Advertisement
அடுத்த நாள் தினேஷ் மற்றும் லாவண்யாவும் ஜெயப்ரகாஷின் பங்குதாரர் கௌரிநாதனை சந்திக்க சென்றிருக்க, தியாகேஷ்வர் ஜெயப்ரகாஷின் வீட்டில் இருந்தான்.
சுபாஷினி மறைவிற்கு முன், இரண்டு மாதங்கள் யாரெல்லாம் ஜெயப்ரகாஷ் வீட்டிற்கு வந்தனர் என்ற விவரங்களை ஆராய்ந்தவன் அதைப் பற்றி வீட்டு நிர்வாகியிடம் பேசினான். விவரங்களை கொண்ட புத்தகத்தை பெற்றுக்கொண்டு, சுபாஷினி அறையை ஒரு முறை பார்த்துவிட்டு, ஜெயப்ரகாஷ் மனைவி கல்யாணியை சந்தித்தான்.
சோர்வுடன் வந்தமர்ந்த கல்யாணி அமைதியாக, “என்ன சார்?” என்று கேட்டார்.
“சுபாஷினி தினமும் தூக்க மாத்திரை எடுத்தாங்களா?”
“இல்லையே!” என்றவர் குழப்பத்துடன், “ஏன் கேட்கிறீங்க?” என்று கேட்டார்.
தியாகேஷ்வர் சுபாஷியின் மருத்துவ சான்றிதழை காட்டி,“இதில் அப்படி தான் போட்டிருக்குது.. உங்க கணவர் இறந்த பிறகு சுபாஷினிக்கு மன அழுத்தம் அதிகமானதால் தினமும் இரவு ஒரு தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டதாக போட்டிருக்குது“
“என்ன!!!” என்று அதிர்ச்சியுடன் வினவியவர், “அவளுக்கு மன அழுத்தம் இருந்தது உண்மை தான் ஆனா சில நாட்கள் மட்டும் தான் தூக்க மாத்திரை சாப்பிட்டா..” என்றார்.
அவன் புருவ சுளிப்புடன் பார்க்கவும்,
அவர், “அவ(ள்) படுற கஷ்டத்தை ஒரு நாள் ப்ரதாப் அத்தான் கிட்ட சொன்னப்ப அவர் தான் ரொம்ப கஷ்டப்படுறானா ஒரு தூக்க மாத்திரை குடுனு சொல்லி மாத்திரை பெயர் சொன்னார்“ என்றார்.
அவரது பதிலை யோசித்தபடி, “எதுக்காக சுபாஷினி அறையில் சுவரை இடித்து ஜன்னல் வச்சீங்க?” என்று கேட்டான்.
“ஏதோ வாஸ்த்து படி வைக்கணும்-னு ப்ரதாப் அத்தான் தான் ஏற்பாடு செய்தார்”
“உங்க ஒத்துழைப்பிற்கு நன்றி” என்றபடி அவன் எழ,
அவர்,“டாக்டர் ஏன் அப்படி எழுதினார் சார்?” என்று கேட்டார்.
“கேட்டு சொல்றேன்” என்றபடி விடை பெற்றான்.
————————————————————————————————————————————
சரியான உணவின்றி பழைய நினைவுகளுடன் போராடியபடி உறக்கமின்றி தவித்த கீர்தன்யாவிற்கு காலையில் ஜுரம் வந்தது. சேகர் அவளை மருத்துவரிடம் அழைத்துச்சென்று வந்தான்.
கீர்தன்யா சந்துரு நினைவுகளில் பழையபடி மாறிவிடுவாளோ என்று அனைவரும் பயத்துடன் இருக்க, அவளோ மருந்தின் வேகத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
————————————————————————————————————————————
தினேஷை கைபேசியில் அழைத்த தியாகேஷ்வர், “மிஸ்டர் கௌரிநாதனை பார்த்துடீங்களா?” என்று கேட்டான்.
“இல்லை சார்.. அவர் வெளியே போயிருக்கார்.. வெயிட் பண்ணிட்டு இடிருக்கிறோம்”
“ஓ! அட்வோகேட் கார்த்திகேயன் கிட்ட பேசினேன்.. இன்னைக்கு காலையில் மிஸ்டர் ப்ரதாப் வந்துட்டாராம்.. இப்போ அவரைப் பார்க்க போயிட்டு இடிருக்கிறேன்”
“மிசஸ் JP என்ன சொன்னாங்க சார்?”
“மொத்தமா டிஸ்கஸ் பண்ணிக்கலாம்”
“ஓகே சார்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
வெளியே கிளம்பிக் கொண்டிருந்த ப்ரதாப் தியாகேஷ்வரை பார்த்ததும் சிறு புன்னகையுடன், “வாங்க சார்” என்றார்.
“வெளியே கிளம்பிட்டு இருக்கிறீங்க போல.. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”
“ப்ரகாஷ் அண்ணா வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தேன்.. நா(ன்) 10 நாளா ஊர்ல இல்லை.. இன்னைக்கு காலைல தான் வந்தேன்.. அட்வோகேட் கார்த்திகேயன் சொல்லித் தான் விஷயம் தெரியும்.. சுபாஷினி மரணம் கொலைனு சொல்றீங்களா சார்?”
“இப்போ தானே இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்குது”
“சுபாஷினி மரணம் கொலைனா அண்ணா மரணமும் கொலையா இருக்குமோ?”
தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், “நான் உங்களைக் கேள்வி கேட்க வந்தா, நீங்க என்னைக் கேட்கிறீங்க”
“சாரி சார்.. என்ன தெரிஞ்சுக்கணும்?”
“உங்களுக்கும் மிஸ்டர் JPக்கும் ரிலேன்ஷன்ஷிப் எப்படி?”
“அவர் என்னுடைய பெரியப்பா மகன்”
“அதை கேட்கலை.. மிஸ்டர் JP வீட்டுல உங்களை அவர் இறந்த வீட்டில் தான் முதல் முறையா பார்த்ததா சொல்றாங்க?”
“நாங்க சின்ன பசங்களா இருந்தப்பவே ரெண்டு குடும்பத்துக்கும் சொத்து தகராறு வந்து, பேச்சு வார்த்தை நின்னு போச்சு.. ஏதாவது விழா-ல பார்த்தா நானும் அண்ணாவும் ரெண்டு வார்த்தை பேசிக்குவோம்.. அப்புறம் அதுவும் நின்னு போச்சு..
சில வருஷங்கள் கழித்து கௌரிநாதன் வீட்டு விழாவில் பார்த்து பேசினோம்.. அப்புறம் திடீர்-னு ஒரு நாள் அட்வோகேட் கார்த்திகேயன் போன் பண்ணி அண்ணாக்கு அக்சிடென்ட் ஆகிருச்சுனும், அவர் என்னைப் பார்க்க விரும்புறதாவும் சொல்லி XXX ஹாஸ்பிடலுக்கு வரச் சொன்னார்.
அண்ணா மரணபடுக்கையில் இருந்தபடி உயில் பத்தி சொன்னார்.. நான் மறுத்தேன், ஆனா அவர் கையெடுத்து கும்பிடவும் ஒத்துகிட்டேன்”
“வேற எதுவும் சொன்னாரா?”
“சுரேந்தர்-னு ஏதோ ஆரம்பிச்சார் பட் அதுக்குள்ளே இறந்துட்டார்”
“மிஸ்டர் கௌரிநாதனை எப்படி தெரியும்?”
“என்னுடைய கல்லூரி நண்பர்”
“அவருக்கு மிஸ்டர் JP உங்க அண்ணானு தெரியுமா?”
“அண்ணா இறந்த பிறகு தெரியும்”
“நண்பர்னு சொன்னீங்க?”
“நெருங்கிய நண்பர் இல்லை”
“நீங்க இப்படி விலகியிருக்க, உங்க தம்பி நெருங்கி பழகுறார்?”
ப்ரதாப் தலையசைப்புடன், “10 வருஷத்துக்கு முன்னாடி விஜயன் சண்டை போட்டு சொத்தை பிரிச்சிட்டு தனியா போயிட்டான். ஊதாரித்தனமா செலவு பண்ணி பணத்தைக் கரைச்சுட்டு ஊரை சுத்தி கடன் வாங்கிட்டு திரிஞ்சவன், திடீர்னு காணாம போயிட்டான்.. அப்புறம் வீரவநல்லூர் பக்கம் போனவன் ப்ரகாஷ் அண்ணா கூட சேர்ந்துட்டானு கேள்விப்பட்டேன்.. அப்புறம் அண்ணா இறந்த வீட்டுல தான் அவனைப் பார்த்தேன்”
“சுபாஷினிக்கு தூக்க மாத்திரை குடுக்க சொன்னீங்களா?”
“ஆமா.. ரொம்ப கஷ்டபட்டா எப்பவாது குடுக்க சொன்னேன்.. என் வைஃப் சாப்பிடுற மைல்டு டோஸ் தான் சொன்னேன்”
“எதுக்காக சுபாஷினி ரூம்-ல சுவரை இடித்து ஜன்னல் வச்சீங்க? அதுவும் வீட்டின் வெளிப்புறமா இல்லாம உள்புறம் நோக்கி இருக்குது.. வெண்டிலேஷன் பர்பஸ் கூட இல்லை”
ப்ரதாப் ஏதோ கூற வர, அவரது கைபேசி சிணுங்கியது.
“எக்ஸ்கியுஸ் மீ” என்றபடி அழைப்பை எடுத்து பேசிவிட்டு வந்தவர், “அது என்னோட ஏற்பாடு இல்லை.. சுபாஷினி தான் விருப்பபட்டு கேட்டா, அத்தோடு அண்ணி கிட்ட என்னைப் பேச சொன்னா, அவ(ள்) சொன்னதா இல்லாம வேற காரணம் சொல்லச் சொன்னா”
“இதை எப்படி நம்புறது?”
கைகளை விரித்து,“உங்க இஷ்டம்” என்றார்.
“எனிவே தேங்க்ஸ் ஃபார் யுவர் கோ-ஆப்ரேஷன்” என்று கூறியபடி விடை பெற்றான்.
அடுத்த 20 நிமிடங்கள் கழித்து, தியாகேஷ்வர் அலுவலக அறை:
தினேஷ், “சந்தீப் மாமனார் தான் சார்.. அவருக்கு லாபத்தில் 20% மிஸ்டர் JP கொடுத்துட்டு இருந்திருக்கார்.. சொந்த பிஸ்னஸ்ல லாஸ் வரவும், 40% கேட்டு தகராறு பண்ணியிருக்கார்.. JP இறந்த பிறகு மிஸ்டர் ப்ரதாப் அவருக்கு 30% தரதா சொல்லி இருக்கார்”
தியாகேஷ்வர் அவனது விசாரணைகளை பற்றி கூறிக் கொண்டிருந்த போது அவனது கைபேசி சிணுங்கியது. அதை எடுத்து பேசியவன் அடுத்து மின்வெளிக் குற்றபிரிவியலை சேர்ந்த திலீப்பிடம் பேசிவிட்டு வைத்தான்.
பின், “மிசஸ் JP பேசினாங்க.. சுரேந்தர் கீழ விழுந்து கால்-ல அடி பட்டிருக்குதுனு ஸ்கூலில் இருந்து போன் வந்ததும், மிசஸ் JPயும் மிஸ்டர் விஜயனும் கிளம்பி போயிருக்காங்க.. அவனை கூட்டிட்டு வர வழில சின்ன அக்சிடென்ட்.. ஒரு லாரி இடிக்க பார்த்திருக்க, டிரைவர் சாமர்த்தியமா வண்டியை ஓட்டியதில் சின்ன காயத்துடன் தப்பிச்சு இருக்காங்க.. டிரைவர் நம்பர வாங்கி திலீப் கிட்ட குடுத்திருக்கிறேன்” என்றான்.
லாவண்யா,“அக்சிடென்ட் எப்போ நடந்துது சார்?” என்றும்,
தினேஷ்,“யாரா சார் இருக்கும்?” என்றும் வினவினர்.
தியாகேஷ்வர் யோசனையுடன், “அக்சிடென்ட் 10.30க்கு நடந்திருக்குது.. அதே நேரத்தில் மிஸ்டர் ப்ரதாப்க்கு போன் வந்தது” என்றான்.
லாவண்யா,“அதே நேரத்தில் மிஸ்டர் கௌரிநாதனுக்கும் போன் வந்தது சார்” என்றாள்.
மூவரும் யோசனையில் இருக்க, தியாகேஷ்வரை திலீப் அழைத்தார். திலீப்பிடம் பேசி முடித்த தியாகேஷ்வர், “9.30யில் இருந்து இப்பவரை டிரைவர் நம்பருக்கு எந்த இன்கம்மிங் அவுட்கோயிங் இல்லை” என்றான்.
லாவண்யா,“யாரா சார் இருக்கும்? மிஸ்டர் ப்ரதாப்-ஆ இல்லை அவரும் மிஸ்டர் கௌரிநாதனும் கூட்டா?” என்று யோசனையுடன் கேட்டாள்.
சிறு யோசனைக்கு பின், “லெட்ஸ் கோ டு இலஞ்சி” என்ற தியாகேஷ்வர் மற்றவர்கள் முகத்திலிருந்த கேள்விக்குறியை பார்த்து,
“மிஸ்டர் ப்ரதாப் அண்ட் விஜயன் பற்றி தெரிஞ்சுக்க, அவங்க சொந்த ஊருக்கு தான் போகணும்.. தினேஷ் நீ JP வீட்டுக்கு போய் விசாரி.. நானும் லாவண்யாவும் இலஞ்சி போறோம்” என்றான்.
தியாகேஷ்வரும் லாவண்யாவும் மகிழுந்தில் பகல் 12.15க்கு இலஞ்சி சென்றடைந்தனர். கணேசனின் மரக்கடையில், தியாகேஷ்வர் தனது அடையாள அட்டையை காண்பித்து, ப்ரதாப் மற்றும் விஜயன் பற்றி கேட்டான்.
கணேசன் ப்ரதாப் கூறியதையே கூறி கடைசியாக, “மேலும் விவரம் தெரியனும்னா ஊர் வம்பு பேசுற ராமையாவை கேளுங்க” என்றார்.
தியாகேஷ்வர் நன்றி கூறி கிளம்பவும்,
அவர், “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குது சார்” என்று யோசனையுடன் கூற,
அவன் சிறு புன்னகையுடன், “எனக்கும் சொந்த ஊர் இலஞ்சி தான் சார்.. ஸ்கூலிங்க்ஸ் இங்க தான் பண்ணேன்” என்றான்.
“அப்படியா! உங்க அப்பா யாரு?”
“சேதுபதி”
“அட.. நம்ம மிலிட்டரி சேது பையனா நீ.. சாரி நீங்க”
“பரவா இல்லை அங்கிள்”“என் பையன் சபரிஷ் கிளாஸ்-மெட் தானே! வீட்டுக்கு கூட நிறைய முறை வந்திருக்கியேபா”
“ஞாபகம் வச்சிருக்கீங்களே அங்கிள்” என்று புன்னகையுடன் கூற,
அவர், “இல்லாட்டி வியாபாரம் பண்ண முடியாதே” என்று பெருமையாக கூறி புன்னகைத்தார்.
அவனும் புன்னகைத்துவிட்டு, “சரி அங்கிள் நான் கிளம்புறேன்” என்று கூறிய போது, சேகரும் சண்முகமும் அங்கே வந்தனர்.
“கண்டிப்பா வீட்டுக்கு வாப்பா”
“இன்னொரு முறை வரேன் அங்கிள்.. இப்போ அபிசியல்-ஆ வந்திருக்கிறேன்”
சேகரையும் சண்முகத்தையும் பார்த்த கணேசன், “என்ன அப்படி பார்க்குறீங்க, நம்ம சபரி கிளாஸ்மெட், மிலிட்டரி சேது பையன் தியாகேஷ்வர்.. இப்போ திருநெல்வேலி ACP” என்றார்.
சண்முகம் தியாகேஷ்வரை சிறு அதிர்ச்சியுடன் பார்க்க, அதை மனதினுள் குறித்துக்கொண்ட சேகர் புன்னகையுடன், “எப்படி இருக்கீங்க அண்ணா? நான் சபரி தம்பி சேகர்” என்றான்.
சட்டென்று சுதாரித்த தியாகேஷ்வர் புன்னகையுடன் கைகுலுக்கி, “எப்படி இருக்க மிஸ்டர் அவுட்-ஸ்டான்டிங் பெர்ஸ்னாளிடி?” என்று கேட்டான்.
சிறு ஆச்சரியத்துடன், “இன்னும் மறக்கலையா அண்ணா!” என்ற சேகர், “வீட்டுக்கு வாங்கணா” என்று அழைத்தான்.
“இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்” என்று புன்னகையுடன் கூறியபடி அவன் கிளம்ப,
கணேசன்,“சேகர், ராமையா கிட்ட கூட்டிட்டு போ” என்றார்.
தியாகேஷ்வர்,“நான் பார்த்துக்கிறேன்” என்று கூற, சேகர் அவசரமாக கிளம்பினான்.
தியாகேஷ்வர் லாவண்யா மற்றும் சேகர் கிளம்பிய பிறகும் சண்முகம் அமைதியாக இருக்க, கணேசன், “என்னாச்சு சண்முகா? கீர்த்தியை நினைச்சு கவலைப் படாத” என்றார்.
அவர், “இவர் தான் கீர்த்தியை பெண் கேட்டார்” என்று அமைதியாக கூற,
முதலில் சிறிது அதிர்ச்சியடைந்த கணேசன் பிறகு, “நம்ம சேது வீட்டு சம்பந்தத்தையா வேண்டாம்னு சொன்ன?” என்றார்.
“எனக்கு சேதுனு தெரியலை.. நான் காலேஜ் படிச்சது, வேலை பார்த்தது எல்லாமே வெளியூர் தானே.. அதிகம் பழக்கமில்லை.. இருந்தாலும் போலீஸ் சம்பந்தம் வேண்டாம்னு தான் சொல்லியிருப்பேன்”
“சரி விடு.. கீர்த்தி இப்போ எப்படி இருக்கா?”
“ஹ்ம்ம்.. காச்சல் கொஞ்சம் குறைந்து இருக்குது.. ஊருக்கு கிளம்புறேன்னு சொன்னவளை அடக்கி வச்சுட்டு வந்தேன்”
“எல்லாம் சரியாகிடும்” என்று கணேசன் கூற, அவர் விரக்தியுடன் சிறிது புன்னகைத்தார்.
சேகர்,“அண்ணா உங்க கூட கொஞ்சம் தனியா பெர்சனல்-ஆ பேசணும்” என்றான்.
தியாகேஷ்வர் புருவம் உயர்த்த, லாவண்யா,“நான் கார்-ல வெயிட் பண்றேன் சார்” என்று கூறி விலகிச் சென்றாள்.
சேகர், “ப்ளீஸ் அண்ணா நான் கேட்கிற கேள்விக்கு உண்மையைச் சொல்லுங்க” என்று ஆரம்பிக்க, தியாகேஷ்வர் யோசனையுடன் பார்த்தான்.
“நீங்க தான் கீர்த்தியை பெண் கேட்டீங்களா? நீங்களும் கீர்த்தியும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றீங்க தானே? கீர்த்தி எங்க கிட்ட எதையோ மறைக்குறா, அது என்னனு கண்டிப்பா உங்களுக்கு தெரியும்.. ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா”
சேகரின் கேள்விகளில் சிறு அதிர்ச்சியுடன் தியாகேஷ்வர் அவனை பார்க்க,
அவன், “சந்துரு இறப்பிற்கு பின் மனசளவில் உடைந்தவ இப்போ தான் கொஞ்சம் தேறினா, ஆனா நேத்து உங்களை பார்த்ததில் இருந்து திரும்ப அமைதியா இருக்கிறா” என்றான்.
கண்களை மூடித் திறந்தவன், “ஹ்ம்ம்.. நான் அவளை என் உயிருக்கு மேலா விரும்புறேன்.. அவளும் என்னை விரும்புறானு எனக்கு நிச்சயமா தெரியும், ஆனா ஏனோ அதை இதுவரை அவ என்கிட்ட ஒத்துகிட்டது இல்லை.. சந்துரு இறப்புக்கு நான் தான் காரணம்னு நினைச்சு என்னை அதிகமா வெறுக்கிறா..” என்றான்.
“சந்துரு மரணத்திற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?”
மணியை பார்த்த தியாகேஷ்வர் சுருக்கமாக கூற,
சேகர் கோபத்துடன்,“அந்த ஆளை அரெஸ்ட் பண்ண வேண்டியதானே அண்ணா?” என்றான்.
“இந்த விஷயம் என்னக்கே இப்போ தான் தெரியும்.. கமிஷனர் சார் கிட்ட பேசி இருக்கிறேன்.. கீர்தன்யா அப்பா ஒரு கம்ப்ளைன்ட் குடுத்தா நல்லதுனு சொன்னார்.. இப்போ பார்த்துட்டு இருக்கிற கேஸை முடிச்சுட்டு அவரை பார்த்து பேசணும்னு நினைத்தேன்..”
“அவங்க இருக்கிற இடம் தெரியுமா?”
தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், “என் தயாவுக்கு என்னால் எந்த ஆபத்தும், கஷ்டமும் வர கூடாதுனு நான் விலகி இருக்கிறேனே தவிர, நித்தமும் என் சிந்தனையில் கலந்திருப்பவளைப் பற்றி அறியாதவன் இல்லை”
“இப்போ மாமா கிட்ட பேச……..”
“முதல்ல வந்த வேலையை முடிக்கணும்.. ராமையா கிட்ட கூட்டிட்டு போ..” என்று பேச்சை முடித்தான்.
அடுத்து மூவரும் ராமையாவை தேடிச் சென்றனர். ராமையாவை அறிமுகம் செய்துவைத்துவிட்டு கிளம்பிய சேகர் நேராக கடைக்கு சென்று தியாகேஷ்வரிடம் பேசியதை தந்தையிடமும் சண்முகத்திடமும் விளக்கிக் கூறினான்.
ராமையா தியாகேஷ்வரிடம் அலட்டிக் கொள்ளாமல் கணேசன் கூறியதை கூறிவிட்டு, “ப்ரதாப் பொறுப்பான பிள்ளை.. அதிகமா ஆசைப்படாம கடுமையா உழைத்து முன்னேறியவன்.. விஜயன் உதாரி, சுயபுத்தியும் கிடையாது.. பத்துப் பாத்திரம் தேய்த்த அநாதை பொண்ணு ஒருத்தியை டாவடிச்சுட்டு திரிஞ்சவன் திடீர்னு காணாம போய்ட்டான்.. அவன் போன கொஞ்ச நாள்ல அந்த பொண்ணையும் காணலை.. அப்புறம் ஒரு தடவ வீரவநல்லூர்ல அவனை பார்த்தப்ப ஏதோ ‘சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க போறேன்‘னு சொன்னான்”
“அந்த பொண்ணு பெயர் தெரியுமா?”
“அதெல்லாம் ஞாபகம் இல்லைங்க.. ஆனா அழகா இருப்பா.. கொஞ்சம் பணத்தாசை பிடிச்சவ.. ரெண்டும் ஜாடிக்கேத்த மூடிங்க தான்”
தியாகேஷ்வரும் லாவண்யாவும் நன்றி கூறி கிளம்பினர். வண்டியில் செல்லும் போது லாவண்யா, “இப்போ என்ன சார் நினைக்கிறீங்க?” என்று கேட்டாள்.
தியாகேஷ்வர் புன்னகைக்கவும்,
அவள்,“கண்டுபிடிச்சுடீங்களா சார்?” என்று கேட்டாள்.
“ஒரு யூகம் இருக்குது.. அதை உறுதிபடுத்த இப்போ வீரவநல்லூர் போறோம்” என்று கூற அவள் மேலும் குழம்பினாள்.