ஜீவாவும் அன்புவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். புன்னகை செய்த அன்பு, “கோவத்துல கை நீட்டிட்டேன்…” என சொல்லி மன்னிப்பு கேட்க போனான்.

புரிந்து கொண்ட ஜீவா, “வேணாம் அண்ணா, அவசியம் இல்லை” என்றான்.

“ஃபோட்டோ எடுத்து முடிச்சிட்டு சீக்கிரம் எல்லாரும் அங்க வந்து சேருங்க” என அனைவருக்கும் பொதுவாக சொன்ன அன்பு, தன் மனைவியுடன் அங்கிருந்து சென்று விட்டான்.

சற்று நேரத்தில் வினோதினியின் அண்ணன் மகள் இங்கு வந்தாள்.  இவர்களை சாப்பிட அழைப்பதாக சொன்னாள். அவளின் கையை பிடித்துக்கொண்ட மிது,  ‘கண் வைப்பார்கள்’ என பாட்டி அவளை குறித்து சொல்லவில்லை எனவும் மனது கஷ்ட பட்டிருந்தால் மன்னித்துக் கொள் எனவும் கேட்டாள்.

பரவாயில்லை என்றாள் அவள்.

“பாரு இன்னும் நீ உம்முன்னுதான் இருக்க, ஒரு நிஜத்தை சொல்லட்டுமா? திரும்ப ஜீவா கூட நான் சேர நீதான் இன்ஸ்பிரேஷன், உன்னாலதான் எனக்கும் தைரியம் வந்துச்சு” என்றாள் மிது.

“இதென்ன புதுக் கதை ஓட்டுற?” எனக் கேட்டாள் அவள்.

“ஒரு காலத்துல உன்னை பார்த்து நான் பொறாமை பட்ருக்கேன், லவ் பண்ணினா உன்னை மாதிரி தைரியமா இருக்கணும்னு நினைச்சிருக்கேன், உன் தைரியம் முன்னாடியே இருந்திருந்தா என் லைஃப்ல நாலு வருஷம் வீணா போயிருக்காது” என்றாள் மிது.

“இப்பதான் கல்யாணம் பண்ணிகிட்டியே, நீ பேச பேச உன் ஹஸ்பண்ட் உன்னையே பார்க்கிறார். ஐ திங்க் உன்கிட்ட தனியா பேச நினைக்கிறார், எல்லாரையும் நான் இழுத்திட்டு போவேனாம், நீ அவர்கிட்ட பேச வேண்டியதெல்லாம் பேசிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வருவியாம்” என்றவள் சொன்ன படியே செய்தாள்.

அனைவருமே சென்று விட, அந்த இடத்தில் மிதுவும் ஜீவாவும் மட்டும் நின்றிருந்தனர்.

இள வெயில், மிதமான காற்று, சுற்றிலும் பசுமை என ரம்மியமாக இருந்தது அவ்விடம்.

“நாலு வருஷம் பிரிஞ்சு இருந்ததை இனிமே பேசவே கூடாது, அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு வாழப் போறோம் மிது நாம” என்றான் ஜீவா.

வேகமாக அவனிடம் வந்த மிது ஒரு கையால் அவனை அணைத்து, இன்னோரு கையால் அவனது முகத்தை திருப்பி அவனது வலது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

“ஹப்பா… என்னா முத்தம்!” என சிலாகித்தான் ஜீவா.

“அப்புறம்… பட்டு வேஷ்டி சட்டைல முகம் முழுக்க சிரிப்போட கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டே இருக்கீங்க என்னை? எவ்ளோ தூரம்தான் என்னை நான் ரெஸிஸ்ட் பண்ணிக்கிறதாம்?” எனக் கேட்டாள் மிது.

“அப்படியா இந்த ஒத்த கிஸ்ல மிதுக்குட்டிக்கு ஆசை அடங்கிப் போச்சா?” எனக் கேட்டான் ஜீவா.

“ம்ஹூம்… கொதிக்குற உலைல கொஞ்சமா ஜில்லுனு தண்ணி ஊத்தின மாதிரிதான் இப்ப இருக்கேன். கொஞ்ச நேரம் தாங்கும்” என்றாள்.

“தாங்குமா?” என ஏக்கமாக கேட்டவன் அவளது இதழ்களை நெருங்கினான்.

நிமிடங்கள் சென்று விலகிய மிது, “நான் எப்படி இருக்கேன்னு சொல்லவே இல்லை?” எனக் கேட்டாள்.

“ப்ச்… அழகாதான் இருக்க” என்றான்.

“என்ன குரல் காத்து வாங்குது?”

அவள் காதில், “உன் அழகை எல்லாம் மறைக்குது இந்த புடவை, நீ எவ்ளோ அழகுன்னு நாம பெட்ல இருக்கும் போது நிறைய தடவ சொல்லியிருக்கேன்” என்றான்.

“சரியான பொண்டாட்டி தாசன்!” என பொய்யாக திட்டினாள்.

“அங்க மட்டும் என்ன வாழுதாம், நானாவது தாசன், கேட்க ஸாஃப்ட்டா இருக்கு, நீ சரியான ஜீவா வெறி புடிச்சவ” என்றான்.

“சேச்ச அதெல்லாம் இல்லை”

“அப்படியா… உனக்கொரு விஷயம் சொல்லட்டா? என் கூட டிவி ஷோவுல ஆடினாளே ஷாலினி, பங்கஜ் ஸார்கிட்ட அவளும் ஜாயின் பண்ணிருக்கா” என நமட்டு சிரிப்புடன் சொன்னான்.

உடனே முகம் மாறியவள், “அவர் சொல்லவே இல்லை” என்றாள்.

அவளின் கன்னத்தை இடித்தவன், “அவர்கிட்ட வந்தாளாம், வேற மாஸ்டர்கிட்ட சேர்த்து விட்டுட்டார். அதுக்குள்ள மூஞ்ச பாரு… கோணிகிட்டு போயிடுச்சு.  இப்ப புரியுதா உன்னை பத்தி?” எனக் கேட்டான்.

இயலாமையோடு, “டார்ச்சர் பண்றேனா ஜீவா?” எனக் கேட்டாள்.

“நல்லா பண்ணு, நிறைய பண்ணு, உன்னை சமாளிக்க நல்லா கத்துக்கிட்டேன். உன்னை, உன் கோவத்தை, உன் டார்ச்சரை எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்” என்றான்.

“கோவம் வராதா உங்களுக்கு? ஒரு பாயிண்ட்ல வெறுத்து போயிடுவீங்கதானே?” என பாவமாக கேட்டாள்.

“கோவம்… ஹ்ம்ம்… அது தெரியாது, ஆனா வெறுப்புன்னு பெரிய வார்த்தைலாம் சொல்லாத. என் அம்மாவை எவ்ளோ பிடிக்குமோ அவ்ளோ பிடிக்கும் உன்னை” என்றான்.

“அம்மாவை மிஸ் பண்றீங்களா ஜீவா?” அவனது கன்னத்தை தாங்கிக் கொண்டு கேட்டாள்.

“எங்கேருந்தோ அம்மா என்னை பார்த்திட்டு இருக்கிறதை என்னால உணர முடியுது மிது, கண்டிப்பா அவங்க சந்தோஷமா இருப்பாங்க இப்போ” என்றான்.

“ம்ம்ம்… அத்தை அளவுக்குத்தான் உங்களுக்கு என்னை பிடிக்கும் என்ன? ஆனா எனக்கு என் அப்பாவை விட உங்களை கம்மியாதான் பிடிக்கும்” என வம்பாக சொன்னாள்.

“இருக்கட்டும் மிது, நீ யாரு என்னன்னு எனக்கு தெரியும், உன் வார்த்தை சொல்லாததை என்னால ஃபீல் பண்ண முடியும்” என உணர்ந்து சொன்னான்.

அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு எங்கேயோ ஓடினாள். எங்கே என கேட்டுக் கொண்டே அவளது இழுப்புக்கு உடன் பட்டு அவனும் சென்றான்.

தென்னை மரம் ஒன்றின் அருகில் மூச்சு வாங்க நின்றாள் மிது. அவனுக்கும் மூச்சு வாங்க, “என்ன மிது? ஞாபகம் இருக்கா இந்த இடம் உனக்கு?” எனக் கேட்டான்.

“நானும் அதேதான் கேட்க நினைச்சேன், பரவாயில்லை உங்களுக்கும் ஞாபகத்துல இருக்கே!” என்றாள்.

“எப்படி மறப்பேன்? என்னை உனக்கு பிடிக்கும்னு கிளியர் கட்டா தெரிஞ்சுகிட்ட இடமாச்சே”

“ஆமாம், ஆனா நான் அப்ப ரொம்ப பயந்து போயிருந்தேன், என் ஆசை நடக்குமான்னு நிறைய டவுட்ல இருந்தேன். உங்களை பிரிஞ்சப்புறம் கூட இங்க மட்டும் வரவே மாட்டேன், வர்ற தைரியம் இருந்தது இல்லை” என்றாள் மிது.

அவளது கன்னங்களை கிள்ளி கொஞ்சியவன், “நாம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப், அண்ட் நம்மள எல்லாரும் அக்செப்ட் பண்ணிட்டாங்க” என்றான்.

அவனுக்கு இணையாக அவளும் உற்சாகத்தோடு அவனது கையை பற்றி குலுக்கி, “ஆமாம் ஜீவா, உங்க லவ்ல ஜெயிச்சிட்டீங்க, கங்கிராட்ஸ்!” என்றாள்.

அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், “உன்னை மிஸ் பண்ணிட்டேன்னு நினைச்சு நினைச்சு… ப்ச்… எவ்ளோ பெயின்ஃபுல் டேஸ் தெரியுமா அதெல்லாம்? இப்ப என் அணைப்புல நீ இருக்க பார்த்தியா… இதுதான்… இதுதான் மிது நிஜம். அப்புறம் நம்ம லவ் ஸ்டோரியோட எண்டிங் இது இல்லை. இப்பதான் ஆரம்பிக்குதே” என்றான்.

“அப்படியா நம்ம கதைல இன்னும் என்னெல்லாம் நடக்கும்?” எனக் கேட்டாள்.

“என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது, ஆனா என்ன நடந்தாலும் என் கையை புடிச்சுகிட்டு என் பக்கத்துலேயே நீ இருப்ப, எல்லா நைட்ஸும் நான் தூங்குறதுக்கு முன்னாடி உன்கிட்ட லவ் யூ சொல்வேன்” என்றான்.

ஆமோதிப்பாக தலையாட்டிக் கொண்டவள், அவனுடைய இடது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“நீ சிரம படாத” என்றவன் அவளது கன்னங்களை கைகளில் தாங்கிப் பிடித்துக்கொண்டு தன் கன்னங்கள், நெற்றி, மூக்கு, கண்கள் என ஒவ்வொன்றாக அவளின் இதழ்களில் ஒற்றி எடுத்தான்.

இதெல்லாம் போதாது என்பது போல அவனை முத்தங்களின் சாரலில் நனைத்தாள்.

அவளை அனாயாசமாக தூக்கி சுற்றியவன், “ஓஹோஹ்ஹோ…” என குதூகலமாக சத்தமிட்டான்.

அவனது தோள்களை  பிடிமானமாக பிடித்திருந்த மிது, தன்னை ஈர்த்த அவனது மகிழ்ச்சி பொங்கிய முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

என்றுமே ஜீவநந்தனின் ஜீவன் மிதுன்யாதான். அவளது வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருப்பது ஜீவநந்தன்தான்.

பொங்கி வழியும் காதல் அவர்களை கொஞ்சிக் கொண்டே இருக்கட்டும்!