Advertisement
வீரவநல்லூரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது தினேஷை அழைத்து விஜயன் ஜெயப்ரகாஷ் வீட்டில் இருப்பதை உறுதி செய்த தியாகேஷ்வர் விஜயனை கண்காணிக்க கூறினான்.
லாவண்யா,“எப்படி சார்? முத்தல்லையே கெஸ் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டாள்.
அவன் புன்னகைத்துவிட்டு அமைதியாக இருக்க,
அவள்,“இப்படி சிரிச்சு மழுப்பாதீங்க சார்.. தினேஷ் சொன்னது சரி தான்” என்றாள்.
“நீயே.. சாரி நீங்க ஒத்துக்கிற அளவுக்கு அவன் என்ன சொன்னான்?”
“ஒருமையிலேயே பேசுங்க சார்.. அவன் சொன்னான்.. நாம குற்றவாளியை சந்தேகப்பட ஆரம்பிக்கும் போது சார் கேஸை முடிச்சிருப்பார்”
அவன் மீண்டும் புன்னகைக்க, அவள் சிறு கடுப்புடன், “இதுக்கும் சிரிப்பா!!!” என்றாள்.
திருநெல்வேலி நெருங்கியதும் தினேஷை அழைத்தவன், “மிஸ்டர் விஜயனை விசாரணைனு நம்ம இடத்துக்கு அழைச்சுட்டு போ” என்றான்.
“அப்புறம் கல்யாணத்தைப் பற்றி என்ன முடிவெடுத்திருக்க?” என்ற திடீர் கேள்வியில் அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க,
அவன் மென்னகையுடன், “இன்னைக்கு இதை பற்றி கமிஷ்னர் சார் கிட்ட பேசுறதா இருக்கிறேன்” என்றான்.
“என்..ன சொல்லப் போறீங்க?”
“அவர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ”
அவளறியாமல் அவளை நோட்டமிட்டவன் தன்னுள் புன்னகைத்தான்.
திருநெல்வேலி சென்றதும் நேராக தங்கள் இடத்திற்கு சென்றவன் முதலில் சந்துரு கொலையில் சம்பந்தப்பட்டவனை மிரட்டிவிட்டு விஜயனைப் பார்க்க சென்றான்.
கை கால்கள் கட்டப்பட்டபடி விஜயன் இருக்கையில் அமர்ந்திருக்க, எதிரில் ஒரு இருக்கையில் அமர்ந்தபடி தியாகேஷ்வர் விசாரணையைத் தொடங்கினான்.
“இலஞ்சி, வீரவநல்லூர் போய் உனக்கு எதிரான ஆதாரங்களை சேகரிச்சுட்டோம்.. அதை பார்த்ததும் மிசஸ் JP அப்ரூவரா மாறி நீ தான் கொலைகளை செய்தனு சொல்லிட்டாங்க”
விஜயன் ஆவேசமாக, “அப்படியா சொன்னா அந்த சிறிக்கி! பத்துப்பாத்திரம் தேய்ச்சுட்டிருந்த நாய்.. அவளுக்காக என்னவெல்லாம் செய்தேன்! கடைசி, என்னை மாட்டிவிட்டு அவ(ள்) தப்பிக்க பார்க்குறாளா!!!” என்று கூறி கெட்ட வார்த்தைகளில் திட்டியவன், “அவ(ள்) சொன்னது பொய் சார்.. என்னை நம்புங்க.. நடந்த உண்மையை நான் சொல்றேன்..” என்றவன் உண்மையை சொல்லத் தொடங்கினான்.
“நா(ன்) பாட்டுக்கு ப்ரதாப் உழைப்புல உட்கார்ந்து சாப்டுட்டு இருந்தேன்.. என்னைக்கு இவளை சந்தித்தேனோ அன்னைக்கு என்னை சனி பிடிச்சுருச்சுனு இப்போ புரியுது.. ஆனா அப்போ அவ(ள்) பேச்சைக் கேட்டு சொத்தை பிரிச்சு, அதை காலி பண்ணிட்டு ஊரெல்லாம் கடன் வாங்கி திருப்ப முடியாம கஷ்டப்பட்டேன்..
பணத்தேவைக்காக நண்பனை பார்க்க அம்பைக்கு போன இடத்தில் ப்ரகாஷ் அண்ணாவை பார்த்தேன்.. அவர் நல்ல சம்பளத்தில் வேலை போட்டுத்தறதா சொல்லி திருந்தி வாழச் சொன்னார்.. ப்ரகாஷ் அண்ணா கிட்ட வேலையில் சேர்ந்த ஒரு வாரத்தில் என்னை பிரிஞ்சிருக்க முடியலைன்னு சொல்லிட்டு அவளும் வீரவநல்லூர் வந்துட்டா..
அண்ணி இறந்து கொஞ்ச நாட்களான நிலையில் எட்டு வயது சுபாஷினியைப் பார்த்துக்குற வேலையில் அவளை சேர்த்துவிட்டேன்..
என்ன பண்ணாளோ!!! ஒரே மாசத்தில் சுபா அவளை ‘அம்மா‘-னு கூப்பிடலாமா-னு கேட்க, அண்ணா சுபாவை அதட்டினார். நா(ன்) அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தா அவளோ என்னைப் பார்த்து வெற்றி சிரிப்பு சிரிச்சதும், தனியா அவகிட்ட கத்தினேன்..
அதுக்கு அவ(ள்) ‘இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கூலி வேலை செஞ்சு பொழைக்கிறது?’-னு சொன்னதும், நா(ன்) அதுக்காக என்னை விட்டுட்டு ரெண்டாந்தாரமா போவியா-னு கத்தியதும், அவ(ள்) ‘லூசு.. உன் அண்ணி மேல வச்சிருக்கிற பாசத்துக்கு, என்னை கல்யாணமே பண்ணாலும் நிச்சயம் தொடக்கூட மாட்டான்.. இரு நான் சொல்லி முடிச்சுக்கிறேன்.. அவனை கல்யாணம் பண்ணிட்டு கொஞ்ச நாள்ல அவனை ஏமாத்தி சொத்தை என் பேர்–ல எழுதி வாங்கிட்டு அவனையும் அவன் பொண்ணையும் துரத்திரலாம்‘-னு சொன்னா..
நான் முதல்ல ஒத்துக்கலை அப்புறம் அவ(ள்) பேச்சுல மயங்கி சரினு சொன்னேன்..
சுபாவோட ஏக்கமும், உறவுக்காரர்கள் அறிவுரையும் சேர்ந்து அண்ணா அவளை கல்யாணம் பண்ணார். அவ(ள்) சொன்னது போல ‘சுபாஷினிக்காக மட்டுமே உன்னை கல்யாணம் செய்றேன்.. உன் படுக்கையறை சுபாஷினி அறை தான்‘-னு சொல்லிட்டு தான் கல்யாணம் பண்ணார். ஆனா நாங்க நினைச்சது போல் மத்ததெதுவும் நடக்கலை..
நாங்க நெருங்கி பழகியதில் அவ(ள்) வயித்துல சுரேந்தர் உருவாகிட்டான்.. அண்ணி நியாபகத்தில் சில நேரம் அண்ணா தண்ணியடிப்பார், அந்த மாதிரி நிலையில் அவர் எல்லை மீரிட்டார்னு சொல்லி அவரை நம்ப வச்சா.. ஆனா அவர் கருவை கலைக்க சொன்னார்.. உடனே அவ(ள்) அழுது புலம்ப, சுபாவும் ‘பாப்பா வேணும்‘-னு சொன்னதும் மனசே இல்லாம அண்ணா ஒத்துக்கிட்டார். ஆனா அண்ணிக்கு துரோகம் பண்ணிட்டதா குற்ற உணர்வில் தவிச்சார்.
சுரேந்தர் பொறக்குறதுக்கு முன்னாடியே பிஸ்னஸ் பண்ணப்போறதா சொல்லி திருநெல்வேலி கிளம்பிப் வந்தவர் எப்பவாது தான் ஊருக்கு வருவார்.
சில வருஷங்கள் கழித்து சுபா மூலமா அண்ணா கிட்ட பேசி அவங்க மூணு பேரும் திருநெல்வேலி வந்தாங்க.. சுபா எப்போதுமே இவளை அம்மானு கூப்பிடுறதால் இங்க யாருக்குமே இவ(ள்) ரெண்டாவது மனைவினு தெரியாது……………….”
“மிஸ்டர் ப்ரதாப்க்கு கூடவா தெரியாது?”
“கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் ஆனா அவன் எப்போதுமே அடுத்தவங்களை பற்றி பேசமாட்டான்”
தியாகேஷ்வர் மேலே பேசுமாறு செய்கை செய்ய, அவன் தொடர்ந்தான்.
“இப்படியே இன்னும் சில வருஷங்கள் கழிந்தது..
ஒரு நாள் நா(ன்) அவ(ள்) கிட்ட, ‘என்னை ஏமாத்த நினைச்ச, சுரேந்தர் எனக்கு பொறந்தவன்-ங்கிற உண்மையை சொல்லிடுவேன்‘-னு மிரட்டினதை அண்ணா கேட்டுட்டார்..
சொத்துகளுக்கு சுபா மட்டும் தான் வாரிசுனு எல்லோருக்கும் சொல்ல போறதாவும் இனி நா(ன்), அவ(ள்) சுரேந்தர் அங்க இருக்கவே கூடாதுனும் சொல்லிட்டார். வழக்கம் போல் அழுது புலம்பி ஒரு வாரம் டைம் கேட்டா..
ஒரு நாள் அண்ணா வக்கீல் கிட்ட போன்-ல உயில் ரெடி பண்ண சொன்னதை இவ(ள்) கேட்டுட்டா.. அண்ணா வக்கீலை பார்க்க போறப்ப அக்சிடென்ட் செட் பண்ணி கொலைக்கு ஏற்பாடு செய்தது அவ(ள்) தான்..
அண்ணா இறந்த பிறகு சுபாவையும் கொல்லனும்-னு சொன்னப்ப நா(ன்) தயங்கினேன்.. ஆனா ஏதேதோ சொல்லி என்னை ஒத்துக்க வைச்சவ சுபா மரணமும் அக்சிடென்ட்டா இருந்தா சந்தேகம் வருமோ-னு வேற திட்டம் போட்டா.. கதவு வழியா இல்லாம சுபா ரூமுக்கு போய் வரதுக்கு ஜன்னல் வைக்க ஏற்பாடு பண்ணா.. அதை சுபா மூலமாவே ப்ரதாப் கிட்ட சொல்ல வச்சா..
தலை வலி காரணமா சில நாட்கள் சுபா காலேஜ் போகாம இருக்க, சில நாட்கள் இவளே ‘நீ சோர்ந்து போய் இருக்க இன்னைக்கு காலேஜ் லீவ் போட்டுரு‘-னு சொல்லி லீவ் போட வச்சு பால்-ல தூக்க மாத்திரை கலந்து கொடுத்து சுபாவை அதிக நேரம் தூங்க வச்சா.. இப்படியெல்லாம் செஞ்சு சுபா அதிக மன-அழுத்தத்தில் இருக்குறதா ஊரை நம்ப வச்சா..
ஒரு நாள் அவ(ள்) ‘அப்பன் போன இடத்துக்கே இவளையும் அனுப்பிட்டா.. இந்த சொத்தெல்லாம் நமக்கும் நம்ம பையன் சுரேந்தருக்கும் தான்‘-னு சொல்லிட்டிருந்தப்ப ரூம் வெளிய ஏதோ சத்தம் கேட்டு நாங்க வந்து பார்த்தப்ப சுபா போறதை பார்த்தோம்.
அடுத்த நாளே சுபாவோட தமிழ் கையெழுத்திருந்த அனைத்தையும் அப்புற படுத்தினோம்.. சுபா எழுதுன மாதிரி லெட்டர் எழுதி வச்சுட்டு அவளை கொன்னுட்டோம்..”
“சத்தம் வராம இருக்க பால்ல தூக்க மாத்திரை கலந்து குடுத்து, சுபாஷினி தூங்கியதும் ஜன்னல் வழியா உள்ள போய், தூக்குல தொங்க விட்டுருப்பீங்க”
விஜயன் தியாகேஷ்வரை ஆச்சரியாமாக பார்க்க, அவன் தினேஷிடம் ஏதோ செய்கை செய்தான். மறைவான இடத்திலிருந்த ஒளிப்படக்கருவியில் இருந்து குறுவட்டை(CD) தினேஷ் எடுத்தான்.
தியாகேஷ்வர் புன்னகையுடன், “என்ன பார்க்கிற! மிஸ்டர் ப்ரதாப் மேல் சின்னதா சந்தேகம் இருந்தாலும், அதைவிட கூடுதலா உன்னையும் மிசஸ் JPயையும் தான் சந்தேகப்பட்டேன்...
இலஞ்சி-ல எங்களுக்கு கிடைத்த தகவல், நீ பத்துப்பாத்திரம் தேய்க்குற ஒரு அநாதை பெண்ணை காதலிச்சு, ஊரை சுத்தி கடன் வாங்கி திடீர்னு காணாம போன சில நாட்களில் அந்த பெண்ணையும் காணவில்லை.. அப்புறம் வீரவநல்லூர்-ல செட்டில் ஆகிட்ட..
வீரவநல்லூர்-ல கிடைச்ச தகவல், நீ அறிமுகப்படுத்திய அநாதை பெண்ணை மிஸ்டர் JP ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டார் என்பது மட்டுமே..
கொலையாளி நீங்க தான்னு கண்டுபிடிச்சாலும் உங்களுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லை..
உன்னைப் பற்றி கேள்வி பட்டவரை, திட்டம் போட்டு கொலை செய்றளவு உனக்கு புத்தியும் தைரியமும் கிடையாது.. கல்யாணி நடிப்பை நேரில் பார்த்ததால் உன்னை பேச வைத்தேன்..” என்றான்.
அவசரப்பட்டு உண்மையை உளறியதை நினைத்து விஜயன் வருந்தினான்.
விஜயனையும் கல்யாணியையும் கைது செய்த பிறகு லாவண்யா, “எப்படி சார் இவங்களை டவுட் பண்ணீங்க?” என்று கேட்டாள்.
“வெரி சிம்ப்ளில்..
- முத்தல்ல இருந்தே கல்யாணிநேர் பார்வையைத் தவிர்த்தாங்க..
- சுபாஷினி கவிதையைக் காட்டிய போது அவங்க கண்ணுல அதிர்ச்சி தோன்றி மறைந்தது..
- ஒரு முறை நான் எதார்த்தமா ‘மிஸ்டர் விஜயன் உங்களுக்கு நெருக்கமானவர்‘-னு சொன்னப்ப அவங்க சட்டுன்னு சிறு அதிர்ச்சியும் பயமுமா என்னை பார்த்தாங்க..
- உயில் பற்றி பேசினதும் டென்ஷன் ஆனாங்க..
- சுபாஷினி ரூமில் இருக்கும் மெடிகல் ரிப்போர்ட் எப்படி சேஞ் ஆகியிருக்கும்னு ஒரு குழப்பம் இருந்தது..
- சுபாஷினி மற்றும் மிஸ்டர் JP மரணத்தை நினைத்து அவங்க அழுததில் பொய்மை இருந்தது போல் தோனுச்சு..
- கடைசியா மிஸ்டர் JP வீட்டுக்கு போனப்ப என்ட்ரி லிஸ்ட் வச்சு கார்பெண்டர் வொர்க் நடந்தது தெரிந்து, வீட்டு நிர்வாகியை விசாரிச்சப்ப ஜன்னலை பற்றி தெரிஞ்சுக்கிட்டேன்.. ஜன்னலை போய் பார்த்தேன்.. ஜன்னலோட கிரில்லை கழட்டிட்டு உள்ள போற மாதிரி இருந்தது..
- அப்புறம் அந்த அக்சிடென்ட், சுரேந்தரை ஸ்கூலுக்கு போய் கூட்டிட்டு வர விஷயம் வெளிய யாருக்கும் தெரியாத போது, அதுவும் நான் விசாரிச்சுட்டு கிளம்பின கொஞ்ச நேரத்தில் நடந்த அந்த விபத்தே பொய்யோனு சந்தேகம் வந்தது..
எல்லாத்தையும் சேர்த்து பார்த்தா உங்களுக்கே யார் குற்றவாளினு தெரியும்” என்று புன்னகைத்தான்.
“யூ ஆர் சான்ஸ்லெஸ் சார்” என்ற லாவண்யாவின் பாராட்டிற்கு புன்னகைத்தபடி தியாகேஷ்வர் எழுந்துக்கொள்ள, தினேஷும் லாவண்யாவும் எழுந்தனர்.
தியாகேஷ்வர், “தினேஷ் நீ வேணும்னா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு..”
“அம் ஆல்ரைட் சார்..”
“உன் இஷ்டம்..” என்றவன் லாவண்யாவை பார்த்து, “நீ உன் ஸ்டேஷன் கிளம்பலாம்” என்று கூறி இருவருக்கும் பொதுவாக, “நான் இலஞ்சிக்கு போறேன்.. ஏதும் முக்கியமான விஷயம்னா என் மொபைல் நம்பருக்கு காள் பண்ணுங்க” என்றான்.
லாவண்யா, “திரும்ப எதுக்கு சார் இலஞ்சிக்கு?”
அவன் சிறு புன்னகையுடன், “என் கல்யாணம் பூர்விக வீட்டில் வைத்து நடக்கனுமாம்.. அதனால் அந்த வீடு எந்த கண்டிஷனில் இருக்குதுனு அப்பா பார்த்துட்டு வர சொன்னார்.. நைட் ரிடர்ன் ஆகிருவேன்” என்றான்.
தினேஷ் அதிர்ச்சியுடன் லாவண்யாவைப் பார்க்க, அவளோ தியாகேஷ்வரை பார்த்தபடி சிலை போல் நின்று கொண்டிருந்தாள்.
“ஓகே கைஸ்.. நான் கிளம்புறேன்” என்று கூறி கிளம்பினான்.
கைபேசியின் சத்தத்தில் நிகழ் காலத்திற்கு திரும்பியவர்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் சத்தம் வந்த திசையைப் பார்த்தனர்.
தியாகேஷ்வரின் மேசை மேலிருந்த அவனது கைபேசியில் அழைப்பு வரவும், தினேஷ்,“மொபைலை மறந்துட்டாரே” என்றபடி எடுத்துப்பார்த்தவன், “கமிஷ்னர் சார் கூப்பிடுறார்.. சார் கிளம்பியிருக்க மாட்டார்.. நான் போய் குடுத்துட்டு வரேன்” என்று கூறியபடி அவசரமாக வெளியே செல்லவும், தியாகேஷ்வரின் மகிழுந்து கிளம்பவும் சரியாக இருந்தது.
அருகிலிருந்த கான்ஸ்டபிளை தனது இருசக்கர வண்டியை கிளப்பச் சொல்லி தியாகேஷ்வர் வண்டியைத் தொடர்ந்து வேகமாக போக சொன்னவன் இரண்டு நிமிடங்களில், “சார் வீட்டுக்கு தான் போறார்.. இந்த குறுக்கு சந்துல திரும்புங்க.. பிடிச்சுரலாம்” என்றான்.
வாகன நெரிசல் இல்லாத ஒரு சாலையில், திடீரென தியாகேஷ்வர் வண்டியின் வலதுபுறம் ஒரு மகிழுந்து அவனுடன் தொடர்ந்து வர, எதிரே ஒரு தண்ணி லாரி வேகமாக வந்துக் கொண்டிருந்தது. யாரோ தன்னைக் கொல்ல திட்டம் போட்டிருக்கின்றனர் என்பதை புரிந்துக் கொண்டவன் எப்படி தப்பிப்பது என்று யோசித்தான்.
அவனது இடதுபுறம் நடைப்பாதை இருக்க, அந்த பக்கம் ஒதுங்க முடியவில்லை, வலதுபுறம் வண்டியோ நெருக்கமாக வந்து கொண்டிருந்தது. வேகத்தை குறைத்து அந்த வண்டியின் பின் சென்றுவிடலாம் என்று யோசித்து அவன் வேகத்தை குறைக்க, அந்த வண்டியும் அதே அளவில் வேகத்தை குறைத்தது.
லாரி அவனை நெருங்கிக் கொண்டிருக்க, சட்டென்று யோசித்து இடதுபுற கதவை திறந்து அவன் வெளியே குதிக்கவும், அவனது வண்டி அந்த வண்டியை இடித்தத்தில் அந்த வண்டி தடுமாறி சாலையின் இடதுபுறமிருந்த மரத்தில் மோதி நிற்க, லாரி அவன் வண்டியை இடித்து நின்றது.
விபத்து நிகழ்ந்த அதே நொடியில் தினேஷின் வண்டி குறுக்கு சந்திலிருந்து பிரதான சாலையை வந்தடைந்தய, கான்ஸ்டபிளும் தினேஷும், “சார்” என்று கத்தினர்.
கான்ஸ்டபிள் வண்டியின் வேகத்தைக் குறைத்தபடி தியாகேஷ்வரை நெருங்க, அவன் அவசரமாக, “அம் ஆல்ரைட்.. லாரி டிரைவரை பிடிங்க” என்று கூறியபடி ஓட்டுனர் ஓடிய திசையைக் காட்டினான்.
கான்ஸ்டபிள் வண்டியின் வேகத்தை கூட்ட, தினேஷ், “சார் உங்க மொபைல்” என்று தூக்கி போட்டான். அதை சரியா தியாகேஷ்வர் பிடித்துக்கொள்ள, தினேஷின் வண்டி அவன் சொன்ன திசையில் சென்றது.
கைபேசியை சட்டை பையில் வைத்தவன் கஷ்டப்பட்டு தடுமாறியபடி இடது காலின் வலியை பொறுத்துக்கொண்டு எழ முயற்சிக்க, முடியாமல் விழுந்தான். சாலையில் வந்த மற்றவர்கள் வாகனங்களை நிறுத்தி இறங்கி வர, சிறிது கூட்டம் கூடியது.
சிலர் வேடிக்கை பார்க்க, ஒரு சிலர் தியாகேஷ்வரின் உடையை பார்த்து அவனுக்கு உதவி செய்ய முன்வந்தனர்.
அவன், “அந்த காரில் இருப்பவருக்கு என்னாச்சுனு பாருங்க” என்று கூற, இருவர் அந்த வண்டியை நோக்கி சென்றனர்.
ஒருவர் தனது வண்டியில் வைத்திருந்த முதலுதவி பெட்டியிலிருந்த மருந்தை கொண்டு தியாகேஷ்வரின் ரத்த காயங்களை துடைக்க, ஒருவர் அம்புலன்ஸை அழைத்துக் கொண்டிருக்க, அவன் லாவண்யாவை அழைத்து விஷயத்தைச் சுருக்கமாக கூறினான்.
அந்த வண்டியருகே சென்றவர்கள் காரோட்டியை கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டிருக்க, இன்னொருவர் உதவிக்கு வந்தார். மூவருமாக சேர்ந்து காரோட்டியைத் தூக்கி வந்து தியாகேஷ்வர் அருகே படுக்க வைத்தனர்.
ஒருவர், “மூச்சிருக்கு சார்.. மயக்கமா இருக்கார்னு நினைக்குறேன்” என்றார்.
போக்குவரத்து காவலர்கள் இருவர் வந்து மக்கள் கூட்டத்தை கலைத்து விபத்தான வண்டிகளை அப்புறபடுத்தும் பணியில் இறங்கினர்.
தினேஷும் கான்ஸ்டபிளும் லாரி ஓட்டுனருடன் வரவும், லாவண்யா வரவும் சரியாக இருந்தது.
தினேஷைப் பார்த்து கண்ஜாடையுடன், “இவனை ஸ்டேஷன் கூட்டிட்டு போங்க” என்றவன் லாவண்யாவிடம், “கமிஷ்னர் சாருக்கு இன்பார்ம் பண்ணுங்க” என்றான்.
தினேஷ், “ஓகே சார்” என்றும்,
லாவண்யா, “சொல்லிட்டேன் சார்” என்றும் கூற, அம்புலன்ஸ் வந்தது.
அந்த வண்டியின் காரோட்டியை அம்புலன்ஸில் ஏற்றியதும், அதில் ஏறிய தியாகேஷ்வர் உதவியவர்களைப் பார்த்து நன்றி உரைத்துவிட்டு லாவண்யாவிடம், “நீங்களும் ஹாஸ்பிடல் வாங்க” என்றான்.
லாவண்யா ஏறியதும் அம்புலன்ஸ் கிளம்பயது. முணுமுணுப்பு சத்தத்துடன் கூட்டம் முற்றிலும் கலைந்தது.
தினேஷ், “என் வண்டியை சார் ஆபீஸ்-ல நிறுத்திருங்க.. நான் இவனைப் பார்த்துக்கிறேன்” என்ற தினேஷ், கான்ஸ்டபிள் கிளம்பிச் சென்றதும் ஒரு தானியைப் பிடித்து ஓட்டுனருடன் சென்றான்.
ஒரு மணி நேரம் கழித்து XXX மருத்துவமனைக்குச் சென்ற தினேஷ் தியாகேஷ்வரிடம், “எப்படி இருக்கீங்க சார்?”
“பெருசா ஒன்றுமில்லை.. அங்கங்க சில காயங்கள், ரைட் ஹன்ட் அண்ட் லெப்ட் லெக் ஃப்ரக்சர்”
“இது ஒன்றுமில்லையா சார்?”
“இதை விடு.. அவன் வாயை திறந்தானா?”
“ரெண்டு மிரட்டு மிரட்டினத்தில் உண்மையை சொல்லிட்டான் சார்.. ஆனா எதுக்காக செய்தாங்கனு தெரியலை”
“யாரு செஞ்சது?”
“கோயம்புத்தூர் மில் ஓனர் கைலாசபாண்டியன்”
“ஓ!”
தினேஷ் சந்தேகத்துடன், “சார் உங்களுக்கு காரணம் தெரியுமா?” என்று வினவ, அவன் மெலிதாக புன்னகைத்தான்.
“எதுக்கு சார்?”
“நேத்து சொன்னேனே.. அந்த சின்ன பையனை கொன்னது கைலாசபாண்டியனும் அவரது இரண்டு மகன்களும் தான்”
“நீங்க ரி-இன்வெஸ்டிகேட் பண்றது உங்களுக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும்.. அவங்களுக்கு எப்படி தெரிஞ்…………………” என்று சொல்லிக் கொண்டிருந்தவன் சந்தேகத்துடன், “செல்வராஜ் யாருக்கோ பேசினான்னு சொன்னீங்களே சார்!” என்றான்.
தியாகேஷ்வர் தலையசைப்புடன், “அவன் மூலமா தான் போயிருக்கனும்.. நீ செல்வராஜை கூட்டிட்டு போயிட்டிருக்குறதா மெசேஜ் அனுப்புனதுக்கு நாலு நிமிஷம் முன்னாடியிருந்து அவன் நம்பர் ‘நாட் ரிச்சபில்-னு வருது.. கான்ஸ்டபிள்ஸ் நைட் புல்லா இருந்து பார்த்துட்டாங்க, அவன் செல்வராஜைப் பார்க்க வரலை.. ஸோ நீ செல்வராஜுடன் கிளம்பின நேரத்தில் அவன் அங்கே தான் இருந்திருக்கணும்.. சிம்மை தூர போட்டுட்டு உன்னை பாலோ பண்ணியிருக்கணும், இல்லை அவன் இடத்துக்கே போயிருக்கனும்”
“என்னை யாரும் பாலோ பண்ணலை சார்.. அது எனக்கு உறுதியா தெரியும்”
அப்பொழுது அங்கே வந்த லாவண்யா, “சார் அவன் கண்முளிச்சுட்டான்.. யாருனு அவனுக்கு தெரியலை.. காசுக்காக சொல்றதை செய்றவன்” என்றாள்.
தினேஷ் ,“யாரு-னு தெரிஞ்சுருச்சு”
“யாரு?”
தியாகேஷ்வர், “இது பழைய கேஸ்.. நான் பார்த்துக்கிறேன்”
“என் மேல் நம்பிக்கை இல்லையா சார்?”
“அப்படி இல்லை.. அதை பற்றிய முழு விவரம் என்னைத் தவிர வேற யாருக்கும் தெரியாது”
அவள் அவனையே பார்க்கவும், “ஆல்ரைட் சொல்றேன்…….” என்று அவன் கூறிக்கொண்டிருந்த போது அவனது கைபேசி சிணுங்கியது.