Advertisement
சேகர் படுக்கையில் படுத்துக் கொண்டு, இப்பொழுது இருக்கும் கீர்தன்யாவையும் பழைய கீர்தன்யாவையும் நினைத்துப் பார்த்தான். அவன் மனதில் சிறு வயது சம்பவங்கள் சில படமாக ஓடியது.
சேகர் 7வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது(கீர்தன்யா 4வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்), அவனும் கீர்தன்யாவும் தங்கள் வானர கூட்டத்துடன் அவர்கள் தெருவில் இருந்த தனியார் ஒருவரின் சிறிய தோட்டத்திற்கு சென்றனர்.
வீட்டிற்கும் தோட்டத்து உரிமையாளருக்கும் தெரியாமல் தோட்டத்தில் ஆட்டம் போடுவதில் அவர்களுக்கு கொள்ளை பிரியம்..
துணி துவைக்க வசதியாக கட்டி வைத்திருக்கும் சிறிய தண்ணீர் தொட்டியில் கிணற்று நீரை இறைத்து, தொட்டியை நீச்சல் குளமாக மாற்றி அதில் ஆட்டம் போடுவது, நீரில் ஆட்டம் போட்டுவிட்டு, தோட்டத்திற்கு வரும் வழியில் தெரு கடையில் சுட்ட(திருடிய) அப்பளப்பூ, தேன்மிட்டாய் மற்றும் முறுக்கை நொறுக்குவது வழக்கம்.
அன்று, யார் கிணற்றில் இருந்து நீரை இறைப்பது என்று சேகருக்கும் கீர்தன்யாவிற்கும் சண்டை வந்தது.
[அங்கே நீர் இறைக்கும் முறை வித்யாசமாக இருக்கும்.. ஏற்றத்தின் மூலம் தான் நீரை இறைப்பார்கள்.
ஏற்றம் – கிணற்றின் வெளிச்சுவர் அருகே தூண் போன்ற இரு கற்கள் இருக்க, அதில் ஒரு உருளை கம்பு பொருத்தப் பட்டிருக்கும். உருளை கம்பின் மேல் ஒரு பெரிய கட்டை இணைக்கப் பட்டிருக்க, அந்த பெரிய கட்டையின் இறுதியில் ஒரு கனமான கல் கட்டியிருக்க, பெரிய கட்டையின் மறுநுனியில்(கிணற்றை நோக்கி) சங்கிலியின் மூலம் ஒரு கம்பு தொங்கவிடப் பட்டிருக்கும். இந்த கம்பின் நுனியில் வாளி பொருத்தப் பட்டிருக்கும்.
கிணற்றின் உள்ளே, ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் வரை ஒரு கனமான கல் இருக்கும். அந்த கல்லின் மேல் நின்று வாளி பொருத்தப்பட்ட கம்பை கிணற்றினுள்ளே அழுத்தியும், மேலே இழுத்து நீரை இறைப்பார்கள்.]
சண்டையின் நடுவில் கிணற்று சுவற்றின் மேல் இருந்த அப்பளப்பூ பொட்டலம் கிணற்றினுள்ளே விழுந்துவிட்டது.
இருவரும் ‘அச்சோ‘ என்று ஒன்றாக கூறி சண்டையை நிறுத்தினார்கள்.
ஆனால் அடுத்த நொடியே,
‘நீ தான் டா தள்ளி விட்ட‘,
‘இல்ல நீ தான்டி தள்ளி விட்ட‘ என்று மீண்டும் சண்டை தொடங்கியது.
கூட்டத்தில் ஒருத்தி, “நீங்க எசல்லறத(சண்டை) வீட்டுக்கு போய் வச்சுக்கோங்க.. இப்ப இந்த அப்பளப்பூவை என்ன பண்றது? யாராது பாத்தா நாம தொலைஞ்சோம்..“ என்றாள்.
இருவரின் சண்டை நின்றது.
சேகர் நீர்-இறைக்கும் வாளியைக் கொண்டு, மிதந்த அப்பளப்பூ பொட்டலத்தை எடுக்க பார்த்தான் ஆனால் அது வாளியினுள் சிக்காமல் விலகிக் கொண்டே போனது.
சேகர் கிணற்றை விட்டு வெளியே வந்து, “ச்ச்.. வரவே மாட்டிக்குது.. வேற என்ன பண்ணலாம்?”
ஒவ்வொருவரும் தீவிரமாக யோசிக்க,
கீர்தன்யா, “ஒரு யோசனை.. கல்–ல அந்த பக்கெட் மேல எறியலாம்.. ஓட்ட விழுந்து, தண்ணி போய் மெதக்காம முங்கிடும்“ என்றாள்.
கூட்டத்தில் ஒருத்தன் உற்சாகமாக, “ஹ்ம்ம்.. நல்ல யோசனை!“ என்று கூற, கீர்தன்யா பெருமையாக புன்னகைத்து கவுனில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.
சேகர், “பெரிய யோசனை!!!”
“பெருசோ சிறுசோ.. உனக்கு தோனலைல.. வாய மூடிட்டு சொன்னதைச் செய்”
“ஏதோ ஒரு தடவ சொல்லிட்டு பீத்திகாத”
“போடா”
நண்பர்கள் ஒன்றாக, “ஐயோ! உங்க சண்டையை வெலக்கிறதே பெரும் ரோதனையா இருக்கு.. முதல அப்பளபூவை கவனிப்போம்” என்று கூற,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறுக்கிக் கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து கல்லை தேடினர்.
ஒவ்வொருவராக கல்லை எறிந்தனர். இறுதியாக எறிந்த சேகரின் கல் மட்டும் தான் அப்பளப்பூ பொட்டலத்தின் மேல் பட்டது, ஆனால் கூர்மையான கல் வேகமாக பட்டதில் பொட்டலத்தில் சிறு ஓட்டை விழுவதற்கு பதில் பொட்டலம் கிழிந்து அப்பளப்பூ அனைத்தும் வெளியே வந்து மிதக்க தொடங்கியது.
சேகர் கீர்தன்யாவை முறைத்து, “நீயும் உன் யோசனையும்“ என்று கூற,
“நான் நல்ல யோசனை தான் சொன்னேன்.. நீ தான் மிளா மாதிரி எறிஞ்சு காரியத்தை கெடுத்துட்ட” என்றாள்.
சேகர் கோபத்துடன், “தப்பு தப்பா யோசனை தந்துட்டு என்னை சொல்றியா.. நீ தான்டி மிளா, குரங்கு எல்லாம்..”
“போடா பன்னிமாடு(பன்றி, மாடு – இரண்டையும் சேர்த்து கூறினாள்).. மொத்த மிருக ஜாதியும் நீ தான்..”
“நான் இல்லை நீ தான்.. உன் பேர்லயே இருக்கே.. போடி கீரிபிள்ளை..”
கீர்தன்யா பல்லைக் கடித்துக்கொண்டு, “உன்னை..” என்று ஒரு நொடி யோசித்து, “போடா பாம்பு”
“பாம்பா!”
“ஆமா நான் கீரிபிள்ளை–னா நீ பாம்பு தான்…”
இருவரும் சண்டைக் கோழிகளாக நிற்க, தோட்டத்தின் உரிமையாளர் தோட்டத்தை பார்வையிட வந்தார்.
நண்பர்கள், “ஏய்.. சும்மா இருங்க.. சொட்டை தல வருது..“ என்று கூற, இருவரும் அமைதியானார்கள்.
உரிமையாளர் தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு கிணறு பக்கம் வரவும், அனைவருக்கும் பயம் கிளம்பியது..
‘போச்சு.. போச்சு‘,
‘மாட்ட போறோம்‘,
‘இன்னைக்கு தொலைஞ்சோம்‘,
‘அம்மா வெளக்குமாத்தால மாத்த போறா‘
‘இன்னைக்கு நமக்கு புளியமாறு தான்‘,
‘சங்கு தான் நமக்கு‘
‘கடவுளே‘ என்று ஒவ்வொருவரும் முணுமுணுக்க..
உரிமையாளர் சற்று தொலைவில் இருந்து, “அங்கன என்ன குரங்கு சேட்டை பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.
ஒருத்தரை ஒருத்தர் பார்த்து திருதிருவென்று முழிக்க,
சேகர்,”குளிக்க வந்தோம்” என்று கூற, அதே நேரத்தில் கீர்தன்யா,“சும்ம தான்” என்றாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து, கண்ணால், ‘நான் தான் சொல்றேன்ல நீ ஏன் வாய் திறக்குற?’ என்று திட்டினர்.
உரிமையாளர் என்ன நினைத்தாரோ, “சரி.. சரி.. கெணத்துக்குள்ள பார்த்து இறங்குங்க.. விரசலா வீட்டுக்கு போங்க” என்று கூறி சென்றுவிட்டார்.
அனைவரும் பெருமூச்சொன்றை வெளியிட்டு, “தப்பிச்சோம்” என்றனர்.
சேகரும் கீர்தன்யாவும் மீண்டும் சண்டையை தொடங்கும் முன் நண்பர்கள் அவர்களை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.
அடுத்த இரண்டு நாட்கள் யாரும் அந்த தோட்டம் பக்கமே செல்லவில்லை. இரண்டு நாட்கள் கழித்து ஒருவனை மட்டும் அனுப்பி, எந்த பிரச்சனையும் இல்லை என்பதை அறிந்த பிறகு, ‘எப்படி காணாம போச்சு?’ , ‘யாரும் பார்க்கலையா?’ என்று பேசியபடியே தோட்டத்திற்கு சென்றனர், துள்ளலும் ஆட்டமும் தொடர்ந்தது.
[அப்பளப்பூவை கிணற்று மீன்கள் உண்டிருக்கும் என்று யாருக்கும் தோன்றவே இல்லை 🙂 ]
இதழில் புன்னகையுடன் சேகர் அடுத்த சம்பத்தை பற்றி நினைத்துப் பார்த்தான்..
ஒரு முறை பள்ளி கபடி போட்டியில் அவன் களத்தில் இறங்கி விளையாட தொடங்கியதும், பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த கீர்தன்யா சத்தமாக,
“ஆடு பாம்பே.. விளையாடு பாம்பே..
நல்ல விளையாடு பாம்பே..” என்று பாடி கலாட்டா செய்தாள்.
சேகர் 8வது(போன பதிவில் மாற்றி 10த் என்று போட்டுவிட்டேன்) வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அவனது பள்ளி அடையாள அட்டையில் அவனது பெயர் ‘SNEKAR’என்று அச்சாகிவிட, கீர்தன்யா ‘sneka’ என்று அவனை கிண்டல் செய்தாள், பிறகு ‘snake’ என்ற அடை மொழியை சேர்த்து, அவனை ‘snake sneka’ என்று அழைக்க ஆரம்பித்தாள்.
சேகர் 10வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நண்பர்களுடன் சேர்ந்து படிக்க போவதாக கூறி வீட்டிற்கு தெரியாமல் கிரிக்கட் மற்றும் கில்லி விளையாடியதையும், திரையரங்கம் சென்றதையும் கணேசனிடம் போட்டுக் கொடுத்து பெரம்பால் அடி வாங்க வைத்தாள். ஒரு முறை கணேசன் பலமாக அடித்துவிட கோபத்தில் சேகர் கீர்தன்யாவை அடித்துவிட்டான். அதன் விளைவு ஒரு வாரம் கழித்து அவனது விலங்கியல்(zoology) பதிவுருப்புத்தகம்(Record note) காணாமல் போனது.
வீட்டிலும், பள்ளியிலும் தேடி பார்த்து, நண்பர்களிடமும் கேட்டுவிட்டு வேறு வழியே இல்லாமல் ஆசிரியரிடம் வசைகள் பல வாங்கி, புதிதாக பதிவுருப்புத்தகம் ஒன்றை பெற்றுக்கொண்டு, இரண்டு நாட்கள் கண்விழித்து அனைத்து படங்களையும் மீண்டும் வரைந்து முடித்து ஆசிரியரிடம் கையொப்பம் வாங்கினான்.
கீர்தன்யா அவன் கையொப்பம் வாங்கியதை உறுதி செய்துவிட்டு அன்றிரவு புன்னகையுடன் பழைய பதிவுருப்புத்தகத்தை கொடுத்தாள்.
பழைய நினைவுகளில் இருந்து திரும்பியவன் கீர்தன்யாவை எப்படி மாற்றுவது என்று சிந்தித்து, ஒரு முடிவிற்கு வந்த பிறகு உறகினான்.
உறங்கும் முன் கீர்தன்யாவும் ஒரு முடிவெடுத்து இருந்தாள். தன்னால் மற்றவர்கள் மனநிலையும் கெடுகிறது என்பதை உணர்ந்ததும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள், குறைந்த பட்சம் இலஞ்சியில் இருக்கும் நாட்களாவது தன் மனதை சிதறவிடாமல், மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் இயல்பாக இருப்பதை போன்று நடித்தாவது மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
அடுத்த நாள் காலையில் உணவு மேசையில் சேகர் சண்முகத்திடம் கண் ஜாடை காட்ட, அவர், “சேகர் இன்னைக்கு ஸ்கூலுக்கு கீர்த்தியையும் கூட்டிட்டு போயேன்” என்றார்.
“ஏன் மாமா என் ஸ்கூல் பிள்ளைங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா?”
சாந்தி, “இனியாது அந்த பிள்ளைங்க நல்லா இருக்கட்டுமேனு தான் அண்ணா கீர்த்தியை கூட்டிட்டு போக சொல்றார்”
உணவில் கவனமாக இருந்த கீர்தன்யாவை பார்த்துக் கொண்டே சேகர், “ஏற்கனவே நல்ல பிள்ளைகளா இருக்குறவங்க எதுக்கு இனி நல்ல பிள்ளைகளா ஆகணும்?”
சாந்தி, “விளையாட்டு போதும்.. அவளை கூட்டிட்டு போடா.. நல்ல வரைய சொல்லி கொடுப்பா..”
சேகர் சிரிப்புடன், “ஐயோ அம்மா! நான் விளையாடலை.. இந்த கீரிபிள்ளையை கூட்டிட்டு போனா, குரங்கு சேட்டைகள் தான் பழகிக்குவாங்க.. சின்ன வயசுல இவளுக்கு வரைய சொல்லி கொடுத்ததே நான் தான்..”
‘அட பாவி‘ என்பது போல் சாந்தி மகனைப் பார்க்க, அவனோ அசராமல் புன்னகைத்தான்.
சேகர் கீர்தன்யா ஏதாவது சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்து காத்திருக்க, அவளோ இவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் இருந்தாள்.
கணேசன், “அவன் கெடக்குறான்.. நீ என் கடைக்கு வாடா” என்றார்.
சேகர் மனதினுள், ‘இந்த அப்பா காரியத்தையே கெடுத்துருவார் போல‘ என்று நினைத்துக் கொண்டிருக்க, சண்முகம் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார்.
சேகரும் சண்முகமும் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்க்க, கீர்தன்யா சிறு புன்னகையுடன், “என்ன மாமா.. அப்பாவும் இந்த குரங்கும் சேர்ந்து போட்ட ப்ளனை இப்படி சட்டுன்னு உடைச்சுடீங்களே!” என்று கூறி சேகரையும் தந்தையையும் பார்த்தாள்.
சண்முகம் சிறிது அசடு வழிய, சேகர், “அடிப்பாவி” என்று முணுமுணுத்தான்.
கணேசன், “ப்ளான்–ஆ?”
“என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போற ப்ளான்”
“அதை நேராவே சொல்ல வேண்டியதானே!”
“இந்த ஸ்னேக் ஸ்னேகா கூட ஸ்கூல்க்கு போக மாட்டேன்னு சென்னைல வச்சே சொல்லிட்டேனே!”
கீர்தன்யாவின் இந்த உற்சாக பேச்சில் அனைவரும் மகிழ்ந்தனர்.
சேகர், “நீ வரமாட்டேன் சொன்னதுக்கும் நாங்க பேசினதுக்கும் என்ன சம்பந்தம்? நீ வரேன்னு சொன்னா கூட நான் உன்னை கூட்டிட்டு போக மாட்டேன்”
“ஓ.. என்னை கூட்டிட்டு போற ஐடியா இல்லாம தான் அப்பா கிட்ட சிக்னல் காமிச்சியாக்கும்!”
“நான் ஒன்னும் சிக்னல் காமிக்கலை”
“அப்படியா! மாமா நான் உங்க கூட கடைக்கே வரேன்”
“சரி.. நீ இவ்ளோ கெஞ்சுறதால உன்னை என் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்”
“உன் கிட்ட யாரும் கெஞ்சவும் இல்லை.. உன் கூட ஸ்கூலுக்கு வரேன்னு சொல்லவும் இல்லை”
அமுதா, “பாவம் டா.. விட்டுரு”
“யாரு இந்த குரங்கா பாவம்?”
அமுதா, “சரி.. இப்போ என்ன தான் சொல்ற? ஸ்கூல் போறியா இல்லையா?”
“அவனை நேரடியா ‘என் கூட ஸ்கூலுக்கு வரியா?’ னு கேட்க சொல்லு போறேன்”
சேகர், “ஓகே.. என் கூட ஸ்கூலுக்கு வரியா?”
கீர்தன்யா தன் கையை கிள்ளிப் பார்த்து, “நிஜம் தானா?”
சேகர் சிறு புன்னகையுடன் கையை கழுவ எழுந்து சென்றான்.
நான்கு சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது சேகர், “என் கூட இருக்கும் போது நீ நீயாவே இரு” என்றான்.
கீர்தன்யா புரியாமல் பார்க்க,
சேகர், “நீ இயல்பா இல்லை.. அப்படி நடிக்குற”
கீர்தன்யா கண்களை விரித்து நோக்கவும், “என்ன முட்டை கண்ணை உருட்டுற!” என்றான்.
கீர்தன்யா கண்களை சுருக்கி முறைக்கவும்,
சேகர் சிறு புன்னகையுடன், “இது தான் உன் இயல்பான நிலை.. இப்படியே இரு”
கீர்தன்யா, ‘ஆமா வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன்‘ என்று முணுமுணுத்துவிட்டு, “நீ கூட தான் இயல்பா இல்லை”
“நானா!!!“
“ஆமா.. என்னை சிம்பதியோட பார்த்து ஆதரவா பேசுற.. இது உன் இயல்பு இல்லையே!”
“ஏய்! நான் இயல்பா தான் இருக்கேன்.. உன்னை சிம்பதியோடலாம் பார்க்கலை.. சின்ன வயசுல சண்டை போட்டுட்டே இருந்தோம்னா இப்பவும் அப்படியே இருக்கனுமா என்ன!
நடுவுல எத்தனையோ வருஷங்கள் ஓடியிருக்கு.. சில வருஷங்கள் நாம மீட் கூட பண்ணலை.. நாம மெச்சூர் ஆகும் போது நம் சிந்தனைகள் மாறும் தானே!”
“உன் ஸ்டுடென்ட்ஸ் ரொம்ப பாவம்.. சின்னதா ஒன்னு கேட்டதுக்கு ஒரு எஸ்ஸே எழுதுற..”
சேகர் புன்னகையுடன், “ஓகே சிம்பிள்–ஆ பதில் சொல்லணும்னா.. இப்ப உனக்கு என் கூட முன்ன மாதிரி சண்டை போட்டே இருக்கணும்னு தோணுதா?”
“பதில் சொல்றேன்னு சொல்லிட்டு கேள்வி கேட்குற”
“ஏதோ ஒன்னு.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”
கீர்தன்யா சிறிது யோசித்துவிட்டு, “இல்லை தான்”
“தட்ஸ் இட்”
“ஹ்ம்ம்.. இப்போ எதுக்கு என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போற?”
“வீட்டுல உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிட்டு, மொக்க டிவி சீரியல்ஸ் பார்க்குறதுக்கு பதில் ஏதோ யூஸ்புல்–ஆ செய்யட்டுமேனு தான்”
“என் புண்ணியத்துல இந்த 10 நாளாவது உன் ஸ்டுடென்ட்ஸ்-க்கு நல்ல டீச்சர் கிடைக்கட்டும்”
“10 நாளா.. யாரோ மூணு நாளில் கிளம்புறதா கேள்விப்பட்டேனே!”
“அப்படியா! யாரு அது?”
இருவரும் புன்னகைத்தனர்.
—————————————————————————————————————————————–
தியாகேஷ்வர், தினேஷ் மற்றும் லாவண்யா ஜெயப்ரகாஷ் வீட்டிற்கு விசாரணைக்காக ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.
ஓட்டுனர் அருகே அமர்ந்திருந்த தியாகேஷ்வர் ஏதோ தீவிரமான சிந்தனையில் இருக்க, பின்னால் லாவண்யா அருகே அமர்ந்திருந்த தினேஷ்,
“லா லா லா லா லா..
லலலாலா லா லா லலலாலா..
லா லா லா அறிந்தவளே
தெரிந்தவளே.. தள்ளி தள்ளி இருந்தவளே..
எள்ளி எள்ளி சிரித்தவளே..
துள்ளி துள்ளி நடந்தவளே
கள்ளி கள்ளி அவள் இவளே..
லா லா லா… “ என்ற பாடலை லாவண்யாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் பாடிவிட்டு அறியாதவன் போல், “நல்ல பாட்டுல லாலாவண்யா” என்றான்.
லாவண்யா அவனை பார்த்து முறைத்தாள்.
“நல்ல பாட்டெல்லாம் உனக்கு பிடிக்காதே”
“கொஞ்சம் நேரம் உன் திரு வாயை முடிட்டு வரியா?”
“முடியாதுனா என்ன செய்வ? ஜீப்–ல இருந்து குதிச்சுருவியா?”
லாவண்யா இயல்பான குரலில், “இல்ல உன்ன தள்ளி விட்டுருவேன்”
தினேஷ் ‘செஞ்சாலும் செய்வாளோ!‘ என்று யோசித்துக் கொண்டிருக்க,
லாவண்யா, “என்ன செய்வேனானு யோசிக்குறியா? சந்தேகமே வேண்டாம் கண்டிப்பா செய்வேன்” என்றாள்.
தினேஷ் மனதினுள், ‘எதுக்கும் கொஞ்ச நேரம் அமைதியாவே வா.. அது தான் உன் உயிருக்கு உத்தரவாதம்‘ என்று கூறி அமைதியாக இருந்தான்.
லாவண்யா மனதினுள் சிரித்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் ஜெயப்ரகாஷ் வீடு வந்தது.
தங்களை வரவேற்ற 60 வயது மதிக்கத்தக்க வீட்டு நிர்வாகியிடம் விசாரணை பற்றி தினேஷ் கூறினான்.
தியாகேஷ்வர் வீட்டு நிர்வாகியை அழைத்துக் கொண்டு சுபாஷினி அறையை பார்வையிட சென்றதும்,
வீட்டை நோட்டமிட்டுக் கொண்டிருந்த லாவண்யா அருகே சென்ற தினேஷ், “லா லா லாவண்யா.. சும்மாவே நின்னுட்டு இருந்தா எப்படி! விசாரணையை ஸ்டார்ட் பண்ற ஐடியா இல்லையா?”
“நீ இங்க என்குவரி பண்ணு.. நான் வீட்டை சுத்தி பார்த்துட்டு தோட்டக்காரனை என்குவரி பண்ணிட்டு வரேன்” என்று கூறி அவனது பதிலை எதிர்பாராமல் வெளியேறினாள்.
தினேஷ், “திமிர் பிடிச்சவ..” என்று முணுமுணுத்தான்.