அத்தியாயம் 10

அவள் அதற்கெல்லாம் பயப்படவில்லை. என்ன செய்து விடுவாய் என்பது போல அவனைப் பார்த்திருந்தவள், “சீ!” என்றவன் பிடி தளர, தொண்டையைத் தடவி விட்டுக் கொண்டு தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

“எப்பப் பாரு உடம்பு உடம்புன்னு…ஏன் நீலா…உடம்பைத் தாண்டி மனசுன்னு ஒன்னு இருக்கு…அதைப் பத்தி நினைச்சுப் பார்க்க மாட்டியா?”

“மனசு…ஹஹ…மனசுன்னு ஒன்னு இருந்துச்சு… எனக்கும்… ஆனா…” அவள் குரல் லேசாகத் தழுதழுக்க “அதெல்லாம் இப்ப எதுக்கு…நீங்க கிளம்புங்க…இனி இங்க வராதீங்க… அன்னிக்கு சொன்னதைத்தான் இன்னிக்கும் சொல்றேன்… ஒருவேளை நீங்க வரலைன்னா நானே டாக்டர்க்கு ஃபோன் செய்து வரச் சொல்லி இருப்பேன். ஐயம் கேபபிள் ஆஃப் டேகிங்க் கேர் ஆஃப் மைசெல்ஃப்…(என்னால என்னைப் பார்த்துக்க முடியும்) அதுனால சும்மா ஹெல்ப் பண்றேன் பேர்வழின்னு வந்து நிக்காதீங்க…அப்புறம்…”

“அப்புறம்…அப்புறம்…சொல்லு நீலா…வந்து நின்னா என்ன செய்வே?”

அவன் நக்கல் குரலில் கடுப்பானவள் அவனுக்கு அதிக இடம் கொடுத்து விட்டோம் என உணர்ந்து கொண்டவள் போல் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டி விடும் நோக்கத்தில் “வந்தா செக்யூரிட்டிகிட்ட உங்களை உள்ள விட வேணாம்னு வார்ன் செய்து வச்சுடுவேன்” என்று சொல்லி முடித்து விட்டு அவன் முகத்தைப் பார்க்க அதிர்ந்து போனாள்.

அவனை மிரட்டவெனச் சொன்ன வார்த்தைகள் அவன் தன்மானத்தைச் சீண்டி விடும் என்பதை அவள் உணரவில்லை.

அவள் சொன்னதைக் கேட்டு அவன் முகத்தில் கோபம் தெரிந்தாலும் அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் கோபம் மறைந்து புன்னகை பூத்தது மட்டுமல்லாமல் அவளை நன்றாக நெருங்கி வந்தான்.

அவள் அதிர்ச்சி மாறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க “நீ ஆஃபிஸ் வர வரைக்கும் நான் வீட்டுக்கு உன்னைப் பார்க்க வரத்தான் செய்வேன்… உன்னால முடிஞ்சாத் தடுத்துப் பாரு…வர்ட்டா…டேக் ரெஸ்ட் பேபி” என்றவன் அவள் கன்னத்தை மெலிதாகத் தட்டி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அவன் செய்கையில் வந்த ஆத்திரத்தில் புசுபுசுவென மூச்சு விட்டவளால் அப்போதைக்கு வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.

அன்று மாலை ஜெர்மனியிலிருந்து வின்னி அழைக்க, எடுத்துப் பேசியவளின் குரல் ஙஞனநமன போட்டதைக் கண்டு கொண்டவன் அடுத்த வினாடி வீடியோ காலில் அழைத்திருந்தான்.

தயங்கிக் கொண்டே எடுத்தவளைத் திரையில் பார்த்தவன் முகம் சடுதியில் கோபமானது.

“என்ன பண்ணி வச்சுருக்கே உடம்பை?”

“அது…வந்து…வின்னி”

தன் உருவத்தின் மாற்றத்தை உணர்ந்தே இருந்தவளால் பதில் பேச முடியவில்லை. சளிப் பிடித்திருந்ததில் முகம் கொஞ்சம் வீங்கி இரப்பைகள் தடித்து மூக்கு சிவந்து என அவள் முகமே மாறித்தான் தெரிந்தது.

“சும்மால்லாம் உனக்குச் சளிப் பிடிக்காது…என்ன செய்து வச்ச? சளி மட்டும்தானா இல்லை வேற…”

வேண்டுமென்றே அவன் நிறுத்த, சின்னதாகி விட்ட குரலில் “இல்ல காய்ச்சல், உடம்புவலி எல்லாம் இருக்கு” அவள் பதிலிறுத்தாள்.

பொறுமை பறந்து போக “அறிவில்ல உனக்கு…இப்பிடி உடம்பைப் போட்டுப் படுத்தி வச்சுருக்கே…என்னதான் செய்து தொலைச்சே… அதையாவது சொல்லு”

“மழைல…நனைஞ்சேன்”

அவள் சொல்லி முடித்த நேரத்தில் அவன் கோபக் குரல் அடுத்த அறையை எட்டி இருந்ததில் அவன் மனைவி கேத்தரீனும் திரையில் தோன்றினாள். கணவனின் தோளில் கைவைத்தவள் “என்னாச்சு வின்னி… ஏன் இப்பிடி நீலாவைத் திட்டுறீங்க? நீங்க அவங்களைத் திட்டவே மாட்டீங்களே!”

“பாரு இவ முகத்தை…மழையில நனஞ்சு தேவை இல்லாம சளி காய்ச்சலை வரவழைச்சிருக்கா”

அவளைப் பரிதாபமாகப் பார்த்த கேத்தி “ஏன் நீலா நீங்க கவனமா இருப்பீங்களே! என்னாச்சு?”

“இல்ல கேத்தி! என்னவோ மழைல நனையனும் போல இருந்துச்சு…இந்த அளவு ஃபீவர் வரும்னு நானே எதிர்பார்க்கல” என்றவள் பேச்சை மாற்ற விரும்பி வின்னியின் பக்கம் திரும்பி “எதுக்குக் கால் பண்ணினே வின்னி?”

அவள் பேச்சை மாற்ற முயற்சிப்பதைக் கண்டுகொண்டவனாக ஒருகணம் அவளை ஆழ்ந்து பார்த்தவன் தான் அழைத்த விவரங்களைச் சொல்லலானான். மறுபடி அவன் அவள் உடல்நிலை குறித்த பேச்சை எடுக்காமல் சமாளித்தவள் பேசி முடித்து அலைபேசியை அணைத்தாள்.

அவள் எண்ணங்கள் ஜெர்மனிக்கு போன புதிதில் நடந்த நிகழ்வுகளுக்குச் சென்றன.

கணவனை இழந்து மாமியாருடன் கையில் ஒரு பிள்ளையும் வயிற்றில் ஒரு பிள்ளையுமாக ஜெர்மனிக்குச் சென்ற போது அவளைத் தாயாக அவள் மாமியார் மங்கையர்க்கரசி தாங்கினாலும் தோழனாக… ஆசானாக… வழிகாட்டியாக விளங்கியவன் வின்னிதான். ‘மை ஃப்ரெண்ட் ஃபிலாசஃபர் அன்ட் கைட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதைப் போல்…

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் நின்றவளைக் கைபிடித்துக் கூட்டிச் சென்று, தொழிலைக் கற்றுக் கொடுத்து, அவள் படித்துப் பட்டம் பெறுவதற்கும் உதவி செய்து, முடிவெடுக்கத் தயங்கி நின்ற போதெல்லாம் தைரியம் கொடுத்து என எல்லாமுமாக இருந்தவன் அவன்தான்.

ஆனால் அவனுக்கும் எல்லாமுமாக அவளை ஆகக் கேட்ட போது அவள் கொஞ்சம் கலங்கித்தான் போனாள்.

ஆம்…நீலாவின் மகன் யதுநந்தன் பிறந்து ஒரு வருடம் ஆகியிருந்த நிலையில்தான் வின்னி தன் மனதை அவளிடம் கோடி காட்டினான்.

நட்பைத் தாண்டிய நெருக்கத்தை அவள் வின்னியிடம் உணரவில்லை. அவன் அவளை இயல்பு போல் அணைத்தாலும் சில வேளைகள் தொழிலில் அவள் சாதிக்கும் போது நெற்றியில் முத்தமிட்டுப் பாராட்டினாலும் அங்குள்ள நாகரீகத்தின்படி அதை விகல்பமாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் அவன் பார்வைகள் மாறி ஒரு ஆவலுடன் அவள் மீது படிந்ததை உணர்ந்து விலக நினைக்கையில் அவன் தன் காதலைக் கூறியிருந்தான்.

இரண்டு நாட்கள் அவனிடம் நேரம் கேட்டு அவன் மனம் நோகாதவாறு பதமாக தன் உணர்வுகளை எடுத்துக் கூறி அவனுக்குப் புரிய வைத்தவள் அதன் பின் அவனுக்கு நல்ல தோழியாகத் தொடர்ந்தாள்.

அவர்களுடன் தொழில்ரீதியாகத் தொடர்பு கொண்டிருந்த ஜெரார்டுடன் சந்திப்பு நேரங்களில் உடன் வரும் அவர் மகள் கேத்தரீனின் பார்வை ஆவலும் ஏக்கமுமாக வின்னியின் மீது படிவதைக் கவனித்தவள் முதலில் அவளிடமும், பின் ஜெரார்டிடமும், அதன் பின் வின்னியிடமும் பேசி  அனைவரையும் சம்மதிக்க வைத்து அவர்கள் திருமணத்தை முன்னின்று நடத்தியும் வைத்தாள்.

அன்றிலிருந்து கடந்து போன இரண்டு ஆண்டுகளாக வின்னியும் கேத்தரீனும் அவள் நலம் விழையும் நண்பர்களாக உரிமையாய்த் தோள் கொடுக்கும் உறவுகளாகவே விளங்கி வந்தார்கள்.

நெடுமூச்செரிந்தவள் பொன்னம்மா கொண்டு வந்து கொடுத்த இரவு உணவுடன் மாத்திரைகளையும் விழுங்கி விட்டுப் பிள்ளைகளின் அறைக்குச் சென்று கதவை லேசாகத் திறந்து பார்க்க அவர்கள் நல்ல உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.

காய்ச்சல் ஒட்டிக் கொள்ளும் என்று கடந்த இரண்டு நாட்களாக அவர்களை அவள் அருகிலேயே சேர்க்கவில்லை. இரவு உறங்கப் போகும் முன் அறை வாசலில் நின்று குட்நைட் சொல்லி விட்டு போனார்கள்தான். ஆனால் பிள்ளைகளைக் கட்டியணைத்து முத்தமிட்டு காலை இரவு வணக்கம் சொல்வதை இரண்டு நாட்களாகச் செய்யாதது எதையோ இழந்ததைப் போல்தான் இருந்தது அவளுக்கு.

அறைக்கு வந்தவளுக்கு உண்டிருந்த மாத்திரைகளின் புண்ணியத்தில் உறக்கம் வந்தாலும் மனம் விழிப்பாக இருந்து இமைகளை இணைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

விக்னேஷ் காலையில் சொல்லிப் போனவற்றையே மனம் சுற்றி வந்தது.

தவறு செய்து விட்டாளோ! ஜெர்மனியிலேயே இருந்திருக்க வேண்டுமோ… இந்தியா வந்து தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்கி விட்டாளோ எனத் தோன்றியது அவளுக்கு… கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம். விரக்திச் சிரிப்பொன்று அவள் இதழ்க்கடையில் முகிழ்த்தது. ஒருத்தி எத்தனை முறைதான் கல்யாணம் செய்து கொள்வாள்.

நேற்று காதல் கொண்டு இன்று கணவர் கண்டு

நாளை அடுப்பினில் வெந்திட ஆசையில்லை

முதலில் மாலை சூட்டும் பிறகு விலங்கு பூட்டும்

உங்கள் கசமுசக் கல்யாணம் தேவையில்லை

எப்போதோ கேட்ட பாடல் வரிகள் மனதில் தோன்ற சரியாகத்தானே சொல்லி இருக்கிறார்கள் என்று தோன்றியது.

திருமணம் என்பது சிலரைத் தவிர பலருக்கு விலங்காகத்தானே இருக்கிறது…காலம் மாறினாலும் ஒரு சில விஷயங்கள் மாறுவதேயில்லை.

படிக்காத பெண்கள், படித்தும் கணவர் குழந்தை என்று பார்த்துக் கொண்டு வேலைக்குப் போகாத பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் என அனைவருமே திருமணம் என்று வரும் போது ஒரு வட்டத்துக்குள்… வரையறைக்குள் வந்து விடுகிறார்கள். அந்த வட்டத்தைத் தாண்டிக் காலெடுத்து வைக்கத் தயங்குகிறார்கள். வேறு வழியில்லாமல் அப்படி வெளியே வந்து விடுபவர்களால் மீண்டும் அந்த வட்டத்துக்குள் பொருந்திக் கொள்ள முடிவது இல்லை. அவர்கள் என்னதான் சாதனைகள் நிகழ்த்தினாலும் சொந்த வாழ்வில் வெற்றி பெறாதவர்களை இந்தச் சமூகம் தோல்வி அடைந்தவர்களாகவே கருதுகிறது.

என்னென்னவோ நினைத்துக் கொண்டே உறங்கிப் போனாள் நீலாயதாட்சி.

மறுநாள் காலை கொஞ்சம் தெளிவாக உணர்ந்தவள் பிள்ளைகள் சொல்லி விட்டுப் பள்ளிக்குக் கிளம்பிய பிறகு கூடத்தில் வந்து மெத்திருக்கையில் அமர்ந்தாள்.

செய்தித்தாள் பார்த்துக் கொண்டிருந்தவள் வாயிலில் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்க்க விக்னேஷ் வந்து கொண்டிருந்தான்.

முதல் நாள் எதுவுமே நடந்திராதது போல் முகத்தில் கனிவும் காதலும் ததும்ப அவளைப் பார்த்தவன் அருகிலிருந்த மெத்திருக்கையில் அமர்ந்து “இப்ப முகம் கொஞ்சம் தெளிவா இருக்கு” என்று தனக்கே ஏதோ உடல்நிலை நன்றாகி விட்டது போல் சொல்லி விட்டு “ஹவ் ஆர் யூ ஃபீலிங்?” என்று அவளிடமும் கேட்டான்.

கோபமாக ஏதாவது பதில் கொடுக்க புத்தி நினைத்தாலும் ஏனோ அவளால் முடியவில்லை. எனவே,

“ம்ம்ம்…இப்ப பரவாயில்ல…நேத்து காலைல இருந்தே ஃபீவர் இல்ல உடம்புவலி கூட குறைஞ்சுருச்சு”

“குட்! அப்ப இன்னிக்குள்ள நார்மல் ஆகிடும்”

அவன் பேசிக் கொண்டிருந்த போது அருகிலிருந்த இன்டெர்காம் கிணுகிணுக்க எடுத்துக் காதில் வைத்தாள்.

……………………………………………

“ம்ம்ம்…தெரியுது சொல்லுங்க”

……………………………………………..

“யாரு…என்ன பேர் சொன்னீங்க?”

…………………………………………….

“வாட் வின்னியா…”

மெத்திருக்கையில் அருகில் கிடந்த தன் அலைபேசியை எடுத்தவள் அதில் சிசிடிவிக்கான செயலியைத் திறந்து பார்க்க காரில் உள்ளே அமர்ந்திருக்கும் வின்னியின் முகம் தெளிவாகத் தெரிய… “மை காட்!” என்றவள் தொடர்பில் காத்திருந்த காவலாளியிடம் “அவரை உடனே உள்ளே அனுப்புங்க” என்று விட்டுத் தன் இருக்கையிலிருந்து எழுந்தாள்.

எழுந்த நேரம் அவள் கைபற்றி இழுக்கப்பட ‘யாரது’ என்பது போல் திரும்பிப் பார்த்தவள் அப்போதுதான் விக்னேஷ் இருப்பதை சுத்தமாக மறந்து விட்டதை உணர்ந்தவள் தன் தவறை மறைக்க “நான்… வின்னி… ஜெர்மனிலயிருந்து… வந்து…நீங்க” என்று மிழற்ற

“வின்னிதானே வந்துருக்காரு…ஜெர்மனி அதிபர் வந்துடலையே… எதுக்கு இத்தனை பதட்டம்” என்றவன் தானும் எழுந்து நிற்க அந்த நேரம் புயல் போல் உள்ளே நுழைந்தான் வின்சென்ட்.

வாசலில் நின்றவன் கண்களுக்கு அவளைத் தவிர வேறு யாரும் அந்த அறையில் இருப்பதாகவே தெரியவில்லை. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் அவளை நோக்கி வந்தவன் அரை அடித் தொலைவில் மறுபடி நிதானித்தான். மேலிருந்து கீழாக அவளை ஒரு முறை அளவெடுப்பது போல் பார்த்தவன் சட்டென்று அருகில் வந்து அணைத்துக் கொண்டான்.

“ஹேய் நீலு டியர்… நல்லவேளை நேத்துப் பார்த்ததை விட இன்னிக்கு பெட்டரா இருக்கே.நான் என்னென்னவோ நினைத்து பயந்துகிட்டே வந்தேன்”

அவளும் அவனை மென்மையாக அணைத்துக் கொண்டாலும் ஓரக்கண் பார்வை விக்னேஷின் மீது இருந்தது.

அங்கே அவள் எதிர்பார்த்தது போலவே முகமெல்லாம் ஜிவுஜிவுத்து நின்றவனைக் கண்டவள் அவஸ்தையாய் உணர்ந்து மெல்ல வின்சென்டின் கைப்பிடியிலிருந்து விலகினாள். அவர்கள் ஜெர்மனில் பேசிக் கொண்டது வேறு புரியாதாகையால் அவன் என்ன நினைக்கிறானோ என்று வேறு தவிப்பு. சட்டென ஆங்கிலத்தில்,

“என்ன வின்னி இது…நேத்து சாயந்திரம்தான் வீடியோ கால்ல பேசின… இப்ப காலைல இங்க வந்து தரிசனம் குடுக்கிறே…எப்பிடி திடீர்னு கிளம்பினே?”

“இன்னும் ஒன் வீக்ல நானே வர்றதா இருந்தேன். சில சீக்ரெட் டாக்ஸ்ல உன் சைன் வேண்டியிருந்தது. ஃபெடெக்ஸ்லல்லாம் அனுப்ப முடியாது… ஆனா நேத்து உன்னைப் பார்த்ததுல இருந்து மனசே கேக்கல…டிக்கட் ப்ரீபோன் பண்ண முடியுமான்னு பார்த்தேன். அடுத்த ஃப்ளைட்லயே சீட் கிடைத்தது வந்துட்டேன்”

அதற்கு மேலும் பொறுமையில்லாமல் தானும் ஒருவன் அந்த அறையில் இருக்கிறேன் எனக் காட்டிக் கொள்வது போல் விக்னேஷ் தொண்டையைச் செருமிக் கொள்ள வின்சென்ட் திரும்பிக் கேள்வியாக அவனையும், மறுபடி ‘யார் இவர்’ என்பது போல நீலாவையும் பார்த்தான்.

இந்தியா வருவது, எந்த நிறுவனத்துடன் இணைவது என எல்லாவற்றையும் நீலாயதாட்சியே கையாண்டதில் வின்னிக்கு இந்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை

“வின்னி! இவர் மிஸ்டர் விக்னேஷ் கார்த்திக்…நம்ம கொலாபரேஷன் வச்சுருக்கிற மதன் டெக்ஸ்டைல்ஸ் சிஈஓ. மிஸ்டர் விக்னேஷ்! இது வின்னி… என் ஃப்ரெண்ட் அண்ட் ஜெர்மனில இப்ப எல்லா விஷயமும் இவர்தான் பார்த்துக்கிறார்”

இருவரும் முகமன்கள் கூறிக் கைகுலுக்கிக் கொண்டார்களே தவிர மேலே எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

வின்னி மெத்திருக்கையில் அமர்ந்து தன் ப்ரீஃப்கேசைத் திறந்து கொண்டிருந்த போது பொன்னம்மா மூவருக்கும் பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தார்.

அருந்தியபடியே நீலாவிடம் சில கோப்புக்களைக் காட்டிக் கையெழுத்துப் பெற்றுக் கொண்டவன் பின் எழுந்தான்.

“ஓகே டியர் நான் கிளம்புறேன். பிள்ளைகள் எப்போ வருவாங்க?”

“ஈவினிங் த்ரீக்கு மேல ஆகும் வின்னி”

“ஓகே…அப்போ நெக்ஸ்ட் டைம் மீட் பண்றேன்”

“நீ எங்க கிளம்புறே? இங்கயே ஸ்டே பண்ணிக்கலாமே! மறுபடி எப்போ ஜெர்மனி கிளம்புறே?”

“இல்ல…இல்ல…உனக்கு உடம்பு வேற சரியில்லாம இருக்குன்னு கேத்தி ஆல்ரெடி ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிட்டா…உன்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு வேற ஸ்ட்ரிக்ட் ஆர்டர்” சிரித்தபடிக் கூறியவன் “நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நைட் ஃப்ளைட்ல கிளம்புறேன்” என்று அவள் அருகில் வந்து மெலிதாக அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு “பை! டேக் கேர்!” எனவும் விக்னேஷின் முகம் கடுத்தது.

ஆரம்பத்தில் அவள் ஆங்கிலத்தில் பேச்சைக் கொண்டு வந்திருந்தாலும் இப்போது மீண்டும் ஜெர்மனே பேசப்பட்டது வேறு அவனை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருந்தது.

ஆனாலும் கடுத்த முகத்தை வின்னி அவன்புறம் திரும்புவதற்குள் சீராக்கியிருந்தவன் இறுகிய முகமாகவே கைகுலுக்கி விடைகொடுத்தான்.

அவன் பின்னோடு வெளிவாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தவள் விக்னேஷைத் தேட அவனைக் காணவில்லை. சொல்லாமல் கிளம்பி விட்டானா…நெற்றி சுருக்கி யோசித்துக் கொண்டே படுக்கையறைக்குள் நுழைய சட்டெனக் கதவு சாற்றப்படத் திகைத்துப் போய்த் திரும்பியவள் இடையை வளைத்துத் தூக்கி சாற்றிய கதவின் மீதே அவளைச் சாய்த்து நிறுத்தியிருந்தான் விக்னேஷ்.

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா

எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே

மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா

ஓ வெண்ணிலா இரு வானிலா ..நீ..