடமிருந்து கீழே இறங்கினாள்.

மறுநிமிடம் அந்த அறையில் இருந்த பொருட்களை “கன்னா பின்னா” என தூக்கி எறிந்தாள் ரிஷி மீது.

“தனு” ஸ்ரீநிதி அழைக்க, “அண்ணீ இவனை….” ரிஷியை அடிக்க துள்ளிக் கொண்டு சென்றாள்.

“தனு” ஜோ பயங்கரமாக கத்தினான்.

ஜோ உனக்கு எதுவுமே தெரியாது..

“தனு வேண்டாம்” ஸ்ரீநிதி கூற, எல்லாரும் அவளை பார்த்தனர்.

நளினியிடம் சென்று, “மாம் நீ இவனை திட்டுவதில் தப்பே இல்லை”.

ஜோ உன்னோட டாட் போல தான் இவனும் செய்திருக்கான்.

“டாட் மாதிரின்னா” ஜோ ரிஷியை பார்க்க, அவனுக்கு புரியவில்லை.

ஸ்ரீநிதி வேகமாக எழுந்து தடுமாறினாள்.

“ஸ்ரீ” சத்தமிட்டு அவளை தாங்கிய புகழ், “தனு என்ன சொல்றா ஸ்ரீ?” சினமுடன் கேட்டான்.

“இல்ல” தலையசைத்தாள் ஸ்ரீநிதி.

“ரிஷி அண்ணா பவிதா அண்ணீயை தான் காதலிக்கிறான்” பட்டென உடைத்தாள் தன்வி.

பவிதா எழ, ஜெய் ரிஷியை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“தனு” பவிதா சத்தமிட, “இதான் உண்மை. என்னிடம் ஆதாரம் இருக்கு. எனக்கு முதல்ல சந்தேகம் மட்டும் தான் இருந்தது” அவளது அலைபேசியில் இருந்த வீடியோவை காட்டினாள்.

பவிதாவிடம் வேலை செய்து கொண்டிருந்த போது ரிஷி அவளுக்கு ப்ளையிங் கிஸ் கொடுப்பது போல வீடியோ இருந்தது.

வெறியுடன் எல்லாரும் ரிஷியை நோக்க, அவன் தலைகுனிந்து நின்றான்.

“அது எங்க திருமணத்தின் முன் அவருக்கு இருந்த ஆர்வம் மட்டும் தான்” ஸ்ரீநிதி கூற, அவளிடமிருந்து கையை எடுத்தான் புகழ்.

புகழிடம் கையை நீட்டியவாறு ஸ்ரீநிதி கீழே விழச் சென்றாள். ரிஷி அவளை இழுத்து அணைத்து நிற்க வைத்து, “அறிவிருக்காடா? இந்த நிலையில் இப்படி கீழ விடுற?” புகழை ரிஷி திட்டினான்.

பவிதா சினமுடன் ரிஷியை பார்த்து விட்டு ஸ்ரீநிதியை அறைந்தாள்.

“ஏய்ய்ய்ய்…” சத்தமிட்டு, மறுநொடியே பவிதா கன்னத்தை சிவக்க வைத்திருந்தான் ரிசாத்பவன்.

ஜெய் ரிஷியை அடித்தான்.

அமரேசன் சினமுடன், “இங்க இத்தனை பெரியவங்க இருக்கோம். மாத்தி மாத்தி கை ஓங்கிட்டு இருக்கீங்க?” சத்தமிட்டார்.

சந்திரமுகன் அமைதியாக வெளியே சென்றார்.

“டாட்” ரிஷி அழைக்க, அவர் திரும்பவேயில்லை.

ஸ்ரீநிதியை படுக்கையில் அமர வைத்து, ரிஷி வெளியே சென்று தன் தந்தை முன் மண்டியிட்டு அவர் கையை பிடித்தான்.

டாட், நான் புரிஞ்சுக்காம தான் நடந்து கொண்டேன். எனக்கு பவியை முதலில் பிடித்தது தான். ஸ்ரீ கூறியது போல வெறும் ஆர்வம் தான். ஸ்ரீயை திருமணம் செய்த பின் பவியை நான் எண்ணியது கூட இல்லை. ஸ்ரீயை தான் டாட் எனக்கு பிடிக்கும்..

“பிடிக்கும்ன்னா? தெளிவா சொன்னா நல்லா இருக்கும்? அன்று போல தோழி தானா?” ஜோ கேட்டான்.

“நான் ஸ்ரீயிடம் காதலை கூறும் முன் யாரிடமும் சொல்ல மாட்டேன்” மனதில் எண்ணியவாறு, “ஆம்” ஜோவை பார்த்து தலையை மட்டும் ஆட்டினான்.

ஜோ சினமுடன் ரிஷி அருகே வந்தான்.

புகழ் அவனை தடுத்து, “அவன விடு ஜோ. ஸ்ரீக்கு நான் இருக்கேன்” என்று புகழ் கூறவும் சீற்றமுடன், “அவ என்னோட பொண்டாட்டி. நீ என்னடா பார்ப்ப?” புகழ் சட்டையை பிடித்தான் ரிஷி.

“பொண்டாட்டிய தோழின்னு தான சொல்லீட்டு இருக்க? நான் சொன்னது போல நீ விவாகரத்தில் சைன் செய்து கொடுத்திடு” ரிஷி கையை தள்ளி விட்டான் புகழ்.

“முடியாது ஸ்ரீ…” சொல்ல வந்த ரிஷி அமைதியானான்.

சந்திரமுகன் தன் மகனிடம் வந்து, “விவாகாரத்தில் சைன் பண்ணி கொடுத்திரு. நீதிமன்றத்தில் உங்களது விவாகரத்தை ஏற்றுக் கொண்ட பின் புகழ் நிதுவை திருமணம் செய்து கொள்ளட்டும்” சொல்லி வெளியே விறுவிறுவென நகர்ந்தார்.

“டாட்” கத்தினான் ரிஷி.

புகழ் ரிஷியை நக்கலாக பார்த்து சிரித்து, “இனி ஸ்ரீயும் தனுவும் என் உறவுகள்” என்று சொல்ல, புகழின் வாயிலே குத்தினான் ரிஷி.

அப்போதும் விடாமல், நாளை வரும் போது சைன் செய்து எடுத்து வா.. வெறுப்பேற்றினான் புகழ்.

“முடியாது. ஸ்ரீயை உன் பக்கம் கூட விட மாட்டேன்” சத்தமிட்டான் ரிஷி.

“அக்கா” ஜோ வேகமாக செல்ல, ஸ்ரீநிதி பனிமலரை அணைத்து அழுது கொண்டிருந்தாள்.

“இப்ப நீ அழக் கூடாதும்மா” பாட்டி அவள் தலையை வருட, ரிஷி உள்ளே வந்து அனைவரையும் பார்த்தான். எல்லாரும் சினமுடன் அவனை பார்த்தனர்.

“பேசணும்ன்னா பேசு” பெரிய பாட்டி ரிஷியை ஸ்ரீநிதி முன் நிறுத்தினார்.