Advertisement
கணேசன், “முன்பிருந்த கீர்த்தினா கூட நான் உன் விருப்பத்தை கேட்டிருப்பேன் பட் இப்போ இருக்கிற கீர்த்தியை மாற்ற உன்னால் மட்டுமே முடியும் என்பதால் உங்க திருமணத்தை நானே பேசிட்டேன்..” என்றவர் தளதளத்த குரலில், “என் நண்பனின் வேதனையைப் பார்க்க என்னால் முடியலைடா.. அந்த குடும்பத்தின் சந்தோசமே உன் கையில் தான் இருக்குது” என்று கூறி மகனின் கையை பற்றிக் கொண்டார்.
சேகர் சொல்வதறியாது தன் கரத்தை பற்றிய தந்தையின் கையை பார்த்தபடி நின்றான்.
சில நொடிகள் கழிந்தும் மகனிடம் பதிலில்லை என்றதும் தன் கையை சட்டென்று உருவிக் கொண்டு, சற்று கோபமான குரலில், “என்னடா! நீ விரும்புற பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பியா? அப்படி மட்டும்…………………...”
சேகர் கையை உயர்த்தி, “வார்த்தைகளை விட்டுறாதீங்கபா..” என்று கூற, அவர் பேச்சை நிறுத்தி முறைப்புடன் மகனை பார்த்தார்.
சேகர், “இந்த விஷயம் கீர்த்திக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
அவர் இல்லை என்று தலையை ஆட்டினார்.
“அவ சம்மதம் கேட்காம………..…………”
“எதுக்கு? அவ மனசுலையும் ஆசையை வளர்த்து ஏமாத்தவா?”
“அப்பா என்னை கொஞ்சம் பேச விடுங்க”
அவர் அமைதியாக அவன் முகத்தை பார்த்தார்.
“எனக்கு வைஷ்ணவியை பிடிச்சுருக்குது தான்.. பட் அது காதாலா என்னனு நானே இன்னும் ஆராயலை.. அண்ட் நான் கீர்த்தியை இந்த எண்ணத்தில் பார்த்தது இல்லை.. பட் அவளுடைய மன மாற்றம், மகிழ்ச்சி எனக்கு ரொம்ப முக்கியம்.. உங்களை விட கீர்த்தி மேல் எனக்கு அதிக அக்கறை இருக்குது.. பட்..” என்று நிறுத்தியவன் சிறு பெருமூச்சொன்றை வெளியிட்டு,
“உண்மையை சொல்லணும்னா எனக்கு இப்போ என்ன சொல்றதுனே தெரியலை.. எனக்கு த்ரீ டேஸ் டைம் குடுங்கப்பா ப்ளீஸ்.. நான் யோசிக்கணும்” என்று முடித்தான்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய கணேசன் மெல்ல பேசினார்.
“சரி.. ஆனா நல்ல முடிவா சொல்லு.. கீர்த்தி மகிழ்ச்சியை மனதில் வைத்து முடிவெடுப்பனு நம்புறேன்” என்று கூறி அறையை விட்டு வெளியேறப் போனார்.
“அப்பா” என்று அவன் அழைத்ததும் அவர் திரும்பி பார்க்க, “வெளிய போய் இயல்பா சிரிச்ச முகமா இருங்க.. ஏன்னா கீர்த்தி அவளால எனக்கு பிரச்சனையோனு கில்டியா பீல் பண்றா..” என்றான்.
கணேசன் புன்னகையுடன் தலையை ஆட்டிவிட்டு வெளியேறினார்.
சேகர் சொன்னது போல் எதுவும் நடக்காதது போல் அவர் சிரிச்சு பேசவும், கீர்த்தி சற்று தெளிந்தாள் ஆனால் மற்ற பெரியவர்கள் குழப்பத்துடன் அவரைப் பார்க்க அவர் கண்ணசைவில் கீர்த்தியை காண்பிக்க, அவர்களும் இயல்பாக இருப்பது போல் நடித்தனர்.
கீர்தன்யா சேகரிடம் என்னவென்று கேட்க, அவன் சிரித்து சமாளித்தான். அவள் வைஷ்ணவியுடன் அவனை சேர்த்து பேசி கிண்டல் செய்ய, அவன் அவளை வம்பிழுத்து அவளது சிந்தனையை திசை திருப்பினான்.
கீர்தன்யா உறங்க சென்ற பின் பெரியவர்கள் கூடி பேசினர். அனைவரும் சிறு கவலையும் பெரும் எதிர்பார்ப்புமாக சேகரின் பதிலிற்காக காத்திருக்க தொடங்கினர்.
சேகர் பல விஷயங்களை யோசித்தபடி தன் அறையில் உறக்கமின்றி படுத்திருந்தான்.
————————————————————————————————————————————–
தன் சிந்தனையில் இருந்து வெளியேறிய தியாகேஷ்வர் சிணுங்கிய கைபேசியை எடுத்துப் பார்த்தான். அழைத்தது அவனது அன்னை.
“ஹலோ.. எப்படி இருக்கீங்க மா? அப்பா எப்படி இருக்காங்க? வினோத், அண்ணி குட்டீஸ் எப்படி இருக்காங்க?”
“எல்லோரும் நல்லா இருக்கோம்.. நீ எப்படி இருக்க?”
“எனக்கென்ன ம்மா! நான் நல்லா இருக்கிறேன்”
“தியாகேஷ்………..”
“அம்மா ப்ளீஸ் அந்த பேச்சை எடுக்காதீங்க”
“ச்ச்.. என்னடா நீ.. ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே…….”
“அம்மா ப்ளீஸ்”
“தியாகேஷ் அம்மா சொல்றதை முதல்ல கேளு” என்று அவனது தந்தையின் குரல் ஒலிக்கவும் அவன் அமைதியானான்.
அவன் அம்மா, “இப்ப பார்த்திருக்கிற பொண்ணும் போலீஸ் தான்டா.. உனக்கு கண்டிப்பா பிடிக்கும்.. பார்க்க அழகா இருப்பா” என்றார்.
“பேசி முடிச்சுடீங்களா.. வச்சிடவா?”
அவனது தந்தை, “தியாகேஷ்!” என்று அழைக்க,
“அப்பா அம்மா சொல்றதை கேட்க சொன்னீங்க, கேட்டேன்.. தட்ஸ் ஆல்”
“அம்மா சொன்ன விஷயத்தை மட்டும் கேட்க சொல்லலை.. அதன்படி நடந்துக்க சொல்றேன்”
“அது என்னால் முடியாது ப்பா”
“இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்கப் போற?”
“….”
“தியாகேஷ் மௌனமா இருந்தா தப்பிச்சிடலாம்னு நினைக்காத”
“நான் தப்பிக்க நினைக்கலை.. என் முடிவை தெளிவா சொல்லிட்டேன்”
அவன் அம்மா கலங்கிய குரலில், “நீ மட்டும் ஏன்டா இப்படி கஷ்டப்படுற?”
“இது எனக்கு தண்டனை மா”
அவன் அம்மா பேச முடியாமல் எழுந்து சென்று விட, அவன் அப்பா, “தியாகேஷ் இன்னும் எத்தனை நாளைக்கு நினைவுகளுடன் வாழ போற? பீ ப்ராக்டிகல் மேன்(man)“
“அப்பா ப்ளீஸ்.. ட்ரை டு அண்டர் ஸ்டாண்ட் மீ”
“…”
“உங்களுக்காக என்மனதை என்னால் மாற்ற முடியாது.. சாரி டாட்”
“ச்ச்”
“ஓகே.. எங்கேயாவது வெளிய போனீங்களா? US எப்படி இருக்குது? இப்பவாது பிடிச்சு இருக்குதா?”
“நோ வே.. நான் எங்க இருந்தாலும் எனக்கு நம்ம இந்தியா தான் எப்பவும் பெஸ்ட்”
தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், “வினோத் பக்கத்துல இருக்கானா பா?”
“ஹ்ம்ம்.. இதோ தரேன்” என்று கூறி கண்ணசைவில் முதல் மகன் வினோத்திடம் ஏதோ கூறிவிட்டு மனைவியை பார்க்க சென்றார்.
வினோத், “ஹலோ”
“எப்படி இருக்க? ஹொவ் இஸ் தி லைப் கோயிங் ஆன்?”
“பைன்.. உனக்கு?”
“அஸ் யூசுவல்.. பாப்பா பேரு செலக்ட் பண்ணிட்டியா?”
“நிதீஷ் தான் யாழினினு வைக்கணும்னு சொல்லிட்டு இருக்கிறான்”
“அவனா?”
“ஹ்ம்ம்.. அவன் கிளாஸ்ல யாழினினு ஒரு பொண்ணு இருக்காளாம், அவ ரொம்ப அழகாம், படிப்புல எப்பவும் பஸ்ட்டாம்”
“உன் பையன்னு ப்ரூவ் பண்றான் போல.. செகண்ட் ஸ்டாண்டர்டு-லேயே கர்ள்-பிரெண்ட் ஆ!”
“ஹே தியாகேஷ் நானும் இங்க தான் இருக்கிறேன்” என்று அவன் அண்ணி கூற,
இவன்,“அட பாவிகளா!” என்றான்.
மெலிதாக சிரித்த பின், “எங்க நம்ம லிட்டில் மாஸ்டரை காணும்?”
அண்ணி,“அவரு இன்னும் எழும்பலை”
“ஓ! எப்போ இந்தியா வரீங்க?”
“நாங்க எல்லோரும் ரெடி தான்.. உன் அண்ணா தான் சொல்லணும்” என்று கூற,
வினோத்,“எப்படியும் மினிமம் த்ரீ மன்த்ஸ் ஆகும்டா”
“அப்பா என்ன சொல்றார்?”
“எப்போடா இந்தியா போவோம்னு காத்துட்டு இருக்கார்.. அம்மாவுக்காகவும் குட்டீஸ்காகவும் தான் இருக்கார்”
“சரி ஓகே.. நான் தூங்க போறேன்.. டேக் கேர்.. பாய்”
“தியாகேஷ்” என்று வினோத் இழுக்க,
“ப்ளீஸ்டா நீயும் ஆரம்பிக்காத.. லவ் பண்ணி கல்யாணம் பண்ண உனக்குமாடா என் பீலிங்க்ஸ் புரியலை?” என்றான்.
“புரியாம இல்லை பட் நீ……………..”
“ப்ளீஸ் அதை பத்தி பேச வேண்டாம்..”
“..”
தியாகேஷ்வர் சிறிது கலங்கிய குரலில், “ஆனாலும் கடவுள் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்க கூடாதுடா” என்றான்.
வினோத் சற்று குரலை உயர்த்தி, “என்னடா லூசு மாதிரி பேசிட்டு இருக்க? நீ என்னடா பண்ண?” என்றான்.
“என்னால தான் எல்லாம்.. என்னால, என் எதிரியால தான்.. ச்ச்.. விடுடா.. போன உயிர் திரும்பப் போறதில்லை.. ப்ளீஸ் வினோத் நான் நாளைக்கு பேசுறேன்.. பாய்” என்று கூறி வினோத் பேசியதை பொருட் படுத்தாமல் தொடர்பைத் துண்டித்தான்.
அந்த கோர சம்பவம் அவன் கண் முன் வந்தது. வேலையில் எத்தனையோ இறப்புகளை சந்தித்தவன் தான் ஆனால் இந்த இறப்பு அவன் வாழ் நாளில் என்றும் மறக்க முடியாத அவன் சிந்தனையில் உறைந்துப் போன வலி. வேதனையுடன் இறுக்கமாக முடிய விழிகளின் ஓரம் ஒரு துளி ஈரம் கசிந்தது. வழக்கம் போல் உறக்கமின்றி வேதனையினுள் சுழன்றான்.
இரண்டு நாட்கள் கழித்து காலையில் சேகர் கீர்தன்யாவை அமர விடாமல் கிளம்பச் சொல்லி விரட்டிக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த கீர்தன்யா எரிச்சலுடன், “அப்படி எங்க தான்டா கூட்டிட்டு போகப் போற?” என்று கேட்டாள்.
சேகர் ‘வின்னர்’ திரைப்பட வடிவேல் போல், “எப்படி கேட்டாலும்.. அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டோம்ல” என்று கூற,
கீர்தன்யா சிறு புன்னகையுடன், “இம்சை டா நீ” என்று தன் தலையில் அடித்துக்கொண்டு கிளம்ப சென்றாள்.
அவள் உள்ளே சென்றதும் சேகர் சண்முகத்தை நோக்கி கட்டை விரலை உயர்த்தி காட்டினான். அவரும் புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்தி காட்டினார்.
அமுதா கணவரிடம், “என்னங்க நடக்குது?” என்று கேட்டார்.
அவர் குரலை வெகுவாக குறைத்து, “கீர்த்தியை அவ காலேஜ்க்கு கூட்டிட்டு போறான்” என்றார்.
அமுதா, “என்னங்க இது?” என்று அதிர,
சண்முகம் தன் வாய் மீது விரலை வைத்து, “ஷ்.. கீர்த்திக்கு அது தெரியாது” என்றார்.
“வேணாங்க விளையாடாதீங்க.. இப்ப தான் அவ கொஞ்சம் தேறி வரா……………”
“ஷ்… கீர்த்தி வரா” என்றதும் அமுதா வாயை மூடிக் கொண்டார்.
இளம் பச்சை நிறத்தில் அழகிய சல்வாரில் புன்னகையுடன் வெளி வந்தவள், “கிளம்பலாமா?” என்று வினவ,
சேகர்,“ஹ்ம்ம்.. கிளம்பலாம்” என்று அவளிடம் கூறிவிட்டு, “நாங்க போயிட்டு வரோம் மாமா.. பயப்படாதீங்க அத்தை.. உங்க பொண்ணை பத்திரமா கூட்டிட்டு வந்திருவேன்” என்று கூற,
கீர்தன்யா சாந்தி அருகே சென்று, “பயப்படாம இருங்க அத்தை.. உங்க பையனை எந்த காத்துக் கருப்பும் அண்டாம பத்திரமா கொண்டு வந்து சேர்த்திருவேன்” என்று கூறினாள்.
சேகர்,“அதான் நீ இருக்கியே!” என்று கூற,
“அதை தான் நானும் சொல்றேன்… நான் இருந்து உன்னை காப்பாத்துறேன்னு” என்று கூறி அவனுக்கு அழகு காட்டினாள்.
இருவரும் புன்னகையுடன் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இருக்கும் அவள் படித்த கல்லூரியை நோக்கி பயணித்தனர்.
—————————————————————————————————————————————
திருநெல்வேலி காவல்துறை துணை ஆணையர் அலுவலகம்:
தியாகேஷ்வர் அறையில் அவனும், தினேஷும், லாவண்யாவும் அமர்ந்திருந்தனர்.
தினேஷ், “சுபாஷினி ஸ்கூல் அண்ட் காலேஜ் மேட்ஸ் விசாரிச்சதில் தெரிந்த விஷயங்கள்..
அவள் யாரையும் விரும்பலை.. அடிக்கடி தலை வலி வரும்.. இறந்த ஒரு வாரத்திற்கு முன் டல்லா தான் இருந்திருக்கா.. தென் முக்கியமான விஷயம், அவள் இறந்ததிற்கு இரண்டு நாள் முன்னாடி அவள் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக அசன்குமார் என்ற ஸ்டுடென்ட் சஸ்பெண்டு ஆகியிருக்கிறான்.. அவன் ‘உன்னை சும்மா விட மாட்டேன்‘ னு மிரட்டிட்டு போயிருக்கான்.. அவன் XXX ஹோட்டல் சொந்தகாரர் பையன்.. த்ரீ டேஸ் தான் சஸ்பென்ஷன் என்றாலும் சுபாஷினி கேஸ் சூசைடுனு க்ளோஸ் ஆன பிறகு தான் காலேஜ்க்கு போக ஆரம்பித்து இருக்கிறான்” என்று முடித்தான்.
லாவண்யா, “அது மட்டும் இல்லை சார்.. நமக்கு கிடைத்த ப்ரெஸ்லடில் AK னு இருக்குது” என்றாள்.
அனைத்தையும் கேட்ட தியாகேஷ்வர் சிறு யோசனைக்கு பிறகு, “ஓகே.. அவனை காலேஜ்ல போய் விசாரிக்கலாம்.. நானும் லாவண்யாவும் காலேஜ் போறோம்.. தினேஷ் நீ டாக்டர் மூர்த்தி வீட்டுக்கு போய் அவர் பொண்ணை விசாரி”
“ஓகே சார்” என்று கூறி தினேஷ் கிளம்பியதும், தியாகேஷ்வரும் லாவண்யாவும் சுபாஷினி படித்த கல்லூரியை நோக்கி பயணித்தனர்.