Advertisement
விழா நிறைவாய் முடிந்திருக்க மகேஸ்வரி தயாராய் நின்றிருந்தார். ஆத்திரேயன் முகம் இன்னமும் தெளியவே இல்லை. திருவாரூர் தேர் போல மெல்ல அசைந்து வந்த மெல்லினாவை நோக்கி வேகமாய் வந்தான் அவன்,
“என்னைக் கூப்பிட்டா வரமாட்டேனா, நடக்க முடியாம நீ ஏன் நடந்து வர்றே??”
“உங்க முகத்தை பார்க்கவே முடியலை. ப்ளீஸ் சிரிங்களேன்”
“முடியலை பேபி”
“நீ இங்கவே இருக்கலாம்ல”
“அம்மாவை யோசிச்சு பாருங்க”
“நீ என்னையும் யோசிச்சு பார்க்கலாம்ல” என்று சொன்னவன் கண்கள் கலங்கியிருந்ததுவோ.
வேறு புறம் திரும்பி தன்னை சமாளித்துக் கொள்ள முயன்றவனின் தாடைப் பற்றி தன் புறம் திருப்பினாள்.
“ஐ லவ் யூ”
“நம்ம குழந்தை பிறந்ததுமே இங்க வந்திடறேன் போதுமா”
“எப்போ குழந்தை பிறக்கும்??”
“இப்போவே” என்று அவள் விளையாட்டாய் சொன்னாள்.
“என்ன பேபி சொல்றே??”
“ரொம்ப தான் அவசரம் உங்களுக்கு” என்றவளின் அடிவயிற்றில் சுரீர் என்ற வலி எழ முகம் மாறியது அவளுக்கு.
“மெல்லினா என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கே. ப்ளீஸ் நீ பீல் பண்ணாதே, நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீ எப்போ வேணாலும் வா” என்றான் ஆத்திரேயன் சமாதானமாய்.
வயிற்றில் எழுந்த வலி உடனே அடங்கியிருக்க அவள் முகமும் சாதாரணமானது “குட் பாய்” என்றவள் அவன் நெற்றில் இதழ் பதித்து அவனிடம் விடைப்பெற்றாள்.
அவன் கரம் பற்றி அவனுடன் வாயிலுக்கு நடந்துவர மீண்டுமொரு வலி இம்முறை வலி பொறுக்க முடியாது அவள் அம்மாவென்றிட அனைவருக்குமே பதட்டம் தொற்றிக்கொண்டது.
தாமதிக்காது அவளை மருத்துவமனை அழைத்துச் சென்றிட சில மணி நேரம் வலியால் அவள் துடிக்க அனைவரையும் ஒரு வழி செய்துவிட்டு அவர்களின் செல்ல மகள் பூமியில் தன் பாதம் பதித்திருந்தாள்.
ஐந்து வருடங்கள் தன்னைப் போல் உருண்டோடி இருந்தன…
அன்று ஆத்திரேயனை காண, அவனுடைய அன்னையும் தந்தையும் வீட்டிற்கு வந்திருந்தனர். உடன் ஆதவன், பார்கவியின் மகன் ஆகாஷும் வந்திருந்தான். தமிழ் பிறந்து ஓராண்டு நிறைவுக்கு பிறகு ஆகாஷ் பிறந்திருந்தான். தமிழுக்கு அவனென்றால் உயிர். “ஹேய் குட்டிப்பையா வந்துட்டியா??” என்றாள் அவள் சந்தோசமாய்.
‘எங்களையெல்லாம் இவளுக்கு கண்ணுக்கு தெரியாதோ’ என்று எண்ணியவர் “ஏன் தமிழு பாட்டி தாத்தாவும் வந்திருக்கோம். வாங்கன்னு சொல்றதில்லையா” என்றார் அவளிடமே
மெல்லினா இன்னமும் அலுவல் பணி முடிந்து வந்திருக்கவில்லை. ஆத்திரையன் மெல்லினாவின் மகள் ‘தமிழ்‘ அவர்களுடைய வீட்டின் வாயிலில் விளையாடிக் கொண்டிருந்தாள். தமிழைப் பார்த்துக் கொள்ளவென்று நம்பிக்கையான வயது முதிர்ந்த பெண்மணியைத் தீர ஆராய்ந்து மெல்லினா, பணியில் வீட்டோடு அமர்த்தியிருந்தாள்.
மகேஸ்வரியை தங்களுடன் வந்து இருக்குமாறு அவள் எவ்வளவோ அழைத்தும் அவர் மறுத்துவிட்டிருந்தார். அன்று தன் மாமியாரிடம் சொன்னது போல இன்று வரையிலும் கூட அவள் மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கவில்லை. ஆத்திரேயனும் தமிழும் மட்டும் அவ்வப்போது அங்கு சென்று வருவர்.
தமிழை பார்த்துக் கொள்ளும் அந்த வயோதிக பெண்மணி அவளுக்கு பால் கொண்டு வர, அதை ஆத்திரேயனின் தாய் வாங்கித் தமிழுக்கு ஊட்ட முனைய, அக்குழந்தையோ, “பாட்டி… நான் என்ன சின்னக் குழந்தையா நானே குடிச்சுக்குவேன்” என சொல்ல அவருக்குச் சட்டென்று முகம் வாடி போனது.
பாலை குடித்துவிட்டு வெளியே தன் தம்பியையும் உடன் அழைத்துச் சென்று அவள் விளையாடிக் கொண்டிருக்க, தமிழுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு பையன் வயதில் சற்றே மூத்தவன் தமிழை வேண்டுமென்றே கீழே தள்ளி விட, தாத்தா பாட்டி இருவரும் பதறியடித்துக்கொண்டு தாங்க வர, அவர்கள் அவளை நெருங்குவதற்கு முன் தானே எழுந்து நின்றவள் தனது தாத்தா பாட்டியை பார்த்து, “நானே பார்த்துக்குவேன் நீங்க ஏன் பதட்டப்படுறீங்க…” என அவர்களைப் பார்த்து கூறியவள், தன்னைத் தள்ளிவிட்ட பையனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டாள் அவள்.
ஆகாஷ் அதை கண்டு கைத்தட்டி சந்தோசமாக குதூகலித்தான். வாசவிக்கோ அவள் அடித்த விதம், அப்படியே மெல்லினாவை உரித்து வைத்திருக்க, அவருக்கு தன் கண்முன்னால், அன்று கோவில் வாசலில் மெல்லினா ஒருவனை அடித்து நொறுக்கியதே நினைவிற்கு வந்து போனது.
குழந்தைகளின் விளையாட்டின் போதே ஆத்திரேயன் வந்துவிட, அவனுடைய அன்னைக்கோ மனம் ஆறவே இல்லை. “ஹேய் குட்டிஸ் ஆகாஷ் எப்போ வந்தீங்க??” என்று சொல்லி அவனை மேலே தூக்கிப் போட்டு பிடித்தவன் உள்ளே செல்ல வாசவியும் பின்னோடு வந்தார்.
ஆகாஷ் அவனிடமிருந்து இறங்கு வெளியே ஓடிவிட்டான் தமக்கையுடன் விளையாட்டை தொடர. மகனிடம், “ஆதி… உன் பொண்டாட்டி தான் யாருக்கும் அடங்காம இருக்கான்னு பார்த்தா அவ பொண்ணையும் அப்படியே வளர்த்து வச்சிருக்கா…”
“எங்க கூட இருந்தா இப்படி இருப்பாளா. பாரு உன் பொண்ணுக்கு எங்ககிட்ட வரவே மாட்டேங்கறா” என்று அவர் மகனிடம் குறைப்படிக்க வெளியில் அவன் தந்தையுடன் அவனின் செல்வமகள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து லேசாய் புன்முறுவல் பூத்தான் அவன்.
“எல்லாம் உன் பொண்டாட்டி கொடுக்கற இடம் தான், பெரியவங்க கூப்பிட்டா போகணும்ன்னு அவங்களை மதிக்கணும்ன்னு சொல்லிக் கொடுக்க மாட்டாளா அவ… கீழ விழப் போறாளேன்னு பிடிக்க போனா அதெல்லாம் நானே பார்த்துக்கறேன்னு சொல்றா, இதுல அந்த பையனை அவ அடிச்சா பாரு அப்படியே அவ அம்மாவே” என வருத்தத்தில் ஆரம்பித்தாலும், அவருடைய குற்றசாட்டு என்னவோ மெல்லினாவின் மீதே இருக்க, ஆத்திரேயன் மெளனமாக இதழ்களுக்கிடையே சிரிப்பை விழுங்கினான்.
அவனுக்கு சில நாட்களுக்கு முன் மெல்லினா சொன்னது தான் நினைவிற்கு வந்தது.
“நான் அத்தை கூட நல்லபடியா பேசினாலும், இனி நான் அங்க போகப் போறது இல்லைங்க. என்னோட விஷயத்துல முதல் கோணல் முற்றிலும் கோணல் தான் அத்தையை பொறுத்த வரைக்கும்… அன்பு மாத்தும், பாசம் மாத்தும்ன்னு சொல்றதெல்லாம் வார்த்தைக்குத் தாங்க… வாழ்க்கைக்கு இல்லை…”
“அத்தையை நான் குறை சொல்லல. ஆனால் நிதர்சனம்ன்னு ஒண்ணு இருக்குல… அவுங்க என்னை முதல் நாள் எப்படிப் பார்த்தங்களோ அப்படிதான் இப்போவும் பார்க்கறாங்க, கடைசி வரைக்கும் அவங்க அப்படித்தான் இருப்பாங்க… அவங்க நம்ம கூட வந்து தாராளமா இருக்கட்டும் அதை நான் வேணாம்ன்னு சொல்ல மாட்டேன்.
“அப்புறம் இன்னொரு விஷயமும் இதுல இருக்கு. அவங்களோட எண்ணத்துல பொண்ணுங்கன்னா இப்படித் தான் இருக்கணும்னு அவுங்க ஒரு வரைமுறை வச்சிருக்காங்க…”
“அதை நான் தப்புனு சொல்லல. நம்ம பொண்ணை இப்படி வளர்க்கணும் அப்படி வளர்க்கணும்ன்னு சொல்வாங்க, எனக்கு அது ஒத்துவராது… நம்ம பொண்ணு தைரியத்துக்கு இலக்கணமா இருக்கணும். நேர்மைக்கு அகராதியா வளரணும்… தப்பை எதிர்த்து நிக்கணும். முக்கியமா யாரையும் சார்ந்து நிக்கக் கூடாது எதுக்காகவும் எப்பவும்” எனக் கூறியிருந்தாள்.
இப்போது, அதை நினைவுகூர்ந்தவன் மனதினுள், “என் அம்மாகூடச் சேர்ந்து இல்லாட்டிகூட, அவங்களை சரியா புரிஞ்சு வைச்சிருக்கியே என் கொடிச்சி” எனச் செல்லமாக நினைத்துக்கொண்டான். இப்போதெல்லாம் அவளை அவன் அப்படித்தான் அழைக்கிறான்.
அவள் வளைக்காப்பிற்கு வந்தவர் பேத்தி பிறந்ததை இருந்து பார்த்துவிட்டு தான் ஊருக்கு சென்றிருந்தார். தமிழை கூட்டிக்கொண்டு அவள் பிறந்த ஊருக்கு மூவருமாக சென்று வந்திருந்தனர். அதன் பிறகு தான் அவளை கொடிச்சி என்று அவன் அழைப்பது.
கொடிச்சி! ஆம், அவள் மலையில் பிறந்து, மலையில் வளர்ந்ததனால் அல்ல, மலை போன்று தன் மனைவி நேர்மையிலும் தைரியத்திலும் உயர்ந்து நிற்பவள் என்பதால், ‘கொடிச்சி‘ எனச் செல்லமாக அழைக்கத் தொடங்கியிருந்தான்.
சில உறவுகள் எட்டி இருக்கும்வரை மட்டுமே சர்க்கரையாகும்! மெல்லினா மனிதர்களின் குணங்களை நன்றாகக் கணிக்கக்கூடியவளாக இருந்தாள்.
தமிழ் பிறந்து ஒருவருடம் வரை மட்டுமே, விடுமுறையில் இருந்தவள் மீண்டும் பணியில் அமர்ந்தாள். அவளுடைய பணியில் பார்க்காத இன்னல்களும் இல்லை, துரோகங்களும் இல்லை…அவள் பார்க்காத பகையுமில்லை, பகைவனும் இல்லை!
ஆனால் அனைத்தையும் அவள் தூசு போலத் தட்டிவிட்டு முன்னேறினாள். அதற்கு இரண்டு காரணங்கள்…ஒன்று அவள் தன்னம்பிகை மற்றொன்று அவளுடைய வாழ்க்கை துணை. ஆம்! ஆத்திரேயன் அவளுடன் இன்பத்திலும், இன்னலிலும் துணையாகவும் நல்ல இணையாகவுமிருந்தான்….
ஒன்று போனால் மற்றொன்று என்று தான் அவளுடைய போராட்டங்கள் இருந்தன. போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் சுவாரஸ்யமேது… கொடிச்சி, ஆள பிறந்தவள்! காக்கிஉடையில் கள்வர்களை ஆண்டு அடக்குபவள், வண்ணவுடையில் ஆத்திரேயனின் மனதை ஆட்கொண்டாள்!!
ஒருவாறாக வீடு வந்து சேர்ந்தவளை, அவளுடைய மாமியாரின் கோபப் பார்வையும், ஆத்திரேயனின் சிரிப்பு ஒளிந்துள்ள கள்ள பார்வையும் வரவேற்க, தமிழ் தான் தனது அன்னையை நோக்கி, “அம்மா! டிரஸ் மாத்துங்க… ஹான்ட் வாஷ் பண்ணுங்க” எனக் கட்டளையிட, அதற்கும் வாசவி, மெல்லினாவையே முறைக்க, அவளோ அவருடைய மனம் புரிந்தவளாய் புன்னகையுடன், “வாங்க அத்த வாங்க மாமா” என உபசரித்துவிட்டு உடை மாற்ற சென்றாள்.
உடை மாற்றி வெளியே வந்தவளின் கவனம், அவளுடைய அலைபேசியின் அழைப்பு மணியில் திசை திரும்ப, அதை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். அவளுடைய முகம் மெல்ல மாறியது!
மெல்லினாவின் முக மாற்றத்தை கவனித்த ஆத்திரையன், “என்ன மெல்லினா ?” என அருகே வர “ஒன்னுமில்லை!” என அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கினாள்.
“என்னைப் பார்த்து சொல்லு” என ஆத்திரேயன், அவளை அறிந்தவனாய் வினவ, “விக்ரம் ரிலீஸ் ஆகிட்டானாம்” என்று அவள் கூற, ஆத்திரேயனின் புருவங்கள் யோசனையுடன் சுருங்கி, பின்பு சட்டென்று சுவாரஸ்யமாக மாறியது.
“அப்போ? மறுபடியும் ஒரு ஆட்டம் ஆட போறோம் ?” என மெல்லினாவை பார்த்து ஒருவித புன்னகையுடன் வினவ, அவள் முகத்திலும் அப்புன்னகை தொற்றிக் கொண்டது.
“நிச்சயமா! விக்ரம் நம்ம தேடி வர முன்னாடி, நாம அவனைக் கார்னர் பண்றோம்” என ஏதோ முடிவெடுத்தவளாக மெல்லினா புன்னகையுடன் கூற,
“தட்டிறோம்! தூக்குறோம்!” என ஆத்திரையனும் மெல்லினாவின் சிரிப்பில் இணைந்தான். இருவரும் அவ்வார்த்தைகளை மெல்லிய சிரிப்புடன் தான் கூறினார்கள், ஆனால், அதில் அதீதமான உறுதி இருந்தது!
கள்வர்கள் இருக்குமிடத்தில் தானே காவலர்களுக்கு வேலை!
மெல்லினா, ஆத்திரேயன் இருவரும் நீதியின் காவலர்கள்…. அவர்களின் அநீதிக்கு எதிரான போராட்டமும் தொடரும், அன்பில் மூழ்கி திளைக்கும் காதலும் தொடரும்…
Advertisement