Advertisement

“இப்போ என்னடான்ற..?”

“பேசி வைச்சபடி உங்க பொண்ணை எனக்கு கொடுங்க, நான் அவளையும், என்னை பெத்தவங்களையும் கூட்டிட்டு எங்கேயாவது போயிடுறேன்..”

“அப்போ உனக்கு நான் வேணாமா..?”

“நீ முதல்ல உனக்கு நான் வேணுமா, வேணாமான்னு முடிவுக்கு வா..”

“வேணும்ன்னு தாண்டா இந்த வயசில பொண்டாட்டி, பிள்ளையை வுட்டுட்டு உன்னோட இருக்கேன்..”

“ஆஹ்.. இவ்வளவு நடந்தும் நான் உன்கிட்ட பொண்ணு கேட்கணும்ன்னு எதிர்பார்த்துட்டு பேச்சை பாரு..”

“ஏன் எதிர்பார்த்தா என்னடா தப்பு, தனிப்பட்ட முறையில நான், நீ வேற. என் பொண்ணுக்கு அப்பாவா என்னோட பொறுப்பு, கடமை வேற. நீ வந்து பொண்ணு கேட்டு அவளை கௌரவமா, மரியாதையோட கட்டிட்டு போ, யாரு வேணாம் சொல்றா..?”

“கேட்டாச்சு.. என் மாமா பேச வருவார்..”

“மாமா வந்தா. நீ வா, குடும்பத்தோட வா.. அப்போ தான் பொண்ணு கொடுப்பேன்..”

“செக் வைக்கிறாராம்..? ரொம்ப ஓவரா பண்ண நாளைக்கே உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டிடுவேன்..”

“கட்டிக்கோ.. ஆனா நாங்க அனுப்பாம என் பொண்ணு உன்னோட வாழ வர மாட்டா..”

“எல்லாரையும் உன் கைக்குள்ள வைச்சுக்கிட்டு ஆட்டிவைக்கிற இல்லை. என்னை, பொம்மியைன்னு..”

“எப்படி வேணா வைச்சுக்கோ.. குடும்பத்தோட வந்தா தான் பொண்ணு.. என் பொண்ணை நான் அப்படி இப்படி எல்லாம் கட்டி கொடுக்க மாட்டேன்..”

“சொந்த ரத்தம்.. உன் பொண்ணு இல்லை. யாரோ வேலய்யன் மகனா இருந்த ஈஸியா ஊரை விட்டு போடான்னு துரத்திடலாம், சொந்த பொண்ணுக்கு துணுக்கு கூட மரியாதை, கௌரவம் குறைஞ்சிட கூடாது இல்லை.. இதுக்காகவே நான் வர மாட்டேன், முன்னமே நான் பூ வைச்சுட்டேன், டிரெக்ட்டா நாள் தான் குறிப்பேன்.. என் அப்பா, அம்மா, மாமா தான் வருவாங்க.. பேசி எல்லா ஏற்பாடு பண்ணுங்க..” என்றவன்  நிற்காமல்  ரூம் சென்றுவிட்டான்.

தேவேந்திரன் பெருமூச்சுடன் போன் எடுத்து மனைவிக்கு அழைத்தார். “அப்பா பேசினங்களாங்க..?” அந்த பக்கம் பானுமதி கேட்க,

“பேசினார்.. பொண்ணு கேட்டார்.. நான் யோசிச்சு சொல்றேன் சொல்லியிருக்கேன்..” என்றார்.

“ஏங்க.. என்னாச்சு..? தம்பி ஏதும் பேசிட்டானா..?” பானுமதி கேட்க,

“அவன் என்ன பேச போறான், இது தானே முறை..?” என்றார் அவர்.

“அதுவும் சரி தாங்க.. இடையில கேப் விட்டு போச்சு, திரும்ப குடும்பமா வந்து முறையா பேசி நாள் குறிக்கட்டும், வீட்ல உங்க அண்ணன்களும் கொஞ்சம் சமாதானம் ஆவாங்க..”

“ம்ம்..” என்றவர் மேலும் சில விஷயங்களை பேசி வைத்துவிட்டார்.

இதே நேரம் தீனதயாளன் கட்சி ஆபிஸ் முன் ஜனகனின் இரு மாமன்களும் நின்றிருந்தனர். “எனக்கு என்னமோ நாம பண்றது தப்போன்னு தோணுது சகலை.. பேசாம கிளம்பிடலாமா..?” என்று மூன்றாமவன் மூர்த்தி கேட்டான்.

“இருங்க ண்ணா.. அவ்வளவு பெரிய ஆள் நம்மளை கூப்பிட்டிருக்காங்க, அப்படி என்னதான் சொல்றாங்கன்னு பார்க்கலாம்..” என்றான் நான்காமவன் கணேசன்.

“என் பொண்டாட்டிக்கு மட்டும் இது தெரிஞ்சது நான் காலி, ஏற்கனவே தம்பிகிட்ட இருந்து சொத்து கூட வாங்கிட்டோம்ன்னு பொரிஞ்சுட்டே இருக்கா, இதுல நான் இவரை பார்க்க வந்தேன் மட்டும் தெரிஞ்சாலே பிள்ளைகளை கூட்டிட்டு அம்மா வீடு கிளம்பிறுவா..?” என்றான் மூர்த்தி.

“தெரிஞ்சா தானேண்ணா.. பார்த்துக்கலாம் விடுங்க..” என்ற கணேசன், உள்ளே கூப்பிடவும் மூர்த்தி கையை பிடித்திழுத்து சென்றான்.

ஆபிஸ் அறைக்குள் தீனதயாளனே இருக்க, இருவர் பார்வையும் மற்றவரை தொட்டு சென்றது. “உட்காருங்க..” என்றவர், “என்ன சாப்பிடுறீங்க..?” என்று கேட்டு அவரே காபி சொன்னார்.

உடனே வர, மூர்த்திக்கு அந்த காபி கசந்தது. கணேசனுக்கு அப்படி இல்லை. “என்ன சொல்றார் உங்க கலெக்டர் மச்சான்..?” என்று  அவர் கேட்க,

“ஒன்னும் சொல்லலை சார்..” என்றான் மூர்த்தி.

“ம்ம்.. அப்போ தோப்புக்கு வர சொல்லி என்ன பேசினார்..”

“அது.. அது.. காப்பு எப்படி இருக்குன்னு விசாரிச்சார்..”

“நீங்க சொல்லுங்க கணேசன் அப்படியா..?”

“எங்க மாமா விழுந்துட்டார் சார், அதை விசாரிச்சார், நீங்க கூப்பிட்ட விஷயம்..” கணேசன் கேட்க,

“உங்களுக்கு கொடுத்த சொத்துல வில்லங்கம் இருக்குன்றது உங்களுக்கு தெரியுமா..?” தீனதயாளன் கேட்க,

“அப்படி ஏதும் இல்லையே சார், நாங்க முதல்லே EC போட்டு பார்த்தோமே..” என்றான் கணேசன்.

“அப்படியா..? இருக்கட்டும்.. அப்போ இது என்ன..?” என்று ஒரு டாகுமெண்ட்டை எடுத்து போட்டார்.

இருவரும் அதை படித்து முகம் பார்த்து கொள்ள, “உங்களுக்கு சொத்து கொடுத்தேன்ற பேர்ல ஏமாத்த பார்க்கிறாங்க, எனக்கு இப்போ ரீசன்ட்டா தான் இந்த விஷயம் தெரிஞ்சது, பாவம் கஷ்டப்படுற பசங்க, சொல்லாம விட மனசில்லை..” என்றார்.

எதிரில் இருந்தவர்கள் இவன் இவ்வளவு நல்லவன் இல்லையே என்று பார்க்க, “இப்போ விஷயத்துக்கு வருவோம்.. உங்களுக்கு இந்த சொத்தை விட பல மடங்கு சொத்து நான் தரேன், அதுக்கு பதிலா நான் சொல்றதை நீங்க செய்யணும்..? என்றவர், என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல, மூர்த்திக்கு வேர்த்துவிட்டது.

கணேசனோ “உங்ககிட்டே இதை செய்ய நிறைய ஆள் இருப்பாங்களே சார்..?” என்று கேட்டான்.

“நீங்க செஞ்சா உங்களுக்கு பலன்  அதிகம். சொத்து, பணத்தோடு உங்க இரண்டு பேருக்கும் என் ப்ரண்ட் *** கம்பெனில மேனேஜர் வேலை காத்திருக்கு.. அங்க சம்பளமே எவ்வளவுன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்..”  என்றவர் இருவரையும் கூர்மையாக பார்த்திருந்தார். மூர்த்தியிடம் பயமே தெரிய, கணேசன் யோசித்தான்.

“உங்க மச்சான் முன்ன மாதிரி இல்லை, நீங்க அவரை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு போயிட்டார், உங்க மூத்த சகலைங்க பணத்துல, செல்வாக்குல மேலேறிட்டு இருக்காங்க. நீங்க இரண்டு பேர் மட்டும் தான் இன்னும் கஷ்டப்பட்டுட்டு இருக்கிறது. சொத்துன்னு பார்த்தா உங்க மாமனார் வீட்ல கொடுத்த சொத்துக்கு தான் மதிப்பு அதிகம், அதை தவிர வேறெதுவும் இல்லை. அதையும் இந்த டாகுமெண்ட் வைச்சு பிடுங்கிட்டா முடிஞ்சது. கலெக்ட்ர் கிட்ட சண்டை போட்டுட்டு இருக்க முடியாது. கையை கடிக்கிற மாச சம்பளத்தை வைச்சுக்கிட்டு நாயாய் அலைய வேண்டியது தான், யோசிங்க உங்களுக்கே புரியும் நான் சொல்றது..?”

“நீங்க சொல்றதை செஞ்சு மாட்டிக்கிட்டா..” கணேசன் கேட்க,

“நான் எதுக்கு இருக்கேன்.. பார்த்துகிறேன், என்னை நம்பினவங்களை நான் எப்போவும் கை விடுறதில்லை..” தீனதயாளன் சொன்னார்.

‘மாட்டினத்துக்கு அப்பறம் இவர் காப்பாத்தி என்ன பிரயோஜனம்..? பொண்டாட்டி பிள்ளைங்க இருக்க மாட்டாங்களே..’ மூர்த்தி மெல்ல கணேசன் கையை இடித்தான்.

“சரிங்க சார்.. நாங்க யோசிச்சுட்டு சொல்றோம்..” கணேசன் சொல்லி இருவரும் வெளியே வர,

“என்னப்பா இது.. இவனுங்களை எல்லாம் உட்கார வைச்சு பேசிட்டிருக்கீங்க..? நம்மகிட்ட ஆளா இல்லை..” தர்ஷன் உள்ளறையில் இருந்து வந்தான்.

“ஆள் இருந்தாலும் அவ்வளவு ஈஸியா அவனை நெருங்க முடியாது, பையன் ரொம்ப உஷாரா இருக்கான். அதோட சொந்த குடும்பத்துக்கிட்ட காயம் வாங்கினா காலத்துக்கும் ஆறாது.  அந்த ஜனகனை  ஆறு வருஷத்துக்கு முன்னாடி அவன் குடும்பத்தை வைச்சே ஊரை விட்டு அனுப்பினது மாதிரி. இந்த முறையும் அவனுக்கு அதுவே தான்..” தீனதயாளன் வெஞ்சினத்துடன் சொல்ல,

“என்னமோ போங்கப்பா.. இந்த வேலைக்கு போய் இவனுங்களுக்கு சொத்து, பணம், வேலைன்னு. செய்டான்னா செய்ய வேணாமா..?” தர்ஷன் கேட்டான்.

“ஹாஹா யார் கொடுக்க போறா தர்ஷா..? நாம சொன்ன வேலையை முடிச்ச உடனே இவனுங்களையும் சிக்க வைச்சுட வேண்டியது தான்..” தீனதயாளன் சிரித்தார்.

ஜனகன் இரவு உணவு முடித்து ஆபிஸ் அறையில் இருக்க, பொம்மியின் போன் வந்தது. முகத்தில் தானே ஒரு புன்னகை. நெற்றி முத்தத்தோடு விடைபெற்று வந்திருந்தவன் ஆவலோடு போனை எடுத்தான். “இதுக்கு தான் என்னை தோப்புக்கு வர சொன்னீங்களா மாமா..?” அவள் கேட்க,

ஜனகனுக்கு அவ்வளவு ஆச்சரியம். உடன் உவகையும். “உன் அப்பா கூட கண்டுபிடிக்கலை. நீ எப்படிடி கண்டுபிடிச்ச..?” என்று ஓய்வாக அமர்ந்து கேட்டான்.

“உண்மை தானா..? ஏன் மாமா..”

“ஏன்னா..? நான் வந்து இவ்வளவு நாள் ஆச்சு ஒருத்தருக்காவது நம்ம கல்யாண பேச்சை எடுக்க தோணுச்சாடி..? அதான் நானே தோண வைச்சுட்டேன்..”

“என்னை பார்க்கிற ஆசையில கூப்பிடலை. ம்ஹ்ம்..”

“கூடவே வச்சுக்கிற ஆசையில தான் இந்த வேலை..? பாரு இப்போ மொத்த பேரும் தானே நாள் குறிக்க போயிட்டாங்க..”

“இதுக்கு நீங்க வீட்ல நேராவே பேசியிருக்கலாம் மாமா..”

“நான் ஏண்டி பேசணும்..? பேச மாட்டேன், என் சம்மதம் என்னைக்கு இவங்களுக்கு தேவைப்பட்டுச்சு..? இதுக்கு மட்டும் நான் வந்து நிக்கணுமா..? முடியாது, இவங்களே செய்யட்டும்..”

“மாமா.. திரும்ப திரும்ப இதுவேவா..?”  பெண் ஆயாசத்துடன் கேட்டாள்.

“நான் சும்மா தான் இருக்கேன், நீங்க தான் கிளறி விடுறீங்க..” அவன் கோபம்கொண்டான்.

“சரி.. விடுங்க மாமா..”

“விட்டுட்டேன்.. நானும் வந்த நாள்ல இருந்து கேட்க நினைச்சேன், அமுதா ஏன் இன்னும் இங்க இருக்கா..? கல்யாணம் ஆயிடுச்சின்னு கேள்விப்பட்டேன்..”

“அவங்க வீட்டுக்காரர் வெளிநாடு போயிருக்காங்க மாமா, அதான்.. அவங்க குழந்தையை நீங்க பார்த்தது இல்லையே, செம கியூட். நம்ம வீட்டுக்கு வருவாங்க, ஒரே ஓட்டம் தான் நிக்கவே மாட்டான் மாமா, என்னை விட அதிதிக்கு தான் அவன் பயங்கர பேவரைட்..”

“ஏய் போதும் நிறுத்துடி.. நீங்க ஏன் அந்தக்காவை கேட்கிறீங்கன்னு பொறாமையில பொசுங்கவன்னு பார்த்தா..”

“உண்மையிலே அந்த அக்கா பாவம், நீங்க அவங்களுக்கு அப்படி பண்ணியிருக்க கூடாது மாமா..”

“ரைட்டு.. உன்கிட்ட இதை எல்லாம் எதிர்பார்த்தது என் தப்பு தான்..”

“மாமா..”

“ஏய் அந்த புள்ள ஆரம்பிக்கும் போதே கட்டுப்பாடு வைக்குது..? எப்படி சரிபட்டு வரும் சொல்லு..”

“இந்த சம்மந்தம் நின்னுட கூடாதுங்கிற பயத்துல பண்ணியிருக்கலாம் மாமா..”

“இப்போ எதுக்கு நீ முடிஞ்ச கல்யாணத்துக்கு பீப்பீ  ஊதிட்டு இருக்க..? நடக்க வேண்டிய நம்ம கல்யாணத்தை பாருடின்னா..”

“அதான் என் மாமா இருக்கார் இல்லை, எல்லாம் பார்த்துப்பார்..”

“பார்த்துப்பேன் தான்.. ஆனா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் இது செல்லாது.. நீ தான் எல்லாம் பார்த்துக்கணும்..”

“ஐய்ய ச்சீ மாமா..”

“ஏய் எதுக்கடி இந்த ச்சீ.. கல்யாணம் முடியவும் நம்ம குடும்பத்தை பார்த்துக்க சொன்னதுக்கா..? இரு.. அடிப்பாவி.. எப்போ பாரு உனக்கு இதே நினைப்பு தானா..? நேர்ல வரேன் இரு..” என்றவன் எழுந்து அறைக்கு சென்றான்.

பொம்மி அங்கு வெட்கத்தில் முகம் சிவந்திருந்தவள், “நேர்ல வந்து கொட்டவா..? போங்க மாமா..” என்றாள்.

“இன்னைக்கு கொட்டவாடி செஞ்சேன்..” மாமனிடம் ரகசிய குரல் வந்து விட,

“வேறென்ன செஞ்சிங்க, ஆஹ்ன்.. என் நெத்திய அளந்துட்டு இருந்தீங்களா அதுவா..” என்று குறும்பாக கேட்டாள் பொம்மி.

“வேறென்ன அளந்திருக்கணும்ங்கிற.. ம்ஹ்ம்.. உன் கண்ணா, மூக்கா, உதடா, கழுத்தா, அதுக்கு கீழே..”

“மாமா..”

“கொஞ்ச நாள் தான் இந்த மாமா எல்லாம், அப்பறம் அளக்காம விட மாட்டேன்..”

“மாமா நீங்க தான் இப்போ இப்படி பேசிட்டிருக்கீங்க..?”

“பேசறதே தப்பு.. பிள்ளை கையில இருந்திருக்க வேண்டிய வயசில, அளவெடுக்க போறேன். ரொம்ப லேட்டுடி நாம.. சீக்கிரம் எல்லாத்தையும் சமன் பண்ணி உன் அப்பாவை என் பிள்ளைங்க பின்னாடி அலைய விட்டு பழி வாங்கணும்..”

“அவருக்கு அது ரொம்ப சந்தோஷமா தான் இருக்கும்..”

“ஆமா இல்லை.. அப்புறம் வேற யோசிச்சுகிறேன், இப்போ நீ சொல்லு. என்ன அடிக்கடி புடவையில தரிசனம் தர..?”

“ஸ்கூல் போகும் போது மட்டும் தான்  புடவை மாமா..”

“ம்ம்.. என்னடி இத்தனை வருஷத்துல இப்படி வளர்ந்துட்ட..”

“நீங்க கூட தான் பெருசாகிட்டீங்க மாமா..”

“ஹாஹா அதான் பார்த்த அன்னைக்கே கேட்ட இல்லை, அப்போவே நீ டர்ட்டியா தான் யோசிச்சிருக்க..”

“நான் சாதாரணமா தான் கேட்டேன்.. நீங்க தான் அப்படி யோசிச்சிருப்பீங்க..”

“தப்பில்லைடி..” என்றவன், ஹஸ்கி குரலில் “உன் கழுத்து மச்சமும் வளர்ந்திருக்காடி..?” என்று கேட்டான்.

அவன் குரலிலே பெண்ணுக்கு சூடாகிவிட, “மாமா..” என்றாள் சிணுங்கலாக.

“அடிக்கடி நான் அதை கடிக்கிற மாதிரி, முத்தம் கொடுக்கிற மாதிரி கனவு வரும்டி..” என்றான். பொம்மி அவன் பேச்சில் திணறி தவிக்க, அவன் மேலும் பேசி அவளை, அந்த இரவை சிவப்பாக்கிவிட்டு தான் வைத்தான்.

Advertisement