Advertisement
“எமர்ஜென்சி கேஸ், ஸ்கூல் பிள்ளைங்க, வேலைக்கு போறவங்க என்ன பண்ணுவாங்க..?” என,
“வீட்டுக்கு எத்தனை வண்டி இருக்கு, கூட்டிட்டு போகட்டும், நாம பஸ்ஸை தான் நிறுத்தியிருக்கோம், பாதையை அடைச்சிடலை..” என்றான்.
தயாநிதியும், வேறு சிலரும் டாக்குமெண்ட் எடுக்க வீட்டுக்குள் வந்தவர்கள், யுவராஜ் சொன்னதை கேட்கவும் அவ்வளவு ஜெர்க் ஆனார்கள். “சித்தப்பா இது வேலைக்கு ஆகாது, இப்போ என்ன நம்ம ஊருக்கு பஸ் தானே வரணும், நாங்க பார்த்துகிறோம், ஒரு பத்து பேர் போனா பஸ் எப்படி வருது பாருங்க..” ரமேஷ் கையை முறுக்கி சொன்னான்.
யுவராஜ் முகத்தில் சட்டென ஒரு இறுக்கம். அதுவரை பிரச்சனையை தீர்க்க என்ன வழி என்று பார்த்து கொண்டிருந்தவன், இந்த நொடி வேறு மாதிரி ஆனான். அவர்கள் கண் முன்னே போன் எடுத்து ப்ரெசிடெண்டுக்கு அழைத்தவன், “நாளைக்கு கூட்டத்தை பத்தி நாங்க யோசிக்கிறோம் சொல்லியிருந்தோம் இல்லை, இனி அதுக்கு வாய்ப்பே இல்லை..” என்றான் அழுத்தமாக.
“கூட்டம் வேணும்ன்னு நாங்க யாரும் கேட்கலையே..? இதை எப்படி ஹாண்டில் பண்ணனும்ன்னு எங்களுக்கு தெரியும்..” ரமேஷ் மேலும் பேச,
“யுவராஜ் என்னப்பா இது..?” என்று அந்த பக்கம் பதறி கொண்டிருந்த ப்ரெசிடெண்ட்டிடம்,
“இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் வண்டி போகவும் வழி விடுவோம், நாளைக்கு காலையில இருந்து அதுவும் கிடையாது..” என்றான் யுவராஜ் தீவிரமாக. தயாநிதி அவனிடம் தெரிந்த தீவிரத்தில் கவலைப்பட்டு போனார். சொந்த வாழ்க்கையிலே அவன் தீவிரத்தை இறுதி வரை மாற்றாதவன் ஆயிற்றே.
“இவங்க என்ன பெரியப்பா நமக்கு பாதை இல்லைன்னு சொல்றது..? நாம இந்த பக்கம் அருவி ஊர் வழியா போயிக்கலாம்..” என்றான் தயாநிதியின் பங்காளி மகன் அடங்காமல் கோவத்தில்.
யுவராஜ் இதை எல்லாம் முன்பே யோசித்து வைத்திருந்ததால் அவனிடம் ஒரு பார்வை மட்டுமே. எதுவோ பண்ணிட்டான்..? கண்டுகொண்ட தயாநிதி, இவர்களை பேசவிட்டால் இன்னும் பிரச்சனை என்று புரிந்து வேகமாக டாகுமெண்ட் எடுத்து கொண்டு வெளியே அழைத்து சென்றுவிட்டார்.
அவருக்கு புரிந்து போனது. யுவராஜ் இறங்கிவிட்டான் என்று. “உங்களை யாருடா பேச சொன்னது..?” என்று கோவமாக அவர்களை கடிந்து கொள்ள,
“பார்த்துக்கலாம் விடுங்க சித்தப்பா..” என்றான் ரமேஷ்.
“என்னத்த பார்த்துப்ப, ஒரு ஊர், இரண்டு ஊர் இல்லை பார்த்துக்க, நாலு ஊரை பகைச்சுட்டு உட்கார்ந்திருக்கோம்..” பெரியவர் ஒருவர் பேசினார்.
“இது தான் சட்டம்னு எழுதி வைக்கலைன்னாலும், இத்தனை வருஷத்து நடைமுறையை மாத்திக்க அரசாங்கம் மட்டும் ஒத்துக்குவாங்க நினைச்சியா..? ஏரி தண்ணீர் அஞ்சு ஊருக்கு சொந்தம், நமக்குள்ள கூட குறைய சரிக்கட்டிகிறதை விட்டுட்டு அவங்களை சண்டைக்கு இழுத்தாச்சு, ப்ரெசிடெண்ட் கூட கண்டிப்பா அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவார், பிரச்சனையை பேச வர அதிகாரி கூட நம்மளை தான் சத்தம் போடுவாங்க..” என்று இன்னொருவர் சொல்ல, தயாநிதி தலை பிடித்து கண்டார்.
“நாம இவங்க பேச்சை கேட்டிருக்க கூடாது தயாநிதி, சின்ன பசங்க சின்ன புத்தியை காமிச்சுட்டாங்க..” இன்னொருவர் சொல்ல, ரமேஷின் வயது ஆண்கள் சொன்னவரை கோபத்துடன் பார்த்தனர்.
“நீங்க என்னை கோவமா பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை, பெரிய ஊர்ன்ற ஜம்பத்துல சுத்து வட்டாரத்தையே அடக்கி ஆளணும்ன்னு நினைச்சா, மத்த ஊர்காரனுங்க விட்டுட்டு உட்கார்ந்திருப்பானுங்கன்னு நினைச்சீங்களோ..? அதிலும் அருணாச்சலம் அய்யா குடும்பதுகிட்ட உங்க வேலை நடக்குமா..? யுவராஜ் சொந்தத்தை பார்த்து ஊரை விட்டுடும் நினைச்சு தப்பு கணக்கு போட்ட அறிவாளி எவன்னு எனக்கு தெரியல..” என்றவர் பார்வை ரமேஷை தான் தீண்டியது.
“இப்போ என்ன நாங்க ஆரம்பிச்சு வச்ச பிரச்சனையை நாங்களே பார்த்துகிறோம். நீங்க அமைதியா இருங்க.. எங்களுக்கு என்ன பண்ணனும்ன்னு தெரியும்..” ரமேஷ் எகிறினான்.
“முதல்ல நம்ம ஊர்காரனுங்க வீடு வந்து சேர ஏற்பாடு பண்ணனும்..” தயாநிதி சொல்ல,
“இவனுங்க ஏன் இருக்காங்க தயாநிதி, ஆளுக்கொரு வண்டி எடுத்துட்டு போய் எல்லோரையும் கூட்டிட்டு வரட்டும்..” என்றார் தாத்தா ஒருவர்.
“பெருசு.. என்ன பண்ணனும்ன்னு எங்களுக்கு தெரியும் நீ ஒன்னும் சொல்லாத, நீ முதலில் இந்த மழையில ஒழுங்கா வீடு போய் சேர வழியை பாரு, விழுந்து கிழுந்து போய் சேர்ந்துடாத..” என்று ஒருவன் நக்கலடிக்க,
“மரியாதைன்னா என்னன்னு தெரியாதவங்கிட்ட பேசினது என் தப்பு தான்..” அவர் வெறுப்பாக சொன்னார்.
“பேசாத.. உன்னை பேச சொல்லி நாங்களா சொன்னோம், இவ்வளவு பெரிய கூட்டத்தை சும்மா வச்சுக்கிட்டு இருக்க நாங்க என்ன கிறுக்கனுங்களா..? இவங்க என்ன வேணா பண்ணட்டும், பார்த்துகிறோம், நாங்களா அந்த நாலு ஊர்காரனுங்களானு..” என்று பேசிவிட்டு ரமேஷ் ஆட்களுடன் கிளம்பினான். இளைஞர்கள் அதிகம் கைவசம் இருக்க, அவர்களுக்கு சொல் பேச்சு கேட்கும் நிதானம் இல்லை. பெரியவர்கள் தான் இவர்களை அடக்க முடியாமல், கவலைப்பட்டு கொண்டிருந்தனர்.
வீடு அமைதியாக இருந்ததில் வெளியே நடந்த அத்தனை பேச்சும் உள்ளிருந்த யுவராஜ்க்கு கேட்க தான் செய்தது. அவன் கண்கள் சுருங்கியிருக்க, தயாநிதி உள்ளே வந்தார். எல்லாம் கேட்டு அமர்ந்திருந்த மருமகனிடம் என்ன பேச..?
தண்ணீர் விஷயத்தில் அவருக்கு மூன்று மடங்கு தண்ணீர் வேண்டும் என்பதில் இப்போதும் மாற்றமில்லை. ஆனால் ஊர் இளைஞர்களின் போக்கு அவரை லேசாக அச்சுறுத்தியது உண்மை. ஜெயலக்ஷ்மி கணவனை புரிந்து எதுவும் பேசாமல் டீ எடுத்து வந்து கொடுக்க, குடித்தவர் முகத்தில் அவ்வளவு சிந்தனை.
மாமனாரும், மருமகனும் அமைதியை தங்களுக்ககிடையே நுழைத்து கொண்டனர். இருவரிடமும் பேச்சு என்பது அளவு தான். அதுவும் ஜமுனா, ஊர் பிரச்சனை என்று இன்னும் சுருங்கி போனது.
யுவராஜ் நேரம் பார்த்தவன், வீட்டுக்கு கிளம்ப மனைவியை பார்த்தான். அவளும் புரிந்து கிளம்ப, “இன்னைக்காவது நைட் இங்க தங்கு..” ஜெயலஷ்மி சொல்ல,
“இருக்கட்டும்த்தை..” என்று கிளம்பிவிட்டான். பிரிவு என்ற ஒன்று நடந்ததில் இருந்து இரவு தங்குதல் என்ற ஒன்று இருவரிடமும் இல்லாமல் போனது. ஜமுனா தானே கார் எடுக்க, யுவராஜ், மாமனாரை பார்த்து தலையசைத்து கிளம்பிவிட்டான்.
வெளியே இருள் சூழ ஆரம்பித்திருக்க, பஸ் பிரச்சனையில் ஆட்களின் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகம். ஊரை கடக்கும் வரை, ஜமுனா கார், அதில் இருக்கும் யுவராஜ் என்று மக்களின் பார்வை இவர்கள் மேல் பதிந்து கொண்டே இருந்தது.
ரமேஷ் ஆட்கள் முறைப்பு நன்றாகவே தெரிய, “இது அவாய்ட் பண்ண முடியாதா..?” என்றாள் ஜமுனா.
“ம்ப்ச்.. பார்த்துக்கலாம்..” என்றவன், “அப்ளிகேஷன் வந்ததா..?” என்றான் மனைவியை பார்த்து. ஜமுனா முகம் மாற காரின் வேகத்தை கூட்டினாள்.
“மெல்ல போடி..” யுவராஜ் சட்டென்று அதட்டவே செய்ய, ஜமுனாவின் வேகம் குறையவே இல்லை. யுவராஜ் கண் மூடி கொண்டான். தாடை இறுகி அவன் நிலைய சொன்னது.
மாற்றங்கள் அதையும்
தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுதடி
நீ அற்ற இரவு
வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி..!
காரில் ஒலித்த பாடல் அவனின் நிலைய அப்படியே சொல்ல, இறுகிய தாடை தளர்ந்து, முகம் சோர்வுக்கு சென்றது.
“ப்ளீஸ்ங்க.. MD கைனகாலஜி படிக்க சீட் கிடைச்சிருச்சு, இப்போ வேண்டாம் சொன்னா எப்படி..? ஒரு மூணு வருஷம் மட்டும். சீக்கிரம் போயிடும்.. ப்ளீஸ்ங்க..” அன்று தன்னிடம் கெஞ்சிய மனைவி இன்று கண் முன் நின்றாள்.
இது நிலை இல்லை
வெறும் மலை அன்றோ
இது மலை இல்லை
சிறு மழை என்றோ
இந்த நொடிகள் கனவே
எனவே உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு
முத்தமிட்டு தள்ளிவிட்டு போ உறவே..!
ஜமுனா தொண்டை குழி அடைக்க, கண்கள் பாதையை மறைத்தது. கண்களை மூடி திறந்து தன்னை நிதானப்படுத்தியவள் வேகத்தை குறைத்து, மெல்ல செல்ல ஆரம்பித்தாள். கண்களை திறக்காமலே மனைவி நிலை புரிந்தது.
யுவராஜ் வீடு வர, காரை நிறுத்தி கணவன் முகம் பார்த்தாள். அவன் இறங்கவும் இல்லை. கண்ணை திறக்கவும் இல்லை. பதில் சொல்லாமல் இறங்க மாட்டான், புரிந்த விஷயம் தான். ஆனால் அது கோவத்தை கொடுத்தது.
“இன்னும் எத்தனை வருஷத்துக்கு என்னை இப்படியே டார்ச்சர் பண்ணுவீங்க..?” குரல் உயர்ந்து தான் வந்தது.
“நான் சாகிற வரை, இல்லை நீ சாகிற வரை..” என்றான் அவன் சாதாரணமாக.
ஜமுனா மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்தவள், “முடிஞ்சு போன விஷயத்தை ஏன் திரும்ப திரும்ப தோண்டனும்.. விட்டுடுங்க..” என்றாள்.
“எதுவும் முடியல, நீ பார்ம் பில் பண்ணி கொடு..” என்றான் கண்களை திறந்து.
“முடியாது..” ஜமுனா மிகவும் உறுதியாக மறுக்க,
“நானே உன் பேர்ல பண்ணுவேன்..” என்றான் கணவன்.
“பண்ணுங்க.. படிக்கவும் நீங்களே போங்க..” என்றாள் மனைவி தோள் குலுக்கி.
“அது முடியாது, நானும் என் பொண்ணும் அடுத்த மாசம் UK போறோம்..” என்றான்.
“என்ன..?” ஜமுனா அதிர,
“நீ படிச்சு முடிச்சுட்டு சொல்லு, நாங்க வரோம்..” என்றான்.
“என்னை உங்களை வெறுக்க வச்சுடாதீங்க..” ஜமுனா அவனை நேருக்கு நேர் பார்த்து சொல்ல,
யுவராஜ் மனைவி பின் தலைக்கு கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன், “இன்னுமா என்னை வெறுக்கலை..?” என்றான் நெற்றியோடு நேற்றி முட்டி.
“நீங்க என்னை கொல்லணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க..” ஜமுனா அவன் பிடியில் இருந்து கொண்டே கேட்க,
“அப்போ நீ என்னை பண்றதுக்கு பேர் என்ன..?” என்றான் உதட்டால் அவள் மூக்கை உரசி.
“உங்களுக்கு வேணாம்ன்னா நான் படிக்க கூடாது, வேணும்ன்னா நான் படிக்கணும், இதுக்கு பேர் என்னன்னு உங்களுக்கு தெரியுதா..?” அவனின் வெற்று தோள்கள் அவளின் முகத்தை உரசும் தீயில் வெந்து போனாள்.
“என்னை முழுசா அடக்கி வச்சிருக்கிற நீ அடக்கு முறையை பத்தி பேச கூடாது..” என்றவன் விரல்கள் அவளின் பின் தலையை அழுத்தமாக வருடியது.
Advertisement