Advertisement
“பார்றா.. ஒரு காலத்துல முந்தானையில மூஞ்சை மூடி மணி கணக்கா படுத்துக்கிடந்தது எல்லாம் மறந்து போச்சு போல..” என்றாள் மனைவி கிண்டலாக.
“பாப்பா முன்னாடி இதென்ன பேச்சு..?” கணவன் கண்டிப்புடன் முணுமுணுத்தான்.
ஜீவிதாவோ இங்கு தூக்கத்திற்கு அப்பாவின் நெஞ்சில் சாய்ந்தாள். “பாப்பா.. உடனே தூங்க கூடாது..” யுவராஜ் மகளை தூக்கி தோள் மேல் போட முயல,
“கொஞ்சம் இருங்க..” ஜமுனா கை கழுவி வந்தவள், மகளை தூக்கி தன் தோள் மேல் போட்டு தட்டி கொடுத்தாள். சில நொடியில் ஜீவிதா ஏப்பம் விட, அங்கிருந்த பெட்டில் மகளை படுக்க வைத்தாள்.
“சரி நீங்க சாப்பிட வாங்க..” ஜமுனா கணவனுக்கு உணவு எடுக்க,
‘ஒன்னுமே நடக்காத மாதிரி எவ்வளவு சாதாரணமா இருக்கா பாரு..’ பல்லை கடித்தவன், “எனக்கு ஒன்னும் வேணாம். நீ பாப்பாவோட கிளம்பு.. மழை வர மாதிரி இருக்கு..” என்றான் மொபைலில் பார்வை வைத்தபடி.
ஜமுனா அவன் கையில் இருந்த மொபைலை எடுக்க, “உன் அண்ணன்காரன் என்னை போதும்ன்ற அளவு டென்ஷன் பண்ணிட்டான், நீயும் பண்ணாத.. கிளம்பு..” என்றான்.
“அதுக்கு தான் அவன் வாய், மூக்கு எல்லாம் உடைச்சாச்சே.. அப்புறம் என்ன..?” என்றாள் மனைவி.
“எலும்பை எண்ணியிருக்கணும்.. தப்பிச்சுட்டான்..” யுவராஜ் முகம் சிவக்க சொன்னான்.
“அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல சாப்பிடுங்க, கைக்கு வைத்தியம் பார்க்கணும்..” என்றாள் வீங்கியிருந்த தோளை பார்த்து.
“எனக்கு ஒன்னும் உன் வைத்தியம் தேவையில்லை.. உன் அண்ணனுக்கே பண்ணு போ..” என்றான் கணவன்.
“அவனுக்கு அவன் பொண்டாட்டி பண்ணுவாங்க.. நீங்க வாங்க..” என்றாள் மனைவி.
“எப்படிடி உன்னால என்கிட்ட இவ்வளவு சாதாரணமா பேச முடியுது, என்னமோ என்கூடவே பொழப்பு பண்ற பொண்டாட்டி மாதிரி இருக்க..?” என்றான் கோவமாக.
“உங்க கூடவே பொழப்பு பண்ணா தான் நான் உங்க பொண்டாட்டியா..?” ஜமுனா நிதானமாக கேட்க,
“அப்புறம் எதுக்கு அந்த பரதேசி உனக்கு இரண்டா.. ச்சு..” நிறுத்தியவன், பட்டென எழுந்து வெளியே செல்ல போக, அவன் கை பிடித்து தடுத்தவள்,
“அவன் ஏதாவது லூசு மாதிரி பேசினதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷன் எடுத்துக்கணுமா..? அவன் யாரு நம்ம வாழ்க்கையை பேச..? யாருக்கும் நாம அந்த ரைட்ஸ் கொடுக்கலை, யாரோ என்னவோ உளறினா நமக்கு என்ன..?” என்றாள் பொறுமையாக.
“பேசுவடி பேசுவ.. அவன் சொன்னது என்னை தான..? இப்படி உன்கிட்ட யாராவது பேசியிருந்தா உனக்கு தெரிஞ்சிருக்கும், அதுவும் இரண்டாவது எல்லாம் சொன்னா எப்படி எரியும்னு நல்லா புரிஞ்சிருக்கும்..”
“உங்களுக்கு தெரியுமா யாரும் என்கிட்ட எதுவும் பேசலைன்னு..” ஜமுனா அழுத்தமாக கேட்டாள்.
“இந்த மூணு வருஷத்துல எவ்வளவு கேள்வி, குற்றம் குறைய கடந்து வந்திருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்..”
“அப்படி ஏன் இந்த பிரிவுனு தான் நான் கேட்கிறேன்.. உன் படிப்புல ஆரம்பிச்சு இப்போ என் பொண்ணு வாழ்க்கை வரை என்னை டென்ஷன்லே வச்சிருக்க..? ஒத்துகிறேன், தப்பு என்மேல தான், நீ கேட்டப்போ நான் உன்னை படிக்க வைக்கல, அதுக்கு இவ்வளவு தேவையா..?” என்றான் உயரந்துவிட்ட குரலில்.
“ஷ்ஷ்.. பாப்பா..” ஜமுனா மெல்ல என்று சைகை காட்டியவள், “நீங்க முதல்ல உட்கார்ந்து சாப்பிடுங்க..” என்றாள்.
யுவராஜ் நின்ற இடத்தில் இருந்து அசையாமல், “என்ன பண்ணா இது எல்லாம் முடிச்சு வைப்ப சொல்லு..” என்றான். ஜமுனா உணவு எடுக்க சென்றவள் நின்று அவனை பார்க்க, “எனக்கு உன்னோட போராட முடியும்ன்னு தோணல, யார் யாரோ என் வாழ்க்கையை பேசுறது எனக்கு உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை எரியுது, என்னால என்னையே சமாளிக்க முடியல, உன்னை மீறி இந்த சொத்து, வண்டிங்க எல்லாம் பார்த்தன்னு தானே உன் கோவம், எல்லாத்தையும் தூக்கி ஆகாஷுக்கு கொடுத்திடவா..?” என்றான்.
ஜமுனா முகம் கசங்கி, வெறுமை நிரம்பியது. “நீங்க என்னை புரிஞ்சுக்கலை மாமா..” என்றாள். நீண்ட மூன்று வருடங்கள் கழித்து அவளிடம் இருந்து மாமா என்ற அழைப்பு. உணர்ந்தாலும் மனதுக்கு எட்டவில்லை. நிலையில்லா மனநிலை.
“என்ன புரிஞ்சுக்கலை.. நீ படிக்கணும்ன்னு ஆரம்பிச்சது தானே இது எல்லாம், அதான் இரண்டு வருஷமா உன் பின்னாடி அப்படி கெஞ்சிட்டு அலையறேனே, படி, படின்னு, ஏன் படிக்க மாட்டேங்குற..? உனக்கு பண்ணதுக்கு எனக்கு வலிக்க வைக்கணும்ன்னா..? அது தான்னா எனக்கு நல்லாவே வலிச்சிருச்சுடி.. போதும், இதுக்கு மேல முடியாது.. என்னை விட்டிரு..” என்றுவிட்டான்.
ஜமுனா கண்கள் கலங்க, திரும்பி நடந்தாள். “பதில் சொல்லு ஜமுனா..” யுவராஜ் அவளுக்கு பின் வந்து கை பிடித்து கேட்டான்.
ஜமுனா கண்ணீரை சுண்டிவிட்டவள், “உங்களுக்கு என்னை புரியல. இதுல நாம சேர்ந்து வாழ்ந்து மட்டும் என்ன பண்ண போறோம்..?” என்றாள் கணவன் முகம் பார்த்து.
அவள் சுண்டிவிட்ட கண்ணீர் அவன் நெஞ்சை சுட, வார்த்தைகள் வெப்பத்தை கிளறியது. “என்னடி புரியல.. நீ என்னை உயிரோட வதைக்கணும்ன்னே தான் இதெல்லாம் பண்ற, இல்லன்னா ஏன் படிக்க மாட்டேங்குற, சொல்லுடி சொல்லு..” என்று நின்றான்.
ஜமுனா ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதான படுத்தி கொண்டவள், “இந்த விஷயத்தையே நாம பேச வேண்டாம், எப்போ இது பத்தி பேசினாலும் சண்டை தான்.. விட்டுட்டு வந்து சாப்பிடுங்க..” என்றாள் அவன் கை விலக்கி.
“நான் இங்க வெடிச்சுட்டு இருக்கேன்டி.. நீ சாப்பிட சொல்றதிலே இருக்க..” யுவராஜ் டென்ஷனில் தலை கோதி கொண்டான்.
ஜமுனா கணவனை நேரே பார்க்க, அவனும் ஆறாத சூட்டுடன் அவளை பார்க்க, கணவனை உடல்கள் உரசும் அளவு நெருங்கியவள், அப்படியே அவனை அணைத்து கொண்டாள். “ஹேய்..” இதை எதிர்பார்க்காமல் யுவராஜ் திகைக்க,
“எனக்கும் உள்ள வெடிக்குது, நம்ம இரண்டு பேருக்கும் இது தான் மருந்து..” என்றாள் ஜமுனா நெஞ்சில் இருந்து கொண்டே. யுவராஜ் நொடி நின்றவன், அதற்கு மேல் தாங்க முடியாமல் அவளை இறுக்கமாக தன்னுடன் பிணைத்து கொண்டான்.
இன்னும் தீராத அனல் தான். ஆனால் குளிர்ந்த காற்று அந்த அனலின் வெப்பத்தை சற்று சாந்தப்படுத்துவது போல் இந்த அணைப்பு. அவனின் வீங்கிய கை வலி கூட அவனுக்கு இப்போது தெரியவில்லை. இன்னும் இன்னும் மனைவியை தன்னுடன் ஓட்ட வைத்து கொண்டிருந்தான்.
அவன் முகம் அவள் கழுத்தில் புதைந்து, அவளின் வாசனையை தன்னுள் நிரப்பினான். வெளியே மழையின் மண் வாசனை, அவன் மனைவியின் வாசத்தை தடை செய்யவில்லை. ஜமுனா அடைத்த தொண்டை வலியுடன் கணவனின் அணைப்பில் இருந்தாள். மனம் விட்டு அழுக அவ்வளவு துடிப்பு. என்னமோ அழ கூடாது என்ற வைராக்கியம். கடித்த உதட்டுடன் கணவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள். யுவராஜ் மனைவியை அணைத்த வாக்கிலே, தன் முகத்துக்கு தூக்க, கையில் பளீரென வலி. “ஸ்ஸ்..” என்றுவிட்டான்.
“அச்சோ.. கை..” ஜமுனா விலக பார்க்க, யுவராஜ் அவளை விடாமல் மேலும் சில நொடி அணைப்பில் வைத்தே விட்டான்.
“முதல்ல உட்காருங்க..” ஜமுனா அவனை உட்கார வைத்து, கையை பரிசோதித்தவள், “இன்ஜெக்ஷன் போடணும்.. காலையில இருந்து சாப்பிடாதது.. சாப்பிடுங்க..” என்று எடுத்து வந்தாள்.
யுவராஜ் ஸ்பூனிற்காக பார்க்க, ஜமுனா கணவனுக்கு ஊட்டினாள். யுவராஜ் மறுக்காமல் உணவை முடிக்க, வலிக்கு வைத்தியம் பார்த்தவள், பெல்ட் போட போனாள். “கிளம்பும் போது போட்டு போ..” என்றவன், கீழே அமர போனான்.
“இருங்க..” ஜமுனா பெட்ஷீட் விரிக்க, கால் நீட்டி சோர்வுடன் அமர்ந்தான். வெளியே மழை வெளுக்க ஆரம்பித்திருந்தது. சாரல் அடிக்க, ஷெட்டின் கதவை மூடி வந்தவள், யுவராஜ் கண் மூடி கட்டிலுக்கு சாய்ந்திருக்க, தானும் கணவன் பக்கம் அமர்ந்தாள்.
சில நிமிடம் இருவரிடமும் பேச்சு இல்லை. பேசினால் காயப்படுவோம் என்ற பயமோ என்னமோ..?
“உன் அண்ணா சொன்னது ஒரு விதத்துல சரி தான் இல்லை..” என்றான் யுவராஜ். ஜமுனா கணவன் முகம் பார்க்க, “வெளியே ஜம்பமா திரியற எனக்கு பொண்டாட்டி கூட ஒழுங்கா குடும்பம் நடத்த முடியல தானே..?” என்றான். உள்ளே மறுகிறான்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. அவங்கவங்க குடும்ப விஷயம் அவங்கவங்களுக்கு தான் தெரியும், மூணாவது மனுஷங்க பேசுறதுக்கு நாம பொறுப்பாக முடியாது, அது உண்மையும் ஆகாது..” என்றாள்.
யுவராஜ் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் தொண்டை குழி ஏறி இறங்கி கொண்டிருந்தது. “நீங்க கொஞ்ச நேரம் படுங்க.. மெடிசின் எடுத்துக்கிட்டது டையர்டா இருக்கும்..” என்றாள்.
யுவராஜ் அப்படியே இருக்க, தானே அவனை தன் மடிக்கு தலை சாய்த்தாள். யுவராஜ்க்கும் அவள் மடி வேண்டும் போல. மனைவி செயலுக்குட்பட்டு கண் மூடியவன் கைகள் தாலி கொடிக்கு அலைய, ஜமுனா தானே எடுத்து வெளியே விட்டாள்.
பழக்கம்போல அவளின் தாலியை எடுத்து முகத்தின் மேல் வைத்து மஞ்சள் வாசனையை நுகர்ந்தபடி, அவள் வயிற்றோடு ஒட்டி கொண்டான்.
இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனை அப்படியே இருந்தும், இருவரும் இந்த நொடி மற்றவர் அருகாமையில் தங்களை அமைதிபடுத்த முனைந்தனர். மழை ஓய்ந்த போது இங்கு இவர்களும் தங்களை மீட்டு கொண்டு அவரவர் இடம் கிளம்பினர். கணவனை அவன் வீட்டில் விட்டு, மகளுடன் அம்மா வீடு சென்றாள் ஜமுனா.
ஆனால் பேசியிருக்கலாம்.. இதை முடித்திருக்கலாம்.. என்று அடுத்த சில நாட்களிலே யுவராஜை நினைக்க வைத்தாள் அவன் மனைவி.
Advertisement