Advertisement
வெண்பா உறங்கியிருக்க இவள் கட்டிலின் மீது அமர்ந்து செய்தித்தாளை பார்க்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு செய்தியாக படித்துக் கொண்டிருந்தவளை கடைசிப்பக்கத்தின் ஒரு ஓரத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமும் அதே கீழே இருந்த செய்தியும் ஆழப்பதிந்தது.
ரைபிள் ஷூட்டிங்கில் மாவட்ட அளவில் முதல்வனாக வந்திருந்த ஆத்திரேயனின் புகைப்படமே அது. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமாய் இருந்தாலும் கருப்பு வேளையில் அல்லாது கலரில் போட்டிருந்தனர்.
இருபது வயதே நிரம்பியிருந்த போதிலும் அவன் இருபத்தியைந்து வயது வாலிபனை போலிருந்தான். ஏனோ அவனின் முகம் மனதில் ஒட்டிக்கொண்டது அவளுக்கு. அவன் முகம் மட்டுமல்ல அவனின் பெயரும் கூட அவள் நினைவில் நீங்காதிருந்தது.
அவளுக்கு இறுதித் தேர்வு முடிந்திருந்தது. மறுநாளில் இருந்து விடுமுறை தொடங்க இருந்தது. அன்று இரவு ஆனந்தன் அவளுக்கு ஆனந்த அதிர்ச்சியை கொடுத்தார்.
அவருடன் கணினியும் வந்தது அன்று. அதை அவர்களின் அறையில் பிக்ஸ் செய்து சென்றிருந்தார் அவருடன் வந்தவர், மகள்கள் இருவரின் முகத்திலும் தெரிந்த மகழ்ச்சியில் அவருக்கு மனம் நிறைந்து போனது.
“ஏங்க இப்போ இதெல்லாம் தேவையா நமக்கு?? கம்ப்யூட்டர் இல்லைன்னா என்னவாம்?? இவளுக கேட்டாளுகளா” என்றவர் திரும்பி மகள்களை முறைத்தார்.
“ஈஸ்வரி அவங்களை சொல்ல எதுவுமில்லை. நம்ம புள்ளைங்க நம்மகிட்ட அப்படியென்ன பெரிசா இதுவரைக்கும் கேட்டுட்டாங்க சொல்லு. இது இப்போ அவங்களோட படிப்புக்கு உதவியா இருக்கும்”
“எங்க ஸ்டேஷன் சென்ட்ரி அவன் பொண்ணுக்கு லேப்டாப் வாங்கியிருக்கான். நான் சிஸ்டம் தானே வாங்கினேன் அதுக்கு போய் நீ பேசிட்டு இருக்கே”
“சென்ட்ரி எல்லாரையும் காக்கா பிடிச்சு வைச்சிருக்கார். அவருக்கு எல்லாம் வருது வாங்குறார். நமக்கெதுக்குங்க அதெல்லாம், அந்த காசு இருந்தா அவங்க படிப்புக்கு உதவும் தானே. இப்போ இது தேவையில்லாத செலவு தானே” என்று தாயாய் பேசினார்.
“நம்ம மெல்லினா ஐபிஎஸ் படிக்க இது உதவியா இருக்கும் ஈஸ்வரி. இதுக்கு மேலே இதைப்பத்தி நாம பேச வேணாம். நாளைக்கு இன்டர்நெட் கனெக்ஷன் கொடுக்க ஆளை வரச்சொல்லி இருக்கேன். வந்தாங்கன்னா எனக்கு ஸ்டேஷன்க்கு போன் பண்ணு” என்றுவிட்டு நகர்ந்துவிட்டார் அவர்.
மெல்லினா பள்ளியிலேயே கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்கப்படுவதால் அவள் அதை நன்றாகவே கையாண்டாள். கூகிளில் ஒரு நாள் ஆத்திரேயன் பற்றிய தகவலை தேடினாள். அன்றிலிருந்து தான் அவனைப் பற்றிய தகவலை கொஞ்சம் கொஞ்சமாய் சேகரிக்க தொடங்கியிருந்தாள்.
தனக்கென்று தனியே போல்டர் கிரியேட் செய்து அதில் அவன் பற்றிய தகவல்களை பதிவேற்றினாள். ஆத்திரேயன் மாவட்ட அளவில் மட்டுமல்லாது மாநில, தேசிய அளவிலும் கூட பயிற்சியிலும் போட்டியிலும் கலந்துக் கொண்டிருந்தான்.
அந்த வருடத்தில் தேசிய அளவில் அவன் மூன்றாம் இடம் பிடித்திருந்தான். அந்த படத்தில் அவனுடன் பங்குப்பெற்ற முதல் இரண்டு இடத்தை பிடித்திருந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். மகிழ்ச்சியுடன் மூவரும் அணைத்திருந்த புகைப்படம் அது.
நாட்கள் தன் போக்கில் நகர ஆரம்பித்திருக்க மெல்லினா கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்தாள். கல்லூரிக்கு சென்றவளின் அறிவு விசாலமாக தொடங்கியிருந்தது. அவளின் அறிவு தன் செயலை கண்டித்தது.
ஆத்திரேயனின் மீது அவளுக்கிருந்தது காதல் அல்ல வெறும் இனக்கவர்ச்சியும் ஈர்ப்பும் தான் என்று புரிய ஆரம்பித்திருந்தது. அதன் பின் அவள் அதிகம் அவன் பற்றிய தேடியிருக்கவில்லை.
தேடவும் அவளுக்கு நேரம் வாய்க்கவில்லை. தந்தையின் இறப்பு அவர்கள் வாழ்வையே புரட்டிப் போட்டது. தாயையும் தங்கையையும் ஒரே நேரத்தில் சமாதானம் செய்யும் பொறுப்பு அவளுடையதானது.
அவளுக்கு அழுவதற்கும் நேரமிருக்கவில்லை. மகேஸ்வரி சற்று தேறிய பின்பு படிப்பு வேண்டாமென்று வீட்டில் இருந்த மகளை கண்டித்து கல்லூரிக்கு அனுப்பினார். படிப்பு முடிந்த வந்தவளுக்கு தகப்பனின் வேலை காத்திருந்தது.
அவளின் எதிர்க்காலத்தை பற்றி சிந்திக்க நேரமில்லாது போனது. தந்தையின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாது போனது அவளுக்கு பெரும் வருத்தமாய் இருந்த போதிலும் அவரின் வேலையை கொண்டு தான் முன்னேறுவோம் என்று எண்ணி சமாதானம் செய்துக் கொண்டாள்.
என்ன தான் ஆத்திரேயன் பற்றி அவள் அதிகம் தேடாது போனாலும் அவனைப் பற்றிய நினைவுகள் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. எப்போதாவது அவள் தன் போல்டரை திறந்து அதிலிருக்கும் புகைப்படங்களை தன்னையறியாது பார்க்கத்தான் செய்தாள்.
இந்நிலையில் தான் அவளுக்கு மாற்றல் வந்திருந்தது, அங்கு அவனை நேரில் பார்ப்போம் என்று அவள் நினைத்திருக்கவில்லை. ஒரு கணம் தான் காண்பது கனவோ என்ற எண்ணம் தான் அவளுக்கு.
அவள் திகைத்து விழித்த போது தான் ஆத்திரேயன் அவளை உலுக்கி நினைவுலகிற்கு அழைத்து வந்தான். அவள் பார்த்த திரைப்படத்தில் நாயகனை நாயகி நேரில் பார்த்து விழித்தது போலத்தான் அவளுமிருந்திருந்தாள்.
அது படம் அது போல நிஜத்திலெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்னும் நிதர்சனத்தை உணர்ந்திருந்ததாலேயே அவள் தெளிவாயிருந்தாள்.
கண் முன்னே நிற்கும் ஆத்திரேயன் நிழல்லவே. அவன் நிஜம் என்பதை அவன் அவளை உலுக்கிய போது உணர்ந்திருந்தாள். ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டிருந்தவள் வேலையில் கவனமானாள்.
மறுநாளே ஆத்திரேயன் அவளை ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றுவான் என்பதும் கூட அவளுக்கு நம்ப முடியாத நிஜமாகவே இருந்தது.
மெல்லினா சொல்லிக் கொண்டிருந்த போதே இடை நிறுத்தினான் ஆத்திரேயன். “இரு இரு இப்போ நீ என்ன சொல்ல வர்றே?? என்னை நீ லவ் பண்ணியா?? இல்லையா??” என்று தலையாய சந்தேகத்தை கேட்டான் அவளின் கணவன்.
“நான் சொல்லி முடிக்கற வரை நீங்க காத்திட்டு இருந்தா உங்களுக்கே புரியும்ன்னு நினைக்கிறேன்”
“நீ சொல்லி முடிக்கிற வரை என்னால காத்திருக்க முடியாது. அதை மட்டும் இப்போவே சொல்லிடு” என்று அவசரப்படுத்தினான் அவளின் ஆருயிர் கணவன்.
“நம்ம கல்யாணம் முடிஞ்சு இத்தனை நாள்ல உங்களால அதை கண்டுப்பிடிக்க முடியலையா. என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது” என்றாள் மெல்லினா.
“குழப்பமெல்லாம் நீ சொன்ன கதையில தான். இப்போ இருக்க உனக்கு என் மேல ரொம்ப காதல்ன்னு எனக்கு தெரியும்”
“எப்படி??”
“தெரியும்”
“அதான் எப்படி??”
“உன் கூட வாழ்ந்த பிறகு தான் அதை உணர்ந்தேன்னு சொன்னா நான் முட்டாள்”
“அதுக்கு முன்னவே நான் அதை உணர்ந்திட்டேன். உன்னோட கண்ணு எதையும் மறைக்காம எனக்கு காட்டி கொடுத்திடுச்சு” என்றவனின் கண்கள் அவளின் கண்களோடு கலந்தது.
ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அவளால் அவன் பார்வையை தாங்க முடியாது “போதும்” என்றாள்.
“ஏன்??”
“உங்க பார்வையே சரியில்லை”
“எப்படியெப்படி??”
“ப்ச் ஆளை விடுங்க சாமி” என்று சொல்லி முகத்தை இரு கரங்களால் மூடிக் கொண்டவளின் கரம் விலக்கி அவள் கன்னத்தில் அவன் இதழ் பதித்தான்.
“நான் இதுக்கு மேல உன்னை டிஸ்டர்ப் பண்ண விரும்பலை நீ சொல்லு” என்று அவன் கூற அவள் தொடர்ந்தாள்.
————————–
ஆத்திரேயனை பற்றிய தேடலை பள்ளிக்காலத்திற்கு பின்பு முற்றிலும் விட்டொழிதிருந்தாள். அதனால் அவன் அடுத்து என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தெரியாது போயிருந்தது.
கண் முன்னே அவனும் அவளைப் போலவே காக்கி உடையில் வந்து நின்றது மட்டுமே அன்று இரவெல்லாம் அவளுக்கு வந்து போனது.
‘அவருக்கு இருக்க திறமைக்கு நல்ல வேலையே கிடைச்சிருக்குமே அவர் பெரிய போஸ்டிங்லலாம் இல்லையே. என்னை மாதிரி தானே இருக்கார், ஏன்??’ என்று அவனைப் பற்றிய எண்ணமே அவள் தூக்கத்தை விரட்டிக் கொண்டிருந்தது ஒவ்வொரு நாளும்.
அந்த நினைவும் கூட மறக்கும் வகையில் தயாளன் அவளுக்கு தொந்திரவு கொடுத்திருக்க அவளுக்கு தாளமுடியாது போகவும் வேலையைவிட்டுவிட்டு ஊட்டிக்கே சென்றுவிட்டிருந்தாள்.
மெல்லினா வேலையை விடப் போகிறேன் என்று சொன்ன போது எந்தவித மறுப்பும் சொல்லாது அவளுக்கு துணை நின்றிருந்தார் மகேஸ்வரி. தந்தையின் ஆசையை நிறைவேற்றப் போகிறேன் என்றவளைப் பார்த்து அவருக்கு பெருமிதம் தான்.
முதல் இரு முயற்சியில் தோல்வி காணவும் சோர்ந்து போயிருந்தவளுக்கு ஆறுதலைக் கொடுத்தது மகேஸ்வரி மட்டுமே. அந்த நாட்களில் அவனைப் பற்றிய நினைவு அவ்வப்போது வந்து போயிருந்தாலும் படிப்பில் மட்டுமே முழுமூச்சாய் இருந்து அடுத்து வந்த தேர்வில் தேர்ச்சி அடைந்திருந்தாள்.
பயிற்சிக்காக சென்று திரும்பி வந்திருந்தவளுக்கு வெண்பாவின் திருமண சேதி சற்று அதிர்ச்சி கொடுத்தாலும் தன்னை தேற்றிக் கொண்டு தங்கைக்காய்தாயிடம் பேசியிருந்தாள்.
“உன் தங்கச்சியை நான் ஏத்துக்கறது இருக்கட்டும் மெல்லினா. அதுக்கு முன்னாடி எனக்கொரு கடமை இருக்கு” என்றவர் நிறுத்த அன்னையை ஏறிட்டாள் மகள்.
“உன்னோட கல்யாணம்”
“அம்மா ப்ளீஸ் என் கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்??”
“உன் தங்கச்சி உனக்கு முந்திட்டாளே. இதுக்கு மேலே தாமதப்படுத்தணுமா… நீ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு நான் வெண்பா கூட பேசறேன்” என்று தான் அவர் கோரிக்கை வைத்தார்.
அவள் மீண்டும் ஆரம்பிக்கும் முன் “மெல்லினா எனக்கு இன்னொரு டவுட் அதுக்கும் பதில் சொல்லிடு அப்புறம் தொடரலாம்”
“என்ன சந்தேகம் உங்களுக்கு??”
“உங்கம்மா கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சப்போ உனக்கு என் ஞாபகம் வரலையா??”
“வந்துச்சு”
“அப்போ நீ உங்கம்மாக்கு என்ன பதில் சொன்னே??”
“அதை சொல்றதுக்குள்ள தான் நீங்க கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டீங்களே”
“நீ ஏன் என்னைத் தேடி வரலை??”
“எந்த நம்பிக்கையில நான் உங்களைத் தேடி வந்திருக்க முடியும்ன்னு சொல்லுங்க”
“உனக்கு என் மேல பிரியம் இருந்துச்சு தானே”
“ஹ்ம்ம்”
“அந்த நம்பிக்கையில வந்திருக்கலாமே”
“என் மேல இருக்க நம்பிக்கையில மட்டும் உங்களைத் தேடி வந்தா போதுமா… ஒரு வேளை உங்க மனசுல வேற பொண்ணு இருந்திருக்கலாம், உங்களுக்கு கல்யாணம் கூட ஆகியிருக்கலாம்…”
“அதெல்லாம் உன்னால தெரிஞ்சுக்க முடியாதா என்ன??”
“அப்போ நான் தெரிஞ்சு வைச்சு இருக்கலை. இந்த காரணங்களை தவிர ஒரு முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்கே. உங்க மேல எனக்கிருந்த அந்த அன்பு என் மேல உங்களுக்கு வரும்ங்கறது என்ன நிச்சயம் சொல்லுங்க”
“இப்போ வரலையா??”
“இப்பவும் நானா வந்து உங்ககிட்ட கேட்கலை தானே”
“ஹ்ம்ம்”
“கேட்டு வர்றதுல புரிதல் இல்லையே”
“என்ன உன் லாஜிக்கோ??”
“நான் தொடரும் போடட்டுமா இல்லை வேணாமா??”
“தொடரும்மா…” என்று கையெடுத்து கும்பிட்டான் அவன்.
————————–
Advertisement