Advertisement
“இந்த பிரச்சனையை ஆரம்பிச்சதே நீங்க தான், ஊர் கவுண்டர் என்ன பண்ணுவார்..?” மாதவன் குரல் உயர்த்தினான்.
“நீ உங்க மாமனாருக்கு பேசுற..?” ரமேஷ் எகிற,
“அப்படியே இருந்தாலும், கலவரத்தை தூண்டிவிட்டது நீங்க தான்னு போலீசே சொல்லிட்டாங்க, அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க..” என்றான் மாதவன்.
“டேய் பேச்சை மாத்தாத, கவுண்டர் பத்தி தான்..”
“அவரை பத்தி என்ன இருக்கு..? கலவரம் வெடிக்க முன்னமே போலீசுக்கு சொல்லி உங்க அராஜகத்துல இருந்து ஊரை காப்பாத்தினது அவர் தான், நீங்க இதை சாக்கா வைச்சு ஊர்ல எவ்வளவு சேதாரம் பண்ணியிருக்கீங்க தெரியுமா..? அதுக்கு எல்லாம் யார் பொறுப்பு..?” என்றான் மாதவன் விடாமல்.
“ஆமா எங்க மாட்டு கொட்டாய் எல்லாம் கொளுத்தி விட்டுட்டாங்க..” ஒருவர் ஆரம்பிக்க, மற்றவர்களும் பேச ஆரம்பித்தனர். ரமேஷ் அடங்காமல் எகிற, மாதவனுடன் அவன் பங்காளிகளும் சேர்ந்து கொண்டனர். அந்த பெண்ணின் ஆட்களும், “இவங்க தான் முதல்ல அடிக்க ஆரம்பிச்சது..” என்று பேச, ரமேஷின் சிறிய ஆதரவாளர் கூட்டம் திணற ஆரம்பித்தது.
“தயாநிதி எப்போவும் உன் அண்ணன் மகனால தான் ஊர்ல பாதி பிரச்சனை, இன்னைக்கு இவனால இவ்வளவு பெரிய கலவரம் நடந்ததுக்கு அப்பறம் இதை அப்படியே விட முடியாது, எதாவது பண்ணி தான் ஆகணும்..” என்றார் பெரிய தலை ஒருவர்.
அதை தொடர்ந்து எல்லோரும் சொல்ல, “தயாநிதி பெரிய குரலில், ரமேஷுக்கு அபராதம் விதித்தவர், மூன்று வருட ஊர் நல்லது கெட்டதுக்கு அவனுடன் அவன் குடும்பத்தையும், அவன் ஆதரவாளர் குடும்பங்களையும் ஒதுக்கி வைத்தார்..”
மாதவன் பங்காளிகள் தயாநிதியுடன் நிற்க, யுவராஜ் போலீஸ் வரை பார்த்து அவருக்கு பின்னால் நிற்க, இவர்களை தாண்டி தன்னால் சித்தப்பாவை நெருங்கவே முடியாது என்று புரிந்து போனது. அவரிடம் சொத்தை பிடுங்கும் பேராசையும் கரைந்து போக, ரமேஷ் தோத்து போய் பின் வாங்க வேண்டிய கட்டாயம்.
யுவராஜ் விஷயம் கேள்விப்பட்டு, நிம்மதியானான். இனியும் அவனால் தயாநிதிக்கு தலை வலி இருக்காது. மாதவன் பார்த்து கொள்வான். அதை தான் தயாநிதியும் மனைவியிடம் சொன்னார். “யுவராஜ் இதை எல்லாம் யோசிச்சு தான் மாதவனை பார்த்திருக்கான். நான் பணம், அந்தஸ்து மட்டும் தான் பார்த்தேன்..” என்றார். ஜெயலக்ஷ்மிக்கு புரியுமே இது.
அந்த வார இறுதியில் எல்லாம் ஊர்க்கு வந்து சேர்ந்தனர். ஜமுனா அதுவரையிலும் கணவனிடம் பேசாமல் ஆட்டம் காட்டினாள். இவர்கள் வரவில் தயநிதி, தாரணி குடும்பமும் வந்துவிட்டது. அருணாச்சலம் வீடு நிறைந்து வழிந்தது. மதிய விருந்து முடிய, எல்லாம் தோப்புக்கு சென்றனர். கிணற்றில் நீச்சல். ஆகாஷ், மாதவன் கண்காணிப்பில் பிள்ளைகள் ஆட்டம். யுவராஜ் தோட்டத்தை சுற்றி வந்தான்.
மாலை போல வீடு வந்தனர். பலகாரம் முடிய, பிள்ளைகள் வண்டிக்கு ஓடினர். ஆளுக்கொரு வண்டி. ஜீவிதா எப்போதும் போல JCB. வேறு யாருக்கும் கிடையாது. ஆத்விக் தான் அப்படி சண்டை போடுவான். ஜீவிதாவே மனம் இறங்கி சில நிமிடம் எல்லோருக்கும் விடுவாள். யுவராஜ் அவர்களுடன் களத்தில் நிற்பான் அவ்வளுவே.
எல்லோருக்கும் இரவு உணவும் இங்கேயே முடிய, அவரவர் வீடு கிளம்பினர். யுவராஜ் களத்தில் போன் பேசி கொண்டிருக்க, தயாநிதி சென்றார். அவர் வரவும் போனை வைக்க, “நிலத்தை எல்லாம் குத்தகைக்கு விடலாம் இருக்கேன், எங்களால முடியல..” என்றார்.
“பாதி நிலத்துல மாங்காய், தேக்கு தோப்பு வச்சுட்டு, மீதியை சரசு சித்திகிட்ட விடுங்க, வேற யார் நிலத்தையோ ஏன் அவங்க குத்தகை எடுத்து விவசாயம் பார்க்கணும்..” என்றான்.
“ம்ம்.. நான் மாதவன்கிட்ட பேசுறேன்..” என்றார். யுவராஜ் தலையசைக்க, சில நொடி மருமகன் முன் நின்றவர், அவன் தோள் தட்டி சென்றார். பின்னால் பார்த்தபடி வந்த ஜெயலக்ஷ்மி, “என்ன..?” என்றார் சிரிப்புடன்.
“என் மாமனார் என்னை கொஞ்சிட்டு போறார், உங்களுக்கு பொறுக்காதே..” என்றான் மருமகன்.
“பரவாயில்லை.. உனக்கு என் பொண்ணை கொடுத்ததுக்கு என் பேரை காப்பாத்திட்ட..” என்றார் அத்தை கெத்தாக.
“கொடுக்கலைன்னா என் அத்தை பொண்ணு தானே, எனக்கு இல்லாத உரிமையான்னு தூக்கியிருப்பேன், தப்பிச்சீங்க.. போங்க..” என்றான் மருமகன்.
“இதோட ஐம்பது முறை என்னை அத்தை சொல்லியிருக்க..” என்றார் ஜெயலக்ஷ்மி. யுவராஜ் சிரிக்க, ஜெயலக்ஷ்மி மருமகன் கை பிடித்து தட்டி கொடுத்து சென்றார்.
“இங்கு எந்த உறவும் நேர் இல்லை தான். நாம முயன்று தோற்காத வரை..!”
இங்கு அவன் குடும்பம் தூங்க ஆயத்தமாக, ஜீவிதா தாத்தா ரூமிற்கு சென்றாள். காமாட்சிக்கும் உடல் தளர்த்திருந்தது. ஜீவிதா எப்போது ஊருக்கு வந்தாலும் பாட்டியுடன் தான் இரவு படுக்கை. சில வருடங்கள் அவருடன் இருந்ததால் நல்ல பாசம்.
ஆத்விக் தூங்க செல்லாமல், கேசவனிடம் செல்லம் கொஞ்சி JCB மேல் அமர்ந்திருந்தான். ஜமுனா மகனை தேட, தாத்தாவிடம் பேசிவிட்டு வந்த யுவராஜ், “ஆத்விக்..” என்று குரல் கொடுத்தான்.
“அப்பா கூப்பிட்டுப்பார் ஆத்விக்.. வா போலாம்..” கேசவன் பேரனின் கொஞ்சலில் மயங்காமல் வீட்டுக்குள் கூட்டி வந்துவிட்டார். வைஜெயந்தி பேரனுக்கு பால் கொடுக்க, முனங்கி கொண்டே குடித்தவன், ஜமுனாவை தூங்க இழுத்து சென்றான்.
யுவராஜ் அப்பா, அம்மாவிடம் பேசிவிட்டு, எல்லாம் பார்த்து ரூமிற்கு வர, ஆத்விக் அம்மாவுடன் நல்ல தூக்கம். அவனை சுவற்றோரம் படுக்க வைத்து, கீழே பெட் விரித்து மனைவியை கீழே தூக்கி கொண்டான். ஜமுனா முறுக்கி திரும்பி படுக்க, அப்படியே பின்னால் அணைத்து கொண்டான்.
ஜமுனா திமிர, “மகன் இருக்கான்டி..” அவள் காதை கடித்து வைத்தான்.
“ஸ்ஸ்..” உங்களை ஜமுனா திரும்பி அவன் நெஞ்சில் அடி வைத்தாள். யுவராஜ் அப்படியே மனைவியை தன்னுள் அமுத்தி கொண்டவன், “இன்னுமா கோவம்..?” என்றான்.
“அதென்ன நினைச்ச நேரத்துக்கு கிளம்புறது..?” என்றாள்.
“ரமேஷ் மேல எனக்கு நம்பிக்கை இல்லைடி, போலீஸ் மட்டும் வரல பெரிய கலவரம் தான், உயிர் சேதம் வரை, அதான் வந்துட்டேன்..” என்றவன், அவள் உச்சியில் முத்தம் வைத்தான். ஜமுனா வாகாக கணவனை கட்டி கொண்டாள். “தூக்கமா..?” யுவராஜ் கேட்க,
“வேறென்ன..?” என்றாள் மனைவி.
“சும்மா பட்டும் படாமல், தொட்டும் தொடாமல்..” யுவராஜ் கண்ணடித்து அவள் காதில் சொல்ல,
“நான் மாட்டேன்.. போங்க, வயசு ஆக ஆக ரொம்ப பேட் மாமா நீங்க..” என்றாள் சிவந்து.
“பின்ன பிள்ளைங்க வந்ததுக்கு அப்பறம் கட்டில் உடையவா எல்லாம் முடியும், சத்தமே இல்லாமல் தான்..” என்றான்.
“சத்தம் இல்லாமலும் இப்போ முடியாது போங்க..”
“நான் என்ன எல்லாமா கேட்டேன், கொஞ்சம் தானே..”
“மாமா..” என்று அவள் வெட்கத்தில் சிணுங்க, யுவராஜ் அவளின் வெட்கத்தில் இன்னும் பொங்கிய தாபத்துடன் அவனுக்கு வேண்டியதை எடுத்து கொண்டான். உதடுகள் எப்போதும் போல நோவு கண்டது கணவன் வேகத்தில்.
“வலிக்குதா.. இரு சரி பண்றேன்..” என்று அவள் உதட்டை இழுக்க,
“ஒன்னும் வேணாம் போங்க.. சரி பண்றேன்னு இன்னும் தான் நோக வைப்பீங்க..” என்றாள்.
“அதெல்லாம் இந்த முறை அல்வா போல தான்..”
“நான் நம்ப மாட்டேன், போன முறை ரசகுல்லா சொல்லி என்ன பாடுபடுத்தினீங்க..”
“ரசகுல்லான்னா கடிச்சு சாப்பிட வேண்டாமா..? இது அல்வா தான், அப்டியே முழுங்கிடுவேன்..”
“இதுவரை முழுங்கினதே போதும், போங்க..” ஜமுனா அவன் நெஞ்சிலே படுத்துவிட, யுவராஜ்சிரிப்புடன் மனைவியை தட்டி கொடுத்தான்.
இருவரிடமும் இந்த நொடி நிறைவை தாண்டி, எங்கள் வாழ்க்கையை காப்பாற்றி கொண்டோம் என்ற பேராறுதல். உண்மை. மூன்று ஆண்டுகால பிரிவு.. அது வேண்டவே வேண்டாம் என்று இருவருக்கும் அடிக்கடி தோன்றும் ஒன்று தான்.
அப்போது அவர்களின் மனநிலைக்கு பூதமாக தெரிந்தது இப்போது, அந்தளவு நாங்கள் ஏன் விட்டோம்..? என்று யோசிக்கும் படி இருந்தது.
“முதலிலே அவளிடம் பேசியிருக்க வேண்டும், அம்மா வீட்டுக்கு சென்றவளை அப்படியே விட்டிருக்க கூடாது, கடன் வாங்கியாவது படிக்க வைத்திருந்தால் இது எல்லாம் நடந்திருக்காதே..?” யுவராஜ் நினைக்க,
ஜமுனாவோ, “ஒரு வருஷம் கழிச்சு நான் படிச்சிருந்தா என்ன..? மாமா என்னை படிக்கவே வைக்க மாட்டேன் சொல்லலை தானே, கஷ்டத்துல இன்னும் கடன் வேண்டாம் தானே சொன்னார், அவரும் அப்போ தானே சம்பாதிக்க ஆரம்பிச்சிருந்தார்..” என்று நினைப்பாள்.
இது தான் கால மாற்றம். வயது ஏற்றம். முதிர்ச்சி. அனுபவம் என்பது.
பண நிர்வாகத்தை கவனிக்கும் பெண்ணுக்கு அதில் உள்ள சிக்கல், அழுத்தம் புரிந்தது. இவளே இப்போது பிள்ளைகள் கேட்பதை, பணம் பார்த்து மறுக்கின்றாள் தானே. “இது அர்ஜன்ட் இல்லை, அப்புறம் பண்ணிக்கலாம்..” என்று பிள்ளைகளிடம் சொல்லும் நேரமெல்லாம், அவள் படிப்பு வந்து செல்லும்.
இருவருக்கும் வேறு வாழ்க்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றாலும், அன்றய நிலைக்கு இருவரும் சேருவதே பெரிய கேள்விக்குறியாக தானே இருந்தது.
மூன்று வருடமாக யுவராஜ் விடாமல் மனைவியிடம் சென்று நின்றதும்.. ஜமுனா மகள், கணவனை யோசித்து, படிப்பு என்று கணவனிடம் சென்றதும் தானே அன்று அவர்கள் வாழ்க்கையை காப்பாற்றியது.
“என்னை புரிஞ்சுக்கலை, என் பண கஷ்டம் அவளுக்கு தெரியல, எனக்கு பிரஷர் கொடுக்கிறா..” யுவராஜ் ஒதுங்கியிருந்தால்,
“என்னை படிக்க வைக்கலை, என் கனவு அவருக்கு ஒன்னுமே இல்லையா..? நான் அவருக்கு அவ்வளவு தானா..?” ஜமுனா ஒரேடியாக கணவனுக்கு எதிராக திரும்பியிருந்தால், இன்று இந்த வாழ்க்கை அவர்களுக்கு இல்லை. ஜீவிதாவிற்கு அப்பா அம்மா, குடும்பம் இல்லை, தம்பி இல்லை. குடும்பத்தின் வளர்ச்சி இல்லை. பெரியவர்களுக்கு நிம்மதி இல்லை. ஆளுக்கொரு திசையில் ஏதோ ஒரு வெறுத்த வாழ்க்கை.
சீல் கட்டிய காயம் ஆறும் என்று காத்திருப்பதை விட, வலித்தாலும் பரவாயில்லை என்று அதை சுத்தம் செய்வது எவ்வளவு உத்தமம்..!
அன்று கணவன், மனைவி இருவரும் ஏதோ ஒரு இடத்தில் விட்டு கொடுத்ததால் மட்டுமே இன்று இந்த நிறைவான வாழ்க்கை. நான் தான் சரி என்று உச்சத்தில் நிற்பது எல்லா இடத்திலும் நல்ல பதிலை தந்துவிடாது. இழக்கவும் வைத்துவிடும். அதிலும் கணவன் மனைவி உறவுக்குள் சொல்லவே வேண்டியது இல்லை.
விட்டு கொடுக்கா உறவு முட்டு சந்து தான்..!
ஏன் என்ற கேள்வி, எதனால் என்று மாற வேண்டும்..!
யுவராஜ், ஜமுனா இருவருக்கும் அவர்கள் துணை உயிர் தான். ஆனால் அந்த அளவு கடந்த காதல் மட்டுமே இவர்களை வாழ வைத்து விடவில்லையே. புரிதல்.. இது கிட்ட மணவாழ்க்கை தவம் தான்.
காதல்.. புரிதல்.. விட்டு கொடுத்தல்.. குடும்ப வாழ்க்கைக்கு ஒரே தராசில் வைக்க வேண்டுமோ..?
இதோ இவர்கள் சறுக்கினாலும் வருடங்கள் கடந்தாவது நிமிர்ந்து நின்று விட்டார்கள்.
தங்கள் காதலை தொலைத்துவிடாமல், உயிர் கொடுத்துவிட்டனர். இதற்கு காரணம் இருவருமே..!
யுவராஜ் உள்ளிருந்து பொங்கிய நிறைவுடன் மனைவி முகம் குனிந்து அழுத்தமாக இதழ் பதிக்க, ஜமுனா தானும் முத்தம் வைத்து அதை நிறைவு செய்தாள்.
Advertisement