தரு 1
கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்
அலைபேசியில் ஒலித்தது பாடல்.
அவனது காலை நேர விழிப்பு மணியோசை அந்த பாடல்தான்.
இறை நம்பிக்கை என்று பெரிதாக அவனுக்கு எதுவும் இல்லையென்றாலும் அவன் மனத்திற்குகந்தவளின் மனத்திற்குகந்த பாடல் என்பதால் காலை நேரம் அந்தப் பாடலுடன்தான் விடியும் அவனுக்கு.
பாடல் ஆரம்பிக்கும் போதே விழித்து விட்டவன் அது முடியும் வரை காத்திருந்து அலைபேசியை எடுத்து அணைத்தான்.
எழுந்து படுக்கையில் அமர்ந்தான்…
அவன் விக்னேஷ் கார்த்திக்… ஆறடிக்கும் சற்று கூடுதல் உயரம், உறக்கத்திலிருந்து அப்போதுதான் எழுந்திருந்தாலும் முகத்தில் இயல்பாகவே ராஜகளை மிளிர்ந்தது. சிகை ஒரு ஒழுங்கில்லாமல் கலைந்து நெற்றியில் புரண்டிருந்த நிலை சாதாரணமாக இருப்பதை விட இன்னும் கவர்ச்சியாகக் காட்டியது அவனை…
27 வயது… அறிவையும் அனுபவத்தையும் குறிக்கும் அகலமான நெற்றி. கறுத்து அடர்ந்த புருவங்களுக்குக் கீழ் காந்தமாய்க் கவரும் கண்கள். கூர் நாசி. கறுகறுவென்ற அடர்த்தியான மீசை. அதில் பாதி மறைந்து விட்ட மேலுதடும் மேலுதட்டை விட்டு, பேசுவதற்கும் வாய் விட்டுச் சிரிப்பதற்கும் கூட அதிகம் பிரிந்திராத… மது, புகை என எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாததால் இயல்பிலேயே கொஞ்சம் சிவந்த தடித்த கீழுதடும் அவன் கொஞ்சம் அழுத்தக்காரன் என்பதைக் காட்டின.
படுக்கையை விட்டு எழுந்தவன் பல் துலக்கி விட்டு வந்து சிறிய டீபாயின் மேலிருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த ஒரு லிட்டர் தண்ணீரையும் ஓர் மூச்சில் வாய்க்குள் சரித்தான். சில நிமிடங்கள் பொறுத்து அந்த இரட்டைப் படுக்கையறை ஃப்ளாட்டில் இருந்த இன்னொரு படுக்கையறைக்குள் நுழைந்தான்.
அவனது உடற்பயிற்சிக் கூடம் அதுதான். ஒரு மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து முடித்தவன் மீண்டும் கூடத்துக்கு வந்தான்.
வியர்வையால் தொப்பலாக நனைந்திருந்த டிஷர்ட்டைக் கழற்றி பால்கனிக் கொடியில் க்ளிப் குத்தி மாட்டினான். அவன் வரும் அந்த நேரத்துக்காகவே அடுத்த வீட்டு பால்கனியில் காத்திருந்து, அவன் சிக்ஸ்பேக் படிக்கட்டு தேகத்தை விழுங்கி விடுபவள் போல் விழி விரித்து பார்த்த வினயாவைக் கண்டு கொள்ளாதவனாய் மீண்டும் வீட்டினுள் நுழைந்தான்.
வாசல் கதவைத் திறந்து கீழே கிடந்த அன்றைய நாளிதழை எடுத்துக் கொண்டு வந்து டேபிள் மேட்டின் மீது வைத்து மின்விசிறியின் கீழே நின்று அதைப் புரட்டலானான்.
கரணை கரணையாய்த் திரண்டிருந்த தசைக் கோளங்கள் மீது பூத்திருந்த உப்புத் துளிகள் உலரத் தொடங்க, பத்து நிமிடங்கள் பொறுத்துக் குளியலறைக்குள் நுழைந்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் காபி பிரவுன் நிறத்தில் முழுக்கைச் சட்டை கறுப்பு நிறக் கால்சராய், கறுப்பில் சாம்பல் கோடுகள் போட்ட டை என அணிந்து கொண்டு அலுவலகத்துக்குத் தயாரானான்.
தன் வெள்ளி நிற ஹோண்டா சிட்டியில் ஏறியவன் அடுத்த பத்தாவது நிமிடம் தன் அலுவலகத்தில் இருந்தான்.
மதன் க்ரூப் ஆஃப் கம்பனீஸ்!
தொழிற்சாலை பொன்னேரியில் இருந்தாலும் அலுவலகம் மத்திய சென்னையான சென்ட்ரலில் இருந்தது. இதன் நிறுவனர் மதனகோபால் ஓராண்டுக்கு முன் இறந்து விட அதற்கு முன்பே அவரின் வலது கையாகப் பொறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த விக்னேஷ் கார்த்திக் அப்பொழுதிருந்து முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டான்.
முழுப் பொறுப்பை எடுத்துக் கொண்டான் என்று சொல்வதை விட மொத்தமாகத் தன் பொறுப்பை மறந்து போனான் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதனால் வந்ததுதானே இன்றைய நிலை…
தலையைச் சட்டென உலுக்கி, பழைய நினைவுகளுக்குச் செல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தியவன் சுற்றிலும் பார்த்து வழியில் எதிர்ப்பட்டவர்களின் முகமன்களுக்கு பதிலாகத் தலையசைத்தவாறே விக்னேஷ் கார்த்திக் chief executive officer என்று போட்டிருந்த அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
அங்கு அவன் மேஜையில் கோப்புக்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்த பிரதீபா நிமிர்ந்து பார்த்து “குட் மார்னிங்க் பாஸ்!” என்றாள்.
“மார்னிங் தீபா!”
அவன் மேஜைக்குப் பின்னிருந்து வெளியே வந்த பிரதீபா அழகி…ஒரு முறை பார்த்தவர் மறுமுறை திரும்பிப் பாராமல் போக முடியாது. அழகு மட்டுமல்லாமல் உடை உடுத்தும் ஒழுங்கு, பணிகள் செய்யும் பாங்கு, குறிப்பறிந்து செயலாற்றும் குணம் என எல்லாவற்றிலும் தேர்ந்தவள்.
அவன் சென்று இருக்கையில் அமர, ப்ரதீபா “நான் உங்களுக்கு டிஃபன் கொண்டு வர்றேன் பாஸ்”என வெளியேறினாள்.
அலுவலக நாட்களில் அவனுக்கு அங்கேயே உணவகத்தில்தான் காலை, மதிய உணவு.
தனக்கும் சமைக்கத் தெரியாது… வீட்டிலும் சமைக்கப் பெண்கள் இல்லை என்பதோடு முதலாளியே சாப்பிடுகிறார் என உணவும் தரமானதாக இருக்கும் என்பதால் அவன் இப்படி ஒரு பழக்கத்தைக் கைக்கொண்டிருந்தான். முதலாளி மதனகோபால் கூட அங்கேயேதான் சாப்பிடுவார்.
அவர் உயிருடன் இருந்த போது அவருடன் கேன்டீனுக்கே சென்று விடுவான்…ஆனால் இப்போதெல்லாம் ஏனோ தனிமையில் அமர்ந்து உணவருந்தத் தோன்ற, அறைக்கே உணவைக் கொண்டு வரச் சொல்லி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
சில நிமிடங்களில் கையில் ட்ரே ஏந்திய பணியாள் பின்தொடர உள்ளே வந்த ப்ரதீபா அவனது உணவு மேஜையில் அந்த ட்ரேயை வைக்கப் பணித்து விட்டு அத்துடன் குடிக்கத் தண்ணீர், மடியில் போட்டுக் கொள்ள சிறிய துவாலை என எடுத்து வைத்து விட்டு வெளியேறினாள். அவன் உண்டு முடித்து அழைப்பு மணியை அடிக்க மேஜையைத் தன் மேற்பார்வையில் சுத்தம் செய்யச் செய்தாள்.
ப்ரதீபா எப்போதுமே அப்படித்தான்…தானே செய்கிறேன் என எல்லாவற்றையும் இழுத்துத் தலையில் போட்டுக் கொள்ளவும் மாட்டாள். அதே நேரம் பிறர் தலையில் கட்டி விட்டுத் தான் சும்மா உட்காரவும் மாட்டாள். யாரை எப்படி விரட்டி வேலை வாங்க வேண்டும் என்ற வித்தையை நன்கு அறிந்தவள் அவள்.
கைகளைத் துடைத்துக் கொண்டு விக்னேஷ் தன் இருக்கையில் அமர, குறிப்பேட்டுடன் அவன் எதிரில் வந்து நின்றாள்.
“அந்த ஜெர்மன் கம்பனி கூட எத்தனை மணிக்கு மீட்டிங்?”
“லெவென் ஓ க்ளாக் பாஸ்”
“அந்த டிட்டைல்ஸ் எல்லாம்…”
“இந்த ஃபைல்ல இருக்கு பாஸ்…இன்னிக்கு முக்கியமா இன்ஸ்ட்ரக்ஷன் ஏதாவது இருந்தா சொல்லிட்டீங்கன்னா நான் போவேன். நீங்க நிதானமா ஃபைல் பார்க்கலாம்”
தன் குறிப்பேட்டை எடுத்தவன் முதல் நாளே தான் குறித்து வைத்திருந்த அலுவலக வேலைகளில் அவளுக்கான, அன்றைய வேலைகளைச் சொல்ல அவள் குறிப்பெடுத்துக் கொண்டாள்.
“ஓகே பாஸ்…நான் சரியா 10.45 க்கு வரேன்” என்று விட்டு வெளியேறினாள்.
சந்திப்புக்குத் தேவையான விவரங்கள் அடங்கிய கோப்பு என ப்ரதீபா குறிப்பிட்டுச் சென்றிருந்ததைக் கையில் எடுத்தவன் முதல் பக்கத்தைப் புரட்ட அதில் சந்திப்புக்கு அழைத்திருக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் இருந்தன.
நிறுவனர் என்ற இடத்தில் மிஸஸ் நீலாயதாட்சி சுப்ரமணியன் எனக் குறிப்பிட்டிருந்ததோடு அந்தப் பெண்மணியைப் பற்றிய விவரங்களும் இருந்தன.
அவர் வயதைக் கவனித்தவனுக்குச் சற்று வியப்புத்தான்…24 வயது… தன்னை விட மூன்று வயது சிறியவள்…
மேலும் விவரங்களைப் படிக்க ஆரம்பித்தான்.
பதிமூன்று ஆண்டுகள் முன் இவர் கணவன் சுப்ரமணியன் ஆரம்பித்த நிறுவனம் அது. ஆறு ஆண்டுகள் முன் அவர் ஏதோ நோயால் இறந்து விட அதன் பின் நீலாயதாட்சி தொடர்ந்து நடத்தி வருகிறார். எம்பிஏ படித்திருக்கிறார். 24 வயதிலேயே ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகள்.
ஆள்காட்டி விரலைத் தாடையில் தட்டி யோசித்தவன் ஆறு ஆண்டு முன் கணவன் இறந்து விட்டார்…24 வயதுதான் ஆகிறது…ஆனால் இரண்டு பிள்ளைகள் என்றால் மிக சிறிய வயதில் திருமணமாகி இருக்க வேண்டும் என நினைத்தவன் திருமண ஆண்டைத் தேட அது எங்கும் குறிப்பிடப்படவில்லை.
நிறுவனரின் சொந்த விவரங்கள் இவ்வளவு இருப்பதே அதிகம். ஆண் துணையில்லாமல் இத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறாரே என்ற ஆர்வத்தில் தேடியவன் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்து படிக்கலானான்.
தாயும் பிள்ளைகளும் இருக்கும் தெளிவில்லாத புகைப்படம் ஒன்று கீழே ஒட்டி வைக்கப்பட்டு இருந்தது. ‘கிடைத்ததில் இதுதான் கொஞ்சம் தெளிவான படம்’ என்ற ப்ரதீபாவின் குறிப்புடன்… ஏதோ பத்திரிக்கையில் ப்ரசுரமான துண்டு போல…ஒருவர் முகமும் தெளிவாக இல்லை.
தொடர்ந்து நிறுவனம் குறித்த விவரங்களைப் பார்வையிடலானான்.
கணவர் நடத்திய ஏழு ஆண்டுகள் இருந்த அதே வளர்ச்சியை அவரில்லாத அடுத்த ஆறு ஆண்டுகளும் தக்க வைத்திருக்கிறாரே… திறமையான ஆள்தான் போல… அவனைப் போலல்லாமல்…
ஒரு கணம் எண்ண ஓட்டம் தடைப்பட்டுக் கடந்த காலத்தை நோக்கிச் செல்ல மனதின் தலையில் ஒரு தட்டு வைத்து நிகழ்காலத்துக்குத் திருப்பினான்.
நிறுவனம் தொடர்பான மற்ற விவரங்களை அலசி ஆராய்ந்து முடித்தவன் நேரத்தைப் பார்க்க அது பத்தே முக்காலை நெருங்கிக் கொண்டிருக்க அதே நேரம் ப்ரதீபாவும் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.
“யுவர் டீ பாஸ்” என்று அவள் கொணர்ந்த ஆவி பறக்கும் டீயை அவன் அருந்தி முடிப்பதற்குள் அவன் மடிக்கணினியை சரியான இடத்தில் வைத்து, குறிப்புக்கள் எழுத எனக் குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து வைத்து எனத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யலானாள் ப்ரதீபா.
சரியாகப் பதினோரு மணிக்கு இணைப்பைப் பயன்படுத்தித் தொடர்பை ஏற்படுத்த அவன் முயற்சிக்க தொடர்பு கிடைத்ததும் திரையில் அவன் கண்முன் இரு நீல விழிகள் காட்சியளித்தன.
அவன் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே இணைப்புத் தொடர்பு விட்டுப் போனது.
“வாட் இஸ் ஹேப்பெனிங் தீபா?”
“நோ ஐடியா பாஸ்” என்றவள் அலுவலகத் தொலைபேசியில் அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசினாள்.
சில நிமிடங்கள் பின்,
“ஏதோ டெக்னிகல் ப்ராப்ளம் பாஸ்…சரி செய்துட்டு இருக்காங்களாம்”
அவனுக்கு எரிச்சலாக இருந்தது… ‘பேரு பெத்த பேரு தாவ நீலு லேது’ என்று தெலுங்கில் ஒரு பழமொழி சொல்வார்கள் அது போல பெரிய நிறுவனம் என்று பெயர்… சொன்ன நேரத்துக்குப் ப்ரச்சனை இல்லாமல் ஒரு சந்திப்பை நிகழ்த்த முடியவில்லை.
“எவ்வளவு நேரம் ஆகுமாம்?”
“நோ ஐடியா பாஸ்”
திரும்பி அவளை முறைத்தவன் அவள் ‘இதில் என் தப்பு என்ன’ என்பது போல் பார்க்க சலிப்பாக இருக்கையில் சாய்ந்தான்.
எப்போதும் காலை வந்தவுடன் அலுவலகத்தை முழுவதும் ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு வந்துதான் உட்காருவான். இன்று இந்த சந்திப்பின் முக்கியத்துவம் கருதியே இதை முடித்து விட்டுப் போகலாம் என்று அவன் நினைத்திருக்க தன் வழமை பாதிக்கப்பட்டதில் அவனுக்குக் கோபம் வந்தது.
மேலும் அரைமணி நேரம் காக்க வைத்து விட்டுப் பின் அந்த நிறுவனத்தில் இருந்து தகவல் வந்தது…
இன்னும் தொழில்நுட்பக் கோளாறு சரியாகவில்லை…அவர்கள் நிறுவனருக்கு முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட வேலைகள் அடுத்தடுத்து இருப்பதால் இணையச் சந்திப்பை மறுநாள் வைத்துக் கொள்ளலாமா எனக் கேட்டு…
தொலைபேசியில் வந்த தகவலைக் கேட்டவன் “புல்ஷிட்!” என்று எழுந்து விட்டான்.
“தேவையில்லை…அந்தக் கம்பனியோடு எந்தத் தொடர்பும் வேணாம்னு சொல்லிடு” என்றவன் விறுவிறுவென எழுந்து தன் வழமையான வேலைகளைப் பார்க்க வெளியே சென்று விட்டான்.
பெரிய எட்டு மாடிக் கட்டிடம் அது. நிர்வாக வேலைகள் முழுக்க அங்கேதான் நடந்து வந்தன. ஒவ்வொரு தளமாகச் சென்று முதல் நாள் மாலை நிறுத்திய வேலைகள் அன்று காலை முதல் எந்த அளவு நிறைவேறி இருக்கின்றன, தொழிற்சாலையில் இருந்து வர வேண்டிய சரக்கு வந்து விட்டதா, அங்கே சோதனை முடிந்த பின் மற்ற கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியது அனுப்பி வைக்கப்பட்டதா, மேலும் அவனிடம் தெரிவிக்க வேண்டிய புகார்கள் ஏதாவது இருக்கின்றதா, அரசாங்கம் தொடர்பான வரி விவகாரங்கள் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கின்றனவா எனப் பலதும் அவன் பார்க்க வேண்டி இருந்தது.
எனவே தன் வழக்கமான மேற்பார்வையிடுதலை முடித்து விட்டு இரண்டு மணி நேரங்கள் கழித்து மீண்டும் தன் அலுவலறைக்கு வந்தவன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
கண்களை மூடித் தலையைப் பின்னுக்கு சாய்த்து அமர்ந்தவன் மனதில் காலையில் அந்த சந்திப்புத் தொடர்பாக நடந்த நிகழ்ச்சிகள் அலைமோத அவசரப்பட்டு விட்டானோ எனத் தோன்றியது அவனுக்கு…
பெக்கர்ஸ் கான்ட் பி சூசர்ஸ் ( பிச்சைக்காரர்களுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை) என்று சொல்வார்கள்…அது போல அவன் பணக்கஷ்டத்திற்காகத்தான் அடுத்த நிறுவனத்தின் உதவியை நாடியதே… இன்று ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததைக் கொஞ்சம் பொறுமையுடன் கையாண்டிருக்கலாம்…
அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, பின் அவகாசத்தில் அழும் குணத்தை, ஒரு பெரிய அடி வாங்கியும் அவன் உயிருக்கு ஒப்பானவளை இழந்தும் அவன் மாற்றிக் கொள்ளவில்லையானால் அது நல்லது இல்லையே என நினைத்தவன் இன்டர்காமை எடுத்தான்.
“எஸ் பாஸ்!”
“அந்தக் கம்பனில இனி எதுவும் கான்டாக்ட் பண்ண வேணாம்னு சொல்லிட்டியா தீபா?”
அந்தப் பக்கம் பதிலில்லை.
“என்ன தீபா?”
“உங்களைப் பத்தி நல்லாத் தெரிஞ்சும் அப்படிச் சொல்வேனா பாஸ்?”
“பின்ன?”
“உங்களுக்கு இருக்கிற அபாய்ன்ட்மென்ட்ஸ் ரிஷெட்யூல் பண்ணனும்னு சொல்லி நானே மறுபடி கான்டாக்ட் பண்றேன்னு சொல்லி இருக்கேன் பாஸ்”
“வெரிகுட்!” என்றவன் மீண்டும் “தேங்க் யூ தீபா” என ஆழ்ந்த குரலில் உணர்ந்து நன்றி உரைத்தான்.
“விடுங்க பாஸ்…நாம அப்படியா பழகி இருக்கோம்… அப்போ அவங்களுக்குக் கூப்பிட்டு ஓகே சொல்லிறவா பாஸ்?”
“வேற வழி…சொல்லிடு…ஆனா நாளை கொஞ்சம் எல்லாம் முதல்லயே செக் பண்ணிட்டு மீட்டிங்குக்கு வரச் சொல்லிப் பாலிஷாச் சொல்லிரு… டேக் இட் ஃபார் க்ரான்டட் மாதிரி அவங்க எடுத்துக்கக் கூடாது பாரு… அதுக்குத்தான்”
“ஓகே பாஸ்…வில் டூ”
தன் கணினியைத் திறந்தவன் அதில் மின்னஞ்சல்களைப் பார்க்க ஆரம்பித்தான். நேரம் கடந்திருக்க இன்டெர்காம் ஒலிக்க அதை உயிர்ப்பித்து “எஸ்” என்றான்
மறுமுனையில் தீபா “நீங்க ஃபேக்டரிக்குக் கிளம்புற நேரம் ஆச்சே பாஸ்” எனவும்,
கைக்கடிகாரத்தைத் திருப்பி மணி பார்த்தவன், “ம்ம்ம்…இதோ கிளம்பிட்டேன்… லன்ச் அங்க கேன்டீன்ல சாப்பிட்டுடறேன்”
“ஓகே பாஸ்”
கிளம்பியவன் கண்களில், நாட்காட்டியில் இருந்த படம் விழுந்தது.
மேலும் கீழுமாக இரு கைகளையும் குறுக்கு வசத்தில் வைத்து முகத்தை மறைத்து, கண்களை மட்டும் காட்டிக் கொண்டிருந்த நீல விழிகள் கொண்ட அந்தப் பெண்ணின் படம் அவனுக்குக் காலையில் கணினியில் கண்ட நீல விழிகளை நினைவூட்டியது.
அந்த நீல விழிகள் அவனுக்குள் மெல்லிய குறுகுறுப்பை ஏற்படுத்தியிருந்தன… மனையாளில்லாமல் தனிமையில் கழிந்த இந்த ஆறு ஆண்டுகளில் இதைப் போல் ஏற்படுவது முதல் முறை… அந்தப் பெண் மணமானவள், இரு குழந்தைகளின் தாய் என்பதையெல்லாம் தன் அறிவுக்கு நினைவுறுத்தி மனதுக்கு மெல்லிய அதட்டல் போட்டவன் அலுவலகத்தில் இருந்து கிளம்பினான்.
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன் கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
ஐவகை அம்புகள் கை வழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது