தாரகை 23

“நான் ஒன்னு மட்டும் கேட்கணும்?” ஐயரை பார்த்தாள் தன்வி.

“சாமியை தவிர எதை பற்றி வேண்டுமானாலும் அர்த்தமுள்ளதா கேளும்மா” என்றார் அவர்.

ஷாலுவை சரி செய்யலாமா?

கேட்டீங்கல்ல? பண்ணலாம்மா. இந்த தாய் நினைத்தால் கண்டிப்பா நடக்கும்.

அம்மனா? அவள் பயத்துடன் அவரை பார்க்க, அவர் புன்னகையுடன் அந்த பொண்ணுக்கு சொந்தமுள்ள யாராவது ஒருவர் கோவில் முழுவதும் விளக்கேற்றணும். அந்த பொண்ணு நிலைக்கு காரணமானவன் பெயரை எழுதி போட்டு போகணும். அவ்வளவு தான்..

என்ன நடக்கும்?

அவன் ஆதாரத்துடன் பிடிபடுவான் இல்லை அழிந்து விடுவான். விளக்கேற்றி அப்படியே விடக் கூடாது. அந்த விளக்கை ஒருமணி நேரம் அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பின் அம்மனுக்கு நேராக ஏற்றிய விளக்கை அணையாதவாறு எடுத்து அந்த பொண்ணு இப்பொழுது இருக்கும் இடத்தில் வைக்கணும். பின் அந்த பொண்ணு கண்டிப்பாக குணமாவாள்.

ஒரு வருசம் ஆச்சே! நான்கைந்து மாதம் கோமாவில் போனாலே கை, கால் பக்கவாதம் வந்திரும்ன்னு டாக்டர் சொன்னாங்களே!

அம்மாடி, அவங்க மருத்துவர் மட்டும் தான். ஆனால் அம்மன் கடவுள். அந்த பொண்ணுக்கு எப்போதும் உறுதுணையா இருப்பாங்க. அதை விட அந்த பொண்ணு வாழ்க்கையில் அவள் துணையை விட எந்த ஆணும் தவறான எண்ணத்தில் தொட கூட முடியாது..

இது ரொம்ப கஷ்டமாச்சே! இங்கே வச்சி கூட அணையாமல் பார்த்துக்கலாம். ஆனால் அவளிருக்கும் இடம் வரை எப்படி அணையாமல் பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும்? அவளுக்கு அண்ணா மட்டும் தான். இதை யாரு செய்வா?

அதான் அண்ணா இருக்கார்ன்னு சொன்னேல்லம்மா..

அவரு அவளை விட்டு என்ன ஆனாலும் நகரவே மாட்டேங்கிறாரு சாமி..

ஜோ சிந்தனையுடன், “சொந்தம் மட்டும் தான் செய்ய வேண்டுமா? நண்பர்கள் செய்யலாமா?” கேட்டான்.

இல்ல ஜோ, தந்தை, அண்ணன், தம்பி, கணவன் தவிர யாரும் செய்யக் கூடாது. இல்லை செய்தும் பலனிருக்காது.

“கணவனா? அவன் எங்க இருக்கானோ?” தன்வி ஜோஜித்தை பார்த்தாள்.

“என்னம்மா? எங்க பையனை பாக்குற?” அழகி கேட்க, “ஆன்ட்டி சும்மா தான் பார்த்தேன்” ஜோவை பார்த்தான். அவன் எழுந்தான்.

“எதுக்கு எழுந்திரிக்கிறான்?” மனம் பதறி “வேண்டாம்” கத்தினாள்.

ஜோ அவளை புன்னகையுடன் பார்த்து அலைபேசியை எடுத்தான். அவனை பார்த்து, “யாரிடம் கேட்கப் போற?” ஆர்வமுடன் அவனிடம் வந்தாள்.

“ஏய்ய்! ஆர்வக்கோளாறு எனக்கு அழைப்பு வந்தது. அவளுக்கு கட்டி வைக்க நான் என்ன அவள் அண்ணனா?” ஜோ கேட்டு விட்டு நகர்ந்தான்.

ஆஹா..சூப்பர் ஐடியா, அண்ணாவிடம் சொல்லி மாப்பிள்ளைய பிடிக்க சொல்ல வேண்டியது தான்..

“ஒரு நிமிசம்மா” ஐயர் அவளை நிறுத்தி, “அவள் கணவன் தான் செய்வான். கண்டிப்பாக அவன் வருவான்”. அவர் எல்லாரையும் பார்த்து, “மாலை வெள்ளனவே பொங்கல் வைக்க தொடங்குங்க” அவர் சொல்லி நகர்ந்தார்.

இங்கேயும் பொங்கலா? ஜெய் தன் மனைவியை பார்த்தான்.

“பெண்கள் எல்லாரும் சேர்ந்து தான் வைக்கணும்” சொல்லி அனைவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

ஐயர் சொன்னது போல பொங்கலை வைக்க, அவரும் வந்தார். அம்மனுக்காக பூஜை பொருட்கள் இருந்தது. பூஜை முடித்து அவரவர் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

ஆனால் அன்றிரவு ஒருவன் பல விளக்கு மூட்டைகளை அம்மனின் முன் இறக்கிக் கொண்டிருந்தான். அது யாருக்கும் தெரியவில்லை.

“அம்மன் வரலாற்றை கேட்க முடியவில்லையே!” தன்வி புலம்பினாள்.

“இதுக்கென்ன? நானே சொல்றேன்” என்று பவிதா, அக்காவை திருமணம் செய்து தங்கையை காதலித்து அக்காவை விட்டு சென்றதால் அவர் கணவர் மீது கோபமுடன் தன் கணவன் மற்றும் தங்கைக்கு சாபளித்த அக்காளம்மாவின் கதையை கூறினாள்.

அனைவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். உண்டு வந்ததால் சோர்வில் அவரவர் அறைக்கும் சென்று விட்டனர்.

ஸ்ரீநிதியும் ரிஷியும் அவர்கள் அறைக்கு வந்தனர்.

கதவை தாழிட்ட ஸ்ரீநிதியை ரிஷி அவன் பக்கம் இழுத்தான். அவள் அவனை தள்ளி விட்டு, “ஜஸ்ட் தோழிக்கு முத்தம் கொடுக்கக் கூடாது” அவள் அலமாரியை திறந்தாள்.

நீ என்னோட பொண்டாட்டி. மறந்துட்டியா?

“அப்படியா? நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது” அவள் அணைத்து உறங்கும் தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தாள்.

பவிதா சொன்னது நினைவில் வந்தது ரிஷிக்கு.

அவன் அதை பிடித்து அவளை பார்த்து, எனக்கு இந்த பில்லோ பிடிக்கவேயில்லை. நமக்கு இடையில இது வந்துட்டு இருக்கு. என்னை கட்டிக்கிறேன்னு இதை நமக்கு இடையில வச்சு தான் உறங்குற.

“இனி இது உனக்கு வேண்டாம்” அவன் சொல்லிக் கொண்டே அவளை பார்க்க, அவனிடம் ஓடி வந்தாள் ஸ்ரீநிதி.

“ரிஷி அதை கொடுங்க” அவனை நெருங்கி கோபமாக அதை பிடுங்க முயன்றாள்.

சிரிப்புடன் “நான் தரவே மாட்டேன்” ரிஷி அவன் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு பின்னே நகர்ந்தான். அவள் அதை அவனிடமிருந்து பிடுங்குவதிலே குறியாக இருந்தாள்.

ரிஷி பில்லோவை தூக்கிக் கொண்டே படுக்கையில் விழுந்தான். அதை பிடுங்க வந்த ஸ்ரீநிதி அவன் மீது விழுந்தாள். சட்டென தலையணையை விட்டு அவளை திருப்பி அவள் எழாதவாறு பிடித்து அவளை பார்த்தான்.

ஏற்கனவே அவன் மீது பல வருட காதலில் இருந்தவள் அவனது பார்வையில் அனைத்தும் மறந்தாள்.

கன்னத்தோடு கன்னம் சேர்த்து ரிஷி கண்களால் காதல் பாஷை பேச முயன்றான். அவளோ கண்களை மூடிக் கொண்டாள்.

கன்னம் தாண்டி அவளது இதழ்களில் குடிபுகுந்தான். அவளும் அவனின் இதழணைப்பில் ஒன்றினாள். அவளின் கழுத்தில் புதைந்து அவன் முத்தமிட்டு, ஜஸ்ட் ஒன்ஸ் ட்ரை பண்ணலாமா? அவன் மீண்டும் அவள் இதழ்களில் முத்தமிட கேட்டான்.

ஆனால் ஸ்ரீநிதி தவறாக புரிந்து கொண்டு கண்ணை விழித்து அவனை தள்ளி விட்டு, “எனக்கு சோர்வா இருக்கு” படுக்கையின் மறுபக்கம் சென்று போர்வையை இழுத்து மூடி படுத்தாள்.

அவள் தவறாக எண்ணியது தெரியாமல் அவள் போர்வையில் நுழைந்தான்.

கண்கலங்க இருந்த ஸ்ரீநிதி அவன் செயலில் கத்தி விட்டாள்.

“உங்களுக்கு என்ன என் உடல் வேணுமா?” பட்டென கேட்டு விட, திகைத்து அவளை பார்த்த ரிஷிக்கு சினம் மூண்டது.

“உன்னை நான் தொடணும்ன்னா முதல் நாளே தொட்டிருப்பேன். என்னோட கனவை அடைந்த பின் தான் உன்னை எடுத்துக்கணும்ன்னு நினைச்சி வச்சுருக்கேன். என்னை இவ்வளவு கேவலமா நினைச்சிட்ட. இது தான் நீ என்னை புரிந்திருக்கும் வள்ளலா? காதலாம் காதல்” சீறினான்.

ஸ்ரீநிதிக்கு அவள் காதலை பற்றி பேசவும் அழுகை வந்து விட்டது. அவள் அழவும் சினமுடன் மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டான்.

வெகு நேரமாக அவளது அழும் சத்தம் கேட்கவும் அவளை நெருங்கி கையை அவள் இடுப்பில் போட்டான். அவள் தள்ளி விட்டாள்.

அவன் மூச்சுக்காற்று அவள் முதுகை தீண்டுமாறு மேலும் நெருங்கி படுத்துக் கொண்டான். மெதுவாக கையை அவள் மீது போட்டான்.

இம்முறை அவன் கையை தட்டி விட்டு அவனை பார்த்து திரும்பினாள்.

“என்னை பத்தி என்ன வேணும்ன்னாலும் பேசுங்க. என்னோட காதலை பற்றி மட்டும் பேசாதீங்க” அழுது கொண்டே மீண்டும் மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள்.

“உன்னோட காதல் நான் தான? நீ என்னை திட்டுற?” அவன் செல்லக் குரலுடன் கேட்க,

“இனி நான் திட்ட மாட்டேன். அதான் திட்ட மனசுல ஒருத்தியை வச்சுருக்கீங்கல்ல? அவளை மட்டும் திட்ட சொல்லிக்கோங்க” தேம்பிக் கொண்டே ஸ்ரீநிதி சொல்ல, அவனுக்கு சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது.

அதை காட்டாமல், “ஆமா நீ சொல்றதும் சரி தான் அவகிட்ட வச்சுக்கிறேன்” ஸ்ரீநிதியை அணைத்தான்.

“அதான் அவ இருக்கால்ல. என்னை எதுக்கு கட்டிப்பிடிக்கிறீங்க? போங்க” அவன் கையை தட்டி விட்டாள். ரிஷியிடம் பதிலே இல்லை.

போர்வையை விலக்கி திரும்பி பார்க்க, அவன் அங்கு இல்லை. அறை முழுவதும் பார்க்க, அவனில்லை. ஸ்ரீநிதி மனம் பதறியது.

“நிஜமாகவே அவகிட்ட போயிட்டீங்களா?” அழுது கொண்டே அமர்ந்தாள்.

“ரிஷி நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துப்பீங்கன்னு நான் நினைக்கலை. ரொம்ப சந்தோசமா இருந்தது. ஆனால் இப்ப நீங்க….” பேசி நிறுத்தி முகத்தை மூடி அழுதாள்.

எதிரே இருந்த திரைச்சீலையிலிருந்து குதித்து அவள் முன் வந்து பயமுறுத்தினான் ரிஷி.

அவனை பார்த்து பயந்து கத்தினாள்.

“ஏய்..நான் தான்” அவன் அவளது தோளை அழுந்த பற்றினான்.

“ரிஷி” அழைத்து மீண்டும் அழுதாள் ஸ்ரீநிதி.

“என்ன அழுகை? லிட்டில் பேபி கூட உன்னிடம் தோற்றுவிடும்” அவள் இதழோடு இதழ் சேர்த்தான். அவள் முதலில் அவனை அடித்தாள்.

ஸ்ரீநிதியை தூக்கி ரிஷி ஏதுவாக அவன் மடியில் அமர்த்தி முத்தமிட்டான்.

முத்தம் வெகுநேரம் நீள, ஸ்ரீநிதி முடியாமல் அவனை நகர்த்தி அவனை கட்டிக் கொண்டாள். அவனும் தன் மொத்த உருவத்தாலும் அவளை மறைத்து உடலுக்குள் உயிராக வைத்துக் கொண்டான்.

இப்பொழுதே நான் உன்னை தான் காதலிக்கிறேன் என்று ரிஷி ஸ்ரீநிதியுடம் கூறி இருந்திருந்தால் பின்னாளில் வரும் பிரிவை அதுவும் அவனால் வரும் பிரிவை தவிர்த்திருக்கலாம்.

சற்று நேரத்தில் இருவரும் தூங்கி விட, விழித்து பார்த்த ஸ்ரீநிதி ரிஷியினுள் சுருண்டு இருந்தாள்.

“என் வாழ்க்கை முழுவதும் இப்படியே வாழ ஆசையாக உள்ளது” எண்ணியவாறு மணியை பார்த்தாள். பன்னிரண்டாகி இருந்தது. அதே நேரம் ரிஷியின் அலைபேசி ஒலிக்க, வேகமாக அதை எடுத்து வாட்ரோப்பிற்குள் நுழைந்தாள்.

“டார்லிங்” என்ற குரலில் அதிர்ந்து, “ஆருத்ரா” ஸ்ரீநிதியின் வாய் முணுமுணுத்தது.

தொண்டையை பிடித்து, “சொல்லு?” ரிஷி போல பேசினாள்.

என்ன செய்யப் போற டார்லிங்?

என்ன?

ஒழுங்கா என்னை உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போய் என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா நீ தான்னு சொல்லு. அது சீனுவிது தான். எல்லாரும் என்னை கை கழுவிட்டாங்க. அது விபத்து போல தான். என் காதல் நீ தான்..

ஸ்ரீநிதி அமைதியாக இருந்தாள்.

அந்த ஸ்ரீநிதிக்காக யோசிக்கிறன்னு புரியுது. அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்திடு. அவ மேல எல்லா பழியையும் போட்றலாம்.

என்ன பழி? ரிஷி போல கேட்டாள் ஸ்ரீநிதி.

அதான் அந்த பொண்ணுக்கு நடந்தது உன்னால தான!

என்னாலா?

ஆமா. உன்னால மட்டும் தான்.

“நான் எதுவும் செய்யலை” ரிஷி போல உறுதியாக பேசினாள் ஸ்ரீநிதி.

“இருக்கலாம். ஆனால் நான் பொய்யான வீடியோ கூட தயார் செய்திடுவேன். நாளை காலையே உன் வீட்டினரிடம் சொல்ற இல்ல நானே வீடியோவை தயாரித்து இணையத்தில் போட்டு விடுவேன்” மிரட்டினாள்.

ம்ம்! வைத்து விட்டாள் ஸ்ரீநிதி.

“அடிப்பாவி, இதனால் தான் அவர் குடிக்கிறாரா? குடி போதையில் இவர் உடனே மயங்க தான செய்வார்? எப்படி என்னிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டார்?” சந்தேகமுடன் அவனது அலைபேசி கால் ஹிஸ்ட்ரியை அழித்து மாறாமல் இருந்த இடத்திலே அப்படியே வைத்தாள்.

அவனது மது பாட்டில் இருக்கும் இடத்தை தேடி பார்த்தாள். பத்திற்கும் மேற்பட்ட பாட்டில்கள் இருந்தது. ஆனால் அதன் கலர் லைட்டாக இருந்தது.

ஒரு பாட்டிலை மட்டும் வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தனியே ஊற்றி, அதை எடுத்துக் கொண்டு அவள் அலைபேசியில் சந்திரமுகனை அழைத்தாள்.

“இந்த நேரத்துல்ல என்னங்க?” மான்விழி உறக்கத்தில் கேட்க, அலைபேசியில் வந்த ஸ்ரீநிதி எண்ணை பார்த்து, “இவன் ஏதும் செய்துட்டானோ?” தன் மனைவியை பார்த்தார்.

அவர் கண்ணை தேய்க்க, “கம்பெனி கால்ம்மா. இப்ப வந்துடுறேன்” ஆபிஸ் அறைக்கு சென்று அலைபேசியில் அவளை அழைத்தார்.

வேகமாக பால்கனிக்கு ஓடி பக்கத்து அறை பால்கனியை எட்டிப் பார்த்தாள் ஸ்ரீநிதி. இருள் மறைத்து கதவடைத்து இருந்தது.

“ஹப்பாடா பவி இல்லை” நிம்மதியுடன் அலைபேசியை காதுக்கு கொடுத்தாள்.

“என்னம்மா, பிரச்சனை எதுவும் பண்றானா?” அவர் கேட்க, இருவரின் சண்டையும் எண்ணத்தில் வந்து மீண்டது அவளுக்கு.

“நிதி” அவர் அழைக்க, மாமா என்று ரிஷி நினைவில்லாமல் எல்லை மீறியதை தவிர ஆருத்ரா பேசிய அனைத்தையும் கூறினாள்.

“அந்த பொண்ண நான் பார்த்துக்கிறேம்மா” அவர் கூற, நோ அங்கிள்..அவளை என்ன செய்யணும்ன்னு நான் சொல்றேன். அதற்கு முன் உங்களுக்கு தெரிந்த உங்க நம்பிக்கைக்கு பாத்திரமான நபர் இருந்தால் இப்பவே அவரை பார்க்க முடியுமா? கேட்டாள்.

இருக்கான்ம்மா. என்ன செய்யணும்மா? அவர் கேட்க, “வெளிய வாங்க அங்கிள்” என்று அவள் எடுத்து வைத்த ஆல்கஹாலுடன் வந்து அவரிடம் அதை கொடுத்து, இது ரிஷி குடிப்பது அங்கிள். இதுல ஏதோ கலந்துருப்பாலோன்னு தோணுது..

அவர் அதை திறந்து முகர்ந்து பார்த்து ஏதும் தெரியலையேம்மா?

இல்ல அங்கிள், அதன் கலரை உன்னிப்பாக பாருங்கள். வாசனை மாறாமல் இருக்க ஏதோ கலந்தும் இருக்காங்க. இதை யாருக்கும் தெரியாமல் டெஸ்ட் செய்து பார்க்கணும் அங்கிள்.

இதுக்கு டாக்டர் வேண்டாம்மா. நம்ம பக்கத்து வீட்டு வேதியியல் பிரபசர் போதும். நான் பார்த்துட்டு வாரேன் என்று அவர் சென்றார்.

அவளுக்கு பின்னே கையை கட்டிக் கொண்டு நளினி அவளை பார்த்து, “மாமா எங்கடி போறாரு?” கேட்டாள்.

ஒன்றுமில்லை ஆன்ட்டி..

சொல்லப் போறீயா? எல்லாரையும் அழைக்கவா?

“சொல்றேன்” என்று சந்திரமுகனிடம் கூறியதை சொல்லி விட்டு, “யாரிடமும் சொல்லாதீங்க ஆன்ட்டி” அவள் அவளறைக்கு சென்றாள்.

ரிஷி படுக்கையில் அமர்ந்திருந்தான்.

“எழுந்துட்டார். கோபமா இருக்காரோ!” சிந்தனையுடன் அலைபேசியை பார்ப்பது போல சந்திரமுகனிடம், “நாளைக்கு காலையில் என்னன்னு பார்த்துக்கிறேன் மாமா” என்று வைத்து விட்டு துரியன் அனுப்பியதை பார்ப்பது போல படுக்கை அருகே வந்தாள்.

“எங்க போயிட்டு வர்ற?” டெர்ராக கேட்டான் ரிஷி.

உறக்கம் வரலை. அதான் கீழ போயிட்டு வந்தேன்.

“கீழன்னா எங்க?” அவன் கேட்க, “பார்த்துட்டானோ!” பயத்துடன் அவனை பார்த்தாள்.

நான் கேட்டுட்டு இருக்கேன்.

“ஹால்ல அமர்ந்து இதை தான் பார்த்துட்டு இருந்தேன்” அலைபேசியை காட்டினாள்.

அவ்வளவு தான்.. ரிஷி அவளை இழுத்து படுக்கையில் தள்ளி அவளை கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டான்.

அவன் இழுக்கவும் ஸ்ரீநிதிக்கு மூச்சே நின்றது போல இருந்தது.

அவள் மூச்சை இழுத்து விட்டாள்.

“ஸ்ரீ தூங்கும் போது எங்கும் போகாத. என்னால தூங்க முடியல” அவளை அணைத்துக் கொண்டே பேசினான். அவனை நகர்த்தி அவன் முகம் பார்த்தாள். அவன் புருவம் உயர்த்தினான்.

நமக்கு திருமணமாகி இன்றோடு மூன்று நாள் தான் ஆகுது. அதுக்குள்ள என்னை எதுக்கு உறங்க தேடுறீங்க?

மூன்றுநாள் கட்டிபிடிச்சி உறங்கி இருக்கேன். நீ இல்லை என்பதால் தூங்க முடியல..

அவனை நகர்த்தி கூர்ந்து பார்த்தாள்.

“சைட் அடிக்கிறீயா? இரு நான் வேணும்ன்னா கிளாஸ் போட்டுக்கவா?” நகர, அவனை இழுத்து கிளாஸ் போட்டாலும் போடலைன்னாலும் இந்த மூஞ்சி எனக்கு மாறி தெரியப் போறதில்லை..

“என்ன? நான் உனக்கு அழகா தெரியலையா? அய்யோ!” நெஞ்சில் குத்தினான்.

சிரிப்புடன், “எப்பவுமே தப்பா தான் யோசிக்கிறீங்க?” அவனை அணைத்துக் கொண்டாள்.

“நான் தான் உன்னை காதலிக்கவில்லையே! எதுக்கு கட்டிக்கிற?” அவன் கேட்க, “உங்களுக்கு தான் கட்டிக்கலைன்னா உறக்க வாராதே!”

“இப்ப கூட எனக்காக யோசிக்கிறா?” சிந்தனையுடன் ரிஷி, “பரவாயில்லை. நீ கஷ்டப்பட்டு என்னை கட்டிக்க வேண்டாம்” அவளை நகர்த்தினான். அவள் கண்கள் கலங்கியது.

காணாதது போல முகத்தை திருப்பினான் ரிஷி.

“நீங்க என்னை காதலிக்கலைன்னாலும் நான் உங்க வொய்ஃப் தான? கட்டிக்கக் கூடாதுன்னா நான் கீழ படுத்துக்கிறேன்” அவள் கூறவும் அவளை தன்னுடன் வைத்துக் கொண்டான்.

உங்களுக்கு தான் பிடிக்கலைல்ல. வேணும்ன்னா அந்த பொண்ணை வரச் சொல்லி கட்டி பிடிச்சுக்கோங்க..

முதலில் ரசித்தவனுக்கு மீண்டும் அவள் அதையே கூறவும் சினமுடன் அவளை முறைத்தான்.

“பாவம் அந்த பொண்ணு கஷ்டப்படுவால்ல?” வேண்டுமென்றே ஸ்ரீநிதி கேட்க, “அவளுக்கு தான் திருமணமாகிடுச்சுன்னு சொல்றேன்ல்ல” சினந்தான். அவள் அமைதியாக அவனிடமிருந்து விலகி படுத்துக் கொண்டாள்.

தலையில் தட்டி எப்போதும் போல அவளை அணைத்து, “அந்த பொண்ணை பத்தி பேசாத ஸ்ரீ. நானே மூவ் ஆன் ஆகணும்ன்னு நினைக்கிறேன்” இவன் வேண்டுமென்றே சொன்னான்.

“மூவ் ஆன்?” அவள் அவனை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான்.

காதலில் மூவ் ஆன் பண்ண முடியாது. நீங்க அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கீங்களா?

வாட்?

முத்தம்.

இல்ல, என் காதலே அவளுக்கு தெரியாதுன்னு சொன்னேன்ல்ல?

“நான் கொடுத்திருக்கேன்” ஸ்ரீநிதி சொல்ல, என்ன? புரியாமல் விழித்தான்.

நான் முத்தம் கொடுத்திருக்கேன்.

ஆமா, அதான் திருமணத்தின் பின் கொடுக்குறோம்ல்ல?

“நான் அதை சொல்லவில்லை” அவள் தலையணையை எடுத்தாள்.

என்னது? ரிஷி அதிர்ந்தான்.

ம்ம்! புகழுக்கு கொடுத்திருக்கேன்.

ரிஷி சினமுடன் எழுந்து பொருட்களை தள்ளி விட்டான்.

என்ன பண்றீங்க? அவனை நெருங்கினாள்.

நீ என்னை காதலித்து விட்டு அவனுக்கு முத்தம் கொடுத்திருக்க? சீறினான்.

ஐய்யோ ரிஷி! சிறுவயதில் கொடுத்ததை சொன்னேன்..

என்ன?

“ஆமா” அவள் தலையசைத்தாள்.

ரிஷி கண்ணீருடன் அவளை கட்டிக் கொண்டான்.

எதுக்கு இந்த கண்ணீர்? நான் அவனுக்கு முத்தம் கொடுத்தால் எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம்?

நீ என்னோட வொய்ஃப்..

நல்லா நினைவு படுத்துறீங்க?

என்ன சொல்ற ஸ்ரீ?

ஆமா, எனக்காக இதுவரை பூ கூட நீங்க வாங்கிக் கொடுக்கலை. தூங்க மட்டும் நான் பொண்டாட்டியா வேணும்.

நீ தான நான் சம்பாதித்ததில் வாங்கி தரச் சொன்ன?

“உங்க பாக்கெட் மணி கூடவா இல்லை” கேட்டாள்.

“இருக்கு” அவளை பார்த்து, அதுவும் டாட்ஸ் மனி தான!

சேமிப்பு உங்களுடையது தான்..

“நாளை வாங்கித் தாரேன்” அமைதியாக படுத்தான்.

அமைதியாகிட்டீங்க?

“சோர்வா இருக்கு” அவன் கூறவும் ஸ்ரீநிதி அவனருகே படுத்து அணைத்துக் கொண்டாள். சிரிப்புடன் அவனும் கட்டிக் கொண்டான். இருவரும் உறக்கத்தை தழுவினார்கள்.

அதிகாலை தன்வி அறையில் அலைபேசி ஒலித்தது.

“யாருடா இந்த நேரம்? தூங்க விடுங்கடா” அவள் எழவேயில்லை. நளினி அலைபேசியில் ஜோ அழைப்பதை பார்த்து அழைப்பை எடுத்து அவர் காதில் வைத்தார்.

தனு, “குட் நியூஸ்” ஆர்ப்பாட்டமாக சத்தமிட்டான்.

நளினி பேசுறேன்.

ஆ..ஆன்ட்டி..தனு..

அவ தூங்கிட்டு இருக்கா. என்ன விசயம்?

ஆன்ட்டி, அவளை எழுப்பி ஹாஸ்பிட்டல் வரச் சொல்லுங்க.

ஹாஸ்பிட்டலா எதுக்கு? யாருக்கும் ஏதும் பிரச்சனையா?

இல்ல ஆன்ட்டி, மறந்தும் நிது இருக்கும் போது பேசிறாதீங்க. ஷாலு கண்ணை முழிச்சிட்டாளாம். ஹாஸ்பிட்டலில் இருந்து கால் பண்ணாங்க..

நளினி புன்னகையுடன், “அவள வர சொல்றேன். நீ எங்க இருக்க?”

நான் வீட்ல தான் ஆன்ட்டி. இனி தான் போகணும்.

அவளை எழுப்பி விடுறேன். பிக் அப் பண்ணிக்கிறியா? அவர் கேட்க, “ஆன்ட்டி” அவன் அழைத்தான்.

“சீக்கிரம் வா” அணைத்து விட்டார்.

தனுவை எழுப்பி விசயத்தை சொல்ல, கனவிலிருந்து வெளியே வந்தவள் விழித்து பின் குதித்தாள்.

தயாராகு. ஜோ வந்து அழைச்சிட்டு போவான்.

மாம்..

ம்ம்!!! கிளம்பு..

“தேங்க்ஸ் மாம்” அவரை அணைத்து முத்தமழை பொழிந்தாள் தன்வி.

பின் தயாராகி வெளியே வர, ஜாக்கிங் முடித்து சந்திரமுகன் உள்ளே வந்தார்.

“தனு இந்த நேரம் எங்க போற?” அவர் கேட்க, பைக் சத்தம் கேட்டு பார்த்தார்.

ஜோ..

இருவரும் எங்க போறீங்க?

“பிக்ப்பா ஷாலு விழிச்சிட்டா. நாங்க பார்த்துட்டு வாரோம்”.

“அதுக்குள்ளவா?” ஐயர் கூறியதை அவர் சிந்திக்க, அவருக்கும் முத்தம் கொடுத்து விட்டு ஜோவுடன் சென்றாள்.